Monday 15 January 2018

செம்பருத்தி......

முற்றத்திலே பூத்திருக்கு செம்பருத்தி
வச்சிருக்கேன் சில கேள்வி
அதனிடம் கேட்க எண்ணி
யாரிடம் பெற்று வந்தாய்
எண்ணம் மயக்கும் வண்ணம்
பூமித்தொடா பிள்ளைப் பாதம்
முத்தமிட்டு பெற்று வந்தாயோ
நாணி சிவந்த பெண்ணைக்
கொஞ்சம் தொட்டு வந்தாயோ
நலிந்த மக்கள் நினைந்து
சிவந்த கவிஞன் விழி
கண்டு பெற்று வந்தாயோ
நாடு காக்க உயிர்நீத்த
மாவீரன் ரத்தம் அதில்
நீ நனைந்து வந்தாயோ
கொவ்வை கனி கொத்தும்
கிளி மூக்கு உன்மேல் பட்டு
சிவப்பை விட்டு சென்றாதா
கதிர் உமிழும் நிறமதை
உறிஞ்சி சிவந்து நின்றாயா
பசியால் கனன்று எரியும்
வயிறிடம் சென்று வந்தாயா
யாரிடம் பெற்று வந்தாய்
சிங்கார சிவப்பு வண்ணத்தை
இன்னுமொரு கேள்வியுண்டு நெஞ்சிலே
கோப நாண உணர்வுக்கு வண்ணம்
சிவப்பெனவே வகுத்தது யார்,

-கோ.லீலா.

No comments:

Post a Comment