Sunday 8 November 2020

கவிதையும் கதையும்- 1


நீ அமைதியாகதான் இருக்கிறாய்

உன் நினைவுகள்தான்

அதிகாலையிலேயே 

சிறகு விரித்து விடுகிறது 

கரிச்சான் குருவியாய்.


- கோ.லீலா.


கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!..

- திருப்பாவை.


ஆனைச்சாத்தான் - கரிச்சான் குருவி அதிகாலை 3.30 மணிக்கு எழும்பி விடுமாம். 1600 வருடத்திற்கு முன்பு அவங்க பேரு ஆனைச்சாத்தான்.


ஆங்கிலத்தில் Black Drongo.


வயலில் மாடுகளின் முதுகில் அமர்ந்து இருப்பாங்க. மாடுகள் நடக்க நடக்க, புல்லில் இருந்தும், பயிர்களில் இருந்தும் வெளிவரும் பூச்சிகளை (குறிப்பாக வெட்டுகிளிகள்) சாப்பிடுவாங்க. காலை 5.30-7 மணி வரைதான் பூச்சிகள் உற்சாகமாக பயிர்களுக்கு மேல் உலா வருமாம்.


கரிச்சான் குருவியார் டிபன் சாப்பிட 3.30 க்கே தயாராகி குடும்பத்தோட போய்டுவாராம்.


இதனால் நமக்கு என்னன்னு கேட்கிறீங்களா?


அட ! பூச்சிக்கொல்லி அடிக்க வேண்டாங்க. இயற்கை Entomologist நம்ம கரிச்சான் குருவியார் காலையில் ஒரு‌மணி நேரத்தில் 100, அதே போல் மாலையில் 100 பீஸ் பூச்சிகளை அபேஸ் பண்ணிடுவாராம். இருந்தாலும் அவருக்கு டேங்க்( வயிறு) சிறிசுதானே, அதனால மீதி பூச்சியை அரைச்சி துப்பிடுவாராம். அது மண்ணுக்கு உயிர்ச்சத்து தருதாம்.


அது மட்டுமில்லைங்க, நம்ம ஆளு கரிச்சான் குருவியார் பருந்தௌ, கழுகுன்னு எல்லாரையும் அடி தூள் கிளப்பி விரட்டி விடுவாராம்.


ஆனைச்சாத்தான் அடியாள் போலிருக்கே !


பூச்சிக்கொல்லி அடிக்க வேண்டாம் பாருங்க ! அதுல மண்ணும் கெடாது மனுசனும் கெட மாட்டான்.


நன்றி : கோவை சதாசிவம்‌ அய்யா.

அன்புடன்

- கோ.லீலா.

அம்மு

 மலைப்பூவே என் மனப்பூவே

என் அன்பான செல்லக்கிளி

இவள் ஓடி வர ஒளிந்திருக்க

பார்க்கையில் பூவாக சிரிக்கிறாள்

நினைக்கையில் தேனாக இனிக்கிறாள்

சின்னஞ்சிறுபூசிந்தும் சிரிப்பில்

நெஞ்சம் நெகிழ்ந்ததென்ன

அள்ளி அணைக்கையில்

ஆசை பெருகுகையில்

என்னை மறந்ததென்ன

மூக்கு கடித்துமுத்தம் கொடுக்க

நெஞ்சம் குளிர்ந்ததென்ன

சித்திர சேலையில் 

சின்னஞ்சிறு பூவை காண

உள்ளம் சிலிர்த்ததென்ன

இவளோடு நானிங்கு

வாழ்கின்ற நாளெல்லாம் தேன்

எனை இவள்  கொஞ்சாத 

நாளெல்லாம் வீண்

சொந்தமென பந்தமென

எனை  தொடரும் உறவுதான்

நினைக்கையில் இனிப்பாக இருக்குது

என் மனம் எங்கெங்கோ பறக்குது.


-கோ.லீலா.



தண்ணீர் தண்ணீர்

 தோழமைகளே! வணக்கம் மைனா படத்தில் வரும் ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கி‌ போட்டு பாடலை தண்ணீர் விழிப்புணர்வு பாடலாக மாற்றி எழுதியிருக்கேன்.யாராவது பாடி கொடுங்களேன்.


ஏ வண்ண வண்ண ஜீன்ஸ் போட்டு

வகைவகையா சட்டையப் போட்டு

தண்ணி பாட்டிலோடு   நீயும் எங்க போவுற- நானும்

தண்ணிக் கத பேசிக்கிட்டே கூட வரட்டுமா...

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


ஏ வண்ண வண்ண ஜீன்ஸ் போட்டு

வகைவகையா சட்ட போட்டு

எங்க வேணா பொண்ணு போவேன் தள்ளி‌ நில்லுங்க அந்த

தண்ணி கத எனக்கு தெரியும்‌ தள்ளி நில்லுங்க...


ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


நல்லத் தண்ணி கெட்டுப்போச்சி

நதியெல்லாம் வத்திப்போச்சி

பாட்டிலுக்கு மட்டுமிங்க தண்ணி   ஏதடி

யோசிச்சு நீயும் அந்த கொஞ்சம் கதய சொல்லடி  -ஹேய்


நாகப்பட்டணம் இங்க இருக்கு

டெல்லி பட்டணம் அங்க இருக்கு

எங்கேயுமே குடிக்க சொட்டு தண்ணி இல்லடி...

கோலா பெப்சி குடிக்கிறத விட்டு வெலகடி

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


அரிசிக்கு பின்ன மூவாயிரம் 

ஜீன்ஸ் ஆக்க பத்தாயிரம் லிட்டர் வேணுமே

அத்தனையும் கப்பலேத்தி வித்துப் போட்டுட்ட

தண்ணியதான் காசு குடுத்து வாங்கி‌ குடிக்கிற

அந்த வெட்கக் கேட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற


ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


சிங்கபூரு எத்தன மயிலு

சிக்காக்கோ‌ தான் எத்தன மையிலு

அத்தன மையிலும் சுத்திப்பார்த்த 

அத்தன ஊருக்கும் வித்துப் போட்ட பண்டம் ஏதடி

அதில மறஞ்சு நிக்கும் தண்ணியத்தான் எண்ணி பாரடி

ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..


காட்டையெல்லாம் அழிச்சிப்புட்ட

பெஞ்ச மழைய நிறுத்திப்புட்ட

நம்ம போல புள்ளைங்கதான் வாழவேண்டாமா....

இல்ல பல்லு போயி சொல்லு சாக வேணுமா?


உலக வங்கில மொத்த கடனு

மிச்ச வங்கியில சொச்ச கடனு

ஒலகம் பூரா கடன்பட்டும்  இன்னும் திருந்தல

நம்ம நாட்டுக்குள்ள ஒருத்தருமே தண்ணிய மதிக்கல


ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


ஏரிக இருக்கு பத்தாயிரம்

குளம் குட்டை இருக்கு நூறாயிரம்

எறைக்காத கேணியில நீரு ஏதடி

இந்த ஊரு சனத்த கூட்டிகிட்டு தூரு வாரடி

அடியே........


ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்.


Rescript : கோ.லீலா.

மழையும் நானும்.

 மேகம் இங்கே தூறல் போட

உம் பேர சாரல் போட

அதில நானும் நனைய போறேன்

உன்னப் பத்தி கேட்கப் போறேன்

அதிலே முழுசா கரையபோறேன்


நெஞ்சுக்குள்ளே எதையோ நினைச்சு 

அதையும் ஏனோ சொல்லில் மறச்சு 

நீ போடும் வேசமெல்லாம் சொல்லிடுச்சே.

சொல்லை புதச்சு மவுனம் விதச்சு  

என்ன வதைக்கும்

யுக்தியெல்லாம் காதோடு சொல்லிடுச்சே.

என் சொல்லை துரத்தி வம்பிழுக்கும் உன் ரகசிய நேசத்த என் காதுக்குள்ள ஓதிடுச்சே.


மழையில் நானும் நனைய 

மனசுக்குள்ள நேசம் நிறைய

உம் பேரு குடையா விரிய

அதில நானும் வாழப் போறேன்.


- கோ.லீலா

Friday 2 October 2020

"A Cup of Coffee is my cup of Tea"


☕☕☕☕☕☕☕☕☕☕☕☕

வணக்கம் தோழமைகளே !


ஒரு கப் காஃபி குடிச்சுகிட்டே பேசுவோமா?


ஆமாங்க இன்று உலக காஃபி தினம்.


முதல் கப் ஆஃப் காஃபியை யார் தயாரிச்சா?


ஜீனி போட்டு குடிக்க கத்துக் கொடுத்தது யாரு?


இந்தியாவுக்கு எப்படி காஃபி வந்தது?


இப்படி நிறைய நிறைய பேசலாம் வாங்க....


அப்படியே டைம் மிஷினில் 9ம் நூற்றாண்டுக்கு போவோம் வாங்க...


இப்போ நாம இருக்குற இடம் கிழக்கு ஆப்பிரிக்கா.


அதாங்க டைம் மிஷினுக்கு வெளியில் போயிட்டிங்கனா எத்தியோப்பியான்னு சொல்வீங்க.


அங்க பாருங்க ! நிறைய ஆடுகள் மேயுதா?


அங்கேதான் நம்ம ஹீரோ கல்டி ஆடு மேய்கிறார் பாருங்க. அந்த ஆடுங்க ஏதோ ஒரு பழத்தை சாப்பிடுதுங்க பாருங்க...


என்ன இது ஆடெல்லாம் இவ்ளோ சுறுசுறுப்பா இருக்கே....


வாங்க கல்டி கிட்டே கேட்போம். என்ன கல்டி சார் ஆடெல்லாம் சுறுசுறுப்பா ஆயிடுச்சு.


அதான் நானும் சாப்பிட்டு பார்த்தேன், எனக்கும் சுறுசுறுப்பா இருக்கு...


வாங்க, மொரோக்கோ நாட்டை சேர்ந்த நூரூதீன் அபு அல் ஹசன் வந்திருக்கார் அவர்கிட்டே கொடுத்து பார்ப்போம், அவர் என்ன சொல்றார்னு கேட்கலாம்.


சலாம் அலைக்கும், அய்யா இன்று ஒரு பழம் கிடைத்திருக்கு, ஆடுகள் சாப்பிட்ட உடன் சுறுசுறுப்பா ஆயிடுச்சி, நானும் சாப்பிட்டேன் எனக்கும் சுறுசுறுப்பாவும், புத்துணர்ச்சியுமா இருக்கு அய்யா. நீங்க பார்த்து சொல்லுங்க...


அலைக்கும் சலாம், கல்டி கொடு பார்ப்போம்.


இரு உடைச்சி பார்ப்போம் அட இரண்டு விதை இருக்கே, இரு இதை சாப்பிட்டு பார்ப்போம்.


பொடித்த காபி விதைகளை சுடு நீரில் போட்டு குடிக்க ஒரு சுறுசுறுப்பும், உற்சாகமும், புத்துணர்ச்சியுமா இருக்கே...


இந்த நறுமணம், பழத்திலிருந்து வரவில்லை, விதையில் இருந்துதான் வருது...


இரண்டு விதைகளில் ஏதாவதொன்று வளராமல், ஒன்று மட்டும் வளர்ந்தால் அதற்கு பீபெர்ரி என்று பெயர். சாதாரண காபியை விட இந்த பீபெர்ரி கசப்பாக இருக்கும்.


அட! அது தான் first cup of coffee of the world.


சரி கல்டி, நாங்க டைம் மெஷினில் 17ம் நூற்றாண்டுக்கு போறோம்...


அதுவரை இதை கேளுங்க...


இஸ்லாமியர்கள் பரவியிருந்த இடங்களில் இந்தப் பானமும் பரவியது. 


ஆரம்பத்தில் கிறித்துவர்களுக்கு இந்தப் பானம் குடிப்பதற்கு அனுமதியில்லை. 


1607-ம் ஆண்டு ஆய்வுப்பயணம் மேற்கொண்ட ஜான் ஸ்மித் என்பவரால், "காபி"

புது உலகுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. 


1690-ம் ஆண்டு, வணிகரீதியாக முதல்முதலில் டச்சுக்காரர்களால் காபிச்செடிகள் பயிரிடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டன.


அட 17ம் நூற்றாண்டுக்கு வந்திட்டோம், இதென்ன ப்ரான்ஸ் போல் இருக்கே..


ஆகா ! இங்கே வித விதமா உணவு கிடைக்குமே...


ஐ ! ஜீனி போட்ட காஃபி

*****************************

1713-ம் ஆண்டு, பிரெஞ்சு மன்னன் 14-ம் லூயிக்கு, காபிச்செடி ஒன்று பரிசாக வந்திருக்கே..


காபியோடு `சர்க்கரை' கலக்குறாங்களே.


இவர், காலத்தில்தான் முதன் முதலில் காஃபியில் ஜீனி போட்டிருக்காங்க..


இருங்க இருங்க, இதே டைமில், மெக்காவிற்கு போவோம் வாங்க...


கர்நாடகா மாநிலம் சிக்மகளூரிலிருந்து சூஃபி துறவி பாபா பூடான்  ’ஹஜ்’ பயணமாக மெக்கா வந்திருக்கார், வாங்க அவரை சந்திப்போம்.


அட! சூஃபியிஸம் எனும் அரிய தத்துவத்தை சொல்றாரே... இந்தியாவிற்கு தான்  போறார்.


வாங்க அவரை பின் தொடர்வோம்.


அட இந்த இடம் "ஏமன்" ஆச்சே.


துறவி ஏதோ குடிக்கிறாரே...

ஆமா! செகண்ட் கப் ஆஃப் காஃபி...

கஹுவா விதையை கேட்கிறாரே...


என்னது கஹுவா வா? ஆமா அரேபிய மொழியில் கஹுவா அப்படின்னா விதையிலிருந்து உருவாக்கப்படும் பானம் என்று பொருள்.


கொஞ்ச நாட்களில் கஹியா ன்னு சொன்னாங்க, அதாவது பசியை போக்கும் பானம் என்று பொருள், பிறகு காஃபி ஆகிவிட்டது.


சரி, என்ன நடக்குதுன்னு பாருங்க, அரேபியர்கள் காஃபி விதைகளை தர மாட்டேங்கறாங்களே....


அதானே ! ஏய் அங்க பாரு, நம்ம சூஃபி துறவி, எத்தியோப்பில் ஆடு தின்ன காஃபி விதையை ஆட்டைய போடுறார்.


எத்தனை எடுத்திருக்காருன்னு கவனி.


ஏழு வறுக்காத காஃபி விதை. சரி சத்தம் போடாமல் அவரை பின் தொடர்ந்து  என்ன செய்றார்னு பார்போம்.


ஆகா ! இந்தியா வந்திட்டோம். இந்த இடம்தான் சிக்மங்களூர்.

சூஃபி பாபாவின் ஊர் போலிருக்கே.


ஆமாம், வாங்க பார்ப்போம்... 

ஏழு விதையையும் நடவு செய்றார்.


சரி வாங்க, டைம் மெஷினில் நம்ம காலத்துக்கு போவோம்... அதுவரை இந்த கதையை கேளுங்க.


சூஃபி துறவி நடவு செய்த அந்த ஏழு காஃபி விதைதான் கர்நாடகா,கேரளா,ஆந்திரா தமிழ்நாடுன்னு இன்று காஃபி தோட்டமாக பல்கி பெருகி நம் மனதை கொள்ளையடித்து கொண்டிருக்கிறது.


1822-ம் ஆண்டு, `மாதிரி எஸ்ப்ரெஸ்ஸோ மெஷின் (Prototype Espresso Machine)' பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்டது. 


1938-ம் ஆண்டு பிரேசிலில் ஏற்பட்ட அளவுக்கு மீறிய காபி உற்பத்திப் பிரச்னையைச் சரிசெய்யும் வகையில், அந்நாட்டு அரசுடன் இணைந்து `இன்ஸ்டன்ட் காபி' பவுடரை முதன்முதலில் தயார்செய்தது `நெஸ்லே' நிறுவனம்.


காஃபி நல்லவரா கெட்டவரா?

********************************

காபியில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நமது செல்களை நச்சுகள், இரசாயனங்கள் போன்றவற்றினால் பாதிப்படைவதிலிருந்து தடுக்கிறது.


இந்தாண்டின் தொடக்கத்தில் இதழ்  ஒன்றில் பதிப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவின்படி, ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.


மேலும், ஒருவரது ஆற்றலையும், விளையாட்டு திறனையும் உடனடியாக புதுப்பிப்பதற்கு காபி பயன்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.


என்றாலும், கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு கப்பிற்கு மேல் குடிக்க கூடாது என்கிறது ஆய்வு.


காஃபியில் எத்தனை காஃபியடி.

***********************************

காபி , ஃபில்டர் காஃபி, டிகிரி காஃபி, டிகாக்ஷன் காஃபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காஃபி, கிரீன் காஃபி காப்பிச்சினோ காஃபி, ஐஸ் காஃபி.


இதெல்லாம் மேட்டரே இல்லை...

🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈

சிவெட் என்ற பூனையின் கழிவில் தயாரிக்கப்படும் காஃபிக்குதான் ஏக க்ராக்கி.


புனுகு பூனை வகையை சேர்ந்த பூனைக்கு இந்த காஃபி விதையை கொடுக்கிறார்கள். பாதி செரிமானம் ஆன விதையோடு, செரிமானம் ஆகாத விதையும் பூனையின் கக்கா வா அதாங்க கழிவா வெளியில் வர அதை பொடி செய்து காஃபி போடுறாங்க.


சரி மூக்கை பிடிச்சிகிட்டு ஓடுறவங்க, இதன் விலையை கேளுங்க, மயக்கம்‌ போட்றுடுவீங்க....


அதான் விலை அதிகம் இல்லை -$80 தானாம்.


பூனைக்கு ஒரு காலம்னா யானைக்கு ஒரு காலம் வரும்ல.

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

தாய்லாந்திலுள்ள யானைகளால் உண்ணப்பட்டு அதன் மலத்திலிருந்து பெறப்படும் பிளாக் ஐவோரி காபி என்றழைக்கப்படும் காபி கொட்டைகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. 


இதன் 35 கிராம் அளவுள்ள சிறிய பை 85 டாலர்களுக்கு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது.


காஃபிக்கும் கவிதைக்கும் தொடர்பு இருக்கான்னு தெரியாது...


ஆனால் காஃபிக்கும்‌ காதலுக்கும் தொடர்பு இருக்குங்க...


சரி இன்னொரு நாள் சந்திப்போம். ஒரு ஃப்ல்டர் காஃபி போட்டு குடிக்கப் போறேன்.

Since 

"A cup of coffee is my cup of Tea"


பை பை மக்கா !


அன்புடன்

- கோ.லீலா.


Tuesday 18 August 2020

உணவும் பெண்ணும்.

 ஆதிகாலத்தில் காட்டில் வேட்டையாடி நாடோடியாக திரிந்த மனிதர்கள் கைக்குக் கிடைத்த காய்,கனிகளையும் வேட்டையில் அகப்பட்ட விலங்குகளையும் பச்சையாக உண்டு வந்த காலத்தில்தான் இடி விழுந்த இடத்தில் வெந்த விலங்கின் மாமிசத்தை உண்டு அதன் ருசிக்கு அடிமை ஆனார்கள்.


இடி விழும் போது தீயை பற்றிக் கொள்ள ஏற்பாடு செய்தனர். அத்தீ அடுத்த இடி வரை தாக்குப் பிடிக்காமல் அணைந்து போக சுவையான உணவிற்காக நெருப்பை தேடி அலைந்தவர்கள் தாம் சிக்கிமுக்கி கல் மூலமாக நெருப்பை கண்டறிந்தனர். உணவின் மூலம் நெருப்பை  கண்டடைந்தனர் என்றால்....

விவசாயத்தை கண்டடைந்தது இன்னொரு கதை.
ஆதியில் பெண்ணே குழுவின் தலைவியாக இருந்திருக்கிறாள் வேட்டையாடுதல்,உணவை சேகரித்தல்,அதைப் பங்கிட்டுக் கொடுத்தல் என பல்வேறு பணிகளை செய்திருக்கிறாள்.

ஒரு மழைக்காலத்திற்கு பிறகு வெறுமையாக கிடந்த நிலம் விளைந்து நின்றதை பார்த்த பெண்தான் விவசாயத்தை கண்டுபிடிக்கிறாள்.

தான் கைநழுவ விட்ட தானியங்கள் தான் ஈர நிலத்தில் விழுந்து விளைந்து இருக்கிறது எனஉணர்ந்து விவசாயத்தை கண்டுபிடிக்கிறாள் பெண்.
இதற்குப் பின்னர்தான் காட்டை அழித்து விவசாயம் செய்து குழுவாக உண்டு இருக்கின்றனர்.

இந்த காலகட்டத்திற்கு பின்தான் பெண் தலைவியாக இருப்பதிலிருந்து பின் தள்ளப்பட்டு சமையல் மற்றும் பரிமாறல் என்ற வட்டத்திற்குள் அடைக்கப்படுகிறாள். அதற்குப் பின்தான் சமூகவியல் ( Sociology) உருக்‌கொள்ளத் தொடங்குகிறது.

ஒரு ஆணின் ஆளுகைக்குட்பட்ட நிலத்தையும் அவனுக்கான பெண்களையும் நிர்ணயித்து கொள்கிறான். அந்நாளில் தான் பலதாரமணம்(Polygamy)என்பது ஆண்களுக்கு மட்டும் ஆக மாறிப்போகிறது. விவசாய நிலத்தை அதிக அளவில் கைப்பற்றவும் அதில் விளைகின்ற பொருட்களை தானே வைத்துக் கொள்ளவும் நினைத்த பொழுது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடும் உருவாகிறது. இதற்கு காரணம் விளைநிலத்தை கையகப்படுத்தி ஆளுமை செலுத்த வேண்டும் என்ற எண்ணமே அதற்கு அடிப்படை காரணம் உணவிற்கு தேவையான தானியங்களை அதிக அளவில் வைத்திருக்க வேண்டும் என்பதேயாகும்.

எனவே உணவு என்பது நெருப்பு நிலம் பெண் என பெரிய சமூக கட்டமைப்பை உருவாக்கவும் அழிக்கவும் வல்லது. தன் நாட்டில் இல்லாத உணவுப் பொருட்களின் விதைகளை நாற்றுகளை பெறுவதற்காக வேறு நாட்டு பெண்களை கவர்வதும், திருமணம் செய்துகொண்டு அந்தப் பயிர்களின் விதைகளை நாற்றுகளை சீராக பெற்றதும் வரலாற்றில் அறியாத கதை.
கரும்பிற்கு பின்னால் ஒரு இனிப்பான காதல் கதையுண்டு. மன்மதனின் காதல் ஆயுதம் கரும்பு வில்லும் மலர்‌கணையும் தான் என புராணங்கள் சொல்கின்றன ஆனால் காதலுற்ற காதலனுக்கு கரும்பையே பரிசாக அளித்த கதையை பார்ப்போம்.

1492 இல் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் சில நாட்கள் கானரி தீவுகளில் தங்கினான்,
அவனுடன் காதல் வயப்பட்ட அந்த நாட்டு இளவரசி அவன் விடைபெறும்போது காதல் பரிசாக கரும்பு நாற்றுகளை அவளுக்கு கொடுத்தாள் அதன் மூலம் கரும்பு அமெரிக்காவிலும் நுழைந்தது. பெண்களால் வேறு நாடுகளுக்கு உணவுகள் வேரோடு புலம்பெயர்ந்த கதைகளும் உண்டு.

இலக்கியத்தில் பெண்களின் உணவு.
*********************************
பெண்களின் உணவு பற்றிய குறிப்புகள் இலக்கியத்தில் மிக குறைவாகவே இருப்பதாக தோன்றுகிறது.

பெண் என்பவள் ராஜபோக உணவினை சுவைத்து உண்ணுதல் போன்ற காட்சிகள் எங்கும் தென்படவில்லை. மாறாக உணவை சமைப்பவர் பரிமாறுபவளாக காட்டுகிறதே தவிர சுவைத்து உண்பவளாக காட்டப்படவில்லை.
இலக்கியம் பெண்களின் உணவு பற்றி என்ன கூறுகிறது..... சுவைப்போம் வாருங்கள்.
குறுந்தொகையின் வரிகளைப் பார்ப்போம்.

"முளி தயிர் பிசைந்த காந்தள் மென்விரல்"

என்ற பாடலில் தயிர் பிசையும் பெண்ணின் விரல் வர்ணிக்கப்படுகிறதே தவிர அப்பாடலை முழுதும் உற்று நோக்கினால் உணவை,இனிது என ரசித்து கணவன் உண்ண வேண்டியதின் பொருட்டு தலைவி ரசித்து சமைப்பது காட்டப்பட்டுள்ளது.ஆனால் தலைவி சுவைத்து உண்பது போல் எந்த குறிப்பும் இல்லை.
ஆண்களுக்கு உணவில் இருந்த கட்டுப்பாடற்ற தன்மை பெண்களுக்கு இல்லை என்பதே உண்மை.

உடலியல் சார்ந்த,அழகியல் சார்ந்த,சமூக கட்டமைப்பு சார்ந்த பல உணவு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்திருக்கிறது.... இருக்கிறது. என்பதை உணவு முறைகளும் பெண்களுக்கு என வரையறுக்கப்பட்ட உணவுகளும் கூறுகின்றன.

அவ்வையார் பாடிய கொன்றை வேந்தனில் "உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு" என்று ஏன் பாடினார்? பசியின்‌ கொடுமையை அறிந்தவர் அவ்வையார்.

சிலம்பி என்ற பெண் கொடுத்த கூழுக்காக கவி பாடியவர் அவ்வையார்.அப்படி இருக்க பசியின் கொடுமையால் தனக்குத்தானே "உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு" என்ற மைண்ட் வாய்ஸை பாடிவிட்டாரா?

எது எப்படியாயினும் வழக்கத்திலுள்ள இப்பாடல் அழகியல் சார்ந்த நெருக்குதல்கள் பெண்ணிற்கு உள்ளதுபோல் ஆண்களுக்கு இல்லை என்பதையே சொல்கிறது.

எனினும் இன்னொரு ஐயமும் உண்டு இருபாலருக்கும் பொதுவான கருத்துகளையே பாடும் அவ்வையார் இதை மட்டும் ஏன் பெண்ணுக்காக பாடியிருக்கிறார்?

ஒருவேளை "உண்டி சுருக்குதல் பண்டிக்கு அழகு" என்று இருந்திருக்கும் என்றும் தோன்றுகிறது.பண்டி என்றால் வயிறு உடல் என்ற பொருள் உண்டு என தமிழ் ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது.

தேவையான அளவு மட்டுமே உண்பது வயிற்றுக்கு நல்லது. என்று பாடி இருக்கக்கூடுமோ அதை மீள் பதிவு செய்தவர்கள் அதை பெண்களின் தலையில் ஏற்றி விட்டார்களா?

ராமாயணத்திலும் தாடகை உண்ணும் காட்சியையும் கும்பகர்ணனும் காட்சியையும் விவரிக்கும் பாடலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெண் என்பவள் குறைத்தே உண்ண வேண்டும் என்ற கருத்து பூடகமாக உள்ளது சற்றே பாடலை பார்ப்போம்.

கும்பகர்ணன் உணவு உண்ணும் காட்சியை பார்ப்போம்.

இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும்  எயிற்றினான்.
வரும் களிற்றினைத் தின்றனன்.
(கும்பகர்ணன் வதைப்படலம் 7462)

கடும் பசியின் வேகத்தால் எஃகையும்,இரும்பையும் யானையையும் உண்ணும் கும்பகர்ணனின் உணவு அவனது வலிமைக்கு குறியீடாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தாடகை வதைப் படலத்தில் தாடகை உண்ணும் காட்சியில் கம்பர் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்.

கிளப்ப அருங்கொடுமைய அரக்கி கேடு இலா வளப்பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்
(தாடகை வதைப்படலம் 363).

அருமையான வளம்மிக்க மருத நிலத்தை உண்டு அதை பாலையாக மாற்றி விட்டாள் "அரக்கி" என்கிறார்.

கெடுதல் செய்யும் குணத்தை உடைய வரை "அரக்கி"எனலாம் ஆனால் குணம் தவிர்த்து தாடகையின் உணவு உண்ணும் தன்மையைக் கொண்டு "அரக்கி" என கம்பர் பாடுவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

பசிஉணவு,பெண் என்ற மூன்று சொற்களை நினைக்கும்போது உறுதியாக நினைவுக்கு வருபவள் காயசண்டிகை.

யானைத்தீ நோயால் அடங்காப் பசியால் அவதியுற்று அதிலிருந்து மீள்வதற்கான 12 ஆண்டுகால போராட்டமுமே சாபமாக அளிக்கப்பட்டது கவனிக்கத்தக்கவை.

முந்நா லாண்டின் முதிர்கன்னி நானீங் குண்ணு நாளுன் னுறுபசி களைகென
அந்நா ளாங்கவ னிட்ட சாபம்.
(உலகவறவி புக்க காதை:45-48)

இதன் மூலம் பெண்ணின் உணவு,அவளின் பசி பெரிதும் ஆணின் பார்வையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது புலனாகிறது.

இதைப் படிக்கும்போது பெண் பூப்பெய்திய காலம்,முன் பேறு காலம்,பின் பேறுகாலம் மற்றும் கைம்பெண் காலம் எனக் கால முறைகளில் சத்தான ஆகாரங்கள் அல்லது சத்துக்குறைவான ஆகாரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே?என்ற கேள்விகள் எழலாம்.

கூர்ந்து நோக்கினால் பெண்ணின் சடங்குகளும் மற்றும் பிள்ளைபேறு சார்ந்தும் உணவுமுறை அமைந்து இருக்கிறதே தவிர பொதுவாக ரசனையும்தேர்வும் ஆணை  மையமிட்டு இருப்பதால் பெண் உணவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறாள் என்பது புலனாகும்.

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது. 11

இந்தப் பாடலில் உணவின் பாதுகாப்பின்மை, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழுதல்,உணவு பற்றாக்குறை மற்றும் மிகு உணவு, குறைத்தல் நிலவின் கட்டுப்பாடு அரசின் இடத்தில் இருந்திருக்கிறது என்பதையும் இப்பாடல் உணர்த்துகிறது.

பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு என்னும் புலவரால் பாடப்பெற்ற 246வது புறநானூறு பாடலில் பெண்ணிற்கான உணவு பற்றிய குறிப்புகள் உள்ளது.

அடை இடை கிடந்த கைபிழி பிண்டம்
வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப் பரற் பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ.

என்ற பாடலின் மூலம் எல் துவையலும் வேளக்கீரையுமோ கைம்பெண் உணவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இலக்கியத்திற்கு மாறாக நாட்டுப்புற பாடல் பெண்ணுக்கான உணவுகளில் கவனம் செலுத்துகிறது.

நாட்டுப்புறப் பாடலில் பருவமடைந்த பெண்ணிற்கான உணவாக தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான புட்டும், பச்சரிசி பால் புட்டு உளுத்தங்களி கத்தரிக்காய் பால்கறி, பச்சரிசி பால் பொங்கல் நல்லெண்ணெய் பச்சை முட்டை மோரிஸ் எனப்படும் பச்சை வாழைப்பழம்.

திருமணமான பெண்களின் உணவாக உளுந்து மாவு கஞ்சி இடம் பெற்றிருப்பதை அகநானூறு போன்ற சங்க நூல்கள் எடுத்துக் கூறியுள்ளன. இது உடலுக்கும் கர்ப்ப உறுப்புகளுக்கும்,இடுப்பு எலும்புகளுக்கும் உறுதியையும் பலத்தையும் கொடுப்பதாக சொல்லப்படுகிறது மேலும் எள்ளுப்பாகு பசும்பால் சம்பா அரிசிச் சோறு பேரீச்சம்பழம் பாதாம் பருப்பு முந்திரி பழம் செவ்வாழை பழம் இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டியவை என நாட்டுப்புற பாடல்கள் கூறுகின்றன.

கர்ப்பிணி பெண்களின் உணவாக முதல் மூன்று மாதத்திற்கு மாம்பிஞ்சு விலாங்காய் மிளகாய் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கு பிறகான காலத்தில்
மாதுளம்பழம், உளுந்து பனங்கட்டி,முளைக்கட்டிய பச்சைப்பயறு,மத்தி மீன்,கீரை வகைகள்,கொண்டக்கடலை பசும்பால் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுதல் வழக்கமாக இருக்க வேண்டும் என நாட்டுப்புற பாடல்கள் கூறுகின்றன.

பிரசவித்த பெண்களின் உணவு/பாலூட்டும் தாயின் உணவாக.

சுறா புட்டு கருவாடு குழம்பு கொத்தமல்லி சீரகம் மிளகு தேங்காய் சொட்டு மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைத்துப் பின் பூண்டு இஞ்சி தட்டிப்போட்டு உப்பு சேர்த்து சூடாக்கி எப்படி தனியாக கொடுக்கவும் சோற்றுடன் கலந்து உண்ணவும் கொடுக்க வேண்டும் என நாட்டுப்புற பாடல்கள் உணவு வழக்கத்தை சொல்கின்றது.

எனினும் தற்காலத்தில் பெண்களுக்கு உணவு சுதந்திரம் கிடைத்து இருப்பதாக நினைத்தாலும் அவசரமாக பணிக்குச் செல்லும் பெண்கள் சரிவர சத்தான உணவுகளை உண்பது இல்லை என்பதே உண்மை.

மேலும்,வளரிளம் பெண்கள் பாரம்பரிய உணவுகளை உண்பதை தவிர்த்து பீசா,பர்கர், ஸ்பகெட்டி, நூடுல்ஸ் போன்ற இன்னும் பெயர் தெரியாத அல்லது வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் கொண்ட உணவுகளை விரும்பி உண்ணுவதால் உடல் நலக் கேடும் மனநிலை கேடும் உண்டாகிறது.

ஒரு காலத்தில் பெண் என்பவள் உணர்வு நிறைந்த விலைக்கு வைக்கப்பட்டிருந்தால் என்று புலம்பினால்...

இக்காலத்தில் சுதந்திரம் என்ற பெயரில் பாரம்பரிய உணவுகளை தவிர்த்து உடலுக்கும் மனதுக்கும் கேடு விளைவிப்பதோடு நாட்டின் பொருளாதார சீர்கேடுகளுக்கும்
ஆண் பெண் என்ற பேதமின்றி காரணமாக இருக்கின்றனர்.
உடல் நலம் பேணவும் மன நலன் பேணுவும் நல்ல உணவுகளை உண்போம்.

உணவை தவிர்த்து அதன்மூலம் குடும்பத்தின் சுமைகளை ஒப்பதாக நினைத்துக் கொள்ளும் பிழையினை களைவோம்.

பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைக்கு நிகரான சத்தான ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை கொடுக்கவும், மற்ற பெண்களும் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதை தலையாய கடமையாக கொள்ள உறுதிமொழி எடுத்துக் கொள்ளவோம்.
அன்புடன் 
கோ.லீலா.

Sunday 16 August 2020

"இன்றொரு நாள் போதுமா"

 ராகமாலிகா...

***************

சற்று முன் கவிஞர் கண்ணதாசன் எழுதி, கே.வி மகாதேவன்‌ அவர்கள் இசையமைக்க, பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இனிய குரலில் ஒரு பாடல் கேட்டேன்.


"இன்றொரு நாள் போதுமா" அதை பற்றி நான் சொல்ல "இன்றொரு நாள் போதுமா"


ஆமாங்க, இன்றொரு நாள் போதுமா பாடலேதான். 


இளையராஜா அவர்களின் மிகப் பெரிய விசிறி என்பதால், அவரது இசையை மட்டும் கூர்ந்து கேட்பது வழக்கம்.


எனினும், மிருதங்கமும், தபேலாவும் பின்னிசையாக இருந்தால் எந்த பாடலையும் விடாது கேட்பேன்.


"இன்றொரு நாள் போதுமா" பாடல் எல்லோரையும் வசீகரிக்கும் ராகத்தில் தொடங்குவது மிகச் சிறப்பு, அதனினும் சிறப்பு, திரையில் வட நாட்டிலிருந்து வரும் ஹேமநாத பாகவதர் பாடும்‌ போட்டி பாடல் என்பதால்...


தொடக்கத்தில், தன் நாட்டின் ஹிந்துதானி ராகமான "மாண்ட்" ராகத்தில் தொடங்குவது மீச்சிறப்பு.


கவியரசர் பாடலுக்கான பல்லவியை இப்படி எழுதிக் கொடுத்தார்:


"நாதமா கீதமா அதை நான் பாட

இன்றொரு நாள் போதுமா"


இந்தப் பல்லவியை "ச்ரோதோவகயதி" முறையைப் பின்பற்றி..


"ஒரு நாள் போதுமா

இன்று ஒரு  நாள் போதுமா

நான் பாட இன்றொரு நாள் போதுமா

நாதமா கீதமா அதை நான் பாட

இன்றொரு நாள் போதுமா..


என வரிக்கு வரி சொற்களை கூட்டி எழுதி வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.


மாண்ட் ராகமோ கேட்பவரை சுண்டியிழுக்கும் தன்மையுடையது.


அப்படியே தான் தென்னாட்டின் கர்நாடக இசையிலும் தேர்ச்சிப் பெற்றவர் என்பதை காட்டுவது போல் தோடி, தர்பார், மோகனா, கானடா ராகங்களில் பாடுவர்.


அதிலும் மிகப்பெரிய வியப்பு எந்த ராகத்தில் பாடப்படுகிறதோ, அந்தந்த வரியில் ராகத்தின் பெயர் வரும் படி எழுதி அசத்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் என்பதுதான்.


"குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்

என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்"


என்ற  சரண வரிகளில்  குழலென்றும் என்பதை தொடர்ந்து ஆலாபனையும், ஸ்வரமும் பாடி குழலிசையில் 

முடித்திருப்பதும், 


யாழென்றும் என்பதை தொடர்ந்த ஸ்வரத்துடன் வீணையின் இசையில் 

முடித்திருப்பதும் தற்செயலானாது அல்ல, இது இசையமைப்பாளர் கே.வி மகாதேவன் அவர்களின் ஆளுமையல்லவா. கேட்டுணர்ந்த போது அசந்து போனேன்.


தோடி ராகம்.

******************

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 

எழுந்தோடி வருவாரன்றோ...எழுந்தோடி...தோடி...இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ...


அட ! கவியரசரின் இசை ஞானம் வரிகளில் "தோடி" என்ற சொல்லை‌ அமைத்து எழுதியிருக்கிறார் எனில் தமிழில் எவ்வளவு ஆளுமை இருந்திருக்க வேண்டும். அதனால்தான்‌ அவர் கவியரசர் அல்லவா.


தானும் குறைந்தவர் இல்லையென தோடி ராகத்தில் இசையமத்திருக்கிறார் கே.வி அவர்கள். 


இந்த வரிகள் தோடி ராகத்தில் பாலமுரளி கிருஷணா அவர்களின் குரலில் இனிமை.



தர்பார் ராகம்.

***************

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

தர்பாரில் எவரும் உண்டோ....தர்பாரில் எவரும் உண்டோ....

எனக்கிணையாக  தர்பாரில் எவரும் உண்டோ.


தர்பார் ராகத்தில் இசை அமைக்கப்பட்டுள்ள வரிகள்.


தர்பார் இசையில் தனக்கு இணையாக யாரும் உண்டா என கேட்கிறாரா? 


அல்லது "தர்பாரில்"( அரசவையில்) தனக்கு இணையாக யாரும் உண்டா என்கிறாரா?


அடடா ! ரசனையோடு அல்லவா எழுதியும், இசையமைத்தும், பாடியும் இருக்கிறார்கள்.


மோகன ராகம்.

*******************

கலையாத மோகன சுவை நானன்றோ மோகன சுவை நானன்றோ 

மோகனம்....

கலையாத மோகன சுவை நானன்றோ.


மோகன இசையில் இசைத்து தான் கலையாத மோகன சுவையென கவிஞரின் வரிகளை பாடும் பாடகர் என மூவருமே படைப்பில் கலையாத மோகன சுவையாக மிளிர்கிறார்கள்.


கானடா ராகம்.

******************

கானடா ஆ .....என் பாட்டு தேனடா 

இசை தெய்வம் நானடா ...


இந்த வரிகள் கானடா ராகத்தில் அமைந்துள்ளது.


இப்படி ஒரு கூட்டு முயற்சியாக வாசகர்களுக்கு ஒரு சுவையான படைப்பை அளித்துள்ள கவியரசர் கண்ணதாசன், இசையமைப்பாளர் 

கே.வி. மகாதேவன், 

டாக்டர். பாலமுரளி‌கிருஷ்ணா ஆகியோர்கள் என்றும் வணக்கத்துக்கு‌ உரியவர்கள்.


நான் ரசித்தேன்... கேட்டு பாருங்களேன்‌ உங்களுக்கும் வியப்பும், மகிழ்வும் வரும்.


#பாடல்_ஒரு_பார்வை.


அன்புடன்

- கோ.லீலா.


Sunday 19 July 2020

அடிமையின் மோகம் - வெள்ளை



கொரானா என்னும் வைரஸை விடவும், கொடுமையான ஒரு வைரஸ்  மனித மனமெங்கும் படர்ந்து கிளைத்து வளர்ந்து கிடக்கிறது.

கொரானா தனிமைப்படுத்தி விட்டதே என புலம்புகிற நாம் இனவொதுக்கல் என்பதை பற்றி புலம்பியிருக்கிறோமா? கவலைப்பட்டுள்ளோமா?

தென்னாப்பிரிக்காவின் இனவொதுக்கலை மாய்ந்து மாய்ந்து பேசுகிற நாம், உள்நாட்டின் சாதிய ஒதுக்கலையும் சிந்திக்க வேண்டும்.

இன்றும், வெள்ளைத்தோல் மீதான மோகம் என்பது படித்தவர் படிக்காதவர் என்றில்லாமல் எல்லோர் மனதிலும் வளர்ந்து கிடக்கிறது.

காரணம் இது ஒரு அடிமையின் மோகம்.

சமீபத்தில் ஒரு திரைப்பட பாடல் கேட்டேன்.

"வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாகளா, இல்ல வெயிலுக்கு‌ காட்டாமா வளர்த்தகளா"

அதே போல் சிரிச்சி சிரிச்சி வர்றா சீனா தானா பாடலிலும் வெள்ளைத்தோல் பற்றிய வரிகள் வருகிறது.

அங்கவை சங்கவை என்ற பெருமைமிகு இலக்கிய கதாபாத்திரங்களுக்கு கறுப்பு வண்ணத்தை செயற்கையாக பூசி எள்ளி நகையாடிய கொடுமை எந்த படத்தில் நிகழ்ந்தது என்றால், எந்த கதாநாயகனுக்கு,

" கறுப்புதான் எனக்கு‌ புடிச்சா கலரு" என்றும்

"மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ"

"வெள்ளை மேகம் வண்ணம் மாறி வந்தால் தானே பெய்யும் மாரி"

என்றும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கறுப்பு நம் அடையாளம் என்பதை உரக்க எழுதிக் கொடுத்தாரோ அந்த கதாநாயகன் நடித்தப் படத்தில்தான் அங்கவை சங்கவையின் கறுப்பு நிறம் எள்ளி நகையாடப்பட்டுள்ளது.

இன்னொரு திரைப்படத்தில், கறுப்பு பெண்ணிற்கு வண்ணம் பூசி திருமணம் செய்த பின், குளிக்கும்போது வண்ணம் கரைந்து போவது போல் காட்டி எள்ளி நகையாடி இருக்கிறது.

இந்த சமூகத்திற்கு, இதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்ன.
ரசிகர்களின் பெயரில் குறையை சொல்லி, இப்படி‌ படைத்தால்தான், படமோ, கவிதையோ, கட்டுரையோ, கதையோ வெற்றி பெறுகிறது என்பது‌ பொய்மையின் வேடம்.

உண்மையில் ரசிகர்கள், வேறுவழியின்றிதான் அதை‌ பார்க்கிறார்கள்.‌

குறிப்பாக தமிழர்கள் உயர்ந்த ரசனையுடையவர்கள். அவர்களுக்கான தரமான கலைப்படைப்புகளை தர வேண்டியது ஒவ்வொரு படைப்பாளியின் கடமையாகும்.

கறுப்பு என்ற இனவொதுக்கலே தவறு எனும்போது ஆண் கறுப்பாக இருக்கலாம், பெண் கறுப்பாக இருக்கவே கூடாது என்ற ஒரு
உள் இனவொதுக்கலும் கூடவே உள்ளது என்பது இன்னும் வேதனையான செய்தி.

கறுப்பு பெண்ணாக இருந்தால் 50 பவும் கூட போடணும், அப்போ  நிறம் காணமல் போய்விடும்.

திரைப்படம், ஊடகம் என அனைத்திலும் வெள்ளைத்தோல் பெண்தான் மனிதபிறவியாக கருதப்படுவதும், அவர்களை போகப்பொருளாக பயன்படுத்துவதும் இன்றைய இளைய சமூதாயத்தினரிடையே பரவலாக வெள்ளையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.

பேர் அண்ட் லவ்லி யில் காக்காவே வெள்ளையாகிவிடும் அளவிற்கு விளம்பரங்கள் வேறு.

கறுப்பு, வெள்ளை என்ற இன வேற்றுமை யாவரின் மனதிலும் ஒரு வண்டலென படிந்து இருக்கிறது.

சாதி, மத, இன வேற்றுமை கசடுகளை நீக்க சிறந்த கலைப்படைப்புகள் தேவைப்படுகிறது.

பல படங்கள் நிற வேற்றுமையை பற்றி பேச முற்படும்போது, காமெடி தர்பார் ஆகிவிடுகிறது என்பதே பேருண்மை.

ஆனால், யாவற்றையும் தகர்த்து, பல நுட்பமான அவதானிப்புடன் நிற வேற்றுமையை உண்மைத்தன்மை மாறாது காட்டும்‌ திரைப்படம்தான் ஆஸ்கார் விருது வாங்கிய
 "கீரின் புக்".

சிறந்த கலைப்படைப்பை தந்த இயக்குநர் பீட்டர் பெர்ரேலி க்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

ஏன் இன்று இதைப்பற்றி எண்ண வேண்டும்.

நேற்று ஜூலை 18 நெல்சேன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள்.

இங்கு கஸல்‌ கவிஞர் Mohamed Ali Jinna அவர்களின் கவிதையை நினைவூட்ட விரும்புகிறேன்.

#நிறங்கள்

முதன் முதலில்
இரவு பகலென
இயற்கையைப் பிரித்ததே நிறங்கள்தான்...

வருவதும் மறைவதுமே வாழ்க்கை என்பதை
வானவில் வழியே
வந்து சொன்னதும் நிறங்கள்தான்...

நிறமே அடையாளமாக இருப்பது
நேர்மை எனவும்
அடையாளமே நிறமாக இருப்பது
பச்சோந்தி எனவும்
பிரித்துக்காட்டியதும் நிறங்கள்தான்...

காக்கைகளே நம் முன்னோர்கள் எனில்
இறந்த பிறகு எல்லோரும் ஒரே நிறம்தானே என
மூடநம்பிக்கையிலும் முக்தியடைய வைத்தது
இந்த நிறங்கள்தான்...

நிறங்கள் இருப்பதால்தான்
உங்கள் கண்களுக்கு
எல்லாமே தெரிகிறதென
சவால் விட்டதும்...
கண்கள் இருந்தாலும்
காற்றுக்கு என்ன நிறமென
உங்களால் கண்டறிய முடியாதென
சாபம் விட்டதும் இதே நிறங்கள்தான்...

பின்பு
சமாதானத்திற்கு வெள்ளையாகவும்
துக்கத்திற்குக் கருப்பாகவும்
வறுமைக்குச் சிவப்பாகவும்
மங்கள நிகழ்வுக்கு மஞ்சளாகவும்...
மனிதனே நிறங்களைப் பார்த்துப் பிரித்தான்
நிறங்கள் நீளத்துவங்கின...
மனிதனுக்குள் நிறம் பார்த்து பிரித்தான்
நிறங்கள் சுருங்கிக்கொண்டன ...

#ஜின்னா_அஸ்மி

Apartheid ‌என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இன ஒதுக்கலை சீர்திருத்த சுமார் 27 ஆண்டுகள் சிறையில்‌ இருந்த உன்னதரின் பிறந்தநாள்.

நெல்சேன்‌ மண்டேலா அவர்கள் கறுப்பினத்தவருக்காக மட்டுமல்ல, எந்த இன வேற்றுமையும்‌ இருக்ககூடாது என்பதற்காக பாடுபட்டவர்.

தமிழகத்தில், குற்றாலத்தில் குளிக்க ஆதி தமிழர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்ததைப்போல் தென்னாப்பிரிக்காவில்‌, டர்பன்‌ கடற்கரையில்‌‌ ஒரு பகுதியில்,
இனவொதுக்கல் கொள்கையின் அடிப்படையிலான ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலம், ஆப்பிரிக்கானர், சூலு ஆகிய மொழிகளில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது
டர்பன் நகரம், டர்பன் கடற்கரைச் சட்ட விதிகளின் 37 ஆம் பிரிவின் கீழ் இந்தக் குளிக்கும் பகுதி வெள்ளை இனக் குழு உறுப்பினர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. (1989)

தென்னாபிரிக்க அரசால் 1948ல் இருந்து 1998 வரை இருந்த சட்டம் மூலமாக இன வேற்றுமை முறை செயல்பாட்டில் இருந்த காலத்தினை "இன ஒதுக்கல் காலம்" (Apartheid - Era )
என்கிறது வரலாறு.

இனவொதுக்கல் சட்டம், குடிமக்களையும், நாட்டுக்கு வருகை தந்திருப்போரையும், கறுப்பர், வெள்ளையர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. தென்னாபிரிக்கக் கறுப்பினத்தவரின் குடியுரிமை நீக்கப்பட்டது.

1948-1990 காலப்பகுதியில் ஆப்பிரிக்கானரின் ஆதிக்கத்தில் இருந்த அரசாங்கமே இனவொதுக்கலுக்கான காரணம் எனப் பரவலாகக் கருதப்பட்டாலும், இனவொதுக்கல், பிரித்தானியக் குடியேற்றவாத அரசின் நடவடிக்கைகளின் விளைவாகும். பிரித்தானியரால் ஆளப்பட்டதும், வெள்ளையர்களும், பிற நிறத்தவரும் வாழ்ந்த பகுதிகளுக்கு, பழங்குடியினர் பகுதிகளிலிருந்து கறுப்பினத்தவர் வருவதைத் தடுப்பதற்காக கேப் குடியேற்றப் பகுதியிலும், நேட்டாலிலும்19 ஆம் நூற்றாண்டில் உருவான அனுமதி அட்டை முறையே இதற்கான அடிப்படையாகும்.

ஆசியர் பதிவு‌ சட்டம் 1906 ன் படி அனைத்து இந்தியர்களும் பதிவு செய்து, இந்த அனுமதி அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றது இனவெறி கொண்ட ஆப்பிரிக்க அரசு.

இந்த அனுமதி அட்டையை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். இந்த அனுமதி அட்டை பெண்களுக்கு வழங்கப்படவில்லை.

பெண்களுக்கு அனுமதி அட்டை வழங்க எடுத்த முயற்சிகள் தீவிரமான எதிர்ப்புக்களைச் சந்தித்ததால், 1956 ஆம் ஆண்டுவரை அனுமதி அட்டை முறையில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இனவொதுக்கலை
சிறு இனவொதுக்கல், பெரும்‌ இனவொதுக்கல் என்று இரண்டாக பிரித்து...

பெரும் இனவொதுக்கல் என்பது தென்னாப்பிரிக்காவைப் பல பிரிவுகளாகப் பிரிக்க எடுத்த முயற்சிகளையும்...

சிறு இனவொதுக்கல் என்பது இனங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைக்க எடுத்த முயற்சிகளையும் குறித்தது.

பெரு இனவொதுக்கல்தான்‌ தாயக முறையை சட்டமயமாக்கி பாண்டுஸ்தான்‌ எனும்‌ பத்து தாயக பழங்குடிகளை, ஒரே குடிகளாக்கி, ஒரு தாயகத்தை ஒதுக்கினர், அதன் நிலப்பரப்பு அள்வில் மிக சிறியதாகவும், வளம்‌ குன்றியதாகவும் இருந்தது.

வெள்ளை இனத்தவருக்கென எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதியில் வாழ்ந்த கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டது.

பொதுவாகவே, கல்வி, மருத்துவ வசதிகள்‌‌ மற்றும் பொது சேவைகள் யாவும் பாகுபாட்டுடன் வழங்கப்பட்டது. கறுப்பினத்தவர்களை கூலியாட்களாக தயாரிப்பதற்காகவே அவர்களது பாடசாலைகள்‌ வடிவமைக்கப்பட்டு இருந்தது.

பல உடல் ரீதியான சித்திரவதைகள் செய்யப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, விலங்குகளுக்கு கிடைத்த சுதந்திரத்தைக்கூட வழங்கமால்‌ அடிமைப்படுத்தப்பட்டிருந்த கறுப்பினத்தவர்களின் விடிவெள்ளி‌தான்
நெல்சேன் மண்டலா.

அந்த விடிவெள்ளி கறுப்பினத்தவர்களின் ஒளியேற்றிட 27 ஆண்டுகள் சிறையில் அடைந்திருந்து, சுண்ணாம்பு‌ கல் உடைத்தலில் இருந்து இன்னும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தது.

இன்றும் தொடரும் இனவொதுக்கல்.
******************************
இங்கிலாந்தில் ஜோக்சயர் என்னும் இடத்தில் உணவு விடுதி வைத்திருக்கும் கறுப்பு இன பெண்மணி தனது கடைக்கு முன்னால் “ நான் கறுப்பு இனத்தவள்தான், நல்ல உணவும் நல்ல சுத்தமான இடமும் தேவையானால் எனது கடைக்கு வரவும். நான் உங்களை கடிக்கமாட்டேன்”
என எழுதி வைத்ததன் மூலம் இங்கிலாந்தில் தொடரும் நிற வேற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கறுப்பினத்தை சார்ந்த ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தும் கூட, அமெரிக்காவில் இனவேற்றுமை மாறவே இல்லை, என்பதற்கு கசப்பான சான்றுதான்,
ஜார்ஜ் ஃப்ளோயிட் ( George Floyd) ன் படுகொலை.

இதை தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில்
கிறிஸ் கெயிலின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதில்‌ பொதிந்துள்ள வலி உண்மையானது.

இப்படி நிறவெறி தென்னப்பிரிக்காவில் மட்டுமல்ல, தமிழகத்திலும்‌ நிறைந்துள்ளது என்றால்‌ ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

நிறத்தை, பெயரை, உருவத்தை வைத்து இன்ன சாதியா ? என மறைமுக கேட்கும் கீழ்மை, இங்கு பரவிக் கிடக்கிறது.

இப்படி, உலகின்‌ மூலை முடுக்கெங்கும்‌ நிமிட நிமிடத்திற்கும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களை கீழ்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கும் மனபாங்கை  வளர்த்துக் கொண்டேதான்‌‌ இருக்கிறது‌ மனித மனம்.

அறிவியல் உண்மை.
**************************
அந்தந்த வாழ்விடத்திற்கு ஏற்றார் போல் நிறம், முடி, தோலின் தடிமம் போன்றவை இயற்கையால் மனிதர்களுக்கு மட்டுமில்லை, கானுயிர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்லா பூக்களும் ஒரே நிறத்தில் இருந்தால் சலிப்பாகி விடும். அதனதன் நிறத்தில் அதனதன் தன்மையோடு இருப்பதும், அத்தன்மையோடு‌ இருக்க அனுமதிப்பதும், ஏற்றுக்கொள்ளலுமே அறிவுடமையாகும்.

கறுப்பு என்று‌ நிறம் பேதம்‌ பற்றிய  இரு உரையாடலை கேட்டபோது...

பூக்கள் பூக்க திணறுகிறது
ஒரு பூவை பூத்துவிட
உன் நிறத்தில்.

#கறுப்பு#

- கோ.லீலா.

என்று சில வரிகளை‌ நான் எழுதினேன்.

இன்று தோழர்எட்வின் இரா அவர்களின் கவிதையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

இருட்டும் இருட்டும்
இருட்டில் கலந்து
இருட்டில் பிறந்த
இருட்டு நான்

இருட்டைத் தின்று
இருட்டைக் குடித்து
இருட்டைக் கக்கி
இருட்டைப் பேள

இருட்டால் துடைத்து
இருட்டால் எடுத்து
இருட்டில் எறிவாள்
என் தாய் இருட்டு

இருட்டை உடுத்தியபடியும்
இருட்டை சுமந்தபடியும்
இருட்டை மிதித்தபடியும்
இருட்டை இழுத்தபடியும்
இருட்டைப் பிடித்தபடியும்
இருட்டைக் கடக்க முயலும்
இருட்டு நான்

இருட்டில்
இருட்டோடு நாங்கள்
நடந்துகொண்டே இருப்பது
எங்கள் பேரப்பிள்ளைகளுக்கான
வெளிச்சத்திற்காக

சன்ன வெளிச்சத்திற்கே
கண்கள் கூசும் எங்களைக்
கிண்டல் செய்யாதீர்

தலைமுறை தலைமுறையாய்
எங்களுக்கான வெளிச்சத்தையும் சேர்த்தே
தின்று வளர்ந்தவர்கள் நீங்கள்

- இரா.எட்வின்.

சாதி,மத,இன,நிற ஒதுக்கலை களைய உறுதிமொழி எடுத்துக் கொள்வதே, இத்தகைய தலைவர்களுக்கு‌ செய்யும்‌ மரியாதை ஆகும்.

கறுப்பு‌ என் அடையாளம்‌‌ என் பெருமை.

அன்புடன்
- கோ.லீலா.

Saturday 18 July 2020

கவிப்பேரரசு வைரமுத்து

கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர் கலைமாமணி, பத்ம பூஷன், பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐
வெண்நரை மெதுவாக
 வெளிப்படும் நேரமிதில்
மென்தரையில் வளர்ந்திருக்கும் புல்லின் மேலிருக்கும் பனித்துளிகளை ரசிக்கும் மனதையும் அன்பையும் ஆரோக்கியத்தையும்
எல்லா வளங்களையும் நலங்களையும் வாரி வழங்கிட வாழ்த்துக்கள்.💐💐💐💐💐

***********************************
இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியாது,  சலிக்காத வரிகள்.

ஒரு தெய்வம் தந்த பூவே போன்ற பல்வேறு பாடல்களை சொல்லலாம்.

அலைகள் ஓய்வதில்லை பட பாடல்களில், சிறந்த கவிதை வரிகள் திரைப்படப் பாடலாகி இருப்பதை அறிந்த போது ஆச்சரியம் மேலிட்டது.

ஆறு முறை மாநில விருதும், ஏழு முறை தேசிய விருதும் பெறுவதென்பது மிகப் பெரிய சாதனை.

பாடல்கள் மட்டுமின்றி கவிதை நூல்கள், கட்டுரை, நாவல்கள், சிறுகதைகள் என எத்தனை நூல்கள்... மீண்டும் ஆச்சரியம்தான்.

தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர் ஆகிய நூல்கள் என் மனதிற்கு மிக நெருக்கமான நூல்கள் என்றால்,

கருவாச்சி காவியமும், சாகித்ய அகாடமி பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசமும்‌ இரட்டை காப்பியங்கள் எனலாம்.

எத்தனை நுணுக்கமான செய்திகள் எல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன என்று அவதானித்தால், பெரும் வியப்பே ஏற்படுகிறது.

கருவாச்சி காவியத்தில் தானே பிள்ளைப் பெற்றுக்கொள்ளும் காட்சி கண்ணீரை வரவழைத்தால், கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பேயத் தேவர் மாட்டிற்கு பிரசவம் பார்ப்பது என மிக நுட்பமான செய்திகள் எல்லாம் காட்சியாய் விரிவது எழுத்தின் சிறப்பு.

வைரமுத்துவின் சிறுகதைகள்‌ நூலில் கதாபாத்திரங்களின் உருவ அமைப்பை விவரிக்கும்‌போது கவிஞரின் நகைச்சுவை உணர்வு பெரிதும் வெளிப்படும்.

ஆனமலை நல்லார் திட்ட தொழில் நுட்ப வல்லுநர் உபகுழு உறுப்பினராக கூடுதல்‌ பொறுப்பு‌ ஏற்று இருந்த நேரம், உபகுழு என்றாலும் பிரதான குழுவின் முக்கிய பணிகள் அனைத்தையும் பார்த்த நேரம், வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிடும்.

அந்த நேரத்தில், ரிலாக்ஸ் செய்துக்கொள்ள, ஜீப்பில் பயணிக்கும் போது மீள் வாசிப்பாக சிறுகதைகளை படிப்பேன்.

ஒருநாள் ஓய்வுப் பெற்ற தலைமைப் பொறியாளரிடம் ப்ராஜக்ட் பற்றி பேசும் போது, என்னையும் அறியாமல்‌ சிரித்துக் கொண்டிருக்க , என்னவென்று கேட்டபோது சிறுகதையில் வரும் வசனங்களை சொன்னேன், அவரும் சேர்ந்து சிரித்தார்.

ரசித்த வரிகள்.

🚩"செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்" என்ற வசனம் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு கூட, நானும் தம்பியும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.

சமீபத்தில் படித்த வரிகள்.

🚩"திருடிட்டு ஓடுறவன் ஒழுக விடுற சில்லறையத்தானய்யா கொடைன்னு சொல்லிக் கொண்டாடுது இந்த உலகம்."-வைரமுத்து
🚩
அந்தந்த வயதில்...

இருபதுகளில்...

எழு!

உன் கால்களுக்கு

சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

ஜன்னல்களைத் திறந்து வை!

படி! எதையும் படி!

வாத்சாயனம் கூடக்

காமமல்ல, கல்விதான்..

படி!

பிறகு

புத்தகங்களை எல்லாம்

உன்

பிருஷ்டங்களுக்குப்

பின்னால் எறிந்துவிட்டு

வாழ்க்கைக்கு வா..

உன் சட்டைப் பொத்தான்,

கடிகாரம்,

காதல்,

சிற்றுண்டி,

சிற்றின்பம்

எல்லாம்

விஞ்ஞானத்தின் மடியில்

விழுந்து விட்டால்,

எந்திர அறிவு கொள்!

ஏவாத ஏவுகணையினும்

அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

மனித முகங்களை

மனசுக்குள் பதிவு செய்!

சப்தங்கள் படி!

சூழ்ச்சிகள் அறி!

பூமியில் நின்று

வானத்தைப் பார்!

வானத்தில் நின்று

பூமியைப் பார்!

உன் திசையைத் தெரிவு செய்!

நுரைக்க நுரைக்க காதலி!

காதலைச் சுகி!

காதலில் அழு!

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

மணம் புரி!

பூமியில் மனிதன்

இதுவரை துய்த்த இன்பம்

கையளவுதான்..

மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கையென்பது

உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

இன்னும்... இன்னும்...

சூரியக் கதிர்கள்

விழமுடியாத ஆழத்தில்...

**

முப்பதுகளில்...

சுறுசுறுப்பில்

தேனீயாயிரு!

நிதானத்தில்

ஞானியாயிரு!

உறங்குதல் சுருக்கு!

உழை!

நித்தம் கலவி கொள்!

உட்கார முடியாத ஒருவன்

உன் நாற்காலியை

ஒளித்து வைத்திருப்பான்..

கைப்பற்று!

ஆயுதம் தயாரி..

பயன்படுத்தாதே.

எதிரிகளைப் பேசவிடு!

சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,

இடிபிளக்காத

ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை,

சூரியனுக்கு

நிழல் கொடுக்கும்

உயரத்தில் பரப்பு..

நிலை கொள்.

**

நாற்பதுகளில்...

இனிமேல்தான்

வாழ்க்கை ஆரம்பம்..

செல்வத்தில் பாதியை

அறிவில் முழுமையை

செலவழி..

எதிரிகளை ஒழி!

ஆயுதங்களை

மண்டையோடுகளில் தீட்டு!

ஒருவனைப் புதைக்க

இன்னொருவனைக்

குழிவெட்டச் சொல்!

அதில்

இருகையால் ஈட்டு..

ஒரு கையாலேனும் கொடு..

பகல் தூக்கம் போடு.

கவனம்!
இன்னொரு காதல் வரும்!

புன்னகைவரை போ..

புடவை தொடாதே.

இதுவரை இலட்சியம் தானே

உனக்கு இலக்கு!

இனிமேல்

இலட்சியத்துக்கு நீதான்

இலக்கு..

**

ஐம்பதுகளில்...

வாழ்க்கை, வழுக்கை

இரண்டையும் ரசி..

கொழுப்பைக் குறை..

முட்டையின் வெண்கரு

காய்கறி கீரைகொள்!

கணக்குப்பார்!

நீ மனிதனா என்று

வாழ்க்கையைக் கேள்..

இலட்சியத்தைத் தொடு

வெற்றியில் மகிழாதே!

விழா எடுக்காதே!

**

அறுபதுகளில்...

இதுவரை

வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

இனியேனும்

வாழ்க்கையை நீ வாழ்..

விதிக்கப்பட்ட வாழ்க்கையை

விலக்கிவிடு..

மனிதர்கள் போதும்.

முயல் வளர்த்துப் பார்!

நாயோடு தூங்கு!

கிளியோடு பேசு!

மனைவிக்குப் பேன் பார்!

பழைய டைரி எடு

இப்போதாவது உண்மை எழுது..

**

எழுபதுக்கு மேல்...

இந்தியாவில்

இது உபரி..

சுடுகாடுவரை

நடந்து போகச்

சக்தி இருக்கும்போதே

செத்துப்போ...

ஜன கண மண...

-கவிப்பேரரசு வைரமுத்து

கவிராஜன் கதையும் விரும்பி‌‌ படித்த நூல்.

வைகறை மேகங்கள், இந்த‌ குளத்தில் கல் எறிந்தவர்கள், இந்த‌ பூக்கள் விற்பனைக்கல்ல என்று தொடரும் நீள் பட்டியலில் தமிழாற்றுப்படையில் சற்று மூச்சு வாங்கி கொள்கிறேன்.

ஒரு கல்லூரியில் பேச சென்றிருந்தபோது, உங்களைப் பற்றி விசாரித்தோம், நிறைய படிப்பீர்கள் என்று அறிந்தோம் அதான் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் வாங்கி வந்தோம் என்று கூறி அந்த புத்தகத்தை பரிசளித்த நிகழ்வு‌‌ மட்டற்ற‌ மகிழ்ச்சிக்குரிய தருணம்.

தேனி சென்றிருந்தப்போது, வடுகப்பட்டி மற்றும் பண்ணைப்புரமும்‌ செல்ல வேண்டுமென சொல்லி சென்று பார்த்தேன்.

இப்படியொரு‌ குக்கிராமத்தில் இருந்து‌ வந்தவர்கள் எத்தனை உயரத்தில் இருக்கிறார்கள்‌ என்று வாய்பிளந்து நின்றேன்.‌ எங்கிருந்து வருகிறோம்‌ என்பதை விடவும் எதை அடைகிறோம்‌‌ என்பது‌ மிக முக்கியம் என்றுணர்ந்த கணமது.

வைகை அணை சென்றிருந்தப் போது ஒரு பக்கம்‌ பொறியாளாராக தொழில்நுட்பம் காணும் மனம்.
இன்னொரு புறமோ, இந்த நீர்பரப்பில் எந்த இடம் மேட்டூராக இருந்திருக்கும், எந்த இடத்தில் புத்தகத்தை ஆற்றில் விட்டிருப்பார் என பல்வேறு சிந்தனைகள் தோன்றின.

கவிஞர் வழித்தோன்றலாக இல்லாமல், எந்த பின்புலமும் இல்லாமல் பதினான்கு வயதில் யாப்பு எழுதுவதும், பத்தொன்பது வயதில் கவிதை நூல் வெளியிடுவதும், பெரிய சாதனை மட்டுமல்ல, பிறப்பிலேயே ஒரு கவிஞனாக பிறந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழுக்கு‌ கிடைத்த வரமும்.

கவிபேரரசு அவர்கள் "மரம்" என்ற தலைப்பிலும், "அம்மா" என்ற தலைப்பிலும் வாசித்திருக்கும் கவிதைகளை, மிகவும் ரசித்துக் கேட்பேன்.

கவிபேரரசும், இசைஞானியும் பிரிவுற்ற தருணம் அவர்களுக்குள் எவ்வளவு‌ பெரிய மனவலியை, பாரத்தை கொடுத்திருக்கும் என்று யோசிக்கும்போதே கண்ணீர் வந்துவிடும்.‌‌பிரிந்தாலும் அவர்கள்‌ தனது திறமையில் சோடை‌ போகவில்லை.

இருவருமே, அதற்கு பிறகு பல வெற்றிகளை, உயரங்களை அடைந்திருக்கிறார்கள்.

பிரிந்தாலும்‌ தோழமையின் வளர்ச்சியை கவனித்து வாழ்த்திக் கொண்டேதான்‌ இருக்கும்‌ தோழமை மனம்.
அதில் தோழமைக்கான பாடமும்‌ உள்ளது அல்லவா?

இணைந்து இருந்திருந்தால், கலையுலகிற்கு, இன்னும்‌ பல அரிய படைப்புகள்
கிடைத்திருக்கும்.

ஒரு ரசிகையாக,‌ இப்போதாவது அவர்கள் இணைந்து ஒரு பாடல் தரமாட்டார்களா? என்றே ஏங்குகிறது மனம்.

தமிழுக்கு தொண்டாற்றியதோடு, சமூக அக்கறையோடு‌ "தண்ணீர் தேசம்"  "மூன்றாம் உலகப்போர்" எழுதியதாலே எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் என்பேன்.

எல்லா நலமும், வளமும்‌பெற்று நீடு வாழ்க கவிப்பேரரசே!

🚩

வித்தையில்லா கர்வம் பாழ்
கர்வமில்லா வித்தை வீண்
வித்தையுள்ள கர்வமே சிறப்பு.

- சுக்கிர நீதி.

வித்தையுள்ள கர்வமே ! தமிழின் மறு உருவமே நீ வாழி !

அன்புடன்

- கோ.லீலா.

கவிஞர் வாலி -1


#கட்டுரை.

கவிஞரை ஓவியராக்க வைக்கப்பட்டப் பெயர் வாலி.
***********************************
எழுத்தாளர், நடிகர், வசனகர்த்தா, ஓவியர், கவிஞர், திரைப்பட பாடலாசிரியர்
பத்ம ஸ்ரீ வாலி அவர்களின் நினைவு நாளில், வணங்கி
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 💐
நினைவுகளைப் போற்றுவோம்.
***********************************
இவ்வுலகில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்தாலும், மனிதன்‌ மட்டுமே ரசனையின் உச்சத்தை பகுத்தறிந்து மகிழக்கூடியவனாக இருக்கிறான். எத்தனை வசதி, வாய்ப்புகள் இருந்தாலும், மனமகிழ்ச்சி இல்லையென்றால் எதுவும்‌ பயன் தராது.

பல்வேறு பணிகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டுவது இலக்கியம் என்றால், அதில்‌ திரையிலக்கியம் முக்கிய பங்காற்றுவதை மறுக்க இயலாது.

அதிலும் திரைப்பட பாடலுக்கென்றே தனியிடம் உண்டு.

எந்த சூழலுக்கும் பொருந்தும் பாடல்களை கொண்டிருப்பது திரை இலக்கியத்தின் செறிவு என்றே சொல்ல வேண்டும்

நம்மை, புத்துணர்வுடன் வைத்திருந்த படைப்பாளியை அவரது நினைவு நாளில், நம்மின் "நினைவு நாடாக்களில்"
சுழற்றுவோம்.

சிறுவயதில் ரேடியோவில் சிலோன் ஸ்டேஷன், பள்ளிக்கு போய் வரும் வழிகளில் உள்ள கடைகளில் என கவிஞர் வாலி அவர்களின் பாடலை கேட்டிருக்கிறேன்.

( யார் எழுதினார்கள் என்பது பற்றிய பிரக்ஞையெல்லாம் அப்போது கிடையாது.)

நாளடைவில் கவிஞர்களின் பெயர்களை கேட்கும் அளவிற்கு, வரிகளில் ஈர்ப்பு துவங்கியிருந்த காலம்.

திரையரங்கிற்கு இப்போதும் அதிகமாக என்பதை விடவும் செல்லவே மாட்டேன் என்றே சொல்லலாம். ஆனால், பாடல்கள் மட்டும் தெரியும்.

சிறு வயதில் இருந்தே தத்துவப் பாடல்களும், சமூக சிந்தனை சார்ந்த வரிகளுமே என்னை பெரிதும் ஈர்த்தன.

அப்படி என்னை ஈர்த்த வரிகள்தான்...

"மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா  ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா"

அடடா ! என்ன அற்புதமான சிந்தனை என மலைத்துப் போனேன்.

"அவதார புருஷன்" என்ற தொடரை, எதர்ச்சையாக, ஒரு முறை படித்தேன், ஆகா ! அழகியத் தமிழும், சிலேடையும், மீண்டும் மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டியது.

காவிரி நீரின் சுவை மிளிர்கிறதே எழுத்தில்‌ என்று தோன்ற, கவிஞர் வாலி அவர்களைப் பற்றிய தகவல்களை தேடி எடுத்தேன்.

கணிப்பு தவறாகவில்லை, திருப்பராய்த்துறையில் பிறந்து, ஸ்ரீரங்கத்தில் வளர்ந்தவர்.

ஒரு புறம் பெரியாரின் கொள்கை மீது தீராத பற்று, இன்னொரு புறம் நித்தமும் காதில் ராமயாணம்‌ பற்றிய சொற்பொழிவுகள் ஒலிக்க வளர்ந்த பருவத்தில் கலைஞரின் தமிழுடன், வாலி அவர்களின் தமிழ் எனக்கு‌ பிரமிப்பை தந்தது.

இப்படிதான் வாலி அவர்களின்‌ பாடல்களை கேட்கத் தொடங்கினேன்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி- கமல், விஜய் - அஜித், சிம்பு- தனுஷ் என நான்கு  காலக்கட்டத்தின் ரசனைகேற்ப சுமார் பதினைந்தாயிரம் பாடல்களை எழுதியுள்ளார்.

காதல், பக்தி, தத்துவம்,நட்பு என வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும்‌ காலத்திற்கேற்ப எளியத் தமிழில் சுவைக்க கொடுத்தவர்.

நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் எங்கள் பேட்ஜ் பாடும்‌  "காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுதான்"  ரொம்பவே ஹிட். இப்போ அனுமினி மீட் சென்றபோதுகூட மீண்டும் அதே‌ பாடலை பாடினோம், அப்படி வாழ்வோடு, உணர்வுகளோடு ஒன்றிப்போன பல பாடல்களை‌ தந்தவர் கவிஞர் வாலி அவர்கள்.

அம்மா பாட்டுன்னா இதோ...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே’,

 ‘அம்மா அம்மா எந்தன் ஆருயிரே’, ‘

நானாக நானில்லை தாயே’,
 ‘சின்னத்தாயவள் தந்த ராசாவே’,

‘காலையில் தினமும் கண்விழித்தால்’

என அம்மாவை கவியெழுதியவர்.

பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா’ என்பது ஒரு பாடல்.

கற்பகம்  கவிஞர் வாலியைத் தனித்தன்மையுள்ள கவிஞராக நிறுத்தியது என்றே சொல்லலாம்.

"பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையில படம் புடிச்சான்" ன்னு ஒரு பாட்டு...

மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்
மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்

எங்க ஊர்ல ( திருவாரூர்) தேருக்குதானே வடம் பிடிப்பாங்க, இதென்ன "மை விழியில் வடம் புடிச்சான்"ன்னு நான் ரொம்பவே ரசித்த வரி. கவித்துவம் நிறைந்த வரியாகவும் இருந்தது.

தொட்டால் பூ மலரும் பாடல் இன்றும் வியப்பையும், ரசிப்பையும் ஒன்றாக சுரக்க வைக்க கூடியவை.

கேள்வி - பதில் பாடல்.
*************************
ஒடிவதுபோல் இடை இருக்கும், இருக்கட்டுமே’

இந்தப் புன்னகை என்ன விலை...
என் இதயம் சொன்ன விலை’

இதை தொடர்ந்து வாடகை, விலை என்பதை வைத்து பாடல்கள்.

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்…
வாடகை என்ன தரவேண்டும்?

மூன்றெழுத்தில்‌ என் மூச்சிருக்கும் என்ற பாடலை கேட்ட வயதில் அரசியல் என்னவென்றே தெரியாது... மூன்றெழுத்தில் மூச்சுன்னா "மூக்கு" தானேன்னு‌ குறுக்கு எழுத்து போட்டிக்கு யோசிக்கிற மாதிரி யோசிச்சு இருக்கேன்.

பின்னாளில், சோ அவர்களிடம்‌ மூன்றெழுத்தில் மூச்சு ன்னா தமிழ், அண்ணா, திமுக எது? என்று கேட்டார்களாம்,

சோ அவர்களும் மூக்கு என்றுதான் பதில் சொன்னாராம்.‌😀

அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்கள்‌ கவிஞர் வாலியின் பாடல்கள்.

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், மிகவும்‌‌ பிரபலமான பாடல்.

நானொரு குழந்தை நீயொரு குழந்தை என பாடல்‌‌களை  சொல்லிக் கொண்டே போகலாம்.

அவதாரப் புருஷன் , அம்மா பொய்க்கால் குதிரைகள், ராமானுஜ காவியம்,
நிஜ கோவிந்தம், 
கலைஞர் காவியம்,
பாண்டவர் பூமி,
கிருஷ்ண விஜயம், 
நானும் இந்த நூற்றாண்டும் ‌

என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன்,
ஒரு செடியில் இரு மலர்கள்
என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், பொய்கால் குதிரை,  சத்யா,
பார்த்தாலே பரவசம், ஹே ராம் என திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சுவாரசிய செய்திகள்.
**************************
🚩
கவிஞர் ரங்கராஜன் நல்ல ஓவியரும்‌ ஆவார். கவிஞரின் நண்பர் பாபு என்பவர், கவிஞர் மாலி போல் புகழ்பெற வேண்டும்‌ என்று கவிஞர் ரங்கராஜனுக்கு சூட்டிய பெயர்தான் வாலி.
🚩
கவிஞர் வாலி நடத்திய பத்திரிக்கையின்‌ பெயர் "நேதாஜி" பலரும்‌ அதில் எழுதி பங்கேற்றனர்.‌

அவ்விதழில்‌ எழுதியவர்களில், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதாவும்‌ ஒருவர்.
🚩

பணம் படைத்தவன் படத்தில் ‘கண்போன போக்கிலே கால்போகலாமா’,

‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை’.

இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதினார் என்றே இன்னமும்  நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்.

இல்லை இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் வாலி.

இரண்டாவது பாடல் திருக்குறளின் சாரத்தை கொண்டது.

🚩

வாலியின் திரைப்பாடலில் பெண்ணியம், சமூகசிந்தனை, அக‌ப்பொருள் மரபு போன்ற ஆய்வுகளை காலம் வாய்க்கும்போது மேற்கொள்ள வேண்டும்.

தெரிந்துக் கொள்ள வேண்டிய செய்தி
**********************************
இவர்களுக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான்.

கவிஞர் வாலி அவர்களி‌ன்‌ நினைவுகளை போற்றி வணங்குவோம்.🙏💐🙏💐🙏💐

அன்புடன்
- கோ.லீலா.

Wednesday 15 July 2020

கர்மவீரர் காமராஜர் -2

கலெக்டர் ஆபீஸ் பியூனா கூட நான் ஆகமுடியாது - கர்ம வீரர் காமராஜர்.
***************************************
ஜூலை 15, கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக📚📚📚 கொண்டாடுகிறோம்.
இன்று தென்னாட்டு காந்தியின் 118 வது பிறந்தநாள்.💐💐💐💐💐

அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை
🌊🌊🌊🌊
பவானித்திட்டம்,
மேட்டூர் கால்வாய்த்திட்டம்,
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,
மணிமுத்தாறு,
அமராவதி, வைகை,
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்,
சாத்தனூர், கிருஷ்ணகிரி,
ஆரணியாறு ஆகியவையாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.

கட்சி சார்பற்று ஒரு தலைவராக மனதிற்குள் நின்ற மனிதர் மட்டுமல்ல...

என் அன்றாட அலுவலகப் பணியில் ஒரு அதிகாரி எப்படி எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்கும்,
நேர்மையாகவும், விரைந்தும் முடிவெடுக்க வேண்டும் என்பதற்கும், நாம் வாழும் தேசத்தின் புவியமைப்பு, மழை என அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்கும்,
எளிய மனிதர்களின் தேவையை உணர்ந்து‌ பணியாற்ற வேண்டும் என்பதற்கும், அய்யா காமராஜர் அவர்களை பற்றி படித்ததும், கேட்டதுமே காரணம்.

தன்னுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சி காலத்தில் சுமார் 27,000 பள்ளிகளை திறந்திருக்கிறார்.
🚩
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

-பாரதி.
🚩
என்ற வரிகளை விடவும் ஒரு படி மேலே போய் அன்னமும் இட்டு கல்வியும் தந்த பெருந்தகை காமராஜர் அவர்கள்.

இன்று நான் பணியாற்றும் பரம்பிக்குளம் ஆழியார் திட்டம், அய்யா காமராஜரின் பெரும் முயற்சியால்‌ வந்தது. எப்படி வந்தது என்று பார்ப்போம்.

விவேகமாய் செயலாற்றுதல்.
********************************
முதலமைச்சரான அய்யா காமராஜர்‌ அவர்கள் CS அவர்களை அழைத்து....

காமராஜர் :
பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் என்னாச்சுங்குறேன்.

CS : பேசிகிட்டு இருக்குறாங்க.

காமராஜர் : யாருங்குறேன்.

CS : அதிகாரிங்க.

காமராஜர் :

அவன் பேசுவான்லே, அவன் 58 வயசு வரைக்கும் பேசுவான்லே. நமக்கு‌ அஞ்சு வருஷந்தான்லே...
ஏன், நீங்க பேசமாட்டியலோ.

நம்பூதி பட் க்கு போனை போடுங்குறேன்.
☎️
போன் உரையாடல்.

காமராஜர் :

என்னாவே, இதுக்குதானா, இரண்டு பேரும் ஜெயிலுல வானத்த அண்ணாந்து பார்த்துகிட்டு கிடந்தோம்..

ந.ப : என்னை திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு, ஆனா எதுக்கு திட்றேன்னு சொல்லிட்டு திட்டுங்க.

காமராஜர் : என்னமோ தண்ணி தர மாட்டியேன்னியாலமே...

என்னவே தண்ணிய வச்சிகிட்டு என்ன பண்ண போறேங்குறேன்.
நான் காங்கிரஸ், நீ கம்யூனிஸ்டா இருந்தாலும், தேச பக்தங்கறேன்.

ந.ப :
நான் எப்போ முடியாதுன்னேன்
எவ்வளவு தண்ணி வேணும் சொல்லுங்க.

காமராஜர்:
உன்னை நான் நம்பறேன், டிரப்ட் போட்டு‌ அனுப்புல கண்ணை மூடிகிட்டு கையெழுத்து போடுதேங்கிறேன்.

ந.ப : நான்‌கையெழுத்து போட்டே அனுப்பிடுறேன்.
📚✍🏼📚✍🏼📚✍🏼
டிரப்ட் வந்தவுடன்,  CS ஐ அழைத்து பார்த்துகுவே, படிக்கமாலே கையெழுத்து போடுறேன் என்று கையெழுத்திட்ட "King maker".

அப்படி உருவான ஒரு திட்டத்தில் பொறியாளராக பணியாற்றும் பெரும்பேறு பெற்றுள்ளேன் என்பதே மகிழ்வுதான்.

எளியவரின் தேவையை அறிதல்.
***********************************
ஒரு‌ முறை முதலமைச்சர் காமராஜர் அவர்களை பார்க்க பஸ் கம்பெனி உரிமையாளர்கள் வந்திருந்தனர், அதே நேரத்தில் வேறு ஒரு கோரிக்கைக்காக பொதுமக்களும் வந்திருந்தனர்.

காமராஜர், முதலில்‌ பொதுமக்களை சந்திக்க சென்றுவிட்டார், முதல் கேள்வியாக உங்களுக்கு கடைசி பஸ் எத்தனை மணிக்கு என்று கேட்டிருக்கிறார்.

அவர்கள் இரவு  7.30 மணிக்கு என்று சொல்ல, அதற்குள் அவர்களின் வேலையை முடித்து அனுப்பியிருக்கிறார்.
🚌🚌🚌🚌🚌
அதற்குள், பேருந்து உரிமையாளர்கள் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள் என உதவியாளர் சொல்ல... போடு போடு போனை போடு என்று சொல்லி போனில் பேசியிருக்கிறார்.

என்னாங்குறேன், அவனுக்கு கடைசி பஸ் 7.30 க்கு விட்டுட்டா அவன் வீட்டுக்கு போகமுடியாது.

நீ காரு வச்சிருக்க எப்ப வேணும்னாலும்‌ போகலாம்வே.

அவன்‌ ஊருக்கு போக முடியலைனா, மெட்ராஸ்ல தங்கனுங்குறேன், கையிலே காசு இருக்குமாவே..

நீ ரூம் போட்டு தங்கலாம்ங்குறேன்...

அவன் நெலமைய பாக்கணும்வே...
புரியாமா கோவிச்சுக்கிட்டா  எப்படிங்குறேன்.

நான் முதலமைச்சரா ஆனாதல பார்க்க வர...

அவன் என்னை முதலமைச்சரா ஆக்கிட்டு வந்திருக்கான்லே என்றராம்.

இதை படித்ததின் விளைவுதான், விசிட்டர் யார் வந்தாலும், காக்க வைக்கமால், அவர்களின் தேவையை உணர வைத்தது, வைக்கிறது.

எல்லோரும்‌ சமம்.🪑🪑🪑
*********************
காமராஜரின் கீழ் எம்.எல்.ஏ வாக இருந்த ஒருவர் எந்த அதிகாரி வந்தாலும் நிற்க வைத்தே பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இந்த தகவல் அதிகாரிகள் மூலம், சீஃப் செகரட்ரி வழியே முதலமைச்சர் காமராஜரை அடைந்துவிட்டது.

காமராஜர் உடனே அந்த எம்.எல்.ஏ வையும், மற்ற எம்.எல்.ஏக்களையும் வரசொல்லு ஒரு புறம் அமர வைத்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் அனைத்து துறை அதிகாரிகளையும் வரவழைத்து இன்னொரு புறம் அமர சொல்லிவிட்டு,‌ அய்யா, பேப்பரை  படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

வெகுநேரம் ஆகிவிட, அந்த எம்.எல்.ஏ வர சொன்னீங்க என்றாராம்.

நீங்களும் உட்கார்ந்திருக்கீங்க, நானும் உட்கார்ந்திருக்கேன்,  அவங்களும் உட்கார்ந்து இருக்காங்க ஒண்ணும் குடிமுழுகிடல போங்கவே என்றாராம்.
🪑
எவ்வளவு ஒரு எளிமை. இதை படித்ததும் மனதில் பதிந்த செய்தி.

நமக்காக, நம் கீழ் பணிபுரிவோர் நின்றால், அவர்களை முதலில் அமர சொல்லவேண்டும், சாப்பிட்டார்களா என்பதை கேட்டறிய வேண்டும், அவர்கள் வீடு திரும்ப வாகன வசதிகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பதுதான்.

நம் தேசத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்.
***********************************

கர்நாடக  முதலமைச்சராக இருந்த நிஜலிங்கப்பாவுடன், காமராஜர் நெருங்கிய நட்புடையவர். ( வா, போ என்று பேசும்‌ அளவிற்கு).

ஒரு முறை, கர்நாடகவில் அவருடன் பயணித்திருக்கிறார், லேசா மழைதூற, வழியில் ஒரு ஏரி வர...

(இருவருக்குமிடையே மொழிபெயர்ப்பாளராக மதுர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இருந்திருக்கிறார்கள்.)

காமராஜர்:
அது என்ன கொள்ளளவுங்குறேன்‌.

நி.லி : தெரியாது.

காமராஜர் :
இந்த தண்ணி விவாசயத்துக்கு போகுதா, வேறெதும் தொழிற்சாலைக்கு போகுதா? விவசாயம்னா எவ்ளோ ஏக்கரு?

நி.லி : தெரியாது.

காமராஜர் : மூதி ஒண்ணுமே தெரியாத நீ முதலமைச்சரா இருந்தா எப்படி விளங்குகேறேன்.

(மதுர் கி.முக்கு மொழிபெயர்ப்பின் பிரச்சனை முதல் இரண்டு எழுத்தில் ஆரம்பித்து விட்டது).

அடுத்த சம்பவம், தொழிற்சாலைக்கு ஆயிரம் ஏக்கர் நில ஒதுக்கீடு
🌦️☀️🌍
எனக்கான பாடம் :

அதிகாரியா இருக்கிறவங்களும், முழு தகவலையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

துணிந்தும் விரைந்தும் முடிவெடுத்தல்.
*****************************
சீன போர் முடிந்த நேரம் நேரு மனசோர்வில்‌ இருக்கிறார். இந்தியாவுக்கு பெரிய அடி.

நேருவை பார்த்த காமராஜர் என்ன பிரச்சனை என்கிறார்.

நேரு:

ராணுவ தள்வாடங்களை அமெரிக்காவில் இருந்து கொண்டு அமெரிக்க வங்கி‌ ஒன்று கையெழுத்திட வேண்டும், ஆனால் எந்த வங்கியும் போட தயராய் இல்லை.

காமராஜர் : நம்ம ஊர்ல அமெரிக்ககாரங்க கடை ஏதுமில்லையா?

நேரு : கடைன்னா ? எத சொல்றீங்க.

காமராஜர் : அதான் இன்ஸ்டிட்டியூஷன்.

நேரு : அமெரிக்கன் எகஸ்பிரஸ் பேங்க் தான் இருக்கு. வேறெதும் இல்லை.

காமராஜர் :
அதை இழுத்து மூடுங்க. நமக்கு உதவாதவன் இங்கே எதுங்குறேன்...

நேரு : பெரிய பிரச்சனை ஆயிடுமே.

காமராஜர் : ஆகட்டுமே, என்ன ஆகிடும்ங்கேறேன்.

உடனே, அமெரிக்கன் எகஸ்பிரஸ் பேங்கை இழுத்து மூட உத்தரவிட, அமெரிக்காவில் துரித தகவல் வருகிறது 24 மணி நேரத்தில் இராணுவ தள்வாடங்கள் இந்தியா வருமென்று.

அசையாத நேர்மையை பாராட்டு.
***********************************

கட்சிக்காரரின் தியேட்டர் ஒன்றை திறந்து வைக்க காமராஜருக்கு அழைப்பு வர, அதை ஏற்றுக் கொண்டார்.

தியேட்டரில் வயரிங் வேலை முடிவடையாமல் லைசென்ஸ் அனுமதிக்க முடியாது என்று அன்றைய கலெக்டர் பசுபதி பாண்டியன் சொல்லியிருக்கிறார்.

கட்சி தொண்டர்களோ, யாருகிட்ட பேசுற. வரபோறது, சகல வல்லமையும் வாய்ந்த முதலமைச்சர், நீ வெறும் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் என சொல்ல.

நான், இன்னைக்கே ரிசைன் பண்ணிட்டு, எலெக்‌ஷன்ல நின்னா முதலமைச்சரா ஆக முடியும், ஆனால் தலைகீழா நின்னாலும் உங்க அய்யா கலெக்ட்ராக ஆக முடியாது. அதனால் நான்தான் கையெழுத்து போடணும் போ என்று சொல்லியிருக்கிறார்.

இந்த செய்தி காமராஜருக்கு போக, அவர் சொன்னதில்ல என்ன தப்பு, ஒரு சின்ன தப்பு இருக்கு, நான் பியூனா கூட ஆக முடியாது, அதுக்கும் குறைந்தளவு படிப்பு வேணுமில்ல....

என்ன குறைய கண்டீங்க, சட்டத்தைதானே சொல்லியிருக்காரு, இவரை மாதிரியான நேர்மையான அதிகார்களை நம்பிதான் ஆட்சி செய்றேன் என்று சொல்லிவிட்டு.

ரிப்பனை வெட்டுறேன், ஆனா படம் ஓட்டாத, என்று சொல்லி திறப்பு விழா செய்திருக்கார்.

( அரசியல்வாதிகள் தனிப்பட்ட கூட்டத்திற்கு சென்றால் அங்கு அரசு அதிகாரிகள் செல்ல மாட்டார்கள் என்பது மரபு)

திறப்பு விழா முடிந்தவுடன், நேரே கலெக்டர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். கலெக்டரும்,அவரது மனைவியும், வாங்க என வரவேற்க,‌ எனக்கு காஃபின்னா புடிக்கும்‌ கொண்டு வாம்மான்னு சொல்லிவிட்டு, விளையாடிக் கொண்டிருந்த கலெக்டர் பையனை வாங்க ! உங்க பேர் என்ன ?

நீங்களும்‌ அப்பா மாதிரி நேர்மை மாறாத பெரிய பதவிக்கு வரணும்னு சொல்லி காஃபியை குடிச்சிட்டு போயிட்டராம்.

இப்படி நேர்மையான அதிகாரிகளை பாராட்டிய அரசியல்வாதிகள் வாழ்ந்த பூமி இது. ( ஹூம்‌ இப்போ... )

மக்களுக்காக சட்டமேயன்றி. சட்டதிற்காக மக்கள் இல்லை.
- காமராஜர்.

இன்னும் பல்வேறு நிகழ்வுகள் படிக்க படிக்க வியப்பும், மகிழ்ச்சியும் ஒருசேர வருவதோடு, நம்மை சிறந்த மனிதராகவும் செதுக்கி விடும் வல்லமையான வாழ்வு வாழ்ந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் என்பது மிகவும் பொருத்தமே.

அவரது எளிமை இன்னும் பிற நற்குணங்களை பின்பற்றுவதே  அவருக்கு செய்யும் மரியாதை ஆகும்.

நேரம் வாய்க்கும்போது இன்னும் பல நிகழ்வுகளை குறித்து எழுத்து தொடரும்.

அன்புடன்.
- கோ.லீலா.
#கட்டுரை.

Sunday 8 March 2020

நீரும் பெண்ணும்



நீர் நிலைகளின் மூன்று முக்கிய பயன்பாடுகள், அழகியல் சார்ந்தது, சூழலியல் சார்ந்தது மற்றும் இதர பயன்பாடுகள் .

அழகியல் சார்ந்த பயன்பாடுகள் உங்கள் பார்வைக்கும் மனரீதியான கொண்டாட்டங்களுக்கும் மகிழ்ச்சிகளை தரக்கூடியதாகும்.

சூழலியல் சார்ந்த பயன்பாடு, நிலத்தடி நீரை அதிகப்படுத்துதல், வெள்ளத்தை கட்டுப்படுத்துதல், வனவிலங்குகளுக்கு ஆதாரமாக இருத்தல் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைப்பு செய்துக் கொள்ளுதல் ஆகும்.

இதர பயன்பாடுகள்குடிநீர் மற்றும் தினசரி பயன்பாடுகளுக்கு உரியது மீன் வளர்ப்புவிவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் மதம் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் மனமகிழ் செயற்பாடுகளுக்கு பயன்படுவது.


இப்படி பல பயன்பாட்டிற்கு உதவும் தண்ணீரின் ஒரே ஆதாரம் மழைதான். இந்த மழையின் அளவு மேற்பரப்பு நீராகவும் நிலத்தடி நீராகவும் இருவேறு நிலைகளை அடைகின்றன.

இதில் மேற்பரப்பு நீர் என்பது ஆறு குளம் ஏரி குட்டை மற்றும் அணைகளில் தேங்கும் நீர் ஆகும்.

இதை விடுத்து நிலத்தடி நீர் என்பது பூமிக்கு அடியில் செல்லும் நீராகும்.இதை கிணறு, ஆழ்துளை கிணறு, ஊற்று மூலம் மனிதர்கள் நாள் தோறும் சுரண்டிக் கொண்டே உள்ளனர்.

நீர் பற்றாக்குறை இயற்கையில் கிடைக்கும் நீர்வளம் குறைதல்,
இயற்கை சீரழிவுகள்,
வேகமான நகர்புற வளர்ச்சி.

மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நீர் பற்றாக்குறை தொடர்கின்ற காலத்தில், நீரை பயன்படுத்துவோர் யார் யாரென பகுத்துப் பார்த்து, அவர்களின் நிலை, அதை சரி செய்யவேண்டிய முறைகள் யாவற்றையும் பார்ப்போம்.

·         பெண்கள்
·         விவசாயிகள்
·         தொழிலதிபர்கள்
·         தொழிற் பண்பட்டவர்

(மருத்துவர் பொறியாளர் வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்கள்)

  • சிறுதொழில் முனைவோர்
  • மாணவர்கள்
  • பொதுமக்கள்.
  • ஆ’சிரமங்கள்’

பெண்கள்
பொதுவாக கூலிப்பணிகளிலும் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி கொடுக்கப்படுவதில்லை. 

இப்படி ஒரு சமமின்மை ஏற்கனவே சமூகத்தில் இருக்கிறது.அதோடு தண்ணீர் என்று வரும்பொழுது அந்த சமமின்மை தொடர்கிறது என்பது வருத்தம் தரும் செய்தி.

ஒரு வீட்டில் குடிநீர் சமையல்துவைத்தல்குளித்தல் மற்ற வீட்டு தேவைகளுக்கான தண்ணீரையும் குடும்ப உறுப்பினர்களுக்கான தண்ணீரையும் கொண்டுவந்து சேர்த்தல் என்பது ஒரு பெண்ணுக்கு மட்டுமேயான கடமையாக கருதப்படுகிறது. 

இதை படிக்கும் பொழுது சில ஆண்கள் நாங்களும்தான் தண்ணீர் சேகரித்து வருகிறோம் என்று சொல்லக் கூடும்எனினும் பெண்களின் பங்கு 99% உள்ளது குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிலும்வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லக்கூடிய பல நாடுகளிலும் பெண்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக இந்தியா, ஆப்பிரிக்கா,
பொலிவியா மற்றும் கென்யா போன்ற நாடுகளில் பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் வெற்று காலுடன் நடந்து சென்று குடம் குடமாக அல்லது கண்டைனர் கண்டைனராக தண்ணீர் சுமந்து வரும் காட்சிகள் நாள்தோறும் இயல்பாக நடக்கிறது. 

இந்தியாவை பொருத்தவரை ராஜஸ்தானிய பெண்கள் பல மைல் தூரம் நடந்து தலையிலே அடுக்கடுக்காக குடங்களில் தண்ணீர் சுமந்து வரும் காட்சி நடைபெறுகிறது.

 They want their heads for thinking not for carrying water.

என அடிக்கடி சொல்வதுண்டு. கிட்டத்தட்ட 266 மில்லியன் மணி நேரத்தை தண்ணீரைச் சேகரிப்பதற்காக செலவிடுகிறார்கள்.

சுமார் 633 மில்லியன் மக்கள் தூய்மையான நீரற்ற நாளை எதிர்கொள்கிறார்கள். பொது இடங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இருப்பதன் மூலம் மழைக்காலங்களில் கழிவுகள் பாதுகாப்பற்ற நதிகளிலும் குளங்களிலும் கிணறுகளிலும் குட்டைகளிலும் கலந்து விடும் அபாயம் இருக்கிறது. 

இந்த நீரை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகிறார்கள். 

இந்த நீரிலேயே‌ உணவையும் சமைக்கிறார்கள் இந்த மாசுபட்ட நீர்கூட போதுமான அளவில் பெண்களுக்கு கிடைப்பதில்லை.
மனித வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் நீர் மிக முக்கியமானது. 

உயிரியல் மற்றும் வேதியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் டயரியா, குடல் தொற்று நோய், தோல் நோய்கள் போன்றவற்றை வராமல் தடுக்கும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் போதுமான நீர் அவசியமாகிறது.

இந்தியாபொலிவியா மற்றும் கென்யா நாடுகளில் கர்ப்பிணி பெண்கள் சிறு குழந்தைகள் பருவப் பெண்கள் இளம் மங்கைகள் என அனைத்து வயது பெண்களும் தண்ணீரை தூக்கிச்செல்லும் கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

போதுமான தண்ணீர் வசதியற்ற இடங்களில் சிக்கும் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது, பருவமடைந்த பல பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடுகிறார்கள்.

ஏனென்றால் தங்களைத்
தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு தேவையான அளவிற்கு தண்ணீரோ, கழிப்பிட வசதிகளோ இல்லை என்பதே  இதற்கு முக்கிய காரணம்.
Drop for  a Drop என இதைச்‌ சொல்ல வேண்டும்.

இதைப்போலவே ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு தேவையான அளவு தண்ணீரும்சத்தான உணவும், 
ஓய்வும் கிடைக்க வேண்டும் மாறாக ஒரு நாளைக்கு இருபதிலிருந்து அய்ம்பது லிட்டர் தண்ணீர் வரை நெடுந்தூரம் நடந்து சென்று சுமந்து வர வேண்டிய சூழல் உள்ளது.

அந்த தண்ணீரும் சுகாதாரமற்ற தண்ணீர். தண்ணீரை உட்கொள்ளும் போது தாய்க்கும், சேய்க்கும் பல நோய்களும், பாதுகாப்பற்ற வாழ்வியலும், உடல் நல குறைப்பாடுகளும் ஏற்படுகிறது.

ஆப்பிரிக்காவில்,ஒரு நாளைக்கு 16 மில்லியன் மணி நேரத்தை தண்ணீர் சேகரிப்புக்காக செலவழிக்கிறார்கள். 

ஆண்கள் 6 மில்லியன் மணிநேரமும், குழந்தைகள் 4 மில்லியன் மணி நேரமும் இதற்காக செலவிடுவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

தண்ணீர் பிடிக்க செல்லும் பெண் குழந்தைகளை 30 நிமிடத்திற்கு பதிலாக 15 நிமிடம் மட்டும் தண்ணீர் சேகரித்தால்  போதுமென்றால், பள்ளியில் 12% வருகை அதிகரித்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. 

இதைப் படிக்கும் போது இதெல்லாம் உண்மையா? அப்படி எந்த குழந்தையையும் பார்க்கவில்லையே என்று தோன்றும்.

ஆனால் நீங்கள் எண்ணுவது உண்மையில்லை, மாறாக நம்மைச் சுற்றி நாம் கவனிப்பதே இல்லை எனபதே உண்மை.

மேலும் அதீத தாகம் எடுத்தால் மட்டுமே பெண் தண்ணீர் அருந்துகிறாள்,
எனும் முகத்திலறையும் உண்மை ஒருபுறம்…





     


பெண்கள் தண்ணீர் சேகரிக்கும் பணியிலிருந்து விடுபடும் போது தன் குடும்பம்,தன் கல்வி, சுய முன்னேற்றம், சிறு தொழில் அல்லது அதிகார பொறுப்பிற்கு செல்லும் வாய்ப்புகள் மிகுதியாகவே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.இதற்கான தீர்வை கட்டுரையின் இறுதியில் காணலாம்.

பெண் மட்டுமின்றி சாதிய பாகுபாடு, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுகளின் மூலமும் நீர் சமமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதே வலி தரும் உண்மை. 

இதற்கு சான்றாக குற்றாலத்தில் குளிக்க தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்பட்ட நிகழ்வு முதல், உயர் சாதியினருக்கு என தனி குளம் அமைத்துக் கொள்ளுதல் வரை இந்த ஏற்றத் தாழ்வுகள் புரியும்,பணம் படைத்தோர் காசுக்கு தண்ணீரை வாங்கி விடுகின்றனர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு மாசடைந்த நீர்  குறைந்த அளவில்தான் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.



தண்ணீர் மாசு மற்றும் பற்றாக்குறையை சரி செய்வது பற்றி பின் காண்போம்.

தொழிலதிபர்கள்.

சமூகத்தின் முன்னேற்றம் என்பது தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் உள்ளதாக எண்ணுகிறோம். அப்படி வளர்ந்து விட்ட தொழிற்சாலைகளுக்கு சில கட்டுபாடுகளும்,சூழலியல்சான்றிதழும்,கழிவுப் பொருட்களை சுத்திகரிப்பு செய்து பின் வெளியிட அனுமதியென பல்வேறு கட்டுபாடுகள் இருந்தாலும், தொழிலதிபர்களின் அலட்சியத்தால்,அனைத்து கழிவுகளும் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் விடப்படுகிறது.

இதன் மூலம் மிக விஷத்தன்மை வாய்ந்த பொருட்கள் தண்ணீரில் கலந்து தண்ணீரை மாசடைய செய்வதோடு நீர் வாழினங்களை மடிய செய்கின்றன.

எடுத்துக்காட்டாக நொய்யலாற்றை சொல்லலாம்.
ஆறுகளைப் போலவே,கடலிலும் எண்ணற்ற கழிவுகளை கொட்டுகின்றனர், குறிப்பாக  E-waste  அதிகம் கொட்டப்படுகிறது.கடலின் சூழல் கெடும் போது, மற்ற எல்லா சூழலும் கெட்டுவிடும்,கடலிக் குறித்த தட்டையான பார்வையே பலரிடம் இருப்பதால்,இத்தகைய நிலை இன்னும் போதிய கவனம் பெறவில்லை.

தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நீரில் விடுவதால், அக்கழிவுகளில் உள்ள பொருட்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.நேரடியாக தண்ணீரை உட்கொள்ளுதல் மற்றும் குளிக்கப்பயன்படுத்துதல் மூலமும், அத்தண்ணீரில் வாழும் மீன்,நண்டு போன்றவற்றை உட்கொள்வதாலும் பல நோய்கள் வருகின்றன.


தோல் நோய்,புற்றுநோய்,வரம்பு மண்டல பாதிப்புகள் என பல்வேறு நோய்கள் வர காரணமாக உள்ளது.

குறிப்பாக தோல் பதனிடும் தொழிற்சாலை பகுதிகளில் உள்ள தண்ணீர் ஆரஞ்ச் வண்ணத்தில் இருக்கும்,தண்ணீரில் அதிக அளவு குரோமியம் இருந்தால் தண்ணீர் இவ்வண்ணத்தில் இருக்கும்,இதனால்நுரையீரல் புற்றுநோய்,மற்றும் பல் சம்பந்தமான நோய்கள் வரும்.
மனிதர்களை மட்டுமின்றி, மண்ணையும் மலடாக்கும் தன்மைக் கொண்டவை தொழிற்சாலை மாசுகள்.

கழிவுகள் மட்டுமல்லாது,தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களுக்காக செலவிடப்படும் நீரும் அதிகம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.எனினும் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் என்று வரும் போது நான் சொல்லும் வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

Development Vs Environment-No
Development and Environment-No
Develop the Environment-yes
என்பதுதான் அந்த வாசகம்.

தொழிலதிபர்கள் பலர் முறையான சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கான மாசுக் கட்டுப்பாட்டினை செயவதில்லை என்பதே உண்மை.

  • தொழிற் பண்பட்டவர் (மருத்துவர்,பொறியாளர்,வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்கள்)                                               
மருத்துவர்கள்.

என்னப்பா இது ஊருக்கே மருந்து தர்றவங்க, தண்ணீய என்ன செய்யப் போறாங்கன்னு தானே கேட்கிறீங்க….இதோ கேளுங்க.
ஊரில இருக்குற அத்தனை பேரும் புள்ளைய டாக்டருக்கு படிக்க வைக்கணுமின்னு ஆசைப்படுறாங்க ஆனா யார் ஊசிப் போட்டுப்பா? சரி அத விடுங்க விசயத்துக்கு வருவோம்.

பழைய காலத்தில் ஊசிப் போட்டு திரும்ப தண்ணீரில் கழுவி மீண்டும் ஊசிய மட்டும் மாத்தி சிரிஞ்ச பயன்படுத்துவாங்க,அந்த தண்ணீரைப் பூமியில் தான் ஊற்றுவார்கள்,அதே போல் டெட்டால் போட்டு கை கழுவும் தண்ணீரும் பூமிக்குதான் போகும்,அப்படி பூமிக்கு போகும் தண்ணீரில் இருக்கும் வேதியியல் பொருட்கள் பூமியில் தங்கிடும்.

அது மட்டுமில்லை,பெரிய பெரிய அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பின்னால் போய் பார்த்தீங்கன்னா மலை மலையா சலைன் பாட்டில் குவிஞ்சிருக்கும், கீய்ட்ட்தட்ட 200-300 மீட்டர் நீலத்துக்கு மூணு மீட்டர் உயரத்திற்கு எல்லாம் ஒரு குவியல் இருக்கும்,இதனால் என்ன பிரச்சனை என்றுதானே கேட்கிறீர்கள்.
இந்த பாட்டில்கள் எல்லாம் ப்ளாஸ்டிக் என்று சொல்ல்க்கூடிய நெகிழிப் புட்டிகள்,இதன் மீது பெய்யும் மழை பூமியை சென்று சேராது,அதனால் நிலத்தடி நீர் செறிவூட்டல் தடைப்படுவதோடு,அப்பகுதி மண்ணின் வளமும் பாதிக்கப்படும்.
மேலும்,மழைநீர் இதன் மேல் தேங்கி கிடப்பதால் பல சுகதார கேடுகளுக்கும் காரணமாகி விடுகின்றது.
நெசவுத் தொழில் எனும் போதே நினைவிற்கு வருவது நொய்யலாறு, சாயப்பட்டறைகளின் கழிவால் இன்று ஒரு ஆறே உருமாறிக்கிடக்கிறது. அதில் விழும் வரத்து நீரின் தன்மையும் கெட்டு விடுகிறது.அப்படி என்னதான் உற்பத்தி செய்கிறார்கள்.அத்தகைய உற்பத்தியிமன் மூலம் நாட்டின் வறுமை ஒழிந்து விட்டதா?
பின்னலாடை தொழிற்சாலைகளை ஏன் வெளிநாடுகளில் நிறுவிக் கொள்ளாமல் நம்மிடம் கொடுத்தார்கள்,எதையும் தொலைநோக்கு பார்வையுடன் காணத் தவறி விடும் நம் அரசியல் கட்டமைப்பு தான் இதற்கு காரணம்.தமிழ்நாடு மட்டுமின்றி இன்னும் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளின் மரணம் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
பொறியாளர்கள்.
மின்னணு பொறியாளர்கள் E-WASTE  எனும் மி-குப்பைகளை உருவாக்கி விடுகிறார்கல்,அதை மறுசுழற்சி செய்வது அரிதான காரியம்.இந்த குப்பைகளை கடலில் கொட்டிவிடுகிறார்கள். கடல்வாழ் உயிரின்ங்கள் பாதிக்கப்படுவதோடு,அக்குப்பைகளில் உள்ள விலையுர்ந்த சில கனிமம் மற்றும் தனிமங்களை பிரித்தெடுக்க தனி நபர்கள் செய்யும் முயற்சியாலும் சுற்றுச் சூழல் மாசடைகிறது.
சமூகப் பொறியாளர்கள்.(சிவில்)
தண்ணீரை காப்பதிலும்,அதை அழிப்பதிலும் இவர்கள் சமபங்கு வகிக்கின்றனர்,ஆறு,குளம்,ஏரி,வாய்க்கால்,கண்மாய்,போன்றவற்றை ஒரு புறம் பராமரித்தாலும்,நிலத்தில் அதிக கட்டிட வேலைகளை மேற்கொள்வதும் இவர்களே.சிமிண்ட் கலவை போடும் போது (BOTH BY MACHINARIES(INCLUDING RMC) AND MANUAL) குறைந்த்து 25-40 சதுர அடி நிலம் சிமிண்ட் மற்றும் ஜல்லிகளால் ஆக்கிரமிக்கப் படுவதோடு,கலவை கலந்த தண்ணீர்,சிந்தும் கலவையென பூமீன் மேற்புறம் சிமிண்ட் கலவைக் கொண்டு பூசப்பட்டது போல் ஆகிவிடும்.இதனால் சிமிண்டின் பகுதி பூமியின் உள்ளிறங்க வாய்ப்பாகி விடுவதால் நிலத்தடி நீர் மாசடைவதோடு.மேற்புரம் நாளடைவில் கெட்டித்தன்மை பெறுவதால்,மழைக்காலங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டல் தடைப்படுகிறது.
நிலத்தின் பெரும் பகுதிகளில் கட்டிடங்களை கட்டுவதன் மூலம், மரம்,செடி,கொடிகளை அழிப்பதும்,இன்னும் வனம் ஒட்டிய பகுதிகளில் வனத்தை சூறையாடும் போக்கும் கானப்படுகிறது இதனால்,காலநிலை மாற்றம் ஏற்படுவதோடு,பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.

அதே போல்,அணை,சிற்றணை போன்ற கட்டமைப்புகள் செய்யும் போதும் வெட்டப்படும் மரங்களின் சிறு சிறு கிளைகள் அங்கேயே விடப்படுவதால் நாளடைவில் தேங்கும் தண்ணீரில் அழுகி மீத்தேன் வாயுக்களை உருவாக்கி விடுகிறது.இதன் மூலம் பூமி வெப்ப மயமாக்கப்படுகிறது.இதை அருந்ததி ராய் அவர்கள் வெகு விரிவாக தன் புத்தகமொன்றில் எழுதியுள்ளார்கள்.
இப்படி துறைவாரியாக சொல்லிக்கொண்டே போகலாம்.

  • சிறுதொழில் முனைவோர்
சிறு தொழில் செய்வோர்களும் விதி விலக்கல்ல,தான் செய்யும் உற்பத்தி பொருளின் கழிவுகளை அருகில் இருக்கும் நீர் நிலைகளில் விட்டுவிடுவார்கள்.குறிப்பாக இறைச்சி கடைகள் வைத்திருப்போர் இறைச்சியின் கழிவுகளை ஆற்றில் அல்லது அருகில் செல்லும் வாய்க்காலில் கொட்டிவிவுகின்றனர்,இதன் மூலம் நீர் மாசடைவதுடன், பல் வேறு சுகாதார கேடுகளும் விளைகின்றன.
  • மாணவர்கள்.
நீர்நிலைகளைப் பற்றிய விரிவான விழிப்புணர்வு இவர்களுக்கு மிகத் தேவை ஏனெனில்,வருங்காலத்தில் இவர்கள் தான் நாம் செய்கிற தவறுகளால் வரும் விளைவுகளை  சந்திக்கப் போகிறவர்கள். இவர்களால் நீர்நிலைகளுக்கு பெரும் பாதிப்பு இல்லை. என்றாலும் நீர்நிலைகளை பராமரிக்கவும்,நீரை விரயம் செய்யாமலிருக்கவும் இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்,பல் துலக்கும் போது,சவரம் செய்யும் போது,குளிக்கும் போது  குழாய்களை திறந்து விட்டு  எத்தனை நேரமானாலும் இவர்களின் வேலை முடிந்தப் பின்னரே குழாயை மூடும் பழக்கம் கொண்டவர்களாக பலர் இருக்கின்றனர். பெற்றோர்கள் சில நீர் சிக்கன வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம்,அதைப் பார்க்கும் குழந்தைகளும் கடைபிடிப்பர்.
என் மகள் இன்றும் கூட இரு தம்பளரில் தண்ணீரை தேவையான போது பிடித்து வைத்துக்கொண்டு பல்துலக்கும் வழக்கம் உடையவர்.தேவைப்பட்டால் மீண்டும் தண்ணீரை குழாயிலிருந்து சேகரித்துக்கொண்டு குழாயை மூடிவிடுவார்.
உணவு பொருட்களை வீணடிப்பதன் மூலம் தண்ணீர் எப்படி வீணாகிறது என்பதையும் நாம் தான் சொல்லித் தர வேண்டும்.


  • பொதுமக்கள்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது,பின் வீட்டு கழிவுகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் விடுவது என இவர்கள் நீர்நிலைகளை அழிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
பல ஊர்களில் பணியாற்றி இருக்கிறேன்,எல்லா ஊர்களிலும் ஒன்று போல் ஊரின் உள் ஓடும் ஆறு அல்லது வாய்க்கால்கள் ஊர் பொது சாக்கடையாக மாறியிருப்பதை காணலாம்.அதோடு நீர்நிலைகளை ஆக்ரமித்து வீடு கட்டுதல்,அவர்களின் தொழிற்சார்ந்த கட்டிடங்களை கட்டுவது,தன்னுடைய வயல்,அல்லது தோப்புகளை நீர்நிலைகளை அழித்து உருவாகுதல் என பல்வேறு செயல்பாடுகள் நீர்நிலைகளை அழிக்கவும்,மாசடையவும் செய்கின்றன.

  • ஆசிரமங்கள்
ஆ பெரிய சிரமங்கள் தருகின்றன இத்தகைய ஆசிரமங்கள். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தல்,காடுகளை அழித்தல் என பல்வேறு செயல்களுடன்,வழிப்பாடு என்ற பெயரில் பெரும் கூச்சல்,வெளிச்சம் என உருவாக்கி கானூயிர்களை காட்டிலிருந்து துரத்துதல் என பல்வேறு அடாத செயல்கள் செய்கின்றன இத்தகைய ஆசிரமங்கள்.

தீர்வுகள்.

  • பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சேர்ந்து தூய்மையான தண்ணீரை பெறுவதற்கான வழிவகைகளை காண வேண்டும்,விழிப்புணர்வு பெற வேண்டும்.தன் தேவைக்கான குரலைக் கொடுக்க வேண்டும்.பெண்கள் தன் வேலை பளுவை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்,பெண்கள் தண்ணீர் தனக்கான உரிமை என்பதை உணர வேண்டும்.தண்ணீரைக் குறித்த கல்வியறிவு பெற வேண்டும்.

  • விவசாயிகள் இயற்கை வேளாண்மை,அங்கத வேளாண்மை,குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்தல்,இரசாயன உரங்களை தவிர்த்தல்,அரசு அளிக்கும் பயிற்சி முகாம்கலில் கலந்து கொள்ளுதல்,அதை யாவருக்கும் சொல்லி தருதல் வேண்டும்.தண்ணீர் திருட்டை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும்.நீர்நிலைகளை உடைத்தல்,ஆக்கிரமித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

  • தொழிலதிபர்கள்,சுற்றுச்சூழல் சட்டங்களை மதித்தல்,மதிக்காதவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்தல்,உள் நாட்டு வளங்களை பாதிக்காமல் தொழில் செய்ய உறுதிமொழியினை அரசு பெறுதல்.

  • தொழிற் பண்பட்டவர்.
விழிப்புணர்வு பெறுதல்,வளர்ச்சியும்,சுற்றுச்சூழல் இரண்டும் சமமாக இருக்க வேண்டுமென்றாலும்,சுற்றுச்சூழலின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளுதல்.
நீர்வள ஆதார துறை பொறியாளர்கள்,ஒவ்வொரு பாசன காலத்திற்கு முன்னும் water budgeting செய்தல்,அதை முறையாக அட்டவணையிட்டு செயல்படுத்துதல் போன்றவற்றை இன்னும் நேர்த்தியாக செய்தல் வேண்டும்.
மருத்துவர்கள் மற்ற தொழிற் பண்பட்டவர்கள்,கழிவு நீரை சுத்திகரிக்க பொறியாளர்களை அணுகி அதற்கான அமைப்பினை செய்துக் கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில்,தண்டனை,தண்டம் கட்டுதல் போன்றவற்றை அரசு நடைமுறைக்கு  கொண்டு வருதல் வேண்டும்.

  • மாணவர்கள்.
தண்ணீரை சிக்கன்மாக பயன்படுத்தும் வழிகளை பின்பற்றுதல் வேண்டும்,உணவுகளை வீனடிப்பதை தவிர்க்க வேண்டும்,காகிதங்களை வீண் செய்யக்கூடாது.மாணவர்கள் குழுக்களாக இணைந்து உள்ளூரில் உள்ள நீர்நிலைகளை தூர்வாருதல்,மேம்படுத்துதல் போன்றவற்றில் ஆர்வமுடன் செயல்பட வேண்டும்.

  • பொதுமக்கள்.
அரசே அனைத்தையும் செய்ய் வேண்டுமென எண்ணாமல்,சுய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதை தவிர்த்தல்,செடிகளுக்கு மாலையில் தண்ணீர் ஊற்றுதல் என சில சின்னஞ்சிறு தீர்வுகளையும்.
சில தீர்க்க முடியாத சிக்கல்களை அரசின் அல்லது அரசு சார்ந்த துறைகளின் நேரடி கவனிப்புக்கு கொண்டு செல்லுதல் போன்றவற்றையும் செய்ய வேண்டும்.

  • ஆசிரமம்
பணப் பலம்,ஏனைய மற்ற பலங்களை காட்டி நீர்நிலைகளை ஆக்கிரமித்தல்,காடுகளை அழித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.இவர்கள் அதை மீறும் பட்சத்தில்,சட்டம் பராபட்சமின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
பொதுவாக கடைப்பிடிக்கப்பட வேண்டியது:
மழைநீர் சேகரிப்பு குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தலை கட்டாயப்படுத்த வேண்டும்.தவறியவர்களுக்கு அவர்களுக்கான தொழில் அல்லது வாகன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சின்னஞ் சிறு  தீர்வுகள்.
1.உணவை வீண் செய்யாதீர்கள்.வீணாகும் உணவு பொருட்களின் வழியே மறை நீரை வீண் செய்கிறோம்.

2.உணவகங்களுக்கு சென்று உண்ணும் போது,ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு தட்டை பயன்படுத்தாதீர்கள்.உணவு பரிமாறுபவரிடம் பொறுமையாக அவருக்கு புரியும் வண்ணம் சொல்லுங்கள்.
ஏனென்றால்,பிரபலமான உணவகத்தில் தட்டுகளை மட்டும் கழுவ ஒரு நாளைக்கு பயன்படும் தண்ணீரைக் கொண்டு ஒரு பகுதிக்கே ஒரு நாளைக்கான தண்ணீராக பயன்படும்.

3.விழாக்களில் தண்ணீர் பாட்டில் வைக்காதீர்கள்.குடித்தது போக மீதம் வைக்கப்படும் தண்ணீர் வீணாகிவிடும்.

4.பள்ளியிலிருந்து குழந்தைகள்,மற்றும் வெளியில் சென்று வீடு திரும்பும் அனைவரின் தண்ணீர் பாட்டிலிலும் உள்ள தண்ணீரை சேகரித்து செடிகளுக்கு ஊற்றுங்கள்.

5.பல் சுத்தம் செய்யும் போது,சவரம் செய்யும் போதும் குழாயினை முழுவதும் திறந்து வைக்காதீர்கள்.தேவைப்படும் போது மட்டும் திறந்து கொள்ளுங்கள்.

6.தண்ணீர் எங்கு வீணாகி கொண்டிருந்தாலும்,உடனடியாக அதை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள்.

7.துணிகளை இயந்திரத்தில் துவைப்பதாக இருப்பின்,இயந்திரந்தின் முழு கொள்ளவிற்கு துணிகளை போட்டு துவையுங்கள்.வெளியில் செல்ல வேண்டுமென்பதற்காக குறைந்த அளவு துணியை துவைக்காதீர்கள்.

             Description: https://2.bp.blogspot.com/-jamutzNGfV0/WLxSW7HEpOI/AAAAAAAAOAg/4693iJRURlM9xlaCgCApy9GlOxyCBsWYwCLcB/s400/water113.jpg
8.முடிந்த அளவு மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துங்கள்,ஏனெனில் மின்சார சிக்கனம் மறைமுகமாக தண்ணீர் சிக்கனம் ஆகும்.
9.Car pooling என்ற முறையை பயன்படுத்துங்கள்.அதாவது ஒரு நபருக்காக ஒரு காரை பயன்படுத்தாதீர்கள்.முடிந்தவரை ஒரே அலுவலகம், பள்ளி என செல்பவர்கள்ஒரே காரில் செல்லலாம் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவரின் காரினை சுழற்சி முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் இதன் மூலம் வாகனம் வெளியிடும் புகையை நம்மால் முடிந்த வரை கட்டுப்படுத்தலாம்.             

10.பிறந்தநாள் பரிசாக மரக்கன்றுகளை பரிசளியுங்கள்,சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு,மற்றும் ஊக்கப் பரிசுகள் வழங்கலாம்.

11.கல்லூரிகளில் ஒவ்வொரு மாணவ,மாணவியருக்கும் ஒரு மரக்கன்றுகளை பரிசளித்து,அவர்களின் படிப்பு முடியும் வரை பராமரித்து,வெளி செல்லும்போது உள் வரும் புது மாணவர்களுக்கு ஒப்படைக்கலாம்.இதன் மூலம் மரங்களில் காதல் கதைகளை செதுக்கி,பின்னொரு நாளில் பார்க்கும் போது சோகமோ,மகிழ்வோ கொள்வதை விட,நான் வளர்த்த மரமென்ற பெருமையுடன் பின்னொரு நாளில் நம் குடும்ப உறுப்பினர்களிடம் பெருமையுடன் கூறலாம்.

12.உங்கள் வீட்டில் ஒழுகிக் கொண்டிருக்கும் குழாய்களை உடனுக்குடன் சரி செய்யுங்கள்.

13.கழிவறைகளில் half flush முறையை பயன்படுத்தும் வகையாக பொத்தான்களில் வித்தியாசம் வையுங்கள்.ஏனெனில் ஒரு நாளைக்கு5-12 லிட்டர் தண்ணீர் இதற்கே செலவாகிறது.

14.தோட்டங்களுக்கு மாலை அல்லது பின் மாலை பொழுதுகளில் நீருற்றுங்கள்.

15.மூடாக்கு எனும் முறை,அதாவது செடிகளிலிருந்து விழும் இலை, தழைகளை அங்கேயே விட்டுவிடுங்கள்,வெங்காயத் தோல்,மஞ்சி,இன்னும் பிற தண்ணீரை நிறுத்தி வைக்கும் பொருட்களை கொண்டு மூடாக்கு போட்டு தோட்டங்களை பராமரிப்பதன் மூலம் தண்ணீர் செலவு குறையும்.

16. சமையலறையிலிருந்து வெளிவரும்  தண்ணீரைப் போன்ற கழிவு நீரினை தோட்டங்களுக்கு விடுங்கள்,அதில் நைட்ரஜன் அதிகமாக இருக்கும்.

17. தண்ணீர் அதிகமாக தேவைப்படும்பணப் பயிர்களை தவிர்த்து,தண்ணீர் குறைவாக தேவைப்படும் சிறுதானிய வகைகளை பயிரிடலாம்.

18.சுற்றுலா செல்லும்பொழுது பிளாஸ்டிக் பைகளை ஆங்காங்கே போடாதீர்கள், அதை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும்,வனவிலங்குகள் இருந்தால்தான் காடும்,நீரும் இருக்கும். கண்ணாடி பாட்டில்களை உடைத்துப் போடாதீர்கள்,அது கானுயிர்களின் உடலில் காயங்களை ஏற்படுத்தும்.

19.எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளுக்கு நீரின் அவசியத்தையும், அதனை பாதுகாக்கும் முறைப்பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.

20.நம்மால் இதையெல்லாம் செய்ய முடியுமா என யோசிக்கமால்,முடியும் என நம்புங்கள்.நெகிழிகளை தவிர்த்து விடுங்கள்.

அன்புடன்
- கோ.லீலா