Thursday 3 June 2021

யாருக்கு கிடைக்கும் இப்பேறு.



குவளையம் வியந்து போற்றும்

திருக்குவளையே !

முத்துவேலர் அஞ்சுகத்தம்மை

ஈன்றெடுத்த நித்திலமே!

உறங்கினாலும் சிங்கம் சிங்கம்தானே !

தமிழை கர்ஜித்த தங்கமே !

உயிர்ப்போடு இருக்கும் என் எண்ணமே !

படைப்புலகின் பெட்டகமே !

தாடியில்லா கம்பனே!

சொற்களில் விளையாடும் வம்பனே !

தடியில்லா பெரியாரே!

பொடியில்லா அண்ணாவே!

எவ்வளவு எழுதினாலும் தீருமோ

உன் தமிழ் மீதான மோகம்!

திருக்குவளையை அடக்க முடியுமோ 

சிறு குவளைக்குள்!


நீ அலைந்த மண்ணில் நானும்

அலைந்தேன் என்பதொன்று போதாதா?

நீ கல்வி கற்ற இடத்தில்

கற்றேன் என்றாலது இறுமாப்பா?

கமலாலய காற்றில் வீசும்‌ உன்

தமிழை சுவாசித்தது வரமல்லவா?

யாருக்கு வாய்த்திருக்கும்‌ இப்பெரும் பேறு !

எண்ணி எண்ணி எய்துகிறேன் இறும்பூது!


தலைமுறைக்கும் தமிழ்போதித்த

குரு தெட்சிணாமூர்த்தியே!

இன்று எளியோரின் கையில் தவழும் கருணா "நிதி"யே

ஊரெல்லாம் கலைஞர் எனும்

சிலர் கருணாநிதி என்பர்

பலர் தலைவர் என்பர்...

எங்களுக்குதான் வாய்த்தது

நம்ம ஊரு தாத்தா எனும் பெரும்பேறு !

திருவாரூரில் நீ அசைத்த

பெருந்தேரு சொல்லும்

உன் சமத்துவ கூறு!


பூம்புகார் புகழடையும்

வள்ளுவர் எழுந்து நிற்பார்

தாத்தா நீ கோலெடுத்தால்

எழுது கோலெடுத்தால்!


அந்நிய தேசத்தில் இருந்தது போலிருந்தோம்

புண்ணிய தேசமாய் உணருகிறோம்

ஒரு மரம் பூத்ததில்...


கொடுங்காலத்தில் மருத்துவ மணம் வீசும் நீலமலரது!

உன் கிளைகள் என்றும் 

சமத்துவத்தைதான் பூக்கும்!


- கோ.லீலா.

Wednesday 2 June 2021

குக்கூ குக்கூ

 

குக்கூ குக்கூ ன்னு சத்தம் கேட்குதா?

ஆமாங்க மே10 உலக வலசை போதல் தினம்.

பழைமையான காடு என்றால் அதிகமான ஓசை இருக்கும்...

பறவைகளின் கீச்சொலி கீதம் மட்டுமில்லை, காடுகளின் அடிநாதம் அதுதான்.

காட்டின் நலனை பறவைகளின் ஓசையை வைத்துதான் கணிக்கிறார்கள்....

வண்ண வண்ணச் சிறகுடன் எண்ணம் நிறைக்கும் இசையுடன்

விதையை தூவி பச்சைய பாத்திரம் செய்யுமோர் அட்சயப் பாத்திரம் பறவைகள் பற்றி பார்க்கலாம் வாங்க...

வலசை என்பது தமிழர்களுக்கு புது சொல் அல்ல... புலம்பெயர் புள், வம்பப் புள் என்றெல்லாம் பழந்தமிழ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புள் =பறவை.

பறவை மட்டுமல்ல பல்வேறு கானூயிர்களும், கடல்வாழ் உயிரினங்களும் புலம்பெயர்கின்றன.

பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன.

ஆமா பறவைகள் ஏன் வலசை போகின்றன...

மனிதர்கள் தேன்நிலவுக்கு போற மாதிரிதான், இனப்பெருக்கம் செய்ய தக்க சீதோஷ்ண நிலை உள்ள இடத்திற்கு பறந்து போறாங்க, ஆனால் எல்லோரும் அப்படியில்லைங்க...

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுங்கற மாதிரி ஓரிடத்தில் ஏட்படும் உணவு பற்றாக்குறையை சரிசெய்துக் கொள்ள சொய்ங்னு பறந்து நம்ம நாட்டுக்கும், ஆப்பிரிக்கா வுக்கும் ஏப்ரல், மே மாதங்களில் வந்திடுவாங்க...

ஹனிமூனோ, வேலையோ, வெளிநாடு போக தயாராகணும் இல்லையா?

எப்படி தயார் ஆகுறாங்க பாருங்க !

இடம்பெயர்வதற்கு முன்பாக தனது எடையில் பாதி எடைக்கு ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக்கிறாங்க. 200 கிராம் எடையுள்ள ஒரு பறவை, உடலில் 100 கிராம் கொழுப்பை சேமித்துக் வச்சிக்கிறாங்க. இதுதான் பறப்பதற்கான எரிசக்தியாம்.

சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்பி சாப்பிடுவாங்க.

இதனால்தான் ஒரே மூச்சில் பல ஆயிரம் கி.மீ., பறக்கும் மூக்கானால், எட்டரை நாட்கள் பட்டினியாக இருக்க முடிகிறது.

எப்படி அணிவகுத்து பறக்கணும்னு கூட ஒத்திகை பார்த்துப்பாங்க..

V வடிவத்தில் அணி வகுத்து பறப்பாங்களாம், முதலில் யாரு தலைவர்னு முடிவு செய்யணும்ல...

அப்படி ஒரே ஒரு தலைவரெல்லாம் கிடையாது..‌.‌ எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்கள்னு ஷிப்ட் போட்டு அணியை தலைமை தாங்கி பறப்பாங்க.

தலைமை தாங்குறவங்க சிறகசைக்க, காற்றின் வேகத்திற்கு V  வடிவத்தில் பறப்பதால், பின்னால் வரும் பறவைகளுக்கு கொஞ்சம் சிறகசைக்கும் வேலை மிச்சமாம்.

பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் நிலமே அதன் தாய் நிலம் என்கிறார்கள் பறவையிலாளர்கள்.

நாம சொல்ற வானிலை மழை வரும்னா வராது, வராதுன்னா வரும் அப்படியில்லைங்க, இவங்க வானிலையை அறிவதில் பலே கில்லாடிகள்...

இவங்க வான்வழி பாதையாக 12 பாதையை வச்சிருக்காங்க...

பறவைகளும்‌ காதலும்

🐧❤️🐧❤️🐧❤️🐧❤️🐧❤️🐧❤️🐧


பெண் பறவையை‌ கவர தூக்காணங்குருவி அழகாக கூடு கட்டணும்...

பனங்காடை அந்தரத்தில் அதிகமுறை குட்டிக்கரணம் போடணும்...

பென்குயினில் ஆண்தான் அடைக்காக்கும்.

இருவாட்சியில், பெண்ணுக்கும், குஞ்சுக்கும் உணவு கொடுத்து இறக்கை முளைக்கும் வரை பார்த்துக்கணும்.

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் 

இளைப்பாற மரமே இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே 

பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

படம்: சத்தம் போடாதே!

எனக்கு மிகவும் பிடித்தப் பாடல், ரொம்ப நாள் ரிங்டோனா வச்சிருந்தேன்...

இந்த வரிகள் என்னை கவர்ந்தது, விடுவோமா ! உண்மையான்னு  ஆராய்வோம்ல...

ஆச்சரிய செய்திகள் கிடைத்தது

படிங்க, அசந்து போவீங்க...

நமது கட்டை விரல் பருமனில் உள்ள டகங்காரப் பறவை முதல் குதிரை அளவு கொண்ட நெருப்பு கோழி வரை இந்தியாவில் 1,263 பறவை இனங்களும், அதில் தமிழகத்தில் 520 இனங்களும் உள்ளன. இதில் 160 இனங்கள் வலசை செல்லக்கூடியவை. வாலாட்டுக்குருவி, ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யா சென்று வருமாம். 

வரித்தலை வாத்து மங்கோலியாவில் இருந்து 21ஆயிரத்து 120 அடி உயரமுடைய இமயமலையை கடந்து 8,000 கி.மீ., தொலைவை இரண்டு மாத காலத்தில் பறந்து கூந்தங்குள்ளத்தை வந்தடைகிறதாம்.

மிகவும் நீண்ட துாரம் பறக்கும் வலசைப் பறவை 'ஆர்ட்டிக்டேன்'. வடதுருவ ஆர்க்டிக்கில் இருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்களின் வழியே தென்துருவ அண்டார்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் இவை போகின்றன. 

ஒரு அடி நீளமுள்ள இப்பறவை, வாழ்நாளின் பெரும்பகுதியை பறப்பதிலேயே செலவிடுகிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வர 70ஆயிரத்து 900 கி.மீ., பயணிக்கிறது.

தமிழில் 'மூக்கான்' என நாம் அடையாளப்படுத்தும் காட்விட் பறவைக்கு, உலகிலேயே அதிக துாரம் ஒரே மூச்சில் நிற்காமல் பயணிக்கும் பறவைகளின் பட்டியலில் முக்கிய இடமுண்டு. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள மிராண்டாவில் இருந்து 2007 மார்ச்சில் புறப்பட்ட பெண் பட்டை வால் மூக்கான் பறவை உடலில், சிறிய ரேடியோ மின் அலைபரப்பி பொருத்தப்பட்டது. இதன் பயணம் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

இப்பறவை இரைக்காகவோ, தண்ணீருக்காகவோ எங்கும் தரையிறங்காமல் எட்டு நாட்கள் பறந்து 10 ஆயிரத்து 200 கி.மீ.,ல் உள்ள 'யாலு ஜியாங்' என்ற இடத்தை அடைந்தது. பின், ஐந்து வார ஓய்வுக்கு பின் அங்கிருந்து கிளம்பி ஐந்து நாட்களில் 7,400 கி.மீ., பறந்து அலாஸ்காவின் யூகான்-குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை எட்டியது. நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் ஆக.,30ல் புறப்பட்டு வேறு பாதையில் 11 ஆயிரத்து 600 கி.மீ., ஒரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில், கிளம்பிய இடமான மிராண்டா பகுதியை அடைந்தது.

இந்த சிறு பறவை ஏறத்தாழ ஆறு மாதங்களில் 29 ஆயிரத்து 200 கி.மீ., பயணம் செய்தது. மூக்கான்களை ராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரையில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பார்க்கலாம். மூக்கானின் வேகம் மணிக்கு 58 கி.மீ., வலசை பறவைகளில் பெரும்பாலானவை இரவில் பறப்பவை.

ஆத்தி ! பறவை எங்கே நம்ம எங்கே...

நான்‌ பார்த்து இன்றும் பிரமிக்கும் பறவை இருவாட்சி..

என்ன சவுண்ட், என்ன சைஸ்...

அது சரி #வேள்பாரி யில் 

காக்காவிரிச்சின்னு சொல்றாங்களே அது உண்மையான்னு பார்த்தால், அது பேரு காக்காய்வெருட்சி யாம் இங்கிலீசுல Greater false vampire bat  ன்னு சொல்றாங்க, காக்காவை வெருண்டு ஓடச்செய்யும் வவ்வால் இனம்.

சும்மா 10 செ.மீ நீளமும், 60 கிராம் எடையும் கொண்ட இவங்க அசைவக்காரவங்க...

அது சரி, இப்படி நீட்டி முழக்கி பறவையை பற்றி ஏன் பேசணும்ங்கிறீங்க...

பறவை இல்லேன்னா, பிரபஞ்சம் இல்லைங்க... அட காடு வேணும், மழை வேணும்... எத்தனை வேணும் அத்தனைக்கும்‌ பறவை வேணும்...

பறவைக்கு சோறு வைக்கிறேன், தண்ணி வைக்கிறேன்னு கிளம்புற மக்கா !

ஒரு செடி வைங்க, மரமாகட்டும், அவங்களுக்கு பிடிச்சத அவங்களே தேடி 

சாப்பிடுவாங்கல்ல...

அப்படியே நீர்நிலையெல்லாம்‌ பாதுகாப்பா பார்த்துக்கங்க, வெளிநாட்டு பறவைகள் நம்ம நாட்டுக்கு விரும்பி வரணும்ல.

மனிதர்களை விடவும் மகத்தானவைகள் பறவைகள்.

இந்த வருட தீம் என்ன?


Sing, Fly, Soar - Like a bird.


பாடுவோம், பறப்போம், உயர்வோம்‌ பறவைகளாக பறவைகளோடு!


பறவைகளின் கீதம்

காடுகளின் நாதம்.


அன்புடன்

- கோ.லீலா.

Tuesday 1 June 2021

உலக பல்லுயிர் தினம்.

 மனிதர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய நாள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கருத்துரு தந்து, ஒவ்வொரு நாளும் கவனம் செலுத்தப்பட வேண்டிய நாள் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தினம் அனுசரிக்கப்படுகிறது.


இப்பூமி மனிதர்களுக்கு மட்டுமானது அல்லது, யானை, திமிங்கிலம் போன்ற பேருயிர்களும், எறும்பு, கரையான் போன்ற சிற்றுயிர்களும், இன்னும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உரிமை கொண்டுள்ள இடம்தான் இவ்வழகிய பூமி.


நானூறு வருடம் வாழும் ஆமைக்கும் அல்ப ஆயுசு என்று கருதப்படும் ஈசலுக்கும் ( உண்மையில் அப்படியில்லை )  உரிமையுள்ள பூமி.


பாலையிலும், சோலையிலும், நீர்நிலையிலும்,மரங்களிலும், மலைகளிலும் வாழக்கூடிய எண்ணற்ற பல்லுயிர்களை பேணிகாக்க வேண்டியது மனிதர்களின் கடமை.


இந்த வருட கருத்துரு We are part of solution for nature. தீர்வின் ஒரு பகுதி நாம்தான் என்கிறபோதே... இயற்கையின் மீதான ஆதிக்கத்தை, வன்முறையை மனிதர்கள் கைவிட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு தான் இவ்வாண்டின் கருத்துரு.


உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 ல் கொண்டாடப்படுகிறது. 

உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.


பல்லுயிர் பரவல் குறைவிற்கு காலநிலை மாற்றமே  நேரடி காரணமாக உள்ளது. குறிப்பாக இனப்பெருக்க காலம், தாவரம் வளரும் காலம் பாதிக்கப்படுவதாலும், இக்கால மாற்றத்தால் ஏற்படும் உணவு பற்றாக்குறை, வலசை போதலில் தடை ஆகியவற்றாலும் பல்லுயிர் பரவல் பாதிக்கப்படுகிறது.


உலகில் உள்ள 190 நாடுகளில், 17 நாடுகளில் மட்டும் 70 சதவிகித தாவர, விலங்கு உயிரினங்கள் உள்ளன. 


இந்த 17 நாடுகளும் 'பெரும் பன்மய' நாடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. அவற்றுள் இந்தியாவும் ஒன்று. கிழக்கு விந்திய மலைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் இந்தியாவின் பல்லுயிர் வளத்திற்காக உலக அளவில் கவனம் பெற்றவை. 


இந்தியா போன்ற வெப்பமண்டல தேசம் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு நாடு என்பதே இந்தியாவின் சிறப்பு ஆகும்.


கடல், மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, பாலைவனம், சோலைக்காடுகள், சதுப்பு நிலங்கள், ஏரிகள், கழிமுகங்கள்,  என அனைத்து வகை நிலங்களையும், அதில் வாழக்கூடிய உயிரினங்களையும் கொண்ட சிறப்புமிக்க புவியியல் அமைப்பும், இயற்கை வளமும் கொண்டது நம் தேசம்.


உலகின் 16 சதவிகிதம் பல்லுயிர் வளம் இந்தியாவில் உள்ளது. இன்னும் இனம் கண்டறியப்படாத 4 லட்சம் உயிரினங்கள் இந்தியாவில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில்தான் உயிரினப் பன்மை செழித்துக் காணப்படுகிறது. ஏறத்தாழ 91,000 உயிரினங்களும், 45,000 தாவரங்களும் நம் நாட்டில் இனம் காணப்பட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 45,000 தாவர இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானவை.தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட பாலுாட்டி வகைகள், 400க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன.நெல் என்ற ஒரு இனத்தை எடுத்து கொண்டால், இந்தியாவில் இரண்டு லட்சம் நெல் ரகங்கள் இருந்ததாக இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரிச்சாரியா ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


நம்முடைய பொறுப்பற்ற அலட்சிய போக்கால் பல அரிய இயற்கை பொக்கிஷங்களை இழந்து வருகிறோம்.


பல்லுயிர் என்பது சூழல் ரீதியாக மட்டுமில்லாமல், கலாச்சார பண்பாடு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக பண்பாட்டு அசைவுகளை காக்கவும், மண்ணரிப்பு, நீர்நிலைகளை பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த, நல்ல இயற்கை மருத்துவம் பெற என பல்லுயிர் பரவும், உயிர் பன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும்.


மனிதர்களின் நடமாட்டம் குறைந்த இந்த கொரோனா காலத்தில் இயற்கை இயல்பு சுவாசத்திற்கு திரும்பியிருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.


கொரோனா காலத்திற்கு பின்பும் அந்நிலை தொடர, இயற்கைக்கான தீர்விற்கான பகுதியாக நாம் இருக்க வேண்டும்.


பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என உறுதிமொழி ஏற்போம்

- கோ.லீலா, பொறிஞர்,சூழலியலாளர், எழுத்தாளர்.



கிடை

 நூல் : கிடை

ஆசிரியர் : கி.‌ராஜநாராயணன்

பதிப்பு :1968  அறுசுவை வாசகர்   

                 வட்டம்.

          ‌‌‌‌‌‌       2017 -காலச்சுவடு


விலை :ரூ73/-

கிண்டில் எடிஷன் : ரூ63/-

   

****************************************


கதையின் ஆரம்பமே ரெட்டை கதவு திறந்து வரவேற்கிறது...


அடடே ! பெரிய ஆச்சரியம் ரொம்பவே குட்டி கதை, அதுக்குள்ள எவ்வளவு பெரிய செய்திகளை அசால்டாக சொல்லி இருக்கிறார்.


இப்படியும் எழுதலாம்னு, பாடம் சொல்லுதே கதை.


கீதாரி என்றால் என்ன என்பதை, இரண்டு வருடங்களுக்கு முன்பாகதான் அம்மாவிடம்‌ கேட்டு தெரிந்துக் கொண்டேன்...


என் சித்தி, யாரையோ நம்ம வீட்ல கீதாரி வேலை பார்த்தவ பேசுற பேச்சைப் பார்த்தியானு சொல்லிக்கிட்டு இருந்தவர்...


நான் வரவும்,

ஒம் பொண்ணு வந்திருச்சு, யாரை பத்தியும் குறை பேசாதேன்னும், நீ டீய போடுக்கா, குடிச்சுட்டு போறேன்னார்.


ஒண்ணும் புரியலை, அம்மாவிடம்‌ கீதாரின்னா என்ன? என்றேன்...

சுருக்கமா ஆடு மேய்க்கறவங்க என்று சொல்லிட்டாங்க. அப்புறம்  அதை பற்றி மறந்து போயிட்டேன்.


கி.ரா அய்யா விலாவாரியா சொல்லிட்டாரே...


கிடை என்பது தனி ராஜ்ஜியம், அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன்தான்‌ #கீதாரி என்று.


ரெட்டைக்கதவு, மோப்பு திண்ணை என்றவுடன் கும்பகோண வெத்தலை, சீவல்னு அடுத்து வரும்னு நினைச்சி படிச்சேன்... கும்பகோண வெத்தலை சீவலா கமகமன்னு வட்டார மொழி மணம் வீசுது.


அடடா ! சொற்களஞ்சியம், சில சொற்கள் எங்க ஊர்லேயும் அதேதான், அதனால் பெரிதாக சிரமம் இல்லை, கூடவே வட்டார மொழிவழக்கு கதைகளில் ஒரு மயக்கம் உண்டு எனக்கு.


வெள்ளாடு, செம்மறியாடு, குரும்பாடு, கிடா ன்னு கொஞ்ச பேருதான் தெரியும் மத்தபடி சிவப்பா இருந்தா செவலைன்னு சொல்லுவாங்கன்னு தெரியும்...


இங்கே கி.ரா அய்யா 

கொடுத்திருக்கும்  பெயர் பட்டியலை படிக்க படிக்க...


எங்க தாத்தா வீடு, பெரிய நிலத்தில் நடுவில் இருக்கும், சுத்தியும் உயிர்வேலி இருக்கும், கருவேல மரம்... ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, புறாபண்ணை, வாத்துப்பண்ணை, ஒத்த குதிரை, மூணு ஜோடி மாடுன்னு ஒரே கோலகலமாக இருந்த நாட்கள் மனசுக்குள் நினைவாட 

ஆரம்பிச்சிருச்சு. 


அட ! அதுதானே எழுத்தின் சிறப்பு, நம்மள வேறொரு உலகத்துக்கு கூட்டிட்டு போறது


ஆடுக கருவேல மர காயை கரக் கரக் ன்னு திங்கும், பாலாட்டாங் குழை  என ஓரிடத்தில் கதையில் வர, டக்குன்னு அப்போ இருந்த ஆடும் அவை அசைப்போட்ட தழைகளையும் அசைப்போட ஆரபித்து விட்டது மனம்.


தாலி புதுசான செய்தி என்பதாலேயே சந்தோசமான செய்தியாகவும் இருந்தது, சில ஆட்டுக்குட்டிக ஓடி வரும்போது, அது தாடைக்கு கீழே இரண்டு தொங்கட்டான்கள் மாதிரி இருக்கும் அதை வேடிக்கை பார்த்திருக்கேன் பேரு தெரியாது, இன்று தெரிந்து கொண்டேன்.


பள்ளை ஆடு, ஓங்கோல் ஆடெல்லாம் புதுசா கேள்விபடுகிறேன்... 


ஒரு சின்ன கதையில் ஆட்டின் பெயர்கள், ஆட்டுப் பாலின் நன்மைகள், (அதில் 'உதவி" என்ற ஒரு சொல்லாடல் வருகிறது அது என்னவென்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறினால் மகிழ்வேன்)

சில தழைகளின் பெயர்கள், ஆடுகளை மேய்க்கும் மனிதர்களின் வாழ்வியல், அவர்களின் நம்பிக்கைகள், சமூக ஏற்றத்தாழ்வு, நடுநிலையோடு இருக்கும் மாந்தர்கள் சாதிய அடுக்குகளை காத்து நிற்பதற்காக காலங்காலமாக மறைக்கின்ற உண்மைகள், வல்லமை கொண்டோர்களின் கரங்கள் தனிமனிதர்களின் வாழ்வை  வெளியில் தெரியாத வண்ணம் அடக்கி ஆள்வது,

பொதுவாக, கிராமப் புறத்தில் இருக்கும் கேலி, திருட்டு, உடன்போதல், பயிர்களுக்கு ஏற்படும்‌ இழப்பு, அதற்கு தீர்வு வழங்கும் சபையென அத்தனை செய்திகளையும் உள்ளடக்கிய ஒரு நுட்பமான கலை படைப்பாக மிளிர்கிறது #கிடை.


எல்லப்பனின் கல்யாண ஊர்வலத்தின் போது நடக்கின்ற செவனியின் பேயோட்டும் நிகழ்வு சமூக முரண்களை படம் பிடித்துக் காட்டுகிறது. பெண்ணின் மனநிலை புரியாது பேயோட்டுவதும், அடிப்பதும் கொடுமை. செவனியின் நிலை மனதை விம்ம செய்கிறது.


கூடவே, கல்யாணம் என்றால், ஒரு ஆணுக்கு இரண்டு பெண்களை தாரை வார்க்கும் முறையை மிக நுட்பமாகவும், பூப்பெய்துவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்ற போக்கு என பல்வேறு சமூக கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ள கதை.


பொடி போடும் அழகை பதனமாக கஞ்சிராவுக்கு ஸ்ருதிப் பார்ப்பதைப் போல ஆட்காட்டி விரலால் பொடி எடுப்பதை கூறியிருப்பது அய்யாவின் உசை ஞானத்திற்கு சான்று, ஈறுகளில் ஒட்டாத பொடியை பூ என ஊதிவிட்டு, உதட்டை உம்‌ என்ற "அழகில்" வைத்துக் கொள்ளும்போது என்பதெல்லாம், வெகு இயல்பான காட்சிப்படுத்துதலும், அவதானிப்பும், அழகிய ரசனையுமாகும்.


அடிக்கடி பென்ஸ் கார் மோட்டாரைப் போல கஹ் என்ற ஒரு சப்தத்தை கொடுத்து மூச்சு காற்றை வெளியேற்றிக் கொண்டிருப்பார்... மெல்லிய சிரிப்பொன்று படர்ந்தது.

அன்றைய காலம், பென்ஸ் காலம்.


பனைநார் பற்றிய குறிப்புகள் மண் வாசனை... கத்தாழை நார் போல நரைத்த கொண்டை... அடடா ! ஒப்பீடு, கூடவே ஒரு தாவரத்தின் பெயர் பதிவு என ஏக அமர்க்களம்.


மீசையில்லாத ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்ற, தமிழகப் பெண்களின் ரசனையை ஓரிரு சொற்களில் போகிற போக்கில் சொல்வதையும், மீசையில்லாத ஆணை, பெண் வேசம் போட எங்காவது அச்சாரம் வாங்கியிருக்கீகளா? என்று கேட்பதையும் மிகவும் ரசித்தேன்...

மீசை இல்லாத ஆண்களை எனக்கும் பிடிக்காது, என்ற உளவியல் கூட இந்த ரசனைக்கு காரணமாக இருக்கலாம்.


டணா கம்பு, தொறட்டி கம்பு, கம்பராக் கத்தி... கிராமத்தை படம் பிடிக்க போதுமான சொற்கள்...


பஞ்சத்திலும் ஆவாரம்பூ 

செழித்திருக்கும் என்பதும், ஆடு தின்னாத பாளையையே ஆடு தின்னும்‌ என்பதும்,இடைகாட்டர், வரகை மண்ணோடு பிசைந்து கோட்டை கட்டி வாழ்ந்ததும், ஆடு சுவரில் உரச உதிரும் வரகை, ஆட்டுப்பாலில் சமைத்து உண்பதும்... ஆகா ! அறிவியல் நுட்பம் அல்லவா. 


எங்க தாத்தா வீட்டில் ஒரே ஒரு முறை, ஆட்டுப்பாலில் காஃபி தயாரித்தார்கள் என் சித்தி, என் அம்மா, வேண்டாம் கொச்சை வாடையடிக்கும் என்று சொன்னதும் நினைவில் இருக்கிறது.


அவளுடைய கீழுதடுக்கும் நாடிக்கும் இடையில் "பாசிபருப்பு" அளவில் பாலுண்ணி இருக்கும்...

தானியம் கொண்டு அளவீடு செய்வது பண்டைய முறை,  இதுவரை படித்த கதைகளில், இந்த கதையில் மட்டும்தான் அம்முறை கையாளப்பட்டிருப்பதை பார்க்கிறேன்.


கூடவே, அவளுடைய பாம்படத்தை விற்று  சந்தையில் நாலு புருவைகள் வாங்கி வந்தார், இப்போ அவரிடம்‌ஒரு மொய்க்கு மேலே இருக்கு. ஒரு மொய் என்பது 21 ஆடுகள், முதல் ஈத்துலேயே கொச்சைக் கிடா கிடைத்தது... எச்சத்தை வைத்து பறவையை கண்டு பிடிச்சுடுவார் 


என்ற வரிகளில் பாம்படம் என்ற நகை, மொய் எனும் அளவீடு, ஆட்டின் பெண் உறுப்பை அறை எனும் சொல்,  எச்சம் வைத்து கண்டுபிடிக்கும் நுண்ணறிவு என காலம் கடந்தும் கடத்தப்படும் பதிவுகள் அற்புதம்.


பொன்னுசாமி நாய்க்கரின், பேய் கதைகள் சூப்பர். எங்கள் கிராமத்திலும் இவ்வகை கதைகளை எங்க ஆத்தா சொல்லி கேட்டிருக்கிறேன்.


மேலுதடு கிழிந்து மேற்பற்கள் தெரியும் ஒரு விவரணையை படிக்க, சிறுவயதில், கிராமத்தில் அப்படி ஒருவரை பார்த்த நினைவு வந்து சென்றது.


கிராமத்தில் பார்த்ததை மீளப்பெற்றேன்... அம்மாவிடம் கொஞ்சம் விவரங்கள் பெற்றால், ஒரு கதை உருவாகலாம்...


கி.ரா வின் கிடை வாசிப்பவரை அந்த space and time ல் சஞ்சரிக்க வைக்கிறது.


வாழ்வில் ஒவ்வொன்றையும் அவதானித்து வாழ்வதே பெரு வாழ்வு என்பதை கதை இயல்பாக சொல்கிறது..


#கிடை மனதை மேயும் வசீகரம்!


அன்புடன்

-கோ.லீலா.

When the River Sleeps

 Book : When the  River Sleeps

Author : Easterine Kire


நாகாலாந்தின் அங்கமி (Angami) எனும் பழங்குடியினரான Vilie, உறங்கும் ஆற்றை நோக்கி, அந்த ஆற்றில் Heart- stone ( it was guarded by a ferocious widow spirit) ஐ எடுக்க பயணிக்கும் காட்டு வழிப் பயணத்தின் விவரிப்பும், Heart - stone. னின் சக்தியும், அதனால், அதை உடமையாக கொள்பவர் எதிர்நோக்கும் தொல்லைகளும் கதையாக விரிந்துள்ளது.


காட்டைப் பற்றி சுருக்கமாகவே சொல்லப்பட்டிருகிறது... இன்னும்‌ கொஞ்சம் கூட கூடுதலான விவரணைகள் இருந்திருக்கலாம், நாகாலாந்து பற்றிய பிம்பம் இதில் பெரிதாக இல்லையென்றாலும், நேபாளி செட்டில்மெண்ட்டில் நடக்கும் இரட்டை கொலைகள் மூலம் ஒரு உப செய்தியை கடத்தி இருக்கிறார்.


நாகாலாந்த் எனும் இனிய சிறு பூமியில் வாழும் மனிதர்களின், முன்னோர்களின் ஆவி மீதான நம்பிக்கை, சடங்குகள், கெட்ட ஆவி, விலங்குகளின் ஆவி, ஆவி அழகிய பெண்ணாக நீண்ட கூந்தலுடன் ஆண்களை மயக்குதல்,மனிதர்களின் பழி வாங்கும்‌ குணம், அன்புக்காக ஏங்குதல், அன்பாக இருத்தல், காட்டில் வாழும் மனிதர்களுக்கே உரிய உபசரிப்பு,பிறழ்வுகள், பேராசை, விரக்தி, தனிமை, கபடு, குரூரம், ஆனந்தம், தூய்மை என்று எல்லா மனிதப் பிராந்தியங்களின் சிக்கலான கலவையின் ஊடாக கதை பயணிக்கிறது.


ஆற்றிலிருக்கும் மந்திரக்கல்லை எடுப்பது மட்டுமல்லாது, Travel of a man from Ignorance to Experience ஆக இக்கதை ஒரு பரிமாணத்தையும்  கொண்டிருக்கிறது.


Vilie காட்டை மனைவியாக மணந்து கொண்டதை சொல்லும்‌ இடங்களில், காட்டின் மீதான எனது possessiveness தலைதூக்குவதை தவிர்க்க முடியவில்லை.


ம்ம்ம்... காட்டை ஆண் என்றும் பெண் என்றும்‌ பாகுபடுத்தி பார்ப்பதில்லை, தோன்றும்போது ஆணாகவும், தோன்றும்போது பெண்ணாகவும் காண்பேன்.  ரகசியா எனும் பொது பெயர் இட்டிருந்தாலும், பெண்ணாகவே பாவிக்கப்படும் காடு,கவிதைக்கு காதலானகி விடும்...


காட்டின் மீதான காதல் அலாதியானது, முரட்டு காதலன்/ காதலி, காதலிக்க தொடங்கி விட்டால் மீண்டு வரமுடியாது, மீளவும் வேண்டாமே !


Vilie ஆகவே மாறி கதையில் பயணிக்க முடிகிறது, காட்சிகள் விரிய எனக்கான காடு, ஆறு, தற்காலிக குடில்கள், செட்டில்மெண்ட்,‌ அடர் மரங்கள், unclean forest, nettle forest, உருவாக அதனுள் பயணிக்க வாய்த்தது.


genna day கிறித்துவ மதத்தில் ஒரு சாரார் வாரவாரம் ஞாயிற்றுக்கிழமையில் கடைபிடிக்கும் முறைகளை நினைவூட்டியது, கூடவே எதன் நீட்சி எது என ஆராய தொடங்கிவிட்டது மூளை.


மூலிகை, மற்றும் மரப்பட்டைகள், வேர்கள் குறித்து மிக சொற்பமாகவே சொல்லப்பட்டு இருப்பதாக தோன்றியது, எனினும் குற்ற உணர்வு நீங்க தரும், மரப்பட்டை போட்டு கொதிக்க வைத்த நீர் புதுத் தகவல்.


Ate, Zote இருவரையும் சந்தித்த பிறகு கதையின் விறுவிறுப்பு கூடுகிறது. ஆங்காங்கே வாழ்வியல் தத்துவங்கள் அடங்கிய ஓரிரு வசனங்கள் தென்படுகின்றன.


ஏனோ paulo coelho வின் The Alchemist கதை நினைவுக்கு வந்ததை தடுக்க முடியவில்லை, கூடவே Gabriel Marquez ன் சர்ரியலிசம் போன்று இல்லாமல், மாயஜால குணங்கள் என்பதை விடவும், தூய்மையான் சர்ரியல் பணியாக இருக்கிறது Easterine kire ன் இப்புத்தகம்.


தொய்வில்லாமல் பயணிக்க வைக்கிறது Kire ன் கதை சொல்லும்‌ பாங்கு, எளிய மொழியில், அதே நேரத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து வந்திருக்கும், enriched language ஆகவும் இருக்கிறது.


காடுகளில் பயணித்து இராதவர்களுக்கு உறுதியாக புதிய அனுபவமாக இருக்கும்.


காட்டு வழி பயணத்தையும் கடந்து Vilie & Ate வழியே ஒரு நன்னெறியை கடத்துகிறார் நூலாசிரியர். Heart - stone has spiritual power... Has to felt from insight  அதை யாராலும் சூறையாட முடியாது என்பது இறுதியாக சொல்லப்படும் செய்தி.


Zote அவ்வளவு குரூரம் நிறைந்தவளாக மாறுவதற்கு காரணம் அன்பு காட்டப்படாமல் கிராமத்து மக்களால் ஒதுக்கப்படுவதே காரணம், அதே நேரத்தில் தனது தங்கை Ate டிடமிருந்து கொள்கை ரீதியாக வேறுபட்டாலும், அவளை‌ப் போற்றி பாதுகாத்தது நெகிழச் செய்கிறது.


Zote ன் மரணம், நம்மையும் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பதே உண்மை.


Vilie, பயணவழியே திரும்பும்‌போது Nettle Forest ல் சந்தித்த பெண் idele, நேபாளியான கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி இறந்தது என ஆங்காங்கே காடுகளில் வாழும் மனிதர்களின் பாதுகாப்பற்ற வாழ்வியலை சொல்லி செல்கிறது.


காலங்காலமாக, மனிதனின் மண்ணாசைக்கும், பொன்னாசைக்கும் பலியாகும்‌ இயற்கையையும், அதை சார்ந்த மனிதர்களின்‌ பாடுகளையும் கதையில் உணரமுடிகிறது.


செல்லும் இடத்தில் ஆங்காங்கே குடில் அமைக்கவும், சமைத்து உண்ணவும், நீர் தேடவும், கானூயிர்களோடு போராடுவதுமென தினமுமே வாழ்தல் என்பது போராட்டமாக இருக்கிறது, அதுவே மன உறுதியையும் தருகிறது காட்டு வாழ்வில். 


எந்த இடத்திலும் வனதேவதை பற்றியோ, காடுகளில் வாழ்வோரின்‌ கொண்டாட்டங்கள் பற்றியோ ஏதும்‌ குறிப்பில்லை என்பது சற்றே ஏமாற்றம்.


பூமி தாயாக, வானம் தந்தையாக, எனது ஆன்மா பெரிது என உத்வேகம் தரும் சொற்களும், மூதாதையர்களின் பெயர் சொல்வதும் காட்டுவாழ் மனிதர்களின் நம்பிக்கையும், மனோதைரியமுமாக இருக்கிறது.


தேன், இலை, மரப்பட்டை, வேர் பற்றி இன்னும் விரிவாக 

சொல்லியிருக்கலாம்.


இரவு நேரத்தில் நரி, were tiger ( புலியின் ஆன்மா) பற்றிய பதிவுகளில்‌ அவை எழுப்பும்‌ ஒலியைப் பற்றிய பதிவு மட்டுமே இருக்கிறது.


 இரவில் எந்த உயரத்தில் விலங்களின் கண்கள் ஜொலிக்கிறதோ, அதைக்கொண்டு, என்ன விலங்கென்று இனங்காணுவது பற்றி சொல்லியிருந்தால் இன்னும்‌கூட கதையின் pep கூடியிருக்கும்.


தூய்மையான செய்கையும், குணமும் கொண்டவர்களுக்கு மட்டுமே Heart stone கிடைக்கும் என்பது, இயற்கை தவறுகளை ஒரு போதும்‌ மன்னிப்பதில்லை என்பதாக புரிந்துக் கொண்டேன்.


Vilie ன் தன்னந்தனியான பயணத்தின்‌போது ஏற்படும்‌ காய்ச்சல், காயங்கள் அதற்கான மருந்துகள் லேசாக சொல்லப்பட்டிருக்கிறது.


Saturday market, மலைக்கும் கிராமத்திற்கும் இடையேயான வயல்வெளி என சரியான புவியமைப்பு சொல்லப்பட்டிருக்கிறது.


Kani மற்றும் அவரது மனைவி ‍Subhale மனதில் நிற்கிறார்கள்.

மூங்கிலில் மீன்‌ வேகவைக்கும் மணம், நம்மையும் சாப்பிட அழைக்கிறது.


ஒரே ஒரு இடத்தில்‌ மட்டும் மழைக்கான அறிகுறியை சொல்கிறார், விறகுகள் சேகரிக்கும்போது மட்டும் காய்ந்த சுள்ளிகளை சேகரிப்பதாக கூறும்போது, மனம் தானாகவே வலிந்து, ஒரு மழையை தேடிக்கொள்கிறது.


Ate ன் தோளில் பதிந்த புலியின் கால் நகம், Zote மற்றும்‌ Ate ன் குடுமிபிடி சண்டைகள் அச்சமூட்டுகின்றன.


Ate, Heart -stone ஐ வைத்து Ate, Vilie க்கு ஏன் ஏதும் செய்யவில்லை? என்ற கேள்வி எழுகிறது. சற்று தாமதமாகவே Vilie ன் நிலை அவரது உறவினருக்கு தெரிவிக்கப்படுகிறது என்பதை காரணமாக இருக்குமோ?


Vilie ன் வீடும் அதன் இடமும் என்னுள்‌ ஒரு காட்சியை உருவாக்கி இருக்கிறது... அதில் இன்னமும் Vilie வாழ்ந்து கொண்டிருக்கிறார்... அப்படியே வாழ்ந்துக்கொண்டு இருக்கட்டுமே...


Kudos Easterine kire. Excellent  narration and enchanting journey through forest...surreal journey.


அன்புடன்

- கோ.லீலா.


தமிழ் அழகியலும் இந்திரன் சாரும்

 நேற்று தமிழ் அழகியல் பற்றி திசை கூடல் நடத்திய இணைய வழி கூடுகையில்,  கலை இலக்கிய விமர்சகர் Indran Rajendran  அவர்கள் சிறப்பானதொரு உரையை வழங்கினார்கள்.

 

கலந்துரையாடலுக்கென போதிய அவகாசம் அளித்தது போற்றுதலுக்குரியது.


இச்சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளைக்கு என் வாழ்த்துக்களும், நன்றியும்.


பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர்களை ஒரு சேர பார்த்ததும், அவர்களின் உரையினை கேட்டதும் மகிழ்ச்சி.


தமிழ் அழகியல் என்பது குறித்து, என்னுள் ஆழ்ந்த மற்றும் நீண்ட சிந்தனை இருந்தது உண்டு. அச்சிந்தனைக்கு நேற்றைய நிகழ்வு சில விடைகளையும், சில கேள்விகளையும் எழுப்பி உள்ளது.


இந்திரன் அய்யா சொல்லியது போல், மனிதர்களின் வாழ்வில் தேடப்பட வேண்டியது அழகியல்.


என் கருத்து.

*******************

தமிழ் என்பதே அழகியல்தானே...


அழகியல் என்பதற்கு சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம் என முத்திரை தேவையற்ற ஒன்று.


காண்பவரின் அவதானிப்பிலும், விழிகளிலும் ததும்புவதே அழகியல்.


'லைலாவை கயஸின் விழிகளால் பார்" என்ற வரிகளை விட அழகியலை விளக்க வேறு வரிகள் தேவையில்லை.


Dance of Siva பற்றியும், அதன் அழகியல் பற்றியும் பேசிய யாரும், அவரவர் பகுதிக்குரிய சிறுதெய்வங்களின் அழகியலைப்பற்றி பேசவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.


தமிழர்களின் அழகியல் என்பது வடிவமைக்கப்பட்ட, ஒரு பரிணாமம் கொண்டதல்ல...


தமிழர்களின் அழகியல், தத்துவம், அறிவியல், ஞானம், வாழ்வியல், இயற்கை என்ற பல்வேறு பரிணாமங்களும், பரிமாணங்களும் கொண்டவை.


அறிவியலை அடிப்படையாக கொண்ட தமிழர்களின் அழகியல், ஆங்கிலேயர்களின் புகுதலுக்குப்பின் அழிவை அடிப்படையாக கொண்ட அழகியலாக மாறியது... (மான் கொம்பு, புலி பல், யானை தந்தம்‌ போன்றவற்றை கொண்டு கலைப்பொருட்கள் செய்வது)


கோயில்

***************

மேலைநாடுகளின் தெய்வங்கள் எதுவும் கலைகூடத்தில் வைக்கப்பட்டுள்ளதா என எனக்கு தெரியவில்லை, ஆனால் சிவா எனும் ஆனந்த தாண்டவம் ஆடும் சிலை கலை பொருளாகவும், வழிப்பாட்டுக்கு உரிய ஒன்றாகவும் இருக்கிறது, எனில் கலையை, அழகியலை தத்துவத்தை, ஞானத்தை தொழுத பண்பாடாக தமிழர்களின் அழகியல் இருந்ததாக தோன்றுகிறது.


அதே போன்று தமிழர்களின் தெய்வம் எனில் முருகன், மற்றும் சிறுதெய்வங்கள்தான், அவற்றைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாது போனது, மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை மறைத்த ஏதொன்றும் எப்படி அழகியலாகும் என்ற கேள்வியை என்னுள் எழுப்புகிறது.


சிறுதெய்வங்களின் உறுமால் கட்டு, வெட்டுக் கத்திகளின் வகைகள், ஆண், பெண் உடையலங்காரம், அணிகலன்கள் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்டு அதை தமிழ் அழகியலில் சேர்க்க வேண்டும் என்பது எனது அவா. அதுதான் தமிழர்களின் அழகியலாகவும் இருக்கும்.


இந்திரன் அய்யா பேசும்போது சொன்னார்கள், வெளிநாட்டினர் ஒருவர் கோயில் கோபுரங்களை கொண்டு ஓவியங்களை தமிழர்கள் மறைத்து விட்டார்கள் என்று சொன்னதாக.


கோயில் என்பது வெறும் வழிப்பாட்டு தலம் மட்டுமல்ல, அக்காலத்தில் வாகன வசதிகள் இல்லாத போது வெகு 

தூரத்திலிருந்து நடந்து வருபவர்களுக்கு ஓய்வெடுக்கும் இடமாகவும், பொது நிகழ்விற்காக கூடும் இடமாகவும் ( Get together), மழைநீர் சேகரிப்பிற்கான இடமாக, கலைக்கூடமாக, பொருளை பாதுகாக்கும் இடமாக, போரின் போது ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு தப்பி செல்வதற்கான சுரங்கப்பாதை கொண்ட இடமாக, இப்படி பல்நோக்கு கொண்ட இடம்தான்‌ கோயில்... இதில் கோபுரத்தின் பங்கு என்ன?


கோ எனில் பசு/ மாடு.

புரம் என்றால் பகுதி. 


Dravidian architecture ல் கோபுரத்தின் இருமருங்கிலும் மாட்டின் கொம்பு போன்ற அமைப்பு இருக்கும்... 


கோயிலை விட உயரமான கட்டிடங்கள் ஏதும் இருக்கக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம், அதனால் தூரத்தில் இருந்து வருபவருக்கு கோபுரம் தெரிய கோடி நன்மையென ஓய்வெடுக்க, உணவருந்த, விரைவதற்கும், ஆசுவாசம் கொள்வதற்கும் ஏதுவாக இருக்குமென அமைக்கப்பட்டது கோபுரம்.


அதுமட்டுமல்லாது,கோபுர கலசங்களில் விதை தானியங்களை பாதுகாப்பு செய்து வைத்து பஞ்சக்காலத்தில், பயன்படுத்தும் Pr‍oactivenessம் சேர்ந்த அழகியல்தான் கோபுரம்.


அதே போன்று கோபுரத்தின் பொம்மைகளை உற்று நோக்கினால், எடையை அதிகம் தாங்கும் யானைகள், உடல் வலுவாக இருக்கும்‌ பூத கணங்களே கீழ் வரிசையில் இருக்கும். இது வெறும் அழகியல்  அல்ல... அறிவியல் கலந்த அழகியல் அல்லவா?


தஞ்சை கோயில்

***********************

 தஞ்சை கோயிலின் சுற்றுச்சுவர் இரட்டை சுவர்.


அதேபோல், கூடுகையில் ஒருவர் கேட்டார், சிற்பங்கள், ஓவியங்களை எப்படி வரைந்தார்கள் அதற்கான வெளிச்சம், காற்றோட்டம், space  எப்படி கிடைத்தது என?


அதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன்‌ கூடிய விளக்கம் இதுதான், அனைத்து கோயில்களிலும், கோயிலின் கோபுர வேலைகள் முடித்தப் பின்னர்தான், சிலையை பிரதிஷ்டை செய்வார்கள், ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அமைத்து விட்டு தான் கோபுர வேலையை செய்தார்கள்.


சிலையின் மீது கற்கள் விழாமலிருக்க, சிலையின்‌ மீது மணலை,முதல் தள உயரத்திற்கு கொட்டி மூடிய பின்னர் கோபுர வேலைகள் நடந்தன.


இன்றும் லிங்கத்தை வெளியில் எடுக்க முடியாது சிலையை விட வாயில் சிறிது என்பதே இதற்கு சாட்சி.


கூடவே, கோபுரத்தின் முதல் தளத்தில் இரட்டை சுவர் எழுப்பட்டுள்ளது உட்சுவர் 13 அடி அகலமும், வெளிசுவர் 7 அடி அகலமும் கொண்டவை, இவ்விரு சுவர்களுக்கும் இடையே ஒரு கட்டை வண்டி செல்லும் அளவிற்கு இடைவெளி இருக்கிறது. 


அந்த சுவற்றில் தஞ்சை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கூடவே பரதத்தின் பாவனைகள் மற்றும் நிற்கும் விதத்தினை (Pose) 108 சிற்பங்களாக வடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு 81 சிற்பம் மட்டுமே முடிவுற்ற நிலையில் உள்ளது, 82 ல் இருந்து சிற்பமாக்கப்படா பாறைகள் மட்டுமே இன்றும் உள்ளது, இது கோயிலின் கட்டுமான பணி முழுமைப் பெறவில்லை என்பதற்கான சான்று.


இவ்விரு சுவர்களும் கோபுரத்தின் stability ஐ உறுதி செய்வதற்கான கட்டுமானம்.


இக்கோபுரம் sound proof ஆகவும்‌ கட்டமைக்கப்பட்டுள்ளது.‌( Is it not Acoustics Engineering). அங்கு நின்று ஓம் என்று உச்சரித்தால், வெளியில் செல்லாது உள்விதான கல்லில் பட்டுப்பெருகி ஒலிக்கும்


கூடவே, கோயிலில் காணப்படும் கல்வெட்டில் தலைமை தச்சர் பெயர், ஓவியர்கள், சிற்பிகள் என அனைவரின் பெயரும், கோயில் கட்டுமானப் பணிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள், பராமரிப்பு பணி மற்றும் செய்யப்பட வேண்டிய பூஜைகள் குறித்தும் 107 பத்திகளில் விளக்கமாக பொறிக்கப்பட்டுள்ளது.


சரிங்க...


ஓவியம், தூய்மையும் தமிழ் அழகியலும், பறையும் அழகியலும், கிருஷ்ணர்  பாதம் வரைவது  Action பெயின்டிங் ஆ, சதுர வடிவ தரையின் மேல் எப்படி dome கட்டுவது? Mughal architecture க்கு முன்பே தமிழர்கள் அக்கலையழகில் சிறந்து விளங்கினார்கள் அதற்கு சான்று இருக்கிறதா? கேன்வாஸ் பெயிண்டிங்கிற்கும் சேலை என்ற சொல்லுக்கும் என்ன தொடர்பு?

மூலிகையில் வண்ணம் தீட்டியதில் யார் முன்னோடி?


மருத நிலத்திற்கு வந்தப்பின் ஓவியங்களை, சிற்பங்களை மறக்கவில்லை, அவர்களே வளர்த்தெடுத்து இருக்கிறார்கள் என்பதற்கு சான்று இருக்கிறதா?


தமிழிசை, நாட்டுப்புற இசை, நாட்டுப்புற படைப்புகள் செவ்வியல் படைப்புகளாக கருதப்படவில்லையே ஏன்?


தமிழ் அழகியலில் தமிழருக்கே இடமில்லாது போனது ஏன்?


பூச்சூடலின் அழகியலுக்குப் பின்னுள்ள அறிவியல் என்ன?


இன்னும் பல செய்திகளை நாளை  பார்ப்போம்.


இத்தகைய சிந்தனைகளை வெளிசொல்ல வாய்ப்பாக அமைந்தது த.ம. அ நடத்திய திசைகூடல் நிகழ்வும், அதில் உரையாற்றிய இந்திரன் சார் அவர்களின் உரையும் தான்.


அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும், பேரன்பும்


அன்புடன்

-கோ.லீலா.

Wednesday 26 May 2021

தமிழிசைக்கருவி -1

குடமுழா/ பஞ்சமுக வாத்தியம். 
**************************************

 பறவைகளின் கீச்சொலிகளோடு, எழும்போதே காவேரியாற்றங்கரையின் நினைவுகள் உள்ளுக்குள் இசைக்க தொடங்கி விட்டது... 

ஏதேதோ நினைவுகள்.... 

 காவேரி மண் கவிதைகளையும், கதைகளையும் மட்டுமா சுமந்து மணக்கிறது? 

 இயல், இசை, நாடகம் அத்தனைக்கும் பிறப்பிடமல்லவா, வீரம் செறிந்த காதலோடு கலை பல பயின்ற மாந்தர்களை படைக்கும் காவேரியை நினைக்க... 

 காவேரியாறு கொடுத்த கொடையல்லவா.... 

கம்பர், ஒட்டக்கூத்தர்,இளங்கோவடிகள், கல்கி, தி.ஜா, கு.ப.ரா, கு.ப.சேது,க.நா.சு, ந.பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ், எம்.வி.வெங்கட்ராமன், தேனுகா, திரிலோக சீத்தராம், ந. விச்சுவநாதன், வாலி, சுஜாதா... என நீளும் வரிசையில் இன்று என்னை இசைக்கிறது காவேரியோர இசை. 


     பயிருக்கு மட்டும் மண்ணை பிரித்தால் போதாதா? படைப்புக்குமா மண்ணை பிரிக்க வேண்டும் என்ற கேள்வி என்னுள் எப்போதும் உண்டு, எனினும் பிறந்த மண்ணின் இசை மீட்டும்போது மயங்காதிருக்க முடியுமா? 

 காலையில்துயிலெழும்போதே திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் சாயரட்சை ( காமிக) பூஜையில் இசைக்கும் குட முழா ( ஐமுக வாத்தியம்/ பஞ்சமுக வாத்தியமும்) பாரி நாயனமும், பிரம்ம தாளமும் என்னுள் இசைக்க தொடங்கி விட்டன... 


குடமுழா/பஞ்சமுக வாத்தியம்.




 சிறுவயதில் கேட்டு, ரசித்த யாவும்,கொள்கைகளை புறந்தள்ளும் ஆற்றலுடையவை. 

 இசையும், இலக்கியமும் இசைந்து கொடுக்க அவற்றை சிற்பமாக்கி கொண்டன, திருவாரூர், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், கும்பகோணம், தாராசுரம், ஸ்ரீ ரங்கம் கோயில்கள். 

 அவற்றை வரைந்து கொண்டன கோயில் கூரைகளும், தஞ்சைதட்டு ஓவியங்களும். 

 இசைகருவியையும், சிற்பங்களையும் செய்யும் ஓசையில், இசை சுருதி பிசகமால் தாளமிட காவிரியோடு கரகமும், பொய்க்காலும் ஆனந்த கூத்தாடின. 

 கி.பி 2 ம் நூற்றாண்டிலேயே வடிவமைக்கப்பட்ட தோல் இசைக்கருவி‌ என ஆய்வுகள் சொல்கின்றன. 

குடமுழா, இப்போதும் வாசிக்கப்படுவது இரண்டு இடங்களில்தான். ஒன்று திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், இன்னொன்று திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருத்தீஸ்வரர் கோயில்.திருவாரூர்பலவற்றுக்கு பெயர் பெற்ற ஊர், திருவாரூரில் பிறந்தேன் எனும் பேறு பெரிதென உவக்கிறேன். 

 சங்க கால இசைக்கருவியை நேரில் பார்த்து இசை கேட்டு வளர்ந்திருக்கிறேன், அந்த கருவியை தொட்டுப் பார்த்திருக்கிறேன்.


 தியாகராஜ பிரம்மம், முத்துசாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரிகளின் மும்மூர்த்தி சபாவை தினசரி கடந்திருக்கிறேன், தமிழகத்தில் போற்றி வளர்க்கப்பட்ட இவர்கள் ஒரு கீர்த்தனையை கூட தமிழில் இயற்றவில்லையே என்ற எண்ணம் எப்போதும் என்னுள்‌தோன்றும்.

 கர்நாடக இசையும், தமிழிசை இரண்டுமே பிடிக்கும் என்றாலும், இரண்டும்‌ ஒரே நேரத்தில் நடந்தால், தமிழிசை, மற்றும் கிராமிய இசை கேட்கவே செல்வேன். 


 சோழர்களின் இசைஞானத்திற்குதாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பலிபீடத்தில் அமைந்துள்ள பத்து இசைப் படிக்கட்டுகளைக் கொள்ளலாம். இவற்றை ஒவ்வொன்றாக தட்டும்போது ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற சங்கராபரண இசையொலி எழுகின்றது. மதுரை மீனாட்சியம்மன் மற்றும் சுசீந்திரம் ஸ்தாணுமால்ய ஸ்வாமி கோயில்களில் உள்ள இசைத் தூண்களுக்கு இந்த இசைப் படிக்கட்டுகளே முன்மாதிரியாகத் திகழ்ந்தன. 

 இலக்கியத்தில் குடமுழா
********************************** 

 தா,தாம், தீம், நாம் எனும் இசையெழுப்பும்குடமுழா பற்றி சிறுபாணாற்றுப்படை, பெருபாணற்றுப்படை, மதுரைக் காஞ்சி, மலைபடுகடாம், அகநானூறு,கலித்தொகை, ஐங்குறுநூறு, குறுந்தொகை,பதிற்றுப்பத்து, பெருங்காதை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, தேவாரப் பதிகம், ஆழ்வார் பாசுரங்கள், கல்லாடம், திருப்புகழ் போன்ற பல்வேறு சங்க இலக்கிடம் மற்றும் பக்தி இலக்கிடத்திலும் குடமுழவுப் பற்றிய செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன. 

 சில... 
 வண்டணை கொன்றை வன்னியு மத்தம் 
மருவிய கூவிளம் எருக்கொடு 
மிக்க கொண்டணி சடையர் 
விடையினர் பூதங் கொடுகொட்டி குடமுழாக் கூடியு 
முழவப் பண்டிகழ் வாகப் பாடியோர் 
வேதம் பயில்வர்முன் பாய்புனற் 
கங்கையைச் சடைமேல் வெண்பிறை சூடி 
உமையவ ளோடும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 
1.75.4 

 🌷 


 விட்டிசைப் பன கொக்கரை கொடு 
 கொட்டி தந்தளகம் 
 கொட்டிபாடுமித் துந்துபி யொடு 
 குடமுழா நீர் மகிழ்வீர். 

 என அப்பர் அடிகள் தேவராத்தில் குடமுழவு கேட்டு, ஆரூர்கூத்தன் உவகை கொண்டாடியதை விவரிக்கிறார். 

 மேலும், 
 தொண்டைவாய் உமை ஓர் பாகம் கூடுமே; 
குடமுழவம், வீணை, தாளம், குறுநடைய சிறு 
 பூதம் முழக்க, மாக்கூத்து ஆடுமே; 
அம் தடக்கை அனல் ஏந்து(ம்)மே;- 
அவன்ஆகில் அதிகைவீரட்டன் ஆமே. 

 என ஆறாம் திருமுறை தேவார பதிகத்தில் குடமுழா எனும் இசைக்கருவியை பற்றிய குறிப்புகள் உள்ளன. 

 சிற்பங்களில் குடமுழா 
******************************* 

 வங்கநாட்டுப் பாலர்கள், கங்கர்கள், காகதீயர்கள், மேலை மற்றும்‌ கீழை சாளுக்கியர்களின் சிற்பங்களிலும் ஆடல்வல்லனுக்கு/சிவனின் நிருத்த சிற்பங்களுக்கு முன்பாக குடமுழா வாசிக்கப்படுவது போன்று சிற்பங்களில் குடமுழா அமைக்கப்பட்டுள்ளது.‌இதன் மூலம், குடமுழா பிரபலமான இசைக்கருவியாக இருந்ததும், இதை பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும்‌ போற்றி கொண்டாடி இருந்ததற்குமான சான்றாக சிற்பங்கள்‌ இருக்கின்றன...

 🌷 

 குறிப்பு : நிருத்தம் என்பது பரதநாட்டியத்தில் சுத்தநடனம் ஆகும். இது உடல் அழகையும், உடலின் அழகிய அசைவுகளையும், தாளத்தின் மிகநுணுக்கமான அளவைகளையும், கைகள், விரல்களின் அழகான முத்திரைகளையும், பாதஜால வித்தைகளையும் இசை, அதன் தாள மெல்லின வல்லினங்களையும் உருவகப்படுத்தும் ஒரு கலையாகும். 🌷 

 திருவலஞ்சுழி கோயில் விதானத்தில் குடமுழா இசைப்பது போன்றொரு ஓவியம் உள்ளது, அது தஞ்சை நாய்க்கர் காலத்தில் வரையப்பட்டதென அறியப்படுகிறது. 

கங்கைகொண்ட சோழபுர சிற்பம்.


 தரங்கம்பாடி,செந்தலை, கங்கைகொண்ட சோழபுரம், திருப்புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடைய வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் தென்திருவலங்காடு ஆகிய சிவாலயங்களில் ஆடல் வல்லானின் முன்பு வாசிக்கப்படுவதாக இருக்கிறது இப்படி, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இக்கருவி ஆடலுக்கு இசைக்க கூடிய கருவியாக இருந்திருக்கிறது. 

 ஆக்கல் – சதியோஜாதம்- மேற்கு 

காத்தல் – வாமதேவம்- வடக்கு 

அழித்தல் – அகோரம் – தெற்கு 

மறைத்தல் – தத்புருஷம் –கிழக்கு 

அருளல்- ஈசானம் – வானம் 

 ஆகிய மேற்கூறிய அய்ந்து செயல்களை குடமுழா குறிப்பதாக சொல்கிறார்கள். 

 இது பஞ்ச உலோகத்தால் ஆகியது. அதன் அடிப்பகுதி கடம் என்னும் வாத்தியம் போல பெரிய பானை வடிவத்தில் இருக்கும். அதற்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் வட்ட வடிவில் இருப்பதால் அதை வட்டத் தட்டு என்பர். இதைப் பசுத்தோல் போற்றி மூடி இருப்பர். ஒவ்வொரு முகத்தின் – வட்டத் தட்டின் – மீதும் மூடப்பட்டதோலின் கனமும் வேவ்வேறு அளவில் இருப்பதால் இது வெவ்வேறு ஒலியை எழுப்பும். 

அதாவது ஐந்து முகங்களும் ஐந்து விதமான ஓசையை எழுப்பும். ஒவ்வொரு‌ முகத்தின் கழுத்தின் அளவிற்கு ஏற்பவும், கட்டப்பட்டிருக்கும்‌ மான் தோலின் தடிமனுக்கு ஏற்பவும் இசை எழுப்பும். 

குடமுழா பற்றி குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய "குடமுழா" என்ற நூலில் விரிவாக இருக்கிறது. 

தஞ்சை பெரிய கோயிலை விடவும், திருவாரூர் பெரியகோயில் மனதிற்கு நெருக்கமானது, இறைவனை தேடி எல்லோரும் அங்கு போனபோது, நான் மட்டும் அங்கு இசையை, சிற்பங்களை, கதைகளை, புல்வெளியை, கோயில் கோபுரத்தில் இருந்து படபடத்து பறக்கும்‌ புறாக்களை தேடி இருக்கிறேன். 

இக்கருவியை பாராசைவர்களான முட்டுக்காரர்கள் தான் வாசித்து இருக்கிறார்கள். கடைசியாக முட்டுக்காரர் சங்கரமூர்த்திதான் இருகோயில்களின்‌ குடமுழாவையும்‌ வாசித்து இருக்கிறார். தற்சமயம் அக்கலை அழிந்து விடக்கூடாது என முட்டுக்காரர் வழி வந்த தேவமங்கை எனும்‌பெண் குடமுழாவை வாசித்து வருகிறார். 

இன்று, கொரோனாவால், குடமுழா இசைக்கப்படவில்லை... 

எத்தனை தாண்டவங்கள், விழாக்கள், ராஜ உபசரணைகள், பூஜைகள் என கொட்டி முழக்கிய இசைக்கருவிகள் மூலையில் கிடக்கலாமோ?

 இப்படி மறக்கப்பட்ட ஒவ்வொரு தமிழிசைக் கருவிகளும் மௌனமாக பல்லாயிரமாண்டு வரலாற்று நிகழ்வுகளை இசைத்துக் கொண்டிருக்கின்றன... 

நாளை கெத்தா வர்றேங்க... 

அட கெத்து அப்படிங்கறது ஒரு இசைக்கருவியோட பேருங்க. 

அன்புடன் - கோ.லீலா.

Sunday 14 February 2021

தமிழும் காதலும்.

 ❤️

காதலர் தினம் என்ற ஒன்று சங்கத் தமிழ் காலத்தில் இருந்ததா?

தமிழர்கள்தானே பல பண்பாடு, கலாச்சாரங்களுக்கு முன்னோடிகள்... அவங்க இப்படி கொண்டாடி இருக்காங்களான்னு பார்த்தால்...

அட போங்க நம்மெல்லாம் வேஸ்ட்...

காமவேள் விழான்னு( Valentine's day) ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லைங்க 28 நாள் கொண்டாடி இருக்காங்க. அதுதான் பின்னாளில் இந்திர விழாவாக மாறியது. 

காதலர்கள் தங்குவதற்கான இடத்தை மூதூர்ப்பொழில் என்றும் இளவந்திகை என்றும் அழைத்திருக்கின்றனர். பூம்புகாரிலும், மதுரை மாநகரிலும் இவ்விழா கொண்டாடப்பட்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன.

தமிழ் எல்லா வகை காதலையும் போற்றி வகைமைப்படுத்தியுள்ளது. எந்த வகையான காதலையும், அன்பையும் தூற்றாது, மனித மாண்புகளை போற்றி இருக்கின்றன.

கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றையும் அகத்திணையில் வைத்து போற்றி இருக்கின்றனர்.

காதலர்களுக்கான உரிமையையும் சங்கத் தமிழ் குறிப்பிடுகிறது.

❤️தனியுரிமை (Privacy)


❤️சந்திப்பு ( Dating/ meeting)-

   இரவுக் குறி-9வகை & 

    பகல்   குறி-3 வகை.


❤️இன்பங்கள்( Pleasures)


❤️பொதுவெளி அன்பு 

    ( Public display of affection)


❤️பாதுகாப்பு ( safety)


❤️அலர்/ அம்பல் ( Rumours)


(அலர் - சிறு வட்டத்திற்குள் பேசப்படுவது.


அம்பல்‌- பரவலாக அம்பலமாகி பேசப்படுவது.)


❤️பெற்றோர்/ சமூக மீறல் 

     ( Non - consent)


❤️உடன் போக்கு( Elope)


❤️உடனுறை ( Living together)


❤️திருமணம் ( Marriage)


❤️ஆண் பெண் உணர்வுச்        

     சமன்மை ( Equal right of feeling)

இந்த அத்தனை உரிமைகளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெற்றோரை மீறல் என்பதை பெருங்குற்றமாக கருதாமல், தனக்கான இணையை தேர்ந்தெடுத்தல் எனும் முறையில் மதித்து, ஒரு தாய் தன் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் உணவு தயாரித்து தருவதாகவும் சங்க இலக்கிய பாடலொன்று சொல்கிறது.

❤️

உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,

யாய் அறிந்து உணர்க’ என்னார் தீ வாய்

அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,

“இன்னள் இனையள் நின் மகள்” எனப் பல் நாள்

எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,  5

‘நாணுவள் இவள்’ என நனி கரந்து உறையும்

யான் இவ் வறுமனை ஒழிய, தானே,

‘அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை

எனக்கு எளிது ஆகல் இல்’ எனக் கழல் கால்

மின் ஒளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்,  10

பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு யான்

அன்னேன் அன்மை நன்வாய்யாக,

மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி

வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்

புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,  15

செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த

நுனை குழைத்து அலமரும் நொச்சி

மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே.

அகநானூறு -203.

❤️

திருநர் காதலையும், LGBT போன்றவற்றையும் கூட 3000 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து, அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்த இனம்தான் தமிழினம்.

கபிலர் காதலோடு காமத்தையும்,‌ ஒரு பெண்ணின் காதலை தோழி தலைவனிடம் கூறுவது போல் அமைந்திருக்கும் இப்பாடலில் பெண்ணின் உணர்வுகளையும் பாடியிருப்பது சிறப்பு.‌

பாடலைப் பார்ப்போம்.

❤️

வேரல்வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசினோரே! சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்

உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!

❤️

பெண்ணிற்கு அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை குணங்களையும், ஆணுக்கு அறிவு, நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி என்ற நாற்பண்புகளையும் சங்கத் தமிழ் வகுக்கவில்லை.

மரபுவாதிகளால் வகுக்கப்பட்ட இப்பண்புகளை உற்று நோக்கினால் பெண்ணிற்கு மடம் என்றும் ஆணுக்கு அறிவு என்றும்  கூறியுள்ள சூழ்ச்சி புரியும்.

சங்கத்தமிழில் "பெண் நாண துறப்பு" என்பது பற்றிய குறிப்பும் தமிழர்களின் உளவியல் மற்றும் உரிமையில் சமன்மை அறிவிற்கு சான்றாகும்.

சங்க இலக்கியம் இயற்கையை பாடுகிறது காதலையும் பாடுகிறது. காதல் என்பது இயற்கை, அனைத்து உயிரினங்களின் இயல்பு.

சரி வேலண்டைன்ஸ் பற்றி பார்ப்போம்.

🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️

மூன்றாம் நூற்றாண்டில் ரோம பேரரசை க்ளாடியஸ்II கோத்திகஸ் (Claudius II Gothicus) என்ற மன்னன்‌ ஆண்டு வந்தார், அவர் காலத்தில் நிறைய போர்களை மேற்கொண்டார், அதற்காக இளம் சிப்பாய்களை படையில் சேர்க்க முயற்சி செய்கிறார். 

யாரும் முன்வராது போக, காதலியை / மனைவியை, குடும்பத்தை விட்டு வர யோசிப்பதால்தான், படைக்கு இளம் சிப்பாய்கள் கிடைக்கவில்லை என்ற எண்ணிய மன்னன். யாரும் காதலிக்கவோ, திருமணம் செய்துக்கொள்ளவோ கூடாது என்று சட்டம் போடுகிறார்.

இதை எதிர்க்கும் வண்ணம் வேலண்டைன் ரகசியமாக, இளைஞர்களுக்கு சிப்பாய்களாக படையில் சேருவதற்கு முன்பு திருமணம் செய்து வைக்கிறார்.

இந்த ரகசியத்தை அறிந்த க்ளாடியஸ், வேலண்டைனை சிறை வைத்து, பிப்ரவரி 14 அன்று கொல்லப்படுவார் என்றும் அறிவித்து விடுகிறார்.

இந்நிலையில், ஜெயிலரின், பார்வையற்ற பெண் தினம் வேலண்டைனுக்கு உணவு வழங்க  வருகிறார், இருவருக்கு மிடையே காதல் மலர்கிறது. பிபரவரி 13 ம் தேதி இரவு ஜெயிலரின் மகளுக்கு கடிதம் எழுத மை ஏதும் இல்லாத காரணத்தினால், துணியில் ரத்தத்தால் ஒரு காதல் கவிதை ( Sonnet - செய்யுள்) எழுதி கீழே உன் வேலண்டைனிடமிருந்து என கையெழுத்திட்டு அனுப்பியதாகவும். அதில் எழுதியிருப்பதை படிப்பதற்காகவே அப்பெண் பார்வைப் பெற்றார் என்றும் கதை செல்கிறது.

க்ளாடியல், 3 ம் நூற்றாண்டில் வெவ்வேறு வருடங்களில் பிப்ரவரி 14 அன்று இரு வேறு வேலண்டைன்களை  கொன்றதாகவும் சொல்கிறார்கள். இல்லை இருவருமே ஒருவர்தான் என்றும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ காதலுக்காக உயிர் துறந்த st.Valentine னின் பெயர் இன்றும் வாழ்கிறது.

காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை....

காதல் இனிது... ஆதலினால் காதல் செய்வீர்.

காதல் கவிதைகளை கடந்து சென்றுவிடும் நீங்கள் எப்படி இதை எழுதுகிறீர்கள்? என்ற உங்களின் கேள்வி புரிகிறது.

காதல்தான் வாழ்வின் அச்சு...  மூச்சு. மூச்சுப்போல இருக்கணும் ஆனால் வெளியில் தெரியக்கூடாது, அதுதான் சமூகத்திற்கான இயக்கத்தை செய்யத் தூண்டுவது.

" போராளிகளே சிறந்த காதலர்கள்"



அன்புடன்

- கோ.லீலா.


Sunday 17 January 2021

மருதாணி தொய்யில்


 

மருதாணி வைத்துக் கொள்வதில் அத்தனை ஆசையுண்டு எனக்கு. அதிலும் இப்படி வட்டம் வைத்து, விரல்களுக்கு மகுடம் சூட்டுவதில்தான் அலாதி பிரியம

சோலார் சிஸ்டம் நினைவுக்கு வந்துவிடும், என்றாலும் சுற்றி வைக்கும் சிறு வட்ட எண்ணிக்கைள் கை மற்றும் வட்ட அளவிற்கு ஏற்ப மாறும்.


அரேபியன் ஸ்டைல்,பாக்கிஸ்தானி ஸ்டைல், ராஜஸ்தானி ஸ்டைல் என  இன்னும் பல வகையில் அழகாய் வரைய தெரிந்திருந்தாலும் இப்படி வைத்துக் கொள்வதில் ஒரு "க்ளாசிசம்" இருப்பதாக தோன்றுவதால், இதுவே என் விருப்பம்.


நேற்று மருதாணி வைத்துக்கொள்ளும்போது அய்யா Tk Kalapria  அவர்களின்‌ கீழ்கண்ட வரிகள் நினைவுக்கு வந்தன...


அவசரப்படுகிறவர்களுக்கு

மை கரைத்தாற் போல வெளிறியும்

பொறுமையாய்

காத்திருப்பவர்கள் கைகளில்

துலக்கமாகவும் பளிச்சிடுகிறது

நிறைய எதிர்பார்ப்பவர்களுக்கு

கரியாக அப்பி விடுகிறது

மருதாணி இட்டுக் கொள்வது போல

வாழ்க்கை.

 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


சும்மா வச்சாலே சட்னு சிவந்திடும் எனக்கு, வீட்டில் இலையைப் பறித்து அரைத்து வைத்துக் கொண்டால் கொஞ்ச நேரம் வைத்துக்கொள்ளலாம்.


கடையில் வாங்கி வைத்தால், உடனே எடுத்துவிட வேண்டும்.

இரண்டிலுமே எடுக்கும்போது இளஞ்சிவப்பாதான் இருக்கும்.


காலையில் எழுந்துப் பார்த்தால், அய்யா சொன்ன மாதிரி, நிறைய எதிர்பார்ப்பு போலிருக்கும்.


நேற்று கவனத்துடன் உடனே எடுத்தும் காலையில் இந்த நிறத்திற்கு வந்து விட்டது.


சரி மேட்டருக்கு வருவோம்.


மருதாணியின் சொந்த நாடு எது?


எவ்வளவு காலம்‌ பழமையானது?


மருதாணியின் வேறு பெயர்கள் என்ன?


திருமணத்தின் போது அவசியம்‌ மருதாணி வைத்துக்கொள்வது ஏன்?


மருதாணி அழகுப் பொருள் மட்டும்தானா?


ஆண்கள் மருதாணியை பயன்படுத்தலாமா?


வாங்க, மருதாணியை   ஒரு கை‌ பார்ப்போம்‌...


எகிப்துதான் மருதாணியின் சொந்த நாடென கணித்துள்ளனர்.


இதற்கு சான்றாக,‌எகிப்திய மம்மிகளின் முடி மற்றும்‌‌ நகங்கள் செங்கபில நிறமாக மருதாணி சாயலில் இருந்ததை ஆய்வு செய்து, மருதாணியை உடற்கலையின் ஒரு அங்கமாக கி.பி 700 லிருந்து பழக்கத்தில் இருந்ததாகவும்,மருதாணித்

தாவரம் எகிப்தில் தோன்றி இந்தியாவிற்குத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லப்பட்டதாகத் தாவரவியலாளர்களால் நம்பப்படுகின்றது.


மருத்துவகுணமும், குதிரைப் போன்ற விலங்குகளின் மென்முடிக்கு நிறமூட்டியாகவும், 

ஆண், பெண் என இருபாலரும் உடற்கலையின்‌ ஒரு அங்கமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.


தொய்யில் என்றால் சங்ககால் பெண்கள் சந்தனத்தால் மார்ப்பில் வரைந்துக் கொள்ளும்‌ படங்களே தொய்யில் என்று அழைக்கப்படுகிறது.


ஐவணம், அழவணம் என்றெல்லாம் அழைக்கப்படும் மருதாணியை கொங்கு மண்டலத்தில் மயிலாஞ்சி என்கிறார்கள். 


இப்போ மெஹந்தி என்கிறார்கள் வடமொழியில்.


மஞ்சிட்டி, அவுரி, இம்பூறல் வரிசையில் மருதாணியும் இயற்கை சாயமூட்டியாக இடம்பெறுகிறது.


கல்யாணத்துக்கு ஏன் மருதாணி?


அழகுக்காக மட்டுமின்றி, பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்கப் பயன்படுகிறது.


வட்டமாக வைத்துக்கொள்ளும் மருதாணி, உள் மற்றும் வெளி சூரியனை பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. 


 "உள்  ஒளி விழிப்பு" எனும் கருத்தை மையமாகக் கொண்டுள்ளன. 

பாரம்பரிய இந்திய அலங்காரங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளங்கையில் சூரியன் என இங்கு குறிப்பிடுவது கை மற்றும் கால்களை நோக்கமாகக் கொண்டாகும். உள்ளங்கையில் சூரியன் வடிவம் இடுவது இந்தியாவின் பாரம்பரிய அலங்காரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


அஸாமில் திருமணமாகாத பெண்களின் மூலம் "ரொங்காலி பிகு" எனும்‌ வைபவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆஃப்கானில் இஸ்லாமியர்கள் பெண்கள் பூப்புடைந்ததின் குறியீடாக மருதாணியைப் பயன்படுத்துகின்றனர்.


இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்காசிய நாடுகளில் பெண்கள் பெரிதும்‌ விரும்பி கைகளிலும், கால்களிலும் மருதாணியை வைத்து அழகு செய்துக் கொள்கின்றனர்.


மருதாணியின் மருத்துவ குணங்கள்:

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


மருதாணியின் விதைகள் பீட்டா ஐயோனன் (Beta Ionone) என்ற வேதிப்பொருளைக்கொண்டது. இது, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


🌿உடலுக்குக் குளிர்ச்சி


இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடிய தாவரம். மருதாணி இலையை சட்னியைப்போல நன்றாக, விழுந்தாக அரைத்து இரவு தூங்கப் போவதற்கு முன்னர் பாதத்தில் தடவிக்கொள்ளலாம். அதேபோல் கை, கால் விரல்களில் வைத்துக்கொண்டாலும், இது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.சிலருக்கு குளிர்ச்சி தாங்காது அவர்கள் மட்டும் பாதாம் பிசினுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.


🌿முடி வளர்ச்சி


அரைத்த மருதாணி இலைகளைத் தினமும் தலையில் தடவி வர, பொடுகுகள் குறைந்து தலைமுடி பளபளப்படையும். மேலும் முடி நல்ல கருமையாகவும் மென்மையாகவும் காட்சிதரும். இளநரை போன்ற நரை சம்மந்தமான பிரச்னைகளுக்கும் இது நல்ல தீர்வைக் கொடுக்கும்.


🌿தூக்கமின்மைக்கு மருந்து


மருதாணிப் பூக்களை ஒரு துணியில் சுற்றி, தூங்கும்போது தலைமாட்டில் வைத்துக்கொண்டால் நன்றாகத் தூக்கம்வரும்.


🌿மேகநோய்க்கு மருந்து


மேகநோய்க்கு ஆகச்சிறந்த மருந்தாக இது இருக்கிறது. இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, அதைப் பாலுடன் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்திவந்தால் மேகநோயால் உண்டாகும் புண்கள் குணமாகும்.


🌿தீக்காயங்களுக்கு மருந்து


இதன் இலைகள் குளிர்ச்சித் தன்மைகொண்டவை. இதனால் தீக்காயங்களால் உண்டாகும் எரிச்சலுக்கு இது சிறந்த மருந்தாகும். எரிச்சலைக் குறைத்து, புண்கள் ஆறவும் இது துணைபுரியும்.


🌿கல்லீரலைக் காக்கும்


கல்லீரல் பிரச்னையால் உண்டான நோய்களை இது குணப்படுத்தும். குறிப்பாக, மஞ்சள்காமாலைக்கு இது மருந்தாகப் பயன்படும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வது நல்லது.


மேலும் மருதாணியால் உண்டாகும் நன்மைகள்:

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

இதன் இலையை அரைத்து தினமும் வாய்க்கொப்பளிக்க, ஆறாத அம்மைப் புண்கள், எரிச்சல் தரும் வாய்ப்புண்கள், தொண்டை கரகரப்பு ஆகியவை குணமாகும்.


அரைத்த  இலைகளை குளிக்கும்போது சோப்புடன் தேய்த்து குளித்துவர, கருந்தேமல், படை போன்றவை சரியாகும்.


மருதாணி இலையை அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.


பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அதிகமான ரத்தப்போக்கு நிற்கும். வெள்ளைப்படுதலைச் சரிசெய்யும்.


இதன் இலைச்சாறு வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற வயிற்றுக் கோளறுகளைக் கட்டுக்குள் கொண்டுவரும்.


நகச்சுத்தி, கால் ஆணி போன்றவற்றுக்கு இது மிகச்சிறந்த நிவாரணி.


உடல் சூட்டால் உண்டாகும் கண்ணெரிச்சலைத் தீர்க்கும்.


மருதாணி கஷாயத்தை சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் சரியாகும்.


இயற்கை தந்த அற்புதக் கொடை இந்த மருதாணி. அதனால் இயற்கையாக வளரும் மருதாணி இலைகளைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். அழகுக்காக என்றாலும்கூட ரசயானப்பூச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். மருதாணி அழகோடு, ஆரோக்கியத்தைத் தரும் அற்புத மூலிகை! இதைச் சரியாகப் பயன்படுத்தி பல்வேறு வகையான நோய்களிலிருந்து விடுபடுவோம்! உடல்நலத்தைச் சிறப்பாகப் பேணுவோம்.


அன்புடன்

- கோ.லீலா.


பி.கு : நம்ம மருதாணிப் போட்டிருக்கோம்னு இந்த சமூகத்துக்கு அறிவிக்கிறது எவ்வளவு பேச வேண்டியிருக்கு....😀


சூரியன் கொஞ்சம் ஒரு பக்கமா ரவுண்ட்ஸ் போயிட்டார்.


ஃப்ரியா விடுங்க... அதையெல்லாம் கேட்கக்கூடாது.