Friday 7 April 2017

கல்வியில்லா பெண்கள் களர் நிலங்கள்………..





வணக்கம் தோழமைகளே…..




எப்போதும் இயற்கை சார்பான செய்திகளை பேசும் நாம் இன்று முதன்  முறையாக உலகத்தைசெதுக்கும் சிற்பிகளாகிய பெண்களின் கல்வி குறித்து பேசப் போகிறோம்…..

கல்வி குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார்.இதை படித்த பின் கல்வியென்ற சிந்தனை எப்போது தோன்றி இருக்கும் என்றொரு சிந்தனை வந்தது.அதனை தொடர்ந்து கல்வியை யார் யாருக்கு கொடுத்தார்கள் என்ற சிந்தித்த போது……… இதைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததன் வெளிப்பாடுதான் இந்த தலைப்பு.

முதன் முதலில் மனிதன் ஒருவரை ஒருவர் சந்தித்த போது செய்கைகளால் பரிமாறிக்கொண்டவர்கள்,பின் தனது விருப்பு,வெறுப்புகளை,சிந்தனைகளை பரிமாறிக்கொள்ள நினைத்த போதுதான் சத்தம், பேச்சு, மொழி, பின் கல்வியென்ற சிந்தனையும் தோன்றியிருக்க வேண்டும்.

தொடக்க காலத்தில் பெண்ணின் தலைமையிலேயே குழுக்கள் (தற்போதைய குடும்பம்) இயங்கியுள்ளது. அப்படியிருக்க பெண்ணிற்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் சற்று அதிர்ச்சியாகவும் சிந்தனையை தூண்டக்கூடியதாகவும் இருந்தது.



முதன் முதலில் பயிரிடுதலை கண்டுப்பிடித்தவர் ஒரு பெண்ணாக இருந்திருக்கிறார். ஆகவே பயிர் சாகுபடி காலங்களில் குழுக்களுக்கு ஆண் தலைமை வகித்திருக்கிறான் பின்னர் அதுவே நிலையாகி விட உடலுழைப்பு ஆகியாவை பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
சங்க காலத்தில் கல்வி பரவலாக இருந்தற்கு சான்று: சங்க காலத்தில் ஒளவையார், ஒக்கூர் மாசாத்தியார், நக்கண்ணையார், வெள்ளி வீதியார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், காவற்பெண்டு முதலான பெண்பாற்புலவர்கள் இருந்தனர்; பெண் கல்வி சிறப்பாக இருந்தது.

எனினும் சங்கம் காலத்திற்கு பின் பெண் கல்வி பரவலாக இருந்தது போன்று தெரியவில்லை.
அதனால் தான் பாரதியும்,பாரதிதாசனும்,பெரியாரும்,கேரளாவில் ஸ்ரீ நாராயண குருவும் சாதிய மறுப்புகுறித்தும் பெண் கல்வி குறித்தும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்..

 ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமைஎன்று
எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்,
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.  

என்று பாரதி பாடிய கும்மி பாட்டை முழுவதும் படித்தால் பெண் கல்வி மறுக்கப்பட்டதும்,பெண்ணடிமை செய்த பிசாசுகள் ஓடிப் போயின என்று மகிழ்ந்து கொண்டாடியதாக கூறப்பட்டுள்ளது.

பாரதி விட்டு சென்ற செல்வங்கள் குயில் பாட்டு,பாஞ்சாலி சபதம், ஞானரதம் என்ற வரிசையில் முகிலினை கிழித்து ஓளியூட்டும் கதிரென வெளிவந்த பாரதிதாசனும்   அடங்குவார் என புதுமைபித்தன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான், பாரதிதாசனின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பெண் குழந்தை தாலாட்டு ஆகும்.தாலாட்டு பாடல் தூங்க செய்வதற்கு பதிலாக பகுத்தறிவை எழச் செய்யும் பாடலாக அமைந்திருப்பது சிறப்பு எனில் பெண் குழந்தை தாலாட்டில் பகுத்தறிவு குறித்த கருத்துக்கள் விரவி கிடப்பதிலிருந்து ஒரு பெண்ணால் தான் குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி மாற்றத்தை கொண்டு வர இயலும் என்பதை கவிஞர் உறுதியாக நம்பியுள்ளார் என்பதும்,பெண்கள் மீது மரியாதையும் கொண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது.
நெஞ்சைக் கொள்ளைக் கொள்ளும் அந்த தாலாட்டுப் பாடல்.

“ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!

வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!

மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

வேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!

தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!

வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!”

இப்படி பெண்ணை தாலாட்டில் தூக்கி வைத்து கொண்டாடியவர்,பெண் கல்விப் பற்றி கூறியிருப்பது இன்னும் அருமை.


“பெண்கட்குக் கல்வி வேண்டும்
    
குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
    
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
    
உலகினைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
    
கல்வியைப் பேணுதற்கே!”
 
பெண்ணிற்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே என்று சொன்னவர் இறுதியாக உலகினைப் பேணுதற்கும்,கல்வியை பேணுதற்கும் பெண்ணிற்கு கல்வி வேண்டும் கூறியிருப்பதுதான் முத்தாய்ப்பான செய்தி.

நிற்க!

இவையெல்லாம் யாவரும் அறிந்த ஒன்றே.அதை ஏன் இப்போது பேச வேண்டும்?அதன் அவசியம் தான் என்ன?

இன்றைய சமூகத்தில் பெண்ணிற்கான இடம் எதுவாக இருக்கிறது?பெண் படும் பாடு என்ன? பெண் படுத்தும் பாடு என்ன? என்பதைக் குறித்து சற்று விரிவாக பேச வேண்டுமென்பதே நோக்கம்.

முதலில்,பெண் என்பவள் தன்னை உணர்ந்திருக்கிறாளா? சுயமரியாதைக்கும் பணிவிற்கும் வேறுபாடு தெரிந்து வைத்திருக்கிறாளா? ஞானத்திற்கும் அறிவிற்குமான வேறுபாடு,கல்விக்கும் ஏட்டு கல்விக்குமான வேறுபாடு தெரிந்து வைத்திருக்கிறாளா? தன் கடமையென்ன,தன் மதிப்பு என்ன? என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாளா? என்பதைப் பற்றி பேசவும் இன்னும் பல்வேறு தளங்களில் எப்படி தன்னை உருவாக்கி கொள்கிறாள் என்பது குறித்தும் பேசப் போகிறோம்……

பல வீரர்களையும்,பல நேர்மையான மனிதர்களையும்,மனித நேயம் மிக்கவர்களையும், தேசப் பற்றாளர்களையும்,கலைஞர்களையும் இந்த மண்ணிற்கு ஈந்தவள்.

இன்றைய பெண்கள் பட்டங்கள் பல பெற்றிருக்கிறார்கள்.எல்லாத் துறையிலும் உயர் பதவிகளிலும் கீழ் பதவிகளிலும் பெண்கள் தனது சேவை இன்றிமையாதது என நிரூப்பித்து வருகிறார்கள்.எனினும் சில விதிவிலக்குகளை தவிர மற்றவர்கள் மனமுதிர்ச்சி உடையவர்களாக இருக்கிறார்களா?தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்களா? என்று சற்றே ஆராய வேண்டியுள்ளது.என்ன படித்து பதவியிலிருந்தாலும்,அன்றாடம் குடும்ப பணி,அலுவலகப் பணியென இரு குதிரையில் சவாரி செய்ய வேண்டியுள்ளது என அலுத்துக் கொள்ளும் பெண்களை பரவலாக பார்க்க முடிகிறது.

இந்நிலை மாற வேண்டுமெனில்,ஆண்களும் பணிகளில் சமபங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்று பொருள் ஈட்டும் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுள்ளார்களா? என்று பார்த்தால் மிக குறைவான சதவீத பெண்களே பொருளாதார சுதந்திரமும்,கருத்து சுதந்திரமும் பெற்றுள்ளார்கள்.இந்நிலை ஏன்?

முதலில் பெண்களே, தான் என்ன நிலையில் இருக்கிறோம்,உண்மையான சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரமென்பதை யாரும்கொடுத்து பெற வேண்டுமா? இன்று பல பெண்களும் சுதந்திரம் என நினைப்பது தன் இஷ்டப்படி தான் வாழ்ந்துக் கொள்ள வேண்டும்,அதற்காக பல பொறுப்புகளை தட்டிக் கழித்தல் என நினைக்கிறார்கள்.இதனாலேயே இவர்களை அடிமைப் படுத்துதல் எளிதாகிறது.பெண் என்பவள் நகை மற்றும் உடை மீது தீராத காதல் உடையவளாக சித்தரிக்கப்பட்டு ஆரம்பக் காலத்திலிருந்து அவளது கவனத்தை முழுவதும் அதிலேயே செலுத்தி வளரும் படி இந்த சமூக அமைப்பு இருப்பதால்,படித்த பெண்கள் கூட எளிதில் பொருள் சார்பான வாழ்க்கைக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

கற்பது பெண்களுக்கு ஆபரணம் - கெம்புக்
கல்வைத்த நகை தீராத ரணம்!
கற்ற பெண்களை இந்த நாடுதன்
கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அன்போடு!”





என்று பாரதிதாசன் அன்றே தொலைநோக்கு பார்வையுடன் எழுதி வைத்துள்ளார்.கல்வி ஆபரணம் மட்டுமல்ல அழிவற்றதும் கூட.
ஆனால்,இன்றைய நவநாகரீக உலகில் விளம்பர உலகத்தில் பெண்களை கீழ்மைப்படுத்துவது போல் வேறெங்குமில்லை,பெண்ணை போகப் பொருளாக பார்க்கின்ற சமூகத்தின் மீது குற்றம் ஒரு புறமிருக்க,அப்படி தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் முனைப்புடன் பெண்களே முன் வருவது மற்றொரு புறம்.பெண்ணியம் பேசும் யாரும் இதற்கான வலுவான முரணை இதுவரை முன் வைத்ததாகவோ, போராடி வெற்றிப் பெற்றதாகவோ தெரியவில்லை, பெண்கள் போகப் பொருளாக பயன்படுத்தப்படுவதை பெண்களே விரும்பும் போது அதுவே அவர்களை அடிமைப்படுத்துவதற்கான ஆயுதமாகவுமாகிவிடுகிறது.
நான் அவ்வளவாக தொலைக்காட்சி பார்ப்பதில்லை,ஒரு நாள் எதிர்பாராத விதமாக பார்க்க நேர்ந்தது,அதில் சமையல் நிகழ்ச்சிக்கு வருவதற்கு இவ்வளவு கவர்ச்சியான உடை தேவையா? என்ற அய்யம் என்னுள் எழுந்தது.சட்டென்று சேனலை மாற்றினால் அங்கு ஒரு பிரபல நடிகரை பேட்டி கண்டுக்கொண்டிருந்தார் ஒரு பிரபல தொகுப்பாளினி.அதிகமாக படித்தவர்தான் அப்பெண், இந்திய பாரம்பரிய உடையில் மிக அழகாகவே இருப்பார் அப்பெண்,எனினும் தேவையற்ற ஆடை குறைப்பு எதற்கு என புரியவில்லை.பெண்ணியம் என்பது அறிவு அதிகமாக அதிகமாக ஆடையை குறைக்க வேண்டுமென்பதா? தன் உடலை அல்லது தன்னை காட்சிப் பொருளாக்கி கொள்வதை இவர்கள் ஏன் தடுக்கவில்லை?
இவ்வகை பெண்களை பார்த்து இப்போது பக்கத்து வீடு,தெரு,அங்காடி,வங்கி, மருத்துவமனை என எங்கு போனாலும் அரைகுறை ஆடையுடன் பெண்கள் வருவதும்,அப்படி வந்தால் அவர்கள் பொருளாதார ரீதியாக மேல்தட்டு மக்கள் என்ற எண்ணத்தையும் சமானிய மனிதரிடம் விதைக்க தவறுவதில்லை. ஆடை விஷயம் இப்படியென்றால்……….

பொருளாதார சுதந்திரத்தில், 75% பெண்கள் தான் ஈட்டிய பணத்தை குடும்பத்திற்காக கணவனிடமோ,மாமியாரிடமோ,பெற்றோரிடமோ கொடுத்து விட்டு அன்றாட செலவுக்கு அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்பவர்களாக இருப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.இதை தவறு என்று கூறமுடியாது.ஆனால் அத்தியாவசிய செலவுக்கு கூட சில நேரங்களில் வெளியிடங்களில் தவித்து நிற்பதை பார்த்துள்ளேன்.சிலர் தனது ATM card, income tax a/c,E-mail போன்றவற்றைக் கூட கணவரின் முழு கட்டுபாட்டில் விட்டுள்ளவர்களையும் பார்த்துள்ளேன்.அன்பு என்பதும்,சுயசார்பு என்பதும் ஒன்றல்ல என்பதை தெளிய வேண்டும்……என்னுடன் பணியாற்றிய ஒரு பெண் அலுவலர், அப்பா இல்லாமல் தங்கைகளை கவனித்து அனைத்தும் செய்தவர், திருமணம் செய்துக் கொண்டார், குழந்தை இல்லை (நீண்ட வருடமாக). என்பதால் அவரை தன்னுடன் இருக்குமாறும்,சம்பளத்தை தன்னிடம் கொடுத்து விட்டு இருக்க சொல்லி அவரது தாயாரும் தங்கைகளும் அழைக்க,அவரது கணவரோ அங்கு செல்லக் கூடாது என்று சொல்வதும், குழந்தை இல்லையென்ற ஒரே காரணத்திற்காக அவரை நிராகரிப்பதுமாக இருந்தார்.திடீரென ஒரு நாள் தகவல் வந்தது அப்பெண்மணி இறந்து விட்டார் என.அப்போதும் கூட அவரது பணப் பயன்களை அக்காவின் கணவர் பெற்றுவிடக் கூடாதென தங்கைகள் ஆலாய் பறந்ததையும் கண்கூடாக பார்க்க நேர்ந்தது.எப்படி இறந்தார் என விசாரித்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லையென்வும் அதனால் கேரளாவில் ஒரு கோயிலில் விட்டதாகவும், விட்ட மூன்றாம் நாள் இறந்து விட்டதாகவும் கூறினர்……இவ்வகை பெண்களைப் பற்றி பாரதிதாசன் இப்படி சொல்கிறார்.
“ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும்
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம்
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி”

இவ்வகை பெண்கள் ஒருபுறமென்றால்…………
முழு சுதந்திரம் அடைந்து விட்டோம் என தன் இஷ்ட படி வாழும் பெண்கள்,நள்ளிரவு தாண்டியும் கல்லூரி கால அல்லது பள்ளிக் கால வாட்ஸ் அப் குழுவில் ஆண் தோழமைகளுடன்,தனது கணவரைப் பற்றி,ஆரம்ப காலத்தில் புரிதல் ஏற்படுவதற்கு முன்பு வரை தன் புகுந்த வீட்டில் நடந்த செய்திகளையெல்லாம் முழுவதுமாக ஒப்பிப்பதும்,பின் நாளடைவில் குழுவில் இருந்து விலகி தனி நபர் chat க்கு மாறி வாழ்வின் திசை மாறி போவதும், அது தனது சுதந்திரமென பெண்ணும்,அப்பெண்ணுடன் பழகும் ஆண் நண்பர் அடிமைப்பட்டிருந்த பெண்ணினத்தை மீட்டெடுத்தாகவும் கதை கூறி திரிவது ஒருபுறம்.இங்கேயும் அப்பெண்ணே பாதிப்புக்குள்ளாவார்,திடீரென புது தோழிகள் கிடைத்தவுடன் இப்பெண்ணை கழட்டி விட்டுவிடுவார், அப்பெண்ணால் எதையும் யாரிடமும் சொல்ல முடியாது.இப்படி அவதியுறும் பெண்கள் ஒரு புறம் இவர்களுக்காகவும் பாடியிருக்கிறார் பாரதிதாசன்.
 "இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
இலேசுவழி ஒன்றுண்டு; பெண்களை ஆடவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்,
தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா
 மகளிரெலாம் கல்வியறிவு ஒழுக்கம் உளராயின்
மருத்துவமே வேண்டாவாம்; பிணிமூப்பு வாரா
மகளிரெலாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால்
மாநிலத்தில் போரில்லை; சாக்காடும் இல்லை!'

ஆடவர்கள் பெண்களை எவ்வகையும் தாழ்த்தக் கூடாது என்று சொல்பவரே, பெண்கள் கல்வியறிவும் ஒழுக்கம் உளராயின் என கூறுவதன் மூலம்,இவ்விரண்டும் உள்ள பெண்களை யாராலும் தாழ்த்திட முடியாது என கூற வருவதாகவே தோன்றுகிறது.
கல்வியறிவும்,ஒழுக்கமும் ஒன்றோடு ஒன்று இணைந்திருத்தல் வேண்டும், இரண்டும் உடைய பெண்களால் இந்த உலகமே நோயின்றி வாழும் என்கிறார். பெண்களை குறித்து முற்போக்கு சிந்தனையுடையவராக, பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடனுமிருந்திருக்கிறார்.
இன்னொரு புறம்,அடிப்படை கல்வி மறுக்கப்படும் பெண்கள், படிக்க வசதி இருந்தாலும், ஒரு வயதுக்கு மேல் வெளியில் சென்று படிப்பதை விரும்பாத குழுவினரும் உள்ளனர்.ஒரு சிலருக்கோ படிக்க வசதியில்லாத காரணத்தால்படிக்க முடிவதில்லை.

வசதி இல்லாதவர்களை படிக்க வைத்து விடலாம், வசதியிருந்தும் படிக்காதவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விடலாம் என்றுதான்,

“தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப்போ என்று சொன்னாள், உன் அன்னை!
சிலை போல ஏனங்கு நின்றாய்? – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
விலை போட்டு வாங்கவா முடியும்கல்வி
வேளை தோறும் கற்று வருவதால், படியும்!
மலை வாழை அல்லவோ கல்வி? – நீ
வாயார உண்ணுவாய், போ என் புதல்வி!
படியாத பெண்ணாய் இருந்தால்கேலி
பண்ணுவார், என்னை இவ்வூரார் தெரிந்தால்
கடிகாரம் ஓடும் முன் ஓடு! – என்
கண்ணல்ல., அண்டை வீட்டு பெண்களோடு!
கடிதாய் இருக்குமிப்போது – -கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப்போது!
கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு- பெண்
கல்வி, பெண் கல்வி என்கின்றதன்போடு!”
இவ்வாறு பாடியுள்ளார், பாரதி தாசன்.

பெண்களுக்கு சீதனம், வரதட்சணை,சொத்து என்பது குறித்த விழிப்புணர்வு இன்றுமில்லை.சொத்தில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என்பது,பெண்ணின் உரிமைக்காக வகுக்கப்பட்ட ஒன்று.அதே நேரத்தில் பெற்றவர்களின் சுய சம்பாத்தியத்தில் சேர்ந்த சொத்தில் நேரடியாக கட்டாயப்படுத்தி பங்கு கேட்க ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு உரிமை உண்டா, போன்ற பல்வேறு சட்டரீதியான நுணக்கங்கள் நிறைந்த ஒன்று.இதை பெண்கள் முழுவதும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதார சுதந்திரம் குறித்து பேச முற்படும் போது,பெண்களுக்கு சீதனம், வரதட்சணை மற்றும் சொத்துரிமை குறித்த தெளிவான பார்வை உள்ளதா? என்பது சந்தேகமே.வரதட்சணையை எதிர்கின்ற பெண்களே,திருமணத்தின் போது இவ்வளவு நகை வேண்டும்,ஆடை வேண்டும் என கேட்கிறார்கள், பெற்றோரின் பொருளாதார நிலைக்கு மீறி கேட்கிறார்கள்.அதை சிலர் சொத்துரிமை எனக் கூறி திசை திருப்புகிறார்கள்.இதில் வேடிக்கை என்னவென்றால் பெண்களுக்கு சொத்துரிமை குறித்து முழு விபரம் தெரியவில்லை என்பதுதான்.(விதிவிலக்குகளை தவிர).

ஆடைகளாலும்,ஆடம்பரத்தாலும்,நகையாலும்,சினிமாவாலும், ஒரு பெண்ணை வீழ்த்திவிட முடியாது என்பதை பெண்களும் உணர வேண்டும், ஆடவர் களுக்கும் உணர்த்த வேண்டும்.
நிற்க!
அதே நேரத்தில் பெண்ணிற்கு நடக்கும் சமூக அவலங்களை ஏட்டு கல்வியால் நிறுத்தி விட முடியுமா? என்றால் முடியாது என்றே சொல்ல வேண்டும். பாலியல் வன்கொடுமைகள், ஒரு கருத்தை முன் வைத்து விட்டால் அவர்களை இழிவுப் படுத்துதல் போன்ற ஆணாதிக்க சமூகமாகவே இன்றும் உள்ளது. பெண் என்பவள் உடலாக பார்க்கப்படுவதுதான் பிரச்சனை.பெண் என்பவள் குழந்தையாக இருந்தாலும் வளர்ந்தவராக இருந்தாலும் இன்று சமூகத்தில் பாதுகாப்பில்லை என்பதால் இன்றைய கல்வியென்பது தற்காப்பு கலையையும் உள்ளடக்கியே இருக்க வேண்டும்.

கல்வியென்பது தன்னம்பிக்கையையும்,சுயசார்பினையும் தரவில்லை என்றால் அதனால் பயனொன்றும் இல்லை. ஆனால் படித்த பின்னரும் படிக்காதவர்களாக இருக்கிறார்களே அவர்களைப் பற்றியது தான் இந்த யோசனை.

“கல்வியில் லாத பெண்கள்
    
களர் நிலம்: அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்; நல்ல
    
புதல்வர்கள் விளைதல் இல்லை!
கல்வியை உடைய பெண்கள்
    
திருந்திய கழனி; அங்கே
நல்லறிவுடைய மக்கள்
    
விளைவது நவிலவோ நான்?”

இங்கு கல்வியென்று சொல்வதே ஏட்டுக் கல்வியை மட்டுமில்லை, ஞானமும், தொலைநோக்கு பார்வையையும் தரக்கூடிய கல்வியைதான் இங்கு பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.அத்தகைய கல்வியில்லாத பெண்கள் களர் நிலங்கள் என்கிறார்.அங்கு புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை என்கிறார்.இந்த பாடலின் மூலம் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?
 பெண்ணினத்தை மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ  
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு 
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும்
உள்ளடங்கும் ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு

என்று சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் வஞ்சி குப்பனுக்கு(அச்சம் நிறைந்தவன்) கூறுவதாக இந்த நாட்டு பெண்களுக்கெல்லாம்,செய்தி சொல்கிறார் பாவேந்தர் பகுத்தறிவு மிக்கவளாக,உள்ள உறுதி நிறைந்தவளாக,பெண்ணடிமையை எதிர்த்து குரல் கொடுக்க கூடியவளாக இருக்க வேண்டுமென்று.
நாமும் அதையே விரும்புகிறோம்.
“நிலையினிலே உயர வேண்டும் பெண்ணுலகு
மலை விளக்கு ஆகுதல் வேண்டும்-நீ
மலை விளக்கு ஆகுதல் வேண்டும்.”என்ற கனவு கண்ட பாரதிதாசனின் கனவு நிறைவேறும் நாளே வீட்டிற்கும், நாட்டிற்கும் பொன்னாள்.
நன்றி தோழமைகளே….
அடுத்து வேறொரு தலைப்புடன் சந்திப்போம்…..
அன்புடன் லீலா.

No comments:

Post a Comment