Saturday 8 January 2022

வரையாட்டின் குளம்படிகள்

 11.12.2021 அன்று வெளியீடான படைப்பு பதிப்பகத்தின் #வரையாட்டின்_குளம்படிகள்  

#பதித்த_முதல்_தடம்_முத்தான_தடம்


🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐


சுடச்சுடச் பதினோரு மணி நேரத்திற்கு முன்பாக பதி விடப்பட்டிருக்கும் முதல் மதிப்புரை முத்தான மதிப்புரை அண்ணன்  M M Deen  அவர்களிடமிருந்து.


நன்றியும், பேரன்பும் அண்ணே.

கானுயிர்களை காக்க இந்நூலின் மூலம் விரைந்த கரமே என் இறைமை...

🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐐


வரையாட்டின் குளம்படிகள்

       கோ. லீலா.

       படைப்பு பதிப்பகம்

       விலை ரூ.150/=


காணுயிர் காட்சிகளை கண்டு பேசி படம் பிடித்து முகநூலில் பதிவிடும் பண்புடை சகோதரி கோ. லீலா அவர்களின் நூல்.  தொடர்ந்து தன் எழுத்துக்களின் மூலமாக தனது வாழ்வின் ஒளிக் காட்சிகளை வழங்கிக் கொண்டிருக்கும் இவரின் இந்த படைப்பு 16 காணுயிர்களைப் பற்றியது. ஒவ்வொரு உயிரையும் தனது வேலை நிமித்தம் போகிறபோது மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணிக்கிற அறிந்த செய்திகளை சங்கக் கவிதைகளின் ஊடாக நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறார்.


   ஒவ்வொன்றையும் பற்றி அருமையான பல செய்திகள். வரையாட்டின் குளம்புகள் என்னும் தலைப்பே மிகவும் சுவையானது  வரையாடுகளின் குளம்புகள் மிகவும் சிறப்பானதாகும். அது எந்த உயரத்திற்கு ஏறும். எந்த சரிவான பாறையிலும் நிற்கும் தன்மை உள்ளது. ஒரு ஸ்பைடர் போல ஏறும் குளம்புகள் அத்தனை பிடிப்பு தன்மை கொண்டது. அதை இந்த நூலின் தலைப்பாக வைத்திருப்பது மிகவும் சிறப்பானது.


    முதல் கட்டுரை கரிச்சான் என்றும் கருங்குருவி என்றும் இரட்டை வால் குருவி என்றும் அழக்கப்படும் குருவி. இதுதான் காலையில் முதலில் விழித்து தனது கூக்குரலால் உலகை எழுப்பும். அதான் க்ரீச்சிடும் குரல் அலாதியானது. அதை பதிவு செய்கிறார். இந்த கருங்குருவியை பறவைகளின் போலீஸ்மேன் என்று பறவையியலார்கள் குறிப்பிடுகிறார்கள். சிறு குருவிகளின் முட்டை குஞ்சி போன்றவற்றை பெரிய வேட்டைக்காரபி பறவைகளையும் பறந்து விரட்டும்.


  அதைப் போல மைனாவைப் பற்றிப் பேசுகிற போது அதற்கு சிறுபூவாய் என்று அழகு தமிழ் பெயரைச் சொல்கிறார். அது மட்டுமல்ல யானைக்கு 56 பெயர்கள் இருப்பதைச் சொல்லி அதன் வாழ்வைப் பேசுகிறார். ஆப்பிரிக்க யானைக்கும் இந்தியனுக்கும் உள்ள வேற்றுமைகளை நயம்படச் சொல்கிறார்.


மலைமொங்கான் என்று இலக்கியத்தில் அழைக்கப்படும் இருவாச்சிக்கு ஆங்கிலப் பெயர் ஹார்ன்பில் hornbill என்பது. பெரிய வாங்கா  போல இதன் அலகுகள் இருப்பதால் அதற்கு பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றால் இவர் நுட்பமாக சொல்கிறார், அது அதிகமாக ஹார்ன்பில் எனும் மரத்தில் கூடு வைப்பதால் ஏற்பட்டது என. இப்படி வௌவால், வண்ணத்துபூச்சி, எலி, புலி என காட்டில் வாழும் 16 உயிரிகளைப் பற்றிய அருஞ்செய்திகளைச் சொல்கிறார்.


வரையாட்டின் குளம்படிகள் என்று பெயர் வைத்த காரணம் அதைப் பற்றி பேசுகிற போது தெரிகிறது. பின்னோக்கி வளரும் கொம்புகளைக் கொண்ட வரையாடுகள் மலை உயரத்தில் தண்ணீர் இல்ல இடங்களைலும் வாழும் தன்மை கொண்டது ஏன் என்பதை விளக்குகிறார்.

  கரையான்களின் வாழ்வியலைப் பேசுகிற போது ராணி கரையானின் காதலை சுவைபட காதலின் வரிகளில் சொல்கிறார். சொல்லிக்கொண்டே போகலாம், அவ்வளவு செய்திகள். கண்டிப்பாக சங்க இலக்கியத்தில் என்ன சொல்லி இருக்கிறது என்பது பற்றிய பார்வை வேறு.


 இப்படி பொள்ளாச்சியில் ஆழியாறு பகுதி பொறியாளர் பணியில் இருக்கும் எழுத்தாளர் தான் பார்த்து அதிசயித்த உயிர்களைப் பற்றி எழுதியுள்ளதால் இந்நூல் படிக்க இனிமையாக உள்ளது.

 படைப்பு பதிப்பகத்தின் பெரும் வெளியீட்டு விழாவில் வெளிவந்த இந்நூல் நூலாசிரியரின் இன்னொரு அரிய முயற்சி.


 காணுயிர் கற்க கற்பிக்க படல் வேண்டும் அந்த வகைமை நூல்களின் வரிசையில் இதுவும் நிற்கும், அதிசயமான வரையாட்டின் குளம்புகளைப் போல.

சகோதரி லீலாவுக்கு இனிய வாழ்த்துக்கள்.