Sunday 8 October 2017

மனம்……….பகுதி1


அனைவருக்கும் வணக்கம் நலமா தோழமைகளே…….நீண்டதொரு இடைவெளிக்கு பின் சந்திக்கிறோம்.
அறிவியல் சார்ந்த செய்திகளை குறித்து உரையாடுவதுதான் நம் வழக்கம்.மனம் என்பதும் பெரிய அறிவியல் தானே.அதனால் இன்று மனமும்,மனம் சார்ந்த நிகழ்வுகளையும் குறித்து பேசலாமென நினைக்கிறேன்.
                          
அறிமுகம்:

 மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். குறிப்பிட்ட காரணங்கள் அறியப்படாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய சம்பந்தம் இருப்பது உண்மையே. அநேக குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது. சிக்கலான சமூக, குடும்ப மற்றும் உயிரியல் காரணிகளால் உண்டாகும் பாலியல் தொல்லைகள், உடலியல் தொல்லைகள், மனோரீதியான தாக்கங்கள், குடும்பத்தில் வன்முறை, தாக்குதல்கள் போன்ற குழந்தை அல்லது பதின்பருவங்களில் ஏற்படும் கோளாறுகளும், மன நோய் ஏற்படவும் இதற்கு காரணங்களாகின்றன. இத்தகைய காலப்போக்கிலான அனுபவங்களின் கூட்டு விளைவால் அதிக வாய்ப்புகள் ஏற்பட்டாலும், ஒரேயொரு பெரிய அதிர்ச்சியாலும் மன நோய்கள் ஏற்படக்கூடும். இதற்கெதிரான தாங்குதிறன் நபர்களை பொறுத்து மாறுகிறது. பரம்பரை பாதிப்புகள், குணாதிசயங்கள், எண்ணங்கள், பிற அனுபவங்கள் ஆகியவை காரணமாக தாங்குதிறன் வேறுபடுகிறது.

மனசு எங்கேயிருக்கு என்றவுடன் பெரும்பாலானோர் இருதயப் பகுதியைதான் கைவைத்து காட்டுவார்கள்.சில சித்தாந்தம் மனமென்பது வயிற்று பகுதியில் இருப்பதாக கூறுகிறது.

ஆனால் என்னுக்கு அதில் உடன்பாடில்லை.மனமென்பது மூளைதான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து….

நகைச்சுவைக்காக மனம் எத்தனை வகைப்படுமென்று கேட்டேன்,அதே கேள்வியை என்னை திருப்பிக் கேட்ட போது ஆண் மனம்,பெண் மனம் என்றேன்…..ஆனால் மனமென்பதை அத்தனை எளிதில் வகைப்படுத்திட முடியாது.ஒரு மனிதருக்குள்ளே பல்வேறு வகையான மனம் உண்டு.
மனம்,நாம் நினைப்பதை விட மிக சிக்கலானது(COMPLEX).மிகவும் மென்மையானதும் கூட.இந்த மனதை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வகை யோக,தியானம் என பயிற்சி மேற்கொள்கிறார்கள்.ஆனால் சராசரி மனிதர்களுக்கு அது அத்தனை எளிதில் கைகூடுவதில்லை.அதிலும் இன்றைய சமூக நெருக்கடியில் எத்தனை மேலாண்மை செய்தாலும்,மனம் தன் போக்கில் போவது இயல்பாகி விட்டது.
                                
நாம் நினைப்பது போன்று இன்றைய குடும்பச் சூழல் அனைவருக்கும் ஒன்று போல் அமைவதில்லை.மனம் கடுமையான செய்திகளை லேசாகவும்,லேசான செய்திகளை மிக கடுமையாகவும் சில நேரங்களில் எடுத்துக்கொண்டு விடும். பார்ப்பவர்களுக்கு அது பைத்தியக்காரத்தனம் போல் தெரிந்தாலும், அதன் பின்னணிதான் மனதின் நுட்பமான பகுதி.
யாரிடமும் சொல்ல முடியாதென்று நினைத்து மனசுக்குள் பூட்டி வைக்கிற விஷயங்களும், எல்லோரிடமும் சொல்லியும் கூட தீர்வுகிடைக்கவில்லையே என்பது மாதிரியான விஷயங்களுமே, மனநோய்க்கான அடிப்படைக் காரணம்.

மனப்பிரச்சனைகள் இப்போதுதான் முளைவிட்டுள்ளதாக நினைக்க வேண்டாம்.இந்த பிரச்சனை மனிதன் சிந்திக்க தொடங்கிய நாளில் தொடங்கியது.அதனால் தான் அன்றைய முனிவர்களும்,சித்தர்களும் மனதை ஆள்வதற்கு,மனதை அடக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்கள்.

இன்றைய சமூக நெருக்கடிகள் ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானவை என்றாலும்.பெண்ணுக்கு ஆணும்,ஆணுக்கு பெண்ணும் மருந்தாக இருக்கும்  அதே நேரத்தில்,விந்தையாக அவர்களே ஒருவருக்கு ஒருவர் நெருக்கடி தருபவர்களாகவும் இருக்கிறார்கள்.ஒருவரையொருவர் எப்படி கையாள்வது என்பது குறித்து  Men are from Mars,Women are from Venus என்ற நூலில் ஜான் க்ரே விலாவரியாக எழுதியுள்ளார்.

மனமே மனிதனை இயக்குகிறது.அத்தகைய மனநெருக்கடிகள் இன்று பல்வேறு வடிவத்தில்  மனிதர்களை ஆட்டுவிக்கிறது.
பெரும் அறிவாளியாக அறியப்பட்ட பலர் நிலையற்ற மனநிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.திடமானவர்களாக அறியப்பட்ட பலர் ,தற்கொலை  செய்து கொண்ட துயரமும் அறிந்ததுதான்.இதற்கெல்லாம் என்ன காரணம்?

1.ஒழுக்க குறைப்பாடு(Morality disorder.)
2.நம்பிக்கை துரோகம்
3.தாழ்வு மனப்பான்மை
4.நிதர்சனத்தை உணராமை(Not accustomed to the practical condition)
5.பொருளாதார நெருக்கடி.
6.வேலை பளு
7.தன்னம்பிக்கையின்மை
8அகம்(.ஈகோ )திருப்தியடையாமை
.பதவி,அதிகாரம்,அங்கீகாரம்.
9.அன்பும்,அங்கீகாரமும் கிடைக்காமை
10..சாதித்த பின் வரும் மனசோர்வு(Achievement depression)

இப்படி எண்ணற்ற காரணங்களால் மனச்சோர்வு,மன அழுத்தம்,தூக்கமின்மை .போதைக்கு அடிமையாகுதல்(Addiction to drugs,liquor etc.,) போன்ற பல்வேறு  மனப்பிரச்சனைகள் உருவாகின்றன.
முதலில் நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல் காரணங்களை அலசி ஆராய்வோம் பின் அதற்கான தீர்வுகளை காண்போம்.

1.ஒழுக்க குறைபாடு:
ஆண்,பெண் உறவு அதனால் ஏற்படும் மனப்பிரச்சனைகளால் வரும் மன அழுத்தம்.முதலில் காதல் என்பதை பார்ப்போம்.காதலாகி கசிந்துருகும் காதலனோ,காதலியோ கடைசி வரை ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இல்லாதிருத்தல்.காதலென்பது ஆன்மாவின் உறவாக நினைக்காமல், ஏமாற்றுதல் போன்ற காரணங்களால்,மனரீதியாகபாதிக்கப்படுதல்  பெரும்பான்மையாக நடக்கிறது.
                               
காதலனையோ,காதலியையோ ஏமாற்றுதல்,அல்லது நெருக்கடியான சூழலில் வேறொருவரை திருமணம் செய்த பின் திருமணம் செய்து கொண்டவர்க்கு நேர்மையாக இல்லாமல்,கடந்த கால காதலனையோ,காதலியையோ நினைத்துக்கொண்டு,அல்லது அவர்களை தேடி சென்று உறவு கொண்டு வாழ்தல் போன்ற செயல்கள்,செய்பவர்களுக்கு இன்பத்தை தந்தாலும். இவர்களை சார்ந்தவர்களுக்கு  ஏற்படும் துயரமும்,மனச்சிக்கல்களும் எல்லையற்றவை.சிலர் குழந்தைகளைப் பற்றிக்கூட கவலையற்று மனம் போன போக்கில் வாழ்வது அவர்களுக்கு மட்டுமின்றி,அவரது குடும்பத்தை சார்ந்த அத்தனை பேருக்கும் மனப்பிரச்சனைகளை உண்டு செய்யக்கூடியவை.

திருமணத்திற்கு முன்போ,பின்போ ஏற்படும் உறவினை சட்டென்று உதறி விட ஆண்களால் முடிகிற போது,பெண்களால் முடியாமல் போவதற்கு காரணம்,குழந்தைதான்,இருவருக்கும் உரிமை உண்டு என்ற போதும். குழந்தையை பெண்ணிடமே விட்டுச் செல்லும் பெருந்தன்மை கொண்ட ஆண்களால்தான் சமூக அமைப்பில் ஆதாரவற்ற குழந்தைகளும்,மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் உருவாகுகிறார்கள்.
             
இதனால்,சீரற்ற வாழ்க்கை வாழும் ஆணுக்கும்,பெண்ணுக்கும் மனத் திடமில்லா விட்டால்,மன அழுத்த்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுவதுடன் ,சுய இரக்கம் கொள்ளுதல் போன்றவைகளால் இயல்பான வாழ்க்கையை வாழ இயலாமல் தற்கொலை செய்து கொள்ளுதல், மனதிருப்தியற்று மனநிலை பாதித்த நிலையில் வாழ்வதும் ஏற்படுகிறது.இது ஆண்,பெண் இருவருக்கும் பொதுவான பிரச்சனை.

2.நம்பிக்கை துரோகம்:
                              
திருமண வாழ்வில் நேர்மையற்று,வேற்று ஆண்,அல்லது பெண்ணுடன் உறவு கொள்ளுதல் வாழ்க்கையின் ஆதாரமான நம்பிக்கையை அடியோடு தகர்த்து விடுவதால் ஏற்படும் துயரம்,தன்நிலையை நிலைகுலைய செய்து விடும். சிலரோ நேர்மையாக இருக்கும் வாழ்க்கைத் துணையை அதீதமான அன்பு என்ற பெயரில் சந்தேகம் கொள்வது,மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன். அந்த தவறை செய்யவும் வழி வகுத்துவிடுகிறது என்பது உண்மை.வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பதால் ஏற்படும் மன அழுத்தம்,மனசோர்வும் முன் கூறியது போலவே ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானவை.

3.தாழ்வு மனப்பான்மை:

ஒவ்வொரு மனிதனும் ஒரு வகையில் சிறப்பானவர்களே.ஒவ்வொரு மனிதனும் ஒரு உலக அதிசயம்.ஆனால் அதை உணராது தன்னை மற்றவரோடு ஒப்பிடுதல்,அல்லது தனது வாழ்க்கை துணையை வேறு ஒருவருடன் ஒப்பிடுதல்,தன் குழந்தைகளை ஒப்பிடுதல் ஆகியவை பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்க கூடியவை.இப்படி குறை கூறி கொண்டே இருப்பதால்,ஒரு மனிதனிடம் இருக்கும் சிறப்பான ஆற்றலும் வெளிவராது,தாழ்வு மனப்பான்மை காரணமாக சமூகத்திலிருந்து ஒதுங்கி கொள்ளுவதும்,தனிமையை நாடுவதும்,தனிமையின் காரணமாக மன உளைச்சல் மற்றும் தற்கொலை சிந்தனை ஏற்படுவதும் மிகவும் இயல்பானது.

4.நிதர்சனத்தை உணராமை:

                 
மென்மையான மனம் கொண்டவர்களே,அதிக அறிவாளிகளாக இருக்கிறார்களா? அல்லது அறிவாளிகள் மென்மையானவர்களாக இருக்கிறார்களா? என்ற கேள்வி தீராத ஒன்று இத்தகைய மென்மனது படைத்தவர்கள்தான்,சமூகத்தில் இவர்களை சுற்றி நடக்கும்,அல்லது இவர்களுக்கே நடக்கும் அநியாங்களை கண்டு துவண்டு போய் விடுபவர்கள். அநியாங்களை கண்டு கொதித்தெழுவதற்கு பதில் இவர்கள் வெள்ளந்தியாக, மிக நேர்மையான சமூகத்தை,மக்களை எதிர்ப்பார்த்து ஏமாறும் போது இவர்களால் அந்த ஏமாற்றத்தை ஏற்று கொள்ள இயலாமல்,இவர்கள் வாழ்கின்ற உலகத்திலேயே வாழ நினைத்து போதைக்கு ஆட்படுவது அல்லது மனபிறழ்வு ஏற்பட்டு பாதிப்படைதல் ஆகியவை நிகழ்கின்றன.

5.பொருளாதார நெருக்கடி:

                           
ஒரு குடும்பத்தில் பெரும்பாலும் பெண்ணால் ஆணுக்கு ஏற்படும் ஒரு தொல்லை எனக்கூறலாம்.தன் குடும்பத்தின் வருமானத்திற்கு ஏற்ப குடும்பத்தை நடத்தாமல்,தன்னுடன் பிறந்தவர்கள்,தன் தோழர்கள் இப்படி பிறருடன் தன் கணவரின் வருமானத்தை  ஒப்பிட்டு மன்நெருக்கடி ஏற்படுத்துவதும்,வருமானத்திற்கு மீறிய ஆடம்பர செலவு செய்தல், அளவுக்கு மீறிய ஆசையை கொண்டிருத்தல் ஆகியவையால்,கணவனை தொழிலை மாற்றி செய்ய சொல்லி நிர்பந்தித்தல்.எதிர்ப்பார்க்கும் பணத்தை அல்லது வசதியை செய்து தரவில்லையென்பதால் கணவனுக்கு உரிய அன்பையும்,அங்கீகாரத்தையும் தராமல்,தன்னிச்சையாக நடந்துக் கொள்ளுதல் ஆகியவை ஒரு ஆணை பலவீனமடைய செய்து மனநிலை பாதிக்கவும், கவலையை மறக்க குடியை நாடுவதும் அல்லது வேறு பெண்ணை தேடுவதும் என தடம் மாறி போக செய்யும்.ஆணுக்கு நிலை இதுவென்றால்.

பெண் ஆணை விட உயர்ந்த பதவியில் இருந்தாலோ,அல்லது அதிகம் சம்பளம் வாங்கினாலோ,அவளது ஒழுக்கத்தன்மையை கேள்விக் குறியாக்குவது, அல்லது மொத்த சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு, தேவைக்கு கூட கையேந்தவும்,தோழிகளுடன் தேநீர் அருந்துவதற்கு கூட செலவழிக்க முடியாமல் மனதளவில் அவமானடைவதும்,எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி தனக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ளக் கூட கையில் பணமில்லாமல் இறந்தார்.அந்த பெண்ணிற்கு குழந்தையில்லை என்பதால் அவரது தாயாரும்,சகோதரிகளும்,அப்பெண்ணின் சம்பளம் வீணாக எதற்கு கணவனுக்கு செல்லவேண்டுமென்று பிரித்து தன்னுடன் அழைத்து சென்று விட்டனர்.கடைசியில் அவரது கணவர் வந்து அழைத்து சென்று மருத்துவம் பார்க்க,பலன் இன்றி இறந்து போனார்.பெண்ணின் நிலை இது..
இந்த இரண்டு நிலையையும் மீறி இருவருமே கூட்டாக ஆடம்பர செலவு செய்தல் அல்லது தொழிலில் நஷ்டம் ஏற்படுதல்,கடன் கொடுத்து ஏமாந்து போதல் போன்று பல்வேறு பொருளாதார நெருக்கடியும் உண்டு.

6.வேலை பளு:
அதீதமான உடல் மற்றும் மூளை உழைப்பும் மன அழுத்தத்தை உண்டு செய்யும்.குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்களும் பணிக்கு செல்வதால் வீட்டு வேலைகள்,குழந்தைகளின் பராமரிப்பு,மற்றும் அலுவலகம் அல்லது வேறு பணிகள் என நாள் முழுவதும் வேலை செய்வதால் மனதளவிலும்,உடலளவிலும் தளர்வாய் இருத்தல் மன அழுத்தத்தை கொண்டு வருகிறது ஓய்வின்றி உழைத்தலால் கவனமின்மை,எரிச்சல்,தனது பணியை பங்கீட்டுக் கொள்ளவில்லையே என்ற உணர்வு வாழ்க்கை பங்காளர்களின் மீது கோபம்.தனக்கென நேரம் ஒதுக்கிக்கொள்ள முடியவில்லையே என்ற சுய இரக்கம் என பல்வேறு வகையான மன உளைச்சலை தரும்,இது ஆணுக்கும் பொருந்தும்,ஆண் வீட்டில் பராமரிப்பு பணிகளை பார்க்கவில்லையென குறைப்படும் பெண்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது,ஆணுக்கு சம்பாதித்தல் என்பதே சவாலாக அமைந்து விடுகிறது,மேலும்வங்கி,சொத்துக்கள் சேர்த்தல் அதற்கான பத்திர பராமரிப்பு மற்றும் தாய்,மனைவி இருவரையும் சமன் செய்து செல்லுதல், சமூகத்தில் மற்றவர்க்கு ஈடாக இருக்க வேண்டிய நெருக்கடி என அவர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள் உண்டு.
             
7.தன்னம்பிக்கையின்மை:

வாழ்க்கையென்பது வெற்றியால் மட்டுமே நிரம்பியதல்ல என்பதை புரிந்துக் கொள்ள முடியாதவர்களும் வாழ்கின்ற பூமியிது, இவர்களின் உடன் இருப்பவர்களும் தன்னம்பிக்கையை இழக்க வைக்கும்படி பேசக் கூடியவர்களாக இருப்பர்.ஒரு முறை தோல்வியை சந்தித்து விட்டால், துவண்டு விடுபவர்கள்,சிலரோ ஆரம்பிக்கும் முன்பே முடியாது என நினைத்து எதிலும் எந்த முயற்சியையும் முன்னெடுக்க மாட்டார்கள்.இவர்களோடு உள்ள மற்றவர்கள் சமூகத்தில் முன்னிருக்க,திறமையிருந்தும் முன்னேற முடியவில்லையென மன அழுத்திற்கு ஆளாக கூடியவர்கள்.அல்லது உடனிருப்பவர்கள் கேலி செய்வதால் மன அழுத்ததிற்கு ஆளாக கூடியவர்கள்.

8.அகம்(ஈகோ) திருப்தியடையாமை:

தான் எனும் எண்ணம் (EGO) திருப்தியடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உண்டு.ஈகோ என்பது இல்லையென்றால் மனபிறழ்வு ஏற்பட்டு விடும், மனபிறழ்வு ஏற்பட்டவருக்கும்,மனநலனுடன் இருப்பவர்க்கும் ஈகோ ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்,ஒரு நூல் அளவு கூடினாலோ, குறைந்தாலோ மனபிறழ்வு ஆகிவிடும்.

.பதவி, அதிகாரம்,அங்கீகாரம்.

அனைவரின் ஆசையும் சமூகத்தில் உயர் பதவியில் இருக்க வேண்டும் என்பது தான்.ஆனால் அனைவருக்கும் அது வாய்ப்பதில்லை,அதே நேரத்தில் பார்க்கும் எந்த பணியும் தாழ்வானதும் இல்லை.எந்த பணி பார்க்கிறோம் என்பதை விடவும் எப்படி பார்க்கிறோம் என்பது மிக மிக முக்கியம். திருடு ,பொய் சொல்லுதல் தவிர எந்த பணியும் தாழ்வானது இல்லை.உயர்பதவிவிரும்பியபதவிஉடன்பிறந்தோர்தோழமைகள்பக்கத்து வீட்டிலிருப்போர் என யாருடனும் ஒப்பிட்டு தான் அவர்கள் அளவிற்கு இல்லை என்று மன உளைச்சலுக்கு ஆளாகி,அனைவரையும் பகைத்துக் கொள்ளுதல் ஒரு வகை எனில்……..

தான் உயர் பதவியில் இருப்பதால்,யாரையும் மதிக்காமல்,உடன் பணி ஆற்றுவோர், தனக்கு கீழ் பணியாற்றுவோர் யாவரிடமும் கனிவின்றி நடந்துக் கொள்ளுதல்,குடும்பத்திலும் தான்  மட்டும் தான் பெரிய ஆள் போன்று நடந்துக் கொள்ளுதல் தோழமைகளிடம் கூட தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது போன்று நடந்து கொள்ளுதல்,யாரையும் பாராட்டாமல் இருத்தல் போன்ற நடவடிக்கைகளால்,நேரில் பணிவாக நடந்து கொண்டாலும்,பின்னர் அந்த நபர் மீது உண்மையான மரியாதையும் அன்புமின்றி இருப்பர்.இதை உணரும் தருணத்தில் அந்த பெரும் பதவியில் இருப்பவர் தனிமையுணர்வுக்கும்,மன அழுத்ததிற்கும் ஆளாகுவது வெளியில் தெரிவதில்லை.

அதே போன்று திருமண வாழ்வில்,பெண் திருமணம் ஆகும் போது கணவர் என்ன தொழில் செய்கிறார் என்று தெரிந்தே திருமணம் செய்துக் கொண்டு, பின்னர் மற்றவருடன் ஒப்பிட்டு பேசிக்கொண்டே இருப்பதும்,ஒரு ஆணை மிகுந்த மன உளைச்சலுக்கும்,மன அழுத்ததிற்கும் உள்ளாக்குவதும் அன்றாட வாழ்க்கையில் ஆங்காங்கே நடைப்பெற்றுக் கொண்டுதான் உள்ளது. அதே போன்று வேறு வீட்டிலிருந்து வரும் பெண் சூழ்நிலைக்கு மாறுவதற்கு நேரம் கொடுக்கமால் குறை சொல்வது, அந்த பெண் சம்பாதிக்கிறாள்,உன்னை திருமணம் செய்து ஏமாந்து விட்டேன்,அல்லது என்னை ஏமாற்றி தலையில் கட்டிவிட்டார்கள் போன்ற வசவுகளும் தாழ்வு மனப்பான்மை, மனசோர்வு, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என பல பிரச்சனைகளுக்குள் ஒரு பெண்ணை தள்ளிவிடக்கூடியதாகும்.

9.அன்பும்,அங்கீகாரமும் கிடைக்காமை:
                      
 சிறுவயதில் சில குழந்தைகளுக்கு போதியகவனிப்புகிடைக்காது.குறிப்பாக பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றால்,பணி சுமையோடு,தாமதமாக வீடு திரும்பும் பெற்றோர்,தனது குழந்தைகளுக்கு பரிசுப் பொருளை கொடுக்கின்றனரே தவிர்,குழந்தைகளின் அன்றாட கதைகளை கேட்பதில்லை. அதோடு உடன் தாத்தா,ஆத்தா இருந்தால் ஓரளவில்லை,பெருமளவு இந்த குறைகள் களையப்படும்,ஆனால் கவனிப்பாளாரிடம் விடும் போது,அவரது பணியை அவர் சரியாக செய்தாலும்,பெற்றோரிடமோ,தாத்தா,ஆத்தாவிடமோ பேசுவது போல் அவ்வளவு இயல்பாக குழந்தைகளால் அவர்களிடம் பேச இயலாது.
அதே போல்,இரண்டு அல்லது மேற்பட்ட குழந்தைகள் உள்ள சில வீடுகளில் ஒரு குழந்தையுடன் இன்னொரு குழந்தையை ஒப்பிடுதல், சில குழந்தைகள் பிறந்த சமயத்தில் செல்வ இழப்போ,உயிர் இழப்போ ஏற்பட்டிருப்பின் உடனே இவள்/இவன் பிறந்த நேரம்வீடு இந்த மாதிரி ஆயிடுச்சிபோன்ற காயப்படுத்தும் சொற்கள்,அல்லது கண் மண் தெரியாமல் குழந்தைகளை அடிக்கும் பழக்கமும் குழந்தைகளின் மன்நிலையை பாதிக்க்கூடியது.அதே போன்று அளவுக்கு அதிகமான கண்டிப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகளும் வளர்ந்த பின்னர் பயந்த சுபாவம் உள்ளவர்களாகவும்,முடிவு எடுக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றனர்,
                                     
இந்த வகையில் வளரும் குழந்தைகள் சாதனையாளராக வந்தாலும், மனதளவில் குறையுடையவர்களாகவே இருப்பர். இத்தகைய நபர்கள் அன்பிற்காக ஏங்க கூடியவர்களாகவும்,அன்பை கொடுப்பது போல் நடிப்பவர்களை இனம் பிரித்து காண முடியாதவர்களாகவும் இருப்பர்.
வெளியில் நல்லவராக காட்டிக்கொள்ளும் யாவரும் உள்ளுக்குள் வேறொரு நபராக இருக்கிறோம் என்பதே உண்மை..திருமண வாழ்வில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கிடைக்க வேண்டிய முறையான கவனிப்பு கிடைக்காமை, அன்பு,அங்கீகாரம்,பாராட்டு கிடைக்காமை போன்றவற்றால்..ஆணாயிருப்பின் மது அல்லது மாதுவை நோக்கி தம்மை திருப்பிக் கொள்கின்றனர்.பெண்களும் குறைந்தவர்களில்லை அவர்களும் வேறு நபர் மீது ரகசிய அன்பு கொள்ளுதல்,மன சோர்வு அடைதல், போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள்.

சண்டையும்,சச்சரவும் உடைய தம்பதியரிடையே வளரும் குழந்தைகளில் முதல் குழந்தைக்கு திருமண வாழ்வு சிறப்பாக அமைவதில்லையென்றும், இரண்டாவது குழந்தைக்கு தொழில் சிறப்பாக அமைவதில்லையென்றும், மீறி தொழில் சிறப்பாக இருந்தாலும் போதைக்கு அடிமையாதல்,மன அழுத்ததிற்கு ஆளாகுதல் போன்றவை இருக்குமெனவும் ஒரு இதழில் படித்தேன்.(Exceptional will be there)

10.சாதித்த பின் வரும் மனசோர்வு(Achievement depression):
வாழ்க்கையில் குறிக்கோளை அடைய அயராது உழைத்து அதை அடைந்த பின் வரும் வெறுமை தான் இதற்கான காரணம்.எதனால் இந்த வெறுமை வருகிறது?

தொடர் வெற்றிகளால் வரும் பாராட்டுக்கள் ஒரு காலக்கட்டத்தில்
உண்மையா? என சந்தேகம் கொள்வது. தொடர்ந்து அருமையான படைப்புகளோ, பணியோ செய்வதால் அதை சாதனையென மனம் ஏற்றுக்கொள்வதில்லை என்பது இன்னொரு காரணம்.தன்னையும் அறியாமல்
அதிக பாராட்டுக்களால்  அதீத மகிழ்ச்சிக் கொள்ளும் போது ஏற்படும் இரசாயன மாறுதலால் மன அழுத்தம் /மன சோர்வு உண்டாகும்.
இதிலிருந்து விடுபடுவதற்கு.

1.தன்னை தானே பாராட்டிக் கொள்ளுதல்.(Give yourself Praise)

மற்றவர்களிடமிருந்து  பாராட்டை எதிர்ப் பார்ப்பதற்கு பதிலாக,தன்னைத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக்கொள்ளுங்கள்.மற்றவருடன் உங்களை ஒப்பிடாதீர்கள்.நீங்கள் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தை ஒரு முறை திரும்பி பாருங்கள்.எப்படி போராடி இந்த வெற்றியை,இலக்கை அடைந்தீர்கள் என்பதற்காக உங்களை நீங்களே வாழ்த்திக் கொள்ளுங்கள்.
நம்முடைய தனிப்பட்ட வாழ்வின் குறிக்கோள் தனிப்பட்டதாகவே இருக்கட்டும்(Personal goals are just that- personal.) மற்றவர்கள் பாராட்டினால் மிக நல்லது.ஆனால் அவர்களது தேவை அவர்களின் தன்னிறைவு அடைவது என்பதால்.உங்களின் சாதனைகளை நீங்களே அடையாளம் காணுங்கள். உங்களுடன் நீங்களே சிறு கொண்டாட்டத்தை மேற்கொள்ளுங்கள்.


உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள கற்றுக் கொள்வதன் மூலம்,தான் மகிழ்ச்சிக்கு தகுதியற்றவர் என்ற உணர்வு குறையும்.மேலும் பெருமை கொள்ள தகுதியானவர் என்ற எண்ணமும் உருவாகும்.நீங்கள் கடுமையாக போராடி வெற்றி பெற்று இருக்கிறீர்கள்.அதனால் உங்களைப் பற்றி நீங்களே நல்ல எண்ணம் கொள்ள மிகுந்த தகுதியானவர். (You have worked hard and you deserve to feel good about yourself)

2.உங்களின் அடுத்த இலக்கை உடனே நிர்ணயம் செய்யுங்கள்( Get Started Right Away on Your Next Project)

உங்களின் வெற்றிக் கண்ட இலக்கிலிருந்து உடனடியாக விடுப்பட்டு,அடுத்த இலக்கினை திட்டமிடுங்கள்.இதன் மூலம் மனசோர்வு அகலும்.இடைவெளி தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம்,ஆனால் அது நீண்ட இடைவெளியாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றுங்கள்,வேலைக்கு,மற்றும் சொந்த விருப்பத்திற்கு என தனித்தனியாக நேரம் ஒதுக்குங்கள்..ட் படித்தல்,வரைதல்,பாடுதல் போன்ற்வை


3.நீங்கள் மேற்கொள்ளும் செயல்முறைகளை மகிழ்வுடன் அனுபவியுங்கள்( Learn to Enjoy the Process)

it’s the journey that counts, not arriving at the destination.

நிச்சயமாக,வரப்போகும் இறுதி பயன் அல்லது இறுதி

வெற்றியைதான் கொண்டாடப் போகிறோம் என்றாலும்,தினம்

 தினம் அந்த இலக்கை நோக்கி நாம் எடுத்து வைக்கும்

ஒவ்வொவ்வொரு அடியையும்,செயல்முறைகளையும் நாம் பாராட்ட

வேண்டும்.இதன் மூலம் தொடர்ந்து இலக்கை நோக்கி பயணிக்க

முடியும்.

வாழ்க்கையில்,ஒவ்வொவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்க

வேண்டும்,அது வாழ்வை மேலும் சுவையுள்ளதாக்குமென

நம்புகிறேன்.

மன அழுத்தத்தை கண்டறிய உதவும் அறிகுறிகள்:

                           
·         தூக்கம் சார்ந்த குறைபாடுகள்
·         பசியின்மை/அதிகமாக உண்ணுதல்
·         மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு
·         கவனக்குறைவு,ஞாபகமறதி
·         குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள்
·         கோபம்
              
·         வன்முறையான/சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்
·         மனவியல்ரீதியான வெளிப்பாடுகள்
·         படபடப்பான நடவடிக்கைகள்.


அறிகுறிகள் மூலம் கண்டறிந்தாலும் ,அறிகுறிகள் சில உடல் ரீதியானாதாகவும்,மனவியல்ரீதியானாதாகவும்,செயல்பாடுகள் மூலமாகவும் சில விளைவுகளை உண்டு செய்யும்.

உடல்ரீதியான விளைவுகள்
                   
பெரும்பாலும் நரம்பு, சுரப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக வெளிப்படுகின்றன. எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றுள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:



  1.             படபடப்பு, அதிகரிக்கும் இதய துடிப்பு
  2.             மேலோட்டமான மூச்சு வாங்குதல்
  3.             நடுக்கம் , குளிர் அல்லது வேர்த்து வழிதல்
  4.              ஈரமான புருவப்பகுதி
  5.            இறுக்கமான தசைகள்
  6.    வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல்
  7.    முறுக்கிய கைகள், பற்களை கடித்தல்
  8.            வயிற்று உபாதைகள்
  9.           அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  10.          முடி கொட்டுதல்

·          
மனவியல்ரீதியான விளைவுகள்

சரியான முறையில் சிகிச்சை பெறாத போது பலவிதங்களில் வெளிப்படுகின்றன. தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும்.
                     

  1. ·         கவனம் செலுத்துவதில் சிரமம்
  2. ·         முடிவெடுப்பதில் சிரமம்
  3. ·         தன்னம்பிக்கை இழத்தல்
  4. ·         அடக்கமுடியாத ஆசைகள்
  5. ·         தேவையற்ற கவலைகள், படபடப்பு
  6. ·         அதீத பயம்
  7. ·         பயத்தால் பாதிப்புகள்
  8. ·         குணாதிசயத்தில் அடிக்கடி மாற்றங்கள்
·          
செயல்பாட்டு விளைவுகள்
                           
பாதிக்கப்பட்ட நபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதில் வெளீப்படுகின்றன:
                         

           ·      அதிகமாக புகைபிடித்தல் ,நரம்பியல் தூண்டல்கள்

        ·         அதிகமாக மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துதல்

        ·         பற்களை கடித்தல், முடிகளை இழுத்தல் போன்ற பழக்கங்கள்

        ·         ஞாபக மறதி

       ·         விபத்துக்குள்ளாதல்

      ·         முரட்டுத்தனமான வன்முறை செயல்களுக்கு தூண்டப்படுதல்.

                                   
செயல்பாட்டு விளைவுகள் அபாயகரமானவை மற்றும் சமூக, தனிமனித உறவுகளைபாதிக்கக்கூடியவை.தனிமை, வறுமை, சோகம், அழுத்தம், விலக்கி வைக்கப்படுதலால் ஏற்படும் விரக்தி போன்ற விளைவுகள் நீடித்து இருப்பது மட்டுமன்றி, சாதாரண சளி முதல் எய்ட்ஸ் வரையான வைரஸ் தாக்குதல்களுக்கெதிரான நோய் எதிர்ப்புத்திறனையும் குறைக்கின்றன.
ஹார்மோன்கள், மூளையில் உள்ள நரம்பு மண்டல கடத்திகள், பிற சிறு அளவிலான இரசாயணங்கள், முக்கிய வினை ஊக்கிகள், உடல் செயல்பாடு ஆகியவற்றை சில வகை மன அழுத்தம் உண்டாக்குகின்றன.

மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்கள்:
             

மன அழுத்தத்தை எப்படி நிர்வகிப்பது:
                                    
1.மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணம்/காரணிகளை அறிய வேண்டும்.

காரணிகளை எப்படி அறிவது?
குணம்,வாழ்க்கை நடைமுறை,மற்றும் அடிக்கடி கூறும் காரணங்கள் எனபதை எல்லாம் ஆராய்ந்து தான் காரணிகளை கண்டறிய வேண்டும்.மேலும், அந்த நபருடன் பேசி அவரது மன தேவைகளை அறியதல் வேண்டும்.
அவர் ……..
                          
அவரது மன அழுத்தம் தற்காலிகமானது என்று நினைக்கிறாரா?
சென்ற முறை எப்பொழுது மன அழுத்தத்திற்கு ஆளானார் என நினைவில் வைத்துள்ளாரா?
தனக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை வேலை அல்லது வீட்டுன் தொடர்பு படுத்துகிறாரா?
மன அழுத்தம் ஏற்பட பிறர்தான் காரணம் என நினைக்கிறாரா? அல்லது இயற்கையாக வந்தது என நினைக்கிறாரா?
மன அழுத்தம் ஏற்பட்ட போது மன ரீதியாக எப்படி உணர்ந்தார்?
எப்படி நடந்துக்கொண்டார்?
இயல்பு நிலைக்கு திரும்ப என்ன செய்தார்?
எவ்வளவு நாளில் இயல்பு நிலைக்கு திரும்பினார்?
இப்போது மன அழுத்தம் ஏற்பட்டால் எப்படி சமாளிக்கிறார் அது ஆரோக்கியமான முறையாக உள்ளதா? என்பதையெல்லாம் விசாரித்து அல்லது கவனித்து பதிவு செய்வதின் மூலம்,சூழ்நிலையை நிர்வகிப்பது எளிதாக இருக்கும்.
என்பது போன்ற பல தகவல்களை பாதிக்கப்பட்டவருடன் விசாரித்து பெறவேண்டும்.

ஆயுர்வேத அணுகுமுறை
                   
ஆயுர்வேதத்தில் முக்குற்றங்களாகிய வாத, பித்த, கபத்தில் வாதமானது ரஸ தாதுவில் சேரும்போது வாதத்தின் சலக் குணம் அதிகரித்து ரஸ துஷ்டி, சிந்தா துஷ்டி ஏற்பட்டு ஒருவருக்கு மனப் பதற்றம் ஏற்படுகிறது. இதனால் பிரக்ஞை (cognition) பாதிக்கப்படுகிறது.
பொதுவாகவே பிறவியிலேயே வாதத் தன்மை உடைய பிரகிருதிகள் (Mind-body constitution), இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்குப் பொதுவாகவே பதற்றம், பயம் கலந்த இயக்கம் ஏற்படும். இவற்றை ஆயுர்வேதத்தில் வாத உன்மதம், சித்த உத்வேகம் என்றும் குறிப்பிடுவார்கள்.
              
சிகிச்சைகள்
தலையில் க்ஷீரபலா எண்ணெய், பலா அஸ்வகந்தா எண்ணெய் போன்றவற்றைத் தேய்க்கச் சொல்லும்பொழுது sympathetic நரம்பு மண்டலத்தின் துரித நிலை குறைக்கப்படுகிறது.
எண்ணெய் குளியல் பதற்றத்தைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த மருந்து. அதுபோல் தினமும் மூக்கில் மூலிகைச்சாறு விட்டுச் செய்யும் நஸ்யம் ஒரு சிறந்த சிகிச்சை.
       


வாதத்தைத் தணிக்கிற, மனதில் வேலை செய்கிற அதிமதுரம், வெண்பூசணி, ஸ்வர்ண பஸ்பம், வெள்ளி பஸ்பம் மற்றும் காய்ச்சப்பட்ட வல்லாரை நெய், மண்டூகபரணி நெய், ஸாரஸ்வத நெய் போன்றவை இதற்குப் பலனளிக்கின்றன. வெண்தாமரை பால் கஷாயம் இதற்கு மிகவும் பலனளிக்கிறது. ஜடாமாஞ்சில் சூரணம், அமுக்குரா சூரணம் பாலில் சேர்த்துக் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
கல்யாணக கிருதம், மஹாகல்யாணக கிருதம் போன்றவையும் நல்ல பலனைத் தருகின்றன. வல்லாரை, நீர்பிரம்மி, அமுக்குரா, ஜடாமாஞ்சில், வாலுலுவை, சங்குப்பூ, பவளப் பஸ்பம் போன்றவற்றைப் பொடித்து நெய்யில் கலந்து சாப்பிட்டுவரலாம். மதனகாமப்பூ சூரணம் 1 கிராம் வீதம் 2 வேளை சாப்பிட்டுவரச் சிறந்த பலனைக் கொடுக்கும். இது தவிர அதிமதுரம், அமுக்குரா, நெல்லிக்காய், மதனகாமப்பூ, நன்னாரி, நிலப்பனங்கிழங்கு மாத்திரை போன்றவை பலன் தருகின்றன. தலைக்குக் குளிர் தாமரை தைலம் மிகவும் பலனளிக்கிறது. நன்னாரி மணப்பாகு பதற்றத்தைக் குறைப்பதில் அனுபவத்தில் சிறந்த மருந்தாக இருந்துள்ளது.
               
ஆயுர்வேதத்தில் எண்ணெயைத் தலையில் தேக்கி வைக்கிற சிரோவஸ்தி, சிரோ தாரை போன்றவற்றைச் செய்வார்கள். ஓரிதழ் தாமரை சூரணம், கோஷ்ட சூரணம் நெய்யுடன் சேர்த்துக் கொடுக்கப் பதற்றம் குறையும். அஸ்வகந்த பலா லாக்ஷாதி எண்ணெயைத் தலைக்கும், உடலுக்கும் தேய்த்துக் குளிக்கலாம். பிரம்மித் தைலம் 5 சொட்டு வீதம் தலையில் தேய்த்து, பின்பு துடைத்து எடுத்துவிட வேண்டும். அஸ்வகந்தா லேகியம், மனோரஞ்சித லேகியம் போன்றவை சிறந்தவை. வல்லாரையை நெய்யாகக் காய்ச்சியும் கொடுக்கலாம். சீந்தில் கஷாயத்தில் கல்யாணக கிருதம் சேர்த்துச் சாப்பிடப் பரத்தம் குறையும்.
எளிய மருத்துவம்
# தேநீர். காபி குடிப்பதைத் தவிர்க்கவும். நிகோட்டின், மது, காஃபின் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைப் பொருட்கள் அனைத்திலும் உடலைத் தூண்டும் அம்சங்கள் உள்ளன.
# படுக்கும் முன், நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்த எண்ணெயை உச்சந்தலையில் நன்றாகத் தேய்த்துவிட்டுப் படுத்தால் மன அமைதி கிடைக்கும்.
# பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

# வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்துப் பால் கஷாயம் காய்ச்சிக் குடித்தால் மனம் அமைதி பெறும்.
# மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத்தில் தினமும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மன அமைதி கிடைக்கும்.
# மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கித் தினமும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் பதற்றம் குறைந்து மனம் அமைதி பெறும்.
# 20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மன அமைதி கிடைக்கும்.
# சிறிது குங்குமப் பூ, ஜாதிக்காய் விழுது சேர்த்த பாதாம் பால் குடித்தால் மனப் பதற்றம் குறையும்.
# மனம் அமைதியாகச் செயல்படவும், நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கவும். மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும், நாடி சுத்தி பிராணாயாமம் தினமும் இரண்டு வேளை 5 நிமிடத்துக்குச் செய்யலாம்.
# சூரிய நமஸ்காரம் செய்யலாம் . இது உடலின் ரத்த ஓட்டம் சிறப்பாகச் செயல்பட உதவும். அப்போது நரம்பு மண்டலங்கள் உற்சாகமடையும். மன ஒருமைப்பாடும் நினைவுத் திறனும் கூடும்.
 குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:

1.       வாழ்க்கை பங்காளார் நன்றாக இருக்கும் போது எப்படி  அன்புடன் நடந்துக் கொண்டோமோ அதே போன்று மன அளவில் பாதிக்கப்பட்ட வாழ்க்கை துணையிடம், கனிவுடனும், பொறுமையாகவும், மென்மை ஆகவும் நடந்துக் கொள்ளவேண்டும்
                       
  
2.       மனம் துவண்டு இருக்கும் நேரத்தில் அதிகமான அறிவுரைகள் வழங்குவதை தவிர்த்தல் வேண்டும்.

3.       நேரத்திற்கு ஆரோக்கியமான உணவு,தூய்மையானகாற்றோட்டம்,   தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ள  உதவி செய்ய வேண்டும்.

4.       பாதிக்கப்பட்டவர் எதிர்மறை சிந்தனைக்குள் போவதை தடுக்கும் வண்ணம் விளையாட்டு,தியானம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் (எதை விரும்புகிறாரோ) அதில் அவரை ஈடுப்படுத்த வேண்டும்.
                           

                             

5.       அவரக்கு முன்,அவர் மனம் நோகும் படி பேசுவது,அவரை தரம் தாழ்த்தி பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

6.       அவர் இயல்பு நிலைக்கு திரும்ப ஊக்கப்படுத்த வேண்டும்,இந்த நேரங்களில் பணம்,கல்வி அல்லது மிக முக்கியமான முடிவுகளை எடுக்க நிர்பந்திக்க கூடாது.அவருடன் விவாதம் செய்வதை,உடல் ரீதியாக தாக்குவது போன்றவற்றை செய்யக்கூடாது.

7.       அவருக்கு பிடிக்காத செயல்.நபர்,பேச்சு ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும்.
8.       உடனடியாக அருகிலுள்ள மன சார்பான தொந்தரவுகள் குறித்து சிறப்பு மருத்துவம் படித்த மருத்துவரை அணுக வேண்டும்.

மிகவும் தேவை: நான் உனக்காக இருக்கிறேன் என்ற உணர்வை தரக்கூடிய உறவு/நட்பு.அன்பினால் சாதிக்க முடியாதது  ஏதுமில்லை.


மனம் சார்ந்த தொந்தரவுக்கு ஆட்படுபவர்கள் சாதனையாளாரக இருந்திருக்கிறார்கள்,மன அழுத்தம்,மன சோர்வுக்கு ஆட்பட்டவர்கள் முட்டாள்கள் அல்ல,இன்னும் சொல்லப் போனால் மிகச் சிறந்த அறிவாளிகளும்,மென்மையான மனம் படைத்த மனிதாபிமானிகளுமே இத்தகைய பாதிப்புக்கு ஆட்படுகிறார்கள்.

தாஸ்தாயெவ்ஸ்கி,ஆப்ரகாம் லிங்கன்,சிகமண்ட் ஃப்ராய்ட்,கவுதம புத்தர் ஆகியோர் மன அழுத்ததிற்கு ஆளானாலும் சிறந்த ஞானம் உள்ளவர்களாக, இந்த சமூகத்திற்கு சிறந்த படைப்புகளையும், கருத்துக்களையும் விட்டு சென்றுள்ளனர்.
                           
மன அழுத்தத்திற்கு ஆளானவர்களை அன்புடன் அரவணைத்துக் கொள்ளுங்கள்,அதை செய்ய தவறுபவர்களே பெரும் தவறு செய்தவர் ஆவார்.
                                        
                                   “அன்பினால் ஆகாதது ஏதுமில்லை

-அன்புடன் லீலா.