Saturday 18 March 2017

திருக்குறளின் நான்காம்பால்.


வணக்கம் தோழமைகளே……….



வாங்க,வாங்க இன்றைய உரையாடல் மேடை சற்றே இலக்கியமும் இயற்கையும் இணைந்த அற்புதம்….

ஹேமா: என்ன மேம்  நான்காம் பால்?

சியாமளா: அதானே திருக்குறள் னா முப்பால்தானே.

நான்: இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

பரிமள்: என்ன திடீர்னு திருக்குறள் எல்லாம்.

நான்: ஒப்பு உவமையற்ற இனிய தமிழ் மொழியில் பல காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன.இதில் எனக்கு மிகவும் பிடித்த முதன்மையான தமிழ் நூல் திருக்குறள். அதனால்தான் திருக்குறள் பற்றி இன்னைக்கு பேசலாம் ன்னு.

இன்று மேலாண்மை (Management) படிப்பில் வெளிநாட்டு அறிஞர்கள் கூறியதாக படிக்கும் அனைத்து மேலாண்மை உத்திகளும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது என்பது தமிழ் இனத்தின் அறிவிற்கு ஒரு சான்று ஆகும்.

அனிதா: ஆமாம் நான் கூட அதை உணர்ந்திருக்கேன் அது சரி எப்பவுமே இயற்கை,சூழல் இப்படித்தானே பேசுவோம், என்ன இலக்கிய பக்கம்?.

நான்:மேலாண்மை என்பது திருக்குறளின் கூடுதல் சுவையே.தமிழ் இலக்கியத்தில் வாழ்வியல் தத்துவ நூல்எனில்அறம், பொருள்,இன்பம்,வீடுபேறு பற்றி கூறுவதாக இருக்கும்,ஆனால் திருக்குறளில் அறம்,பொருள்,இன்பம் பற்றி மட்டும் கூறி வீடுபேற்றைப் பற்றி கூறாமல் விடுத்ததின் மூலம் அறம் செய்து, அற வழியில் பொருள் தேடி,பிறன்மனை நாடாமல் நேர்மையாக மனையாளுடன் இன்பம் கண்டு,வாழ்ந்தாலே வீடு பேறு கிடைக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதே திருக்குறளின் தனிச்சிறப்பு.

 தான் தோன்றிய காலத்திற்கு மட்டும் இல்லாமல்,இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கும் பொருந்தும் வாழ்வியல்  தத்துவம்குறள், இலக்கியம் மட்டுமன்று ஒரு வாழ்வியல் பதிவு.

பாரதி,பெரியார் யாவருக்கும் முன்னே ஆண் பெண் சமம் என்பது குறித்தான செய்திகளை பதிவு செய்து புரட்சி செய்தவர் வள்ளுவர்.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

என்ற குறளின் மூலம் இந்த ஆற்றலும்,ஞானமும் நிறைந்த பெண்களை இந்த சமூகத்திற்கு தந்துள்ளார்.

கருத்தாழம் மட்டுமின்றி கவியாழமும்,இலக்கிய சுவையும் நிறைந்த குறளில் உள்ள நான்காம் பால் பற்றிதான் இதில் பேசப்போகிறோம்.அனிதா நீ கேட்ட கேள்விக்கு பதில்தான் இந்த நான்காம் பால் அதுதான் இயற்கையைப் பற்றிய பால்.

செல்வா: அதானே பார்த்தேன்,நல்ல சுவாரஸியமான செய்தியைதான் பேசப்போறோம்.

நான்: உலகம் என்பது நிலம் நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்  ஆகியவற்றால் ஆனது.

மனிதர்களுக்காக மட்டுமில்லை செடி,கொடி,மரம்,விலங்குகள், பறவைகள்நீர் வாழ்வன, நில வாழ்வன,பூச்சிகள் வண்டுகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் என பல உயிரினங்களுக்கும் சொந்தமானதுதான் இந்த உலகம்.

பல்லுயிர்களும் வாழ்வதற்கான இடம் இது. நிலம் நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றில் அனைத்திற்கும் உரிமை உண்டு.இந்த அடிப்படை செய்தியினை மனிதன் மறந்ததுதான் இன்றைய சூழலியல் சீர்கேட்டிற்கு காரணம்.எல்லா உயிரினங்களுக்கும் சம உரிமை அளிக்கப்படாமல்,மனிதனின் தன்னலம் ஓங்கியதால்.உயிரின சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.அதாவது உயிரின சங்கிலி தொடர் அறுப்பட்டு சூழல் பெரும் துயர் அடைந்துள்ளது.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பிறப்பினால் எல்லா உயிரும் ஒரே தன்மையானதுதான் என்று கூறியிருப்பதன் மூலம் இந்த உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து இருக்கிறது குறள்.இதில் சாதிய மறுப்பினை மட்டுமின்றி “உயிர்” என்ற சொல்லின் மூலம் ஓரறிவு முதல் ஆறறிவு உயிர் வரை பிறப்பினால் ஒத்தது என்றும் கூறியிருக்கிறார்.

ஹேமா: அடடே! உண்மைதான் ஆனா,மனிதர்கள்தான் இதை பின்பற்றுவதில்லை…..

நான்:பல்லுயிர் இல்லையென்றால் சூழலியல் ஏது? ஆங்கிலத்தில் BIODIVERSITY என்று கூறுவார்கள்.Biological diversity is generally refers to varieties and variability of life on Earth. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது அறிந்து சுவைக்கப்பட வேண்டிய குறிப்பு.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

என்ற குறளின் மூலம் பல்லுயிர்களையும் பாதுக்காக்க வேண்டுமென்றும் அதோடு,பகுத்துண்ண வேண்டும் என்றும் அதுதான் தலையாய அறம் என்றும் கூறுவதன் மூலம், சூழலியல் முக்கியத்துவத்தை பதிவு செய்திருக்கும், குறளை போற்றி காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அல்லவா?

பாலாஜி: சரி மேம் பல்லுயிர் பற்றி சொல்லியிருக்காரே அவைகளுடைய பாதுக்காப்பு குறித்து ஏதும் பதிவு செய்திருக்கிறாரா?

நான்: நல்ல கேள்வி சார், அதுதானே உலகின் இன்றைய பேசுப் பொருள்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ என்பதுதான் இக்குறளின் பொருள்,”மற்ற உயிர்களின்” என்று குறிப்பிட்டதன் (பிறிதின்) மூலம் preservation of biodiversity பற்றி கூறியிருப்பது மிகுந்த வியப்பும்,மகிழ்வும் தருகிறது   வள்ளுவரின் தொலை நோக்கு பார்வையும்,மற்ற உயிர்களிடத்தில் அவர் கொண்டிருந்த அன்பும் போற்றப்பட வேண்டிய ஒன்று.அதோடு பெருமிதமும் கொள்ள வேண்டியதும் ஆகும்.

செல்வா:உண்மைதான்.ஒரு குறள் தான் பாதுக்காப்பை பற்றி சொல்லியிருக்காரா?

எனக்கு தெரிஞ்சி இன்னும் சில குறளும் இருக்கு

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

இதன் பொருள் தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை,உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

இதன் மூலம், மீண்டுமொரு முறை மற்ற உயிர்களை பாதுக்காத்தல் குறித்து பதிவு செய்துள்ளார்.

பரிமள்: அப்போ,சிக்கன்,மட்டன் பிரியாணியெல்லாம் போடுறோமே அதெல்லாம் ???

நான்: அதெல்லாம் சாப்பிடக்கூடாதென ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார் பரிமள்.

சியாமளா: மேம்,சோறு முக்கியமாச்சே.

நான்:சோறு உண்டு,கோழிச்சோறுதான் கிடையாது.

பாலாஜி: என்ன மேம் சஸ்பென்ஸ் எல்லாம் வைக்கிறீங்க.நான்வெஜ் இல்லையா!

நான்: ஹேமா மேம் உங்களுக்கு பிரச்சனை இல்லை.

அனிதா & செல்வா: ஏ! சொல்லுப்பா.

நான்: கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
               எல்லா உயிருந் தொழும்.


ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்பதுதான் இதன் பொருள்.

புலால் உண்ணாமை,கொல்லாமை என பல அதிகாரங்கள் பிற உயிர் பாதுக்காப்பு மற்றும் போற்றுதலுக்காக எழுதியுள்ளார்.இதன் மூலம் அவர் பிற உயிர்களின் மீது கொண்டுள்ள அன்பின் மூலம் சிறந்த சூழலியில் ஆர்வலர் என்பது தெரிய வ்ருகிறது.

ஹேமா: அது சரி,நாம நீர் வள ஆதார துறையில் இருக்கோம் வள்ளுவர் அத பற்றி என்ன சொல்றார்.

நான்:மிகச் சரியா கேட்டீங்க மேம்,சூழலியல் என்றால் தண்ணீர் பற்றி பேசாமல் எப்படி,அதுவும் தண்ணீருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கார்ன்னு பாருங்க.முதல் அதிகாரம் வழிபாடு,இரண்டாவது அதிகாரம் வான்சிறப்பு தான்.

ஓவிய வடிவில் குறள்-அய்யா நடராஜன் அவர்களின் ஓவியம்

பத்து குறள் இதற்கெனவே எழுதியிருக்கார், அதோடு ஆங்காங்கே நீரின் சிறப்பு,இயற்கையின் அரணும் நாட்டிற்கு தேவையென்பதையும் கூறியிருக்கிறார். நாடு எனும் அதிகாரத்தில்

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

என்று பதிவு செய்துள்ளார்.

இந்த குறளில்,நாட்டிற்கு எது உறுப்பு எனும் போது மாட மாளிகை கோபுரங்கள்,கருவூல பெட்டிகளையெல்லாம் கூறவில்லை.மாறாக
ஊற்றும்,மழையுமாகிய இருவகை நீர்வளமும்,தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும்,வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும் என்கிறார்.

குறளின் பொருளை ஆழ்ந்து நோக்கினோமானால்,குறள் எந்த அளவிற்கு நீர் வளத்தை வலியுறுத்தியிருக்கிறார் என்பதும் அதை ஒரு அரசுக்கு சொல்லியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல் அரண் எனும் அதிகாரத்தில்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

மணிநீர் என்றால் கண்ணாடி போன்ற சுத்தமான் நீர் (Crystal clear water)

மண் குறித்து கடைசியாக காண்போம்.

மலை என்பது யாவரும் அறிந்த ஒன்று

அணிநிழற் காடு என்பது குளிர்ந்த நிழல் தரக்கூடிய காடு ஆகும்.

மண் என்பது குறித்து ஒரு பொறியாளராக தேடி பார்த்த போது

குறளுக்கு விளக்கவுரையாக வெட்ட வெளி நிலமென கொடுக்கப்பட்டிருந்தது.மீண்டும் மீண்டும் தேடியபோது மருநிலம் என பொருள் கிடைத்தது.

அதாவது,சூரிய ஓளி நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்த சோலைகாடுகளின் இலைகள் உதிர்ந்து மட்கி,மண் போன்றாகி நிலம் தன் இயல்பு நிலையிலிருந்து மருவி நிற்கும். மருநிலம் தண்ணீரை பூமிக்குள் ஊடுருவ விடாமல் மேலே தாங்கி பிடித்து தக்க வைத்து கடை நிலை வரை கொண்டு சேர்க்கிறது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருப்பது வள்ளுவரின் தொலைநோக்கு பார்வையையும், சூழலியல் சார்பான அவரது நுணுக்கமான அறிவாற்றலும் தெரிய வருகிறது.

அதோடு இரண்டாவது வரியில் “காடும் உடைய தரண்” என்பதன் மூலம் மொத்த பரப்பளவில் 33% காடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருப்பதும் நுணுகி ஆராய்ந்து இன்புற வேண்டிய ஒன்றாகும்.

அனைவரும்: நம் தமிழ் நூல் எவ்வளவு நுட்பமான கருத்துக்களை இந்த உலகத்திற்கு தந்துள்ளது என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கு.

நான்: இன்னும் பல செய்திகள் உள்ளன, நாடு என்ற அதிகாரத்திலேயே,

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.

என்கிறார் இதில் முதல் இரண்டு சீரும் சொல்வது “செழிப்பு குறையாத விளைபொருள்” என்பதாகும்.இதன் மூலம் சிறந்த விளைநிலமும்,உழவும் தேவையென்பதை மறைமுகமாக சுட்டியிருக்கிறார்.

நாடென்ப நாடா வலத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

என்ற குறளில் இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட,இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடாகும் என்பதன் மூலம்,அவர் இந்திய நாட்டில் வசித்தது மட்டுமல்லமால்,இயற்கை வளம் நிறைந்த நாடாக இருந்ததையும் சுட்டுகிறார்.

அனிதா: அடேயப்பா! எவ்வளவு பெரிய கருத்துக்களை ஒண்ணே முக்கால் அடியில் சொல்லியிருக்கிறார்.

நான்: ‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’,‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ ஆகிய புகழ் மொழிகளுக்கு உரியது அல்லவா உலக பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள்.

செல்வா&பாலாஜி: சரி வான் சிறப்பில் கூறியிருப்பது பற்றி சொல்லுங்க கேட்போம்..

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.

உணவுப் பொருளை விளைவிப்பதோடு தானும் நீராக உண்ணப்படுவது என மழையின் பெருமை பாடும் பாடல் இது.

நீராக உண்ணப்படுவது என்பதை நேரடி பொருள் பார்த்தால் குடிநீராக பயன்படுகிறது என்பது விளங்க்கும்,எனினும் சற்றே ஆழ்ந்து நோக்கினால் சூழலியல் நிபுணர்கள் கூறும் “ மறை நீர் “ தத்துவத்தை அன்றே பதிவு செய்திருக்கும் மதி நுட்பம் எத்தகையது. “மறை நீர்” என்றால் என்ன என்பது குறித்து முந்தைய பதிவில் விரிவாக பார்த்தோம்.அதாவது ஒரு கிலோ அரிசி தயாரிக்க ஆகும் தண்ணீர் செலவு 5000லிட்டர் எனில்.அது அரிசி வாங்கும் போது நேரிடையாக தெரியாது எனினும்,கண்ணுக்கு புலப்படாத நீராக அரிசியில் இருக்கும் இதைப் போல் ஒரு பொருளை உருவாக்க ஆகும் கண்ணுக்கு புலப்படாத நீரின் செலவே மறை நீர்(virtual water) ஆகும்.ஒரு உணவை உட்கொள்ளும் போது அந்த மறை நீரும் உண்வாக இருப்பதாகவே கணக்கிடப்படுகிறது.

இப்போது நீரானது எப்படி தானே உணவாகவும் இருக்கிறது என்பது புரியும்.

இதை உணர்ந்தபோது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மாபெரும் அற்புதம் திருக்குறள் என்பது விளங்கும்.


திருக்குறள் ஓலைச்சுவடி

                                               

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

இந்த குறள் நமது துறையின் தாரக மந்திரமாகும். உலகில் மழிய இல்லையென்றால் ஒழுக்கம் கெடும் என்று கூறுவதன் மூலம் மழையின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

சியாமளா&பரிமள்: கேட்க பிரமிப்பா இருக்கு திருக்குறள் படிக்கிறோம் ஆனால் ஒழுக்கம்,நட்பு,கல்வி என்று மட்டும் நோக்கும் நாம் சூழலியல் குறித்து ஆழ்ந்து நோக்கவில்லை என்பது சற்று ஆச்சரியமாக இருக்கு.

ஹேமா&பாலாஜி: உண்மைதான்,உழவு பற்றியும் தனி அதிகாரம் எழுதியிருக்கிறார் இல்லையா மேம்…..

நான்:சரியா நினைவுப்படுத்தினீங்க…..

தொடிப்புழுது கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

எனும் குறளில் ஒரு பலம் புழுதி காற்பலம் ஆகும் அளவுக்கு பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றி பயிர் செழித்து வளரும் என்பதன் மூலம் எப்படி உழவு செய்ய வேண்டும் என்பதையும்,எரு என்பது இங்கு இயற்கை வேளாண்மை முறையையே குறிப்பிட்டிருக்கிறார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழிவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.

என்ற குறளின் வழியே பற்றை விட்டுவிட்ட்தாக்ச் கூறும் துறவிகள் கூட உழவர்களின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும் என் கிறார் துறந்தாராலும் துறக்க முடியாத்து உழவு என்பதே இதன் உட்பொருள்.

ஒரு படி மேலே சென்று,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

என்கிறார்.இப்படி சூழலியல் சார்பான,நீர்,நிலம்,காற்று,உழவு,என அனைத்து செய்திகளையும் பதிவு செய்துள்ளார்.


அது மட்டுமின்றி இன்னும் ஏனைய அதிகாரங்களில், உவமையாக இயற்கை சார்ந்த பொருளையே கையாண்டிருக்கிறார்.

அனிதா: அதையும் தெரிஞ்சிப்போம் சொல்லு.
நான்: "அவை அறிதல்"  அதிகாரத்தில்.

"பாத்தியுள் நீர்சொரிந் தற்று "என்று உவமை கூறுகிறார் அதே போல் உழவு என்ற அதிகாரத்தில் நீர் பாய்ச்சுதலும்,களை எடுத்தலும் உரம் இடுதலும் எவ்வளவு நல்லது எனக் குறிப்பிடுகிறார்.இதன் மூலம் உழவு தொழில் எத்தனை பழமை வாய்ந்தது என்பது விளங்கும்.

இப்படி பல்வேறு இடங்களில்,வான்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று எனும் அய்ந்து இயற்கை வளங்களை குறித்தே பேசுகிறார்.

பல இடங்களில் அனிச்சம,குவளை போன்ற மலர்கள்,பனை மற்றும் மூங்கில் மரங்கள்,தினை போன்ற சிறுதானிய வகைகள்,நெருஞ்சி பழம்,குன்றிமனி எனும் விதை குறித்த பதிவும் கிடைக்கப் பெறுகிறது.மூங்கில் என்பது புல்வகை எனினும் சொல் வழக்கில் மரமென்றே சொல்கிறோம்.

அதே போல் மரத்தின் மேன்மையை கீழ்கண்ட குறளில் பதிவு செய்திருக்கிறார்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யாங்கண் படின்.

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

அனைவரும்:இன்று ஒரு நல்ல செய்தியைப் பற்றி பேசிய மனநிறைவும்,நம் தமிழர்களின் வாழ்வியலும்,அவர்கள் இயற்கையை போற்றி பாதுக்காத்து அதன் சூட்சமத்தை உலகுக்கே சொல்லிய நம் திருக்குறள் என்பதை  நினைக்க மிகவும் பெருமிதமாகவும் இருக்கிறது.

நான்:ஆமாம் நண்பர்களே! இன்னும் பல சூழலியல் கருத்துக்கள் திருக்குறளில் புதைந்து கிடக்கிறது,நேரம் ஆகிவிட்டது,அதனால் பிறிதொரு நாள் திருக்குறள் எனும் புதையலை தோண்டி இன்புறுவோம்.






அறம் படி,பொருள் படி அப்படியே இன்பம் படி

அத்தனையும் தஞ்சமானது இயற்கையின் மடி.

அறம் பாடிய நூலொன்று வனமும் பாடி சென்றுள்ளது


பொருள் பாடிய நூலொன்று புழுடி உழவு பாடி சென்றுள்ளது

இன்பம் பாடிய நூலொன்று இயற்கையை பாடி சென்றுள்ளது.


"திருக்குறளின் நான்காம் பால் சூழலியல் தான்".

ஒரு சில அரிய தகவல்கள் :

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளை ஒவிய வடிவில் தந்துள்ளவர் திருப்பூர் பக்கம் நல்லூர்,விஜயபுரத்தில் வசிக்கும் நல்லாசிரியர் விருது பெற்ற ஓவியாசிரியர் நடராஜ் அவர்கள்.

கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எழுத வருவதே அரிதாக இருந்தது. ஆனால் மருங்காபுரி ஜமீன்தாரிணியான கி.சு.வி.லட்சுமி அம்மணி, 1929-ம் ஆண்டு திருக்குறள் தீபாலங்காரம் என்னும் பெயரில் ஒரு அற்புதமான உரை நூலை எழுதித் தமிழுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளார்.

                      

                                  மருங்காபுரி ஜமீந்தாரிணி.


பொறுமையுடன் உரையாடலை கேட்டதற்கு நன்றி தோழமைகளே………..

-அன்புடன் லீலா.

1 comment:

  1. திருக்குறள் பற்றிய அருமையான பதிவு. நன்றி

    ReplyDelete