Friday 30 March 2018

திருப்பாவையும் திருப்பறையும்.........




வணக்கம் தோழமைகளே !

இன்று என்ன ஆன்மீக தலைப்பா இருக்கேன்னு குழப்பமாயிருக்கா?

ஆன்மீகம் என்பதைப் பற்றி அடிக்கடி தோழமைகளுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போதெல்லாம். I am beliving Godliness but not God என்று சொல்வேன்.ஒருமுறை பகுத்தறிவுவாதி ஆன்மீகவாதியா இருக்க முடியுமா? என்று கேட்டார்கள்.

இந்த கேள்வி எனக்கு சிரிப்பை உண்டாக்கியது.முடியுமென்றேன்.

குழப்பமாக பார்த்தார்கள்,பகுத்தறிவு என்பது எது சரி,தவறு மற்றும் எதையும் பகுத்து பார்த்து அறிதல் ஆகும்.

ஆன்மீகம் என்பது ஒரு மதம் சார்ந்த விஷயமல்ல. மதத்தில் ஆன்மீகம் உண்டு, ஆனால் ஆன்மீகத்தில் மதமில்லை. தன்னை, தன் சுயத்தை அறியும் வழிமுறையே ஆன்மீகம். தன்னை அறிவது, தன்னை பற்றிய உண்மைகளை தனது சொந்த அனுபவங்கள் மூலம் அறிவது மட்டுமே ஆன்மீகம்.

தன்னை அறிந்தவன் தானே சிறந்த பகுத்தறிவாதியாக இருக்க முடியும் என்றேன்.

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உரித்தானது என்கிறார்கள்.

யானை ஒரு நாளும் சைவ உண்வை விட்டு அசைவம் உண்ணுவது இல்லை,எந்த உயிரினமும் தன் உணவு எது என்பதை கண்டறிகிறது என்பது பகுத்தறிவுதானே.

அது சரி,இதற்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்புன்னுதானே யோசிக்கிறீங்க.சொல்றேன்…

இணையத்தில் தந்தை பெரியார் குறித்து சில குறிப்புகளை படிப்பதற்காக தேடிக் கொண்டிருந்தேன்,அப்போது you tube ல் கவிஞர் அறிவுமதி அவர்களின் உரையின் காணொளி கிடைக்கப் பெற்றது.கவிஞர் அய்யா பெரியாரின் கொள்கையில் ஈடுபாடு உடையவர் மேலும் அவரது கவிதைகள் எனக்கு பிடிக்குமென்பதால்.அந்த காணொளியை முழுமையாக கேட்டேன்.எத்தனை அற்புதமான பேச்சு,பகுத்தறிவும்,பழந்தமிழும் அறிவியலும் உரையில் செறிவாய் இருந்தது.காணொளி கேட்டு முடித்தவுடன் சங்கத் தமிழை படிக்க ஆசை மேலோங்கியது.நேரடியாக புறநானூறு படிக்கலாமா,அல்லது அதற்கு பின்னர் வந்த எளிமையான செய்யுளை படிக்கலாமா என யோசித்தப்படி இருக்க,சங்கத்தமிழில் ,

பாணான் பறையன்,துடியன்,, கடம்பன் என்று இந்நான்கல்லது
குடியும் இல்லை” - புறநானூறு 335.7-8

என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கவிஞர் அவர்கள் பேசியது நினைவுக்கு வர.பறையென்றால் இசைக் கருவியாயிற்றே அதனால் அதைக் குறித்து முதலில் பார்ப்போம் என்று தோன்றியது,அதோடு எனது தம்பி வழக்கறிஞர் என்பதோடு,நிறைய புத்தகம் படிப்பவர்,ஒரு முறை பறையர் வரலாறு என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்,நானும் அதை ஒரு முறை படித்திருக்கிறேன். என்பதால் பறை குறித்தே முதலில் இணையத்தில் அலசினேன்.

அப்போது KRS என்பவரின் மாதவிபந்தல் படிக்க வாய்த்தது.அடடே தேடியலைந்த செய்தி தானே கிடைக்க,முதல் வேலையாக திருப்பாவையை படிக்க தொடங்கினேன்.

முப்பது பாடல்களையும் ந்டுநிலையோடு மீண்டும் மீண்டும் படித்து உள்வாங்கி கொண்டேன்,பின்னர் சிறிய ஆராய்ச்சி ஒன்றும் மேற் கொண்டேன், பின் மீண்டும் மாதவிபந்தல் படிக்க அவரும்,பறையை குறித்து ஆராய்ந்திருந்தார் ஒரளவிற்கு இரண்டும் ஒத்துப்போக தைரியமா கதை சொல்ல வந்தாச்சு.சரி

தலைப்பை பற்றி பார்ப்போம்

ஆண்டாள் / கோதையும் - "பறை" ... பறையர் மாட்சியும் .

கோதையை "ஆன்மீகமாக" சமயமாக மட்டுமே புரிந்து கொள்ளாமல், அவள் "ஆன்மா"வாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.

"பறை" என்றால் என்ன?

துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது
குடியும் இல்லை” - புறநானூறு 335.7-8

நெறிகளை, அரசுக்கே "பறை"ந்த பறையர் என்ற தமிழ் ஏற்றம்! சங்க காலத்தில் இருந்தது.

திருவள்ளுவர் காலத்திலும், சங்ககாலத்திலும் பறையர் சமுதாயம் செல்வாக்கும் பெருமையும் வாய்ந்ததாகவும் மேம்பட்ட சமுதாயமாகவும் இருந்தது என்பது உண்மை வரலாறு. பறையர் குடி தமிழ்நாட்டின் நிகரற்ற குடியாக 3000 ஆண்டுகளுக்கு முன்னரே விளங்கியதென 335வது சங்கப்பாடல் புறநானூறு கூறுகின்றது. இதை அறிந்துதான் புங்கனூர் இராமண்ணா, ‘பறையர் என்றால் அவர்தான் தமிழர்; தமிழர் என்றால் அவர்தான் பறையர்’ என்று கூறி, பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு, தமிழ் நாட்டின் வரலாறு, பாரத தேசத்தின் வரலாறு, பறையர் வரலாறு முழுமையாகத் தெரிந்து விட்டால் தமிழர் வரலாறும், தமிழ் நாட்டின் வரலாறும் முழுமையாகத் தெரிந்து விடும். தமிழ்நாட்டின் வரலாறு தெரிந்துவிட்டால் இன்றைய இந்தியாவின் வரலாறு தலைகீழாய் மாறிப்போகும் என்று குறிப்பிடுகிறார். (நூல் – பறையர் ஓர் வரலாற்றுச் சுருக்கம்) http://www.tamilpaper.net/?p=8171

மிக உயர்ந்த சங்கத் தமிழ்ச் சொல்லான = "பறை",

ஆதிக்க மனப்பான்மை கொண்டோரின் செயல்களால், சில காலம் தாழ்வான சொல் போல் பிறழ்ந்து விட்டது! .

சிறுபான்மையினரும் தங்கள் மரபுச் சிறப்பைப் பேணிக் கொள்ளலாம் .. ஆனால் எங்களுக்கு உட்பட்டே என்பதும் ஒரு வகை ஆதிக்க புத்திதான்.

போராடித் தான் மீள வேண்டும்.
போராட்டங்களுக்குப் பின் நிலைமை மாறி, இப்போது அப்படியெல்லாம் இல்லை என்று ஆகிவிட்டாலும்
"பறை" என்ற அழகான தமிழ்ச் சொல்லையும் தமிழர் மீட்டாக வேண்டும்.

நெருடல் இல்லாமல் காலத்தால் இந்த சொல் மீண்டும் பழக்கத்துக்கு வர வேண்டும்.

இன்று பறை... : பறையர்(ன்) .. பறையள் என்று பறை குல மக்கள் அன்றைய சங்க காலம்போல் களத்தில் இறங்கி .... சாதி பெருமை தழுவல் காண்கிறோம்.
கல்வியும் , செல்வமும் , வீரமும் என்று சும்மாவா சொன்னான் தமிழன் . அவை எங்கு வீற்றிருக்கிறதோ அங்கு எந்த சாதியும் சிம்மாசனம் பெறும்.

வசைச்சொல்! ... சொல்லடி திருப்பி பட்டால் ... வலி எல்லாருக்கும் ஒன்று தான்.

யானைக்கு ஒரு காலம் .. பூனைக்கு ஒரு காலம்.
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்... வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.

எதற்கும் காலம் வரும் .. அதுவரை செயல்களில் இருந்து கொண்டே இருக்க வேண்டியது தமிழர் நம் கடமை.
பறை

"பறை" என்ற சொல்லாட்சி, வேறு எந்த ஆழ்வார் - நாயன்மார் பாட்டிலும் காண முடியாது!

ஒரு பெண் மட்டுமே நமக்குத் தாயாக நின்று அன்றே பறை என்பதற்கு ஏத்தம் ... ஏற்றம் தந்தவள் ; அவள்தான் கோதை ... எனும் ஆண்டாள்.

இறைவன் , பறை எனும் சொல் காலவோட்டத்தில் நிலை தாழும் போது தனது சீவ காருண்யத்தில் ஆதியாகவே அதற்கு ஏற்றம் தந்ததன் விளைவு தான் ஆண்டாள்.

ஆனால் அந்த ஆண்டாளை நாம் அறிந்தோமா!.....

அறியவில்லை .... காரணம் நமக்குள் தேடல் இல்லை....
வெற்று வாழ்க்கை ... சூன்ய வாழ்க்கை வாழ்ந்து விட்டோம். எதற்கு எடுத்தாலும் எடுத்தோம் ... கவிழ்த்தோம் என்று வாழ்ந்தால் ஏமாற்றம்தான் மிகும்.

ஆண்டாள் சாற்றிய 'பறை'

காதலை கடவுளிடம் காட்டியவள் ; இப்படியும் ஒரு எளிமையான பக்தி... இலகுவான வாழ்க்கை ... இந்த மண்ணில் இருக்கிறது என்று காட்டியவள்.

காமத்தை அனுபவிக்கும் பாங்கு பறைசாற்றியவள்..... துணிச்சல்
தான்...

* உள்ளத்தின் உண்மையான உணர்ச்சியில்....
* அவனே அவனே என்று ஊறித் திளைக்கும் ஒருத்திக்கு...
* அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே, தன் சம்பந்தமாகக் கொண்டு வாழ்பவளுக்கு... "அவனுடைய" பறை என்றால் என்ன ?

"வாய்ச்சுவையும் நாற்றமும்" வெளிப்படையாக சொன்ன கோதை எனும் ஆண்டாள் ... '"பிராமண"' எனும் அப்படியான வீட்டில் வளர்கிறாளே தவிர, தந்தை தாய் அறியாதவள்.. தன் பிறப்பறியாதவள். மலர் தோட்டத்தில் பிறந்த குழந்தையாக .. கைவிடப்பட்டு பூமியில் கிடந்தவள்..

நிச்சயமாக இந்த குழந்தை ஒரு நல்லவர் கையில் கிடைக்கும் என்று குழந்தையைப் பெற்ற தாய் கண்டிப்பாக கணித்திருப்பாள்..
மலர்த் தோட்டத்தில் அல்லவா கைவிட்டிருக்கிறாள்....

கண்டு வளர்த்தவரைப் 'பட்டர்பிரான் கோதை ' , 'விட்டுசித்தன் கோதை ' என்று வரிக்கு வரி வளர்த்த அவர் பெயரை முத்திரைக் குத்திக் கொள்கிறாள். அவரே பெரியாழ்வார்.

அவள் காலத்தில்,கோதையின் வித்தியாசமான மனப் போக்குக்கு, அவளை என்ன கேலி பேசினார்களோ ............

அவள் தன் வாழ்வை எப்படி எதிர் கொண்டாளோ......... யார் அறிவர்.

அவள் உள்ளத்தே தங்கி விட்ட மாசில்லாத காதல் -

இப்போதே பலருக்கும் பெருங் காமமாக தெரிகிறது....

அன்று அது எப்படி தெரிந்திருக்குமோ...

அரங்கனில் ஏறிக் "கலந்தாள்" என்பது சமயப் பூர்வமாக நிலை நிறுத்தப் பட்டு விட்டது.. இன்று ! ., வைணவ ஆலயம் தோறும் அவள் தான்!

அரங்கனில் ஏறிக் "கலந்தாள்"
* ஆனால், அவள் "கலந்தாளா"?...
* ஒருத்தன் நினைப்பிலேயே "கரைந்தாளா"?

"இறையை" ஏறிட்டுக் கொண்டவள், "பறையை" ஏன் ஏறிடுகிறாள்?

'மனசாலேயே வைச்சிக்கிட்டு வாழ்ந்தால் .........' அவனைப் பிரியாது இருக்கலாம் ..... என்று தன் கவிதை அனைத்தையும் முடித்து விடுகிறாள்!.
கோதையை, அவள் "ஆன்மாவை" ஒட்டியும் புரிந்து கொள்வோம் ...
இன்றளவும் அவள் பிறந்த ஊரிலே , கண்டாங்கிச் சேலை கட்டி, அலங்காரம் செய்து வைக்கிறார்களே ஏன்...

கோதை, ''பிராமண''' வீட்டில் வளர்ந்தாலும், ஏன் எருமை ... பறை... என்று வேறொரு உணர்வாக வாழ்ந்தாள்...

என்ன ஆதாரம் ? என்ன தரவு ? = அவள் கவிதையே ஆதாரம் !

கீழ்வானம் வெள்ளென்று "எருமைச் சிறுவீடு"
மேய்வான் பரந்தன காண்...
இதில்... எருமைச் சிறுவீடு மேய்தல் என்றால் என்ன?

எதற்கு எருமை மாட்டை மட்டும் சொல்கிறாள் கோதை?

பசு தானே " புனிதம் " ?

எருமையை , " வேதம் அனைத்துக்கும் வித்தாகும் " திருப்பாவையில் வைக்கலாமா ?

பசு மாட்டை அவிழ்த்து விட அவசியம் இல்லாமல் வைக்கோலைப் போட்டாலேயே தின்னும்.

எருமை அப்படி அல்ல ! ... மேய்ந்தே ஆக வேண்டும்.
அதற்காக அவ்வளவு அதிகாலையில் மேய்ச்சலுக்குக் கூட்டிப் போக முடியுமா? அதனால் சேரி வீட்டுக்குள்ளேயே ஒரு "சிறுவீடு" - கொல்லையை ஒட்டிய மேய்ச்சல் புல் நிலம்... அங்கேயே மேய விடுவார்கள்.

பறைச் சேரி / ஆயர்ச் சேரிக்கே உரிய வழக்கத்தை...

எப்படி ஒரு "பிராமண வீட்டில்" வளரும் ஆண்டாள்... புழங்குகிறாள்? வியப்பிலும் வியப்பு! --

இது மட்டுமல்ல..

* பறைச்சேரிக்கே உரிய பிற சொற்களும்,
* கண்ணாலம் போன்ற பாமரச் சொற்களும்,
* கணவனை, "மைத்துனன்/மச்சான்" என்று அழைக்கும் முறையும்,
அவள் திருமொழியில் மறைக்காமல் அப்படியே வரும்!

''கண்டாங்கிச் சீலையும், கோடாலி முடிச்சும், உடம்பிலே வெண்ணைய் வீச்சமும், பறைச்சேரிப் பேச்சுமாய்...
அவனையே நினைச்சி நினைச்சி , தன்னையும் அவன் குடும்பமாகவே பாவித்து பாவித்து, அவளும் அப்படியே ஆயிட்டாள்!''

= பாவனை அதனைக் கூடில்,அவனையும் கூடலாமே!

பறை:
பறை = Drums!

பறை தருவான் - Drums தருவான் - பொருள் ?

* பறை = மோட்சம் (ஆன்மீக ரீதியில்)
* பறை = பேரின்பம் (இலக்கிய ரீதியில்)
* பறை = அவன் இன்பம்! (உண்மையா, காதல் ரீதியில்)
வெறுமனே ஒரு வாத்தியக் கருவி..

அது எப்படி மோட்சத்தை / இன்பத்தை எல்லாம் குறிக்கும்?

சங்கத் தமிழரோடு நெருங்கிய தொடர்புள்ள இசைக்கருவி = பறை!
பிறப்பு முதல் முடிவு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் பறை இருக்கும்!

போர், உழவு, கூத்து - ஒவ்வொரு திணை / துறையிலும் பல்வேறு பறைகள் !
அரிப் பறை, செருப் பறை, ஆகுளிப் பறை என்றெல்லாம் சங்கத் தமிழில் வரும்!

அப்பேர்ப்பட்ட சங்கத்தமிழ்க் கருவியைத் தான், நோன்புக் கருவியாக வைக்கிறாள் கோதை .

எந்த இந்து மத - "உயர் வகுப்பு" விரதத்திலும் பறை உண்டா ?

மலையாளத்தில் "என்ன பறையும்.... "- என்பர்.

பறை = சொல்!

என்ன பறையும்... என்ன சொல்கிறாய்...

இசையால் அடித்துச் சொல்வது = பறை!

ஆனால், பறை என்பது வெறுமனே இசைக்கருவி மட்டும் தானா?
இல்லை ! சமூக வழக்கிலே அது "அளக்கும் கருவி" யாகவும் மாறி விட்டது! . அதுதான் தட்டைப் பறை

தட்டைப் பறை;
அதைக் கவிழ்த்தால், பறை ஒரு கொள்கலன் (container) ஆகி விடும்!
கூத்து முடிந்த பின், பறையைக் கவிழ்த்து, அதிலேயே காசுகள் பெறும் தெருவோரக் கலைஞர்களைப் பார்த்திருக்கோம் அல்லவா?
முற்காலத்தில், பறையடித்து முடிந்ததும், அளந்துவிடும் நெல் கூலியைப் பறையிலேயே வாங்கிக் கொள்ளலாம்! = பறைக் கூலி!

* அதே போல், தெய்வம் தரும் கூலி = மோட்சம் = பறை!

* காதலன் தரும் கூலி = பேரின்பம் = பறை!

காதல் ரீதியில்:

''அவனுக்கு என்னையே கொடுத்து , அவன் தரும் கூலியையும் என்னுள்ளேயே வாங்கிக் கொள்வேன்!''

(எப்படி பறையடித்து, கூலியும் அதிலேயே வாங்குறாங்களோ.. அது போல)

ஆன்மீக ரீதியில்:

* பிறவி கொடுத்து, அதன் கூலியான மோட்சத்தையும், பிறவியின் முடிவிலேயே கொடுத்து விடுகிறான் இறைவன்!

(எப்படி பறையடித்து, கூலியும் அதிலேயே வாங்குறாங்களோ.. அது போல)

'சரணம் ஆகும் தன-தாள் அடைந்தோர்க்கு எல்லாம்,
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்று மாறன்-நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஒப்பு'

இப்படி, கூலி கொடுக்கும் / படியளக்கும் ஐயன் !... இந்தப் படியளத்தலே = பறை!

* யார் தருவார் பறை? = நாராயண"னே"!

* யாருக்குத் தருவார் பறை? = நமக்"கே"!

நாராயணனே, நமக்கே, பறை தருவான்!! என்று முதல் பாட்டைத் துவங்கி விட்டாள்!

"பறை" என்பது "உள்ளுறை உவமம்" | Abstraction in Poetry

* வேறு எந்தவொரு ஆழ்வாரோ, நாயன்மாரோ குறியீடு காட்டாத...

* ஒரு பெண் மட்டுமே சாதித்துக் காட்டிய...

* அவள் அப்பாவின் கவிதையிலும் காணமுடியாத உள்ளுறை!

'''இப்படி ஒரு தனித்தன்மை இந்தப் பெண்ணுக்கு!'''

"பறை" எங்கெல்லாம் வருகிறது? = மொத்தம் 11 இடங்களில்

---------------------------------------------------------------------------------------
1. நமக்கே "பறை" தருவான் (தி:1 - மார்கழித் திங்கள்)
2. பாவாய் எழுந்திராய், பாடிப் "பறை" கொண்டு (தி:8 - கீழ்வானம் வெள்ளென்று)
3. போற்றப் "பறை" தரும் புண்ணியனால் (தி:10 - நோற்றுச் சுவர்க்கம்)
4. அறை "பறை" மாயன் மணிவண்ணன் (தி:16 - நாயகனாய் நின்று)
5. வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் "பறை" கொள்வாம் (தி:24 - அன்று இவ்வுலகம்)
6. உன்னை அருத்தித்து வந்தோம் "பறை" தருதியாகில் (தி:25 - ஒருத்தி மகனாய்)
7. சாலப்பெரும் "பறை"யே பல்லாண்டு இசைப்பாரே (தி:26 - மாலே மணிவண்ணா)
8. பாடிப் "பறை"கொண்டு யாம்பெறும் சம்மானம் (தி:27 - கூடாரை வெல்லும்சீர்)
9. இறைவா நீ தாராய் "பறை"யேலோ ரெம்பாவாய் (தி:28 - கறவைகள் பின்சென்று)
10. இற்றைப் "பறை" கொள்வாம், அன்று காண்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு (தி:29 - சிற்றஞ் சிறுகாலே)
11. அங்கு அப்"பறை" கொண்ட ஆற்றை,
பட்டர்பிரான் கோதை சொன்ன =(தி:30 - வங்கக் கடல்கடைந்த)
---------------------------------------------------------------------------------------

திருப்பாவையில் மட்டுமேயான சொல்லாட்சி = பறை!

அதுவும் கடைசியில் தொடர்ச்சியாக வரும் சொல்லாட்சி! (24-30)

* துவக்கத்திலே, பறை = நோன்புக்கான இசைக்கருவி என்பது போல் காட்டி விட்டு...

* நடுவிலே, பறை = யாம்பெறும் சன்மானம் என்று, படியளந்து கிடைத்த பரிசைச் சொல்லி...

* இறுதியிலே, பறை = பேரின்பக் கூலி...

இற்றைப் பறையெல்லாம் வேண்டாம் ,

"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயே ! உன் உறவே " - என்று முடிக்கிறாள்!

பறை = அவள் தனித்துவமான கவிதை!

உள்ளுறை உவமம் ! கவிதை மறைக்கரு (Poetical Abstraction)

* பறை = இசைக்கருவி

* பறை = அதில் படியளந்து பெறும் கூலி

* பறை = "எனக்கு - அவனே" என்ற பேரின்பக் கூலி! = பேறு
ஒரு காதல் உள்ளத்துக்கு,

"அவன்" கொடுக்கும் உச்ச கட்ட இன்பம் | இன்பக் கூலியே=பறை!

ஆண்டாள் - அவரவர் வழி ... வழி அவரவர் வாழ்க்கை.

"உனக்கு - அவனே" என்னும் "பறை" ஏல் எம்பாவாய்.

ஆண்டாள் ''' பறையர் மாட்சிக்கு ஓர் மாணிக்கம் ; ஆதி தமிழர் ஏற்றத்துக்கு ! அவளே அவளே !

உங்களின் பார்வைக்கு

திருப்பாவை
=============
1.மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்?
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,


ஏர் ஆர்ந்த கண்ணி, யசோதை இளம் சிங்கம்,
கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!
நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!!
பாரோர் புகழப் படிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!

2.வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன், "அடி" பாடி,
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாள் காலே நீராடி,


மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக் குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆ(கு)ந் தனையும் கை காட்டி,
உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம் பாவாய்.
3.ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி,
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து,
ஓங்கு பெரும் செந் நெல் ஊடு கயல் உகளப்,


பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!
நீங்காத செல்வம் நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!
4.ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!
ஆழி உள் புக்கு, முகந்து கொடு, ஆர்த்து ஏறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்,
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல்,
வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல்-ஓர் எம் பாவாய்!
5.மாயனை, மன்னு வட, மதுரை மைந்தனைத்,
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்,

தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப்,
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!
6.புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி,

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து, "அரி" என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!
7.கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
 தேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்!
8.கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான், பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலம் உடைய

பாவாய், எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு!
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,
ஆ-வா என்று ஆராய்ந்து, அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!
9.தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரியத்,
தூபம் கமழத், துயிலணை மேல் கண் வளரும்,
மாமான் மகளே! மணிக் கதவம் தாள் திறவாய்!
மாமீர், அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல்-ஓர் எம் பாவாய்!
10.நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்! நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்! பண்டு ஒரு நாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்,
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல்-ஓர் எம் பாவாய்!
11. கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறல் அழியச், சென்று செருச் செய்யும்,
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்!

சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏல் ஓர் எம் பாவாய்!
12.கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி,
நினைத்து, முலை வழியே, நின்று பால் சோர,
நனைத்து, இல்லம் சேறாக்கும்! நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ, நின் வாசற்கடை பற்றிச்,

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற,
மனத்துக்கு இனியானைப் பாடவும், நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!
13. புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக், கீர்த்திமை பாடிப் போய்ப்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!!

புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய், நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல்-ஓர் எம் பாவாய்!
14. உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல்-தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்!

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய், எழுந்திராய்! நாணாதாய், நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு, ஏல்-ஓர் எம் பாவாய்.
15.எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ?
சில் என்று அழையேன்மின்! நங்கையீர் போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்!
வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!

ஒல்லை நீ போதாய்! உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோபோந்தார் போந்து எண்ணிக் கொள்!
வல்-ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு ஏல்-ஓர் எம் பாவாய்! 
16. நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக் கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு, அறை பறை

மாயன் மணி வண்ணன், நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம்! துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்!
17.அம்பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே,
எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்!


அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த,
உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய்!
செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா,
உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய்!
18.உந்து மத களிற்றன், ஓடாத தோள் வலியன்,
நந்த கோபன் மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி, கடை திறவாய்!
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்


பந்தல் மேல், பல் கால் குயிலினங்கள் கூவின காண்!
பந்து ஆர் விரலி, உன் மைத்துனன் பேர் பாடச்,
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
19.குத்து விளக்கெரிய, கோட்டுக் கால் கட்டில் மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்,
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்,
வைத்துக் கிடந்த மலர் மார்பா, வாய் திறவாய்!

மைத் தடம் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்?
எத்தனை ஏலும் பிரிவு ஆற்றகு இல்லாயால்?
தத்துவம் அன்று! தகவு! ஏல்-ஓர் எம் பாவாய்!
20.முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்!
செப்பம் உடையாய், திறல் உடையாய், செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா, துயில் எழாய்!

செப்பென்ன மென் முலைச் செவ் வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை, நங்காய், திருவே, துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டு! ஏல்-ஓர் எம் பாவாய்!
21.ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்!
ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்!
மாற்றார் உனக்கு வலி தொலைந்து, உன் வாசற் கண்
ஆற்றாது வந்து, உன் அடி பணியுமா போலே,
போற்றி யாம் வந்தோம், புகழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
22.அங் கண் மா ஞாலத்து அரசர், "அபிமான
பங்கமாய்", வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே,
சங்கம் இருப்பார் போல், வந்து தலைப் பெய்தோம்!
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் "இரண்டும் கொண்டு", எங்கள் மேல் நோக்குதியேல்!
எங்கள் மேல் சாபம் இழிந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
23. மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும்,
சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து,
வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி,
மூரி நிமிர்ந்து, முழங்கிப் புறப்பட்டுப்,

போதருமா போலே, நீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில் நின்று, இங்ஙனே போந்தருளிக், கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த
காரியம், ஆராய்ந்து அருள்! ஏல்-ஓர் எம் பாவாய்!
24. அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று-குணில்-ஆ எறிந்தாய் கழல் போற்றி!

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்!
இன்று யாம் வந்தோம் இரங்கு! ஏல்-ஓர் எம் பாவாய்!
25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்,
தரிக்கிலான் ஆகித், தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,
வருத்தமும் தீர்ந்து, மகிழ்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!
26. மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன,
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள், போய்ப் பாடு உடையனவே!
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே!
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய், அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!
27.கூடாரை வெல்லும் சீர், கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு, யாம் பெறும் சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே!

பாடகமே என்று அனைய, பல்கலனும் யாம் அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற் சோறு!
மூட நெய் பெய்து, முழங்கை வழி வாரக்,
கூடி இருந்து குளிர்ந்து! ஏல்-ஓர் எம்பாவாய்!
28. கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தாஉந்தன்னோடு,

உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்!
29. சிற்றம் சிறு காலே, வந்து, உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ,
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!

இற்றைப் பறை கொள்வான் அன்று காண்! கோவிந்தா,
எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றை நம் காமங்கள் மாற்று! ஏல்-ஓர் எம் பாவாய்!
30. வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!




நன்றி:


மூலம் -
kannabiran, RAVI SHANKAR (KRS)
'மாதவிப் பந்தல்'


எல்லே இளங்கிளியே பின்னூட்டமிடலையோ..... :-)


நன்றி தோழமைகளே.


அன்புடன்

கோ. லீலா.