Wednesday 29 June 2016

குரு............

             

ஆசிரியருக்கும் குருவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஆசிரியர் சொல்லி தருதலுடன் விடைபெறுகிறார்.குருவோ எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ்வியலையும் வாழ்க்கைக்கு வேண்டியதையும் சிந்திக்க வைத்து செயல்பட வைக்கிறார்.

அந்த வகையில் சில "குரு" அடையாளமின்றி ஆசிரியர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.சிறந்த குரு எப்படியிருக்க வேண்டும்?
ஒரு சீடனின் நெகிழ்வே குருவின் மகிமையை இந்த உலகத்திற்கு பறைசாற்றுகிறது.ஒரு போதும் தன் புகழ் பரப்புவது பற்றிய இலக்கற்றவராகவே இருக்கிறார் குரு.

பள்ளியை விட்டு வெளிவந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் வகுப்பறையின் பசுமை நினைவுகளும்,ஆசிரியர்களின்  முகங்களும் நம்முள் தாக்கத்தை  ஏற்படுத்திய வண்ணமே இருக்கும்,பொதுவாக பள்ளி,கல்லூரி,நாட்களின் காதலும் அதன் வெற்றி ,தோல்விகளுமே ஆவணப்படுத்த்ப்படுகின்றன.

ஒரு ஆசிரியரின் செயல்பாடுகளும்,அவரின் சிந்தனைகளும் நம்முள் ஏற்படுத்தும் மாறாத நினைவுகள்,வாழ்வில் பெறும் ஏற்றங்களுக்கு  பின்னால் மறைந்து கிடக்கும் அவர்களின்  நேசமிகு இழப்புகளும்,நம்மின் உயர்வில் மகிழ்ந்து போகும் அவர்களின் தன்னலமற்ற போக்கும் ஆவணப்படுத்த்ப்பட வேண்டும்.அதன் மூலம் இன்னும் சிறந்த "குரு" கள்  உருவாக அது வழியமைக்கும்.

குடும்பச் சூழல் கல்விக்கு எதிராக இருக்கும் போது அதை தகர்த்து பயில்வது  என்பது ஒரு சரித்திரம்தான்.இங்கு ஒவ்வொவ்வொருக்கும் சொல்ல ஒரு சரித்திரம் இருக்கிறது.அந்த சரித்திரத்துக்கு முன்னுரை எழுதிய சிறந்த ஆசிரியர்களை பற்றிதான் பேச போகிறோம்.
ஒரு ஆசிரியர் எப்போதும் தன்னடக்கத்துடன் மட்டுமின்றி வெளிப்படையாகவும்,மாணவர் மற்றும் தன்னின் குடும்ப சூழலை  பற்றியும்,தன்னை பற்றியும்,சுய விமர்சனத்துடனும் அலசும் ஆசிரியர் வரம்ல்லவா?

சலித்துப்போய வாசலில் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை புதிய  தருணங்களுக்காக காத்திருக்கிறது.சில வாசிப்புகளில்,சில சந்திப்புகளில்,சில வாய்ப்புகளில் இந்த புதிய தருணங்கல் கிடைக்கின்றன்.அத்தைகைய புதிய தருணங்களை தருவதாக ஒரு ஆசிரியரின் சந்திப்பு நிகழ வேண்டும்.

ஆசிரிய-மாணவ உறவுக்கிடையே  நீண்டு கிடக்கும் இடைவெளி யும் அதில் மறைந்து கிடக்கும் கசப்புகளையும் அறிந்தவர்களுக்கு தெரியும் தோள் மீடு கை போட்டு பேசும் அல்லது அன்போடு பேசும் ஆசிரியரின் சந்திப்புகளில் ஒரு மாணவரின் மனம் எப்படி துள்ளுமென்பது.

பொதுவாக ஒரு கட்டுப்படான வகுப்பறையில் சொற்பொழிவு ஆற்றவே ஆசிரியர்கள் ஆசைப்படுவார்கள்,ஆனால் அடிப்படை விசயங்களை அறியாத கிராமபுற மாணவர்களை அரவணைப்பதும்,அவர்களை மேல்தூக்கி விடுவதும்தான் நல்ல ஆசிரியரின் பணி.தன்னின் பெருமையை,தன் கருத்துக்களை ஓயாமல் பேசி தன் சாயலில் ஒரு மாணவனை உருவாக்குதன்று ஒரு ஆசிரியரின் வேலை.

சுயமாக சிந்திக்கும் வகையில்  ஒரு மாணவனை உருவாக்குவதில் தான் ஒரு ஆசிரியரின் ஆளுமை இருக்கிறது. மேதமையை மட்டும் கொண்டாடமால், எளிய மனங்களின் தேவைகளையும், இயல்புகளையும்,ஆற்றலையும்  கொண்டாடுவதிலும்தான் ஒரு ஆசிரியர் தன்னை தன் ஆளுமையை வெளிப்படுத்துகிறார்.

நெருக்கத்தின் ரகசியம் மிகவும் கனமானது,சில அன்பை சிலரால்  புரிந்து கொள்ளமுடிவதில்லை,காலம் கடந்து திரும்பி பார்க்கையில் அத்தகைய அன்பு கரி வடிவத்திலிருந்து வைரமாக ஜொலிப்பது புரியும்.அத்தகைய அன்பை தரகூடியவராக ஒரு ஆசிரியர் இருத்தல் வேண்டும்.
மாணவர்களோடு நெருக்கமாக இருத்தல் மட்டுமின்றி  வகுப்பறையிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.ஆசிரியர்கள் போகிற போக்கில் சொல்லும் சில சொற்களும்,செயல்களும் ஒரு மாணவனின் வாழ்க்கையை மாற்றிவிடும் வல்லமை கொண்டது.

ஆசிரியர் என்பவர்,மானவர்களுக்கான ஆய்வரங்கங்களையும், பயிற்சி பட்டறைகளையும் அமைத்து தர வேண்டும்.அவர்களுள் புதைந்துள்ள ஆற்றலை,திறமையை வெளிகொணர வேண்டும். மாண்வரிடம் சிறு ஆற்றலை கண்டாலும் அதை கொண்டாட வேண்டும்.மாணவர்களின் ஆற்றலை படைப்பாற்றல்  ஆக்க வேண்டியது ஒரு ஆசிரியரின் சீரிய பணியாகும்.

சுய சாயலுடன் ஒரு மாணவ சமூதாயத்தை உருவாக்குவதுதான் ஒரு ஆசிரியரின் ஆளுமை,ஆசிரியரும் ,மாணவரும் இரு வேறு கலாச்சரமாக, இருந்தாலும்  அதற்கிடையேயான மனந்திறந்த உரையாடலே  ஒரு மாணவனை வழி நடத்தும்.

வகுப்பறையை கடந்தும் கற்பித்தல் நீளவேண்டும்,புத்தகம் கடந்து இயற்கையையும்,வாழ்வியலையும்  போதிக்க வேண்டும்.ஒவ்வொவ்வொரு நாளும் ந்ம்மை புதுப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை போதிக்க வேண்டும்.பிடி ந்ழுவி தவிக்கும் நேரங்களில் எல்லாம் ஆசிரியரை அல்லது அவரது ஆலோசனைகளையும் தேட வேண்டும் இப்படியாக ஒரு ஆசிரியர் இருக்கும்போது அவர் "குரு" வாகி விடுகிறார்.

மலையோர சாரலாக,அருவியின் அருமையாக ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.

 பள்ளி படிக்கும்போதும்,கல்லூரி நாட்களிலும் கூட அதிகமாக யாருடனும் பேசாத நான் மேடையில் மட்டும்  பேச( Even Extempore)  என்னை தயார் செய்தவர் எனது எட்டாம் வகுப்பு தமிழாசிரியர் திருமதி B.சரோஜா  அவர்களை இப்போது நினைவு  கூருகிறேன்.



மாணவர்களுக்கான குறிப்பு:எல்லா பிரபஞ்சவெளியிலும் உள்ள சத்தத்தை,ஓர் இசைவாணன் உங்களுக்கு பாடிக் காட்ட முடியும்.ஆனால் அதை கேட்கும் செவியையும்,அதன் எதிரொலியையும் உங்களுக்கு கொடுக்க அவனால் முடியாது.

       "ஒருவரின் தரிசனம் மற்றவர்க்குச் சிறகு விரிக்காது"



நன்றி:பேராசிரியர் ச.மாடசாமி அய்யா.

அன்புடன் லீலா.





Friday 24 June 2016

யானை என்றொரு கம்பீரம்…………….

              
சுற்றுசூழல் சீர்கேடுகள் என்பது தொழிற்சாலைகள்,பொருள் நுகர்வு கலாச்சாரத்தால் ஏற்படுவதைவிட மக்கள் தொகை பெருக்கத்தாலும், அவர்களது பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது என்பதை யாரும் பொருடப்படுத்துவதில்லை.
காடுகள் மறைவதற்கு காரணம் மனிதர்களின் நடமாட்டமும்,வனநில உரிமை சட்டத்தின்  பெயரில் காடுகளில் எங்கும் வழிப்பாட்டுத் தலங்கள்,கல்வி நிறுவனங்கள் அமைந்திருப்பதும்தான்.

தற்போது அறிவியல் என்பது காசு,கல்வி,பொழுது போக்கு அடிப்படைக்கானதே தவிர வாழ்வியல் அடிப்படைக்கானதல்ல என்பதை நமது அன்றாட வாழ்க்கை காட்டுகிறது.உயிரினங்கள் அனைத்தும் எப்படி மனித வாழ்வின் உயிர்நாடியான காடுகள் சுற்றுசூழலுடன் எப்படி பிணைந்திருக்கிறது என்பதை அறிவியலாக இப்போதேனும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இத்தகைய காடுகளின் கட்டமைப்பாளர்(ARCHITECT/CIVIL Engr) யானைகள்தான்.வளர்ந்த யானைகளின் உணவு சுமார் 250 கிலோ உணவும் 150 லிட்டர் தண்ணீரும் ஆகும்.எனினும் உண்ட உணவில் சுமார் 50% சதவீத உணவை மட்டும்தான் ஜீரணிக்கிறது,மற்றவை கழிவுகளுடன் வெளியேறுகிறது.இந்த கழிவுகளில் யானைகள் உண்ட பெரும் மரப்பட்டைகள் போன்ற உணவு பொருட்கள் மென்மையாகி வெளிவருகிறது.இதை உண்டே வண்ணத்துபூச்சிகளும்,பல்வேறு வண்டுகளும் வாழ்கிறது.பெரும் மரப்பட்டைகளை உரிக்கவும் அதை ஜீரணிக்கவும் முடியாத சின்னஞ்சிறு வண்டினங்களுக்கு உணவை அளிக்க இயற்கை படைத்த மாபெரும் உயிரினம்தான் யானை.வண்ணத்துப்பூச்சிகள் இருந்தால் தானே மகரந்த சேர்க்கை மற்றும் அயற்மகரந்த சேர்க்கை நடந்து மரங்களும்,செடி,கொடிகளும் பல்கி பெருகி வனமாகும்.

இப்படி ஒரு யானை, வனம் உருவாவதற்கு காரணமாயிருக்கிறது. இத்தகைய அறிவியலை அறியாத மானுடமாக வளர்ந்து நிற்கிறோம்.ஒரு யானையின் அழிவு ஒரு வனத்தை அழித்துவிடுகிறது.மனிதனின் தலையீட்டால் 10 ஹெக்டர் பரப்பளவுள்ள வனம் அழியும்போது 1500 வகை பூக்கும் செடிகளும்,கொடிகளும்,700 வகை மரங்களும்,60 வகை நீர்நில வாழ்விகளும் அழிந்து போகின்றன என்றும்,ஒரு மழைகாட்டு மரம் 400 வகைப் பூச்சிகளுக்கு வாழிடமாக இருக்கிறது என்றும் அய்.நா வின் சுற்றுசூழல் ஒன்று கூறுகிறது.

எல்லா உயிரினங்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பது கூட உயிரினப் பாதுகாப்பான அறிவியல் குரலாகவோ,அழகியல் பார்வையாகவோ இன்றி,பாவம்,புண்ணியம்,இறைச்சியுண்ணாமை,தீண்டாமை சார்ந்தெழுந்த கருத்தாகவே,இன்று உயிரினங்கள் படும் அவலநிலையால் அறிய முடிகிறது.



பொல்லாத பொருளாதார உலகம் அச்சடித்த காகிதத்தை சோறுக்கும்,நீருக்கும் ஈடாக்கிவிட்டது,இதனால் உயிரினங்களின் தேவை இரண்டாம் பட்சமாகிவிட்டது.யானையின் வலசை பாதை (Elephant corridor) அதை போன்றே பல்வேறு பறவைகளின் வழித்தடங்களும் இன்று,ரயில் தடங்களாகவும்,உயர்ந்த கட்டடங்களாகவும்,மின் மற்றும் அலைபேசி கோபுரங்களாகவும் வழிமறித்து நிற்கின்றன,உயிரினங்களின் வாழ்விடத்தையும்,வழிதடங்களையும் ஆக்ரமித்து உயிரை பலி வாங்கி விடுகிறது இன்றைய முன்னேற்றம்.யானைகளை கும்கி யானையாக மாற்றுவது,வழிப்பாட்டு தலங்களில் நிற்க வைத்து பிச்சையெடுக்க வைப்பது போன்ற செயல்களை காணும் போதெல்லாம், கம்பீரம் தொலைத்த யானை கண்ணீரைதான் வரவழைக்கிறது.

இயற்கை அதன் போக்கில் ஒவ்வொன்றையும் படைத்துள்ளது,அதற்கான வளர்ச்சி காலம்,குணாதிசயம் என அனைத்தும் ஒரு காரணத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது,இதை அறிந்து நடந்து கொள்ள வேண்டியது மனித இனத்தின் கடமை,வேகமாக வளரும் எதுவும் வேகமாக அழியும்,நிதானமாக வளருவது நீடித்து நிற்கும் என்பது இயற்கை.

வாழ்க்கையென்பதும் வளர்ச்சியென்பதும் முடிவை நோக்கியதே.
“அவரவர் நாட்டிலுள்ளதையே அவரவர் போற்றி,புகழ்ந்து காக்கவேண்டும்.அதுவே உண்மையான Conservation ஆகும்”

இயற்கையை அழித்தால்,பூமியை அழித்தால்,அது தன்னை காப்பாற்றிகொள்ளும்,அப்போது மனிதர்கள் அழிந்து போவார்கள்.உங்களது முன்னேற்றம் கழிவு பொருளாய் கிடக்கும்.உயிரினங்களை போற்றுங்கள்,-அன்புடன் லீலா.

Sunday 19 June 2016

படிக்க மறந்த பாடம்.........................

                     
உண்மையில் எதற்காக படிக்கிறோம்? அல்லது படிக்க

வைக்கப்படுகிறோம்?

கல்வியென்பது என்ன?

இன்றைய குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மனநிலை என்ன?

வாழ்தலென்பது,குழந்தை பெற்றோருடனும்,உற்றார்  உறவினருடனும் வாழ்வது,நமது பாரம்பரிய உணவுகள், திருவிழாக்கள் என செல்வது, ஏட்டறிவோடு, பட்டறிவும், பார்த்தறிவதும் ஒரு குழந்தையை செம்மையுற செய்கிறது.ஆனால் இன்றோ பிறந்தவுடனேயே பள்ளிகளை தேடுவதும்,அதோடு உண்டு உறைவிட பள்ளியென்றாலும் பிள்ளைகளை சிறுவயதிலேயே அங்கே விட்டுவிடவும் தயாராக இருக்கிறார்கள்.

சிறந்த சூழல்(Good Environment) உள்ள இடமாகதான் தேர்ந்தெடுந்திருக்கிறோம் என்ற சமாதானம் வேறு.நீண்ட நாட்களாக ஒரு கேள்வி என்னுள் உள்ளது,எத்தைகைய சூழலாயினும்,பெற்றோர் இல்லாத சூழல் எப்படி சிறந்த சூழலாக இருக்க முடியும்.பெற்றோருடன் குலாவியும்,பிணங்கியும் பின் சேர்ந்தும் சிரித்தும் வாழும் வாழ்க்கையை இழந்து பெறுவது என்ன?

எதற்காக இந்த பயணம்? எதை நோக்கிய பயணம்?

குழந்தைகள்  யாவரும் மருத்துவராக,பொறியாளராக ஆகிவிட வேண்டும்.இதன் மூலம் ஒரு நோயாளி சமூகத்தையல்லவா வேண்டி விரும்புகிறார்கள் இந்த படித்த மேதாவிகள்.
இல்லையென்று மறுத்தால் உங்கள் குழந்தைகளிடம் மருத்துவம் பார்க்க யார் வருவார்கள்.

மெக்காலே தன் குடும்ப கடனை தீர்த்துக்கொள்ள இந்தியாவில் பணியாற்ற வந்தவர்,நமது கல்வி முறையை குழித்தோண்டி புதைத்துவிட்டு மெக்காலே கல்வி திட்டத்தின் மூலம் இந்திய குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடித்து தன் குடும்பத்தின் செழிப்பை உயர்த்திகொண்டவர்.இந்த கல்விதிட்டத்தை சீரமைக்க வேண்டிய நிர்பந்தத்தை விட,பெற்றோர்களையும் குழந்தைகளையும் மாய உலகத்திலிருந்து மீட்க வேண்டிய அவசியமே  முன் நிற்கிறது.

கல்வியென்பது வாழ்க்கைக்கான அறிவையும், பண்பாட்டையும், முடிவெடுக்கும் திறனையும்,ஒழுக்கத்தையும் கற்பிப்பதாக இருக்க வேண்டும்,அதற்கு சிறந்த இடம் குழந்தையின் முதல் ஆசிரியரான அம்மாவுடன் இருப்பதுதான்.
சிந்தனைகளை அழித்து,வெறும் மனப்பாடம் செய்வது மட்டும் கல்வியல்ல.ஒவ்வொவ்வொரு குழந்தையும் மாபெரும் தனித்தன்மையுடனும்,திறமையுடனும் உருவாகின்றன,அவற்றை போற்றி வளர்க்கமால்,தனித்தன்மையை இழக்க வைக்கும் முயற்சிதான் இன்றைய பள்ளி தேடல்கள்.

வேலை,சம்பளத்தை பொறுத்தே என்ன கல்வி,எந்த பள்ளி என்ற முடிவெடுக்கப்படுகிறது.இதில் குழந்தையின் பங்கு இருப்பதில்லை,இதில் சில பெற்றோர்கள் கூறும் செய்திகள் சற்று அதிர்ச்சியாகவே உள்ளது,குழந்தைகள் வளர்வதற்கு முன்பாகவே  அத்தைகைய பள்ளிகளை பழக்கிவிடவேண்டுமென்றும்,
இல்லையென்றால் நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்பதுதான் அது....படிப்பு என்பது உறவுகளுடன் இணக்கத்தை, ஒற்றுமையை வளர்ப்பதற்கு பதிலாக இடைவெளியை மனதளவிலும், உடல்ளவிலும் உண்டாக்கிவிடுகிறது,இந்த இடைவெளி சமூக மனிதர்கள் மீதான அக்கறையை,அன்பை குறைத்துவிடுகிறது,நேர்மையும்,ந்டபுறவும் உண்மையாக ஆழ் மனதில் இருப்பதில்லை,தன்நலனை மட்டுமே முதன்மைப்படுத்திக்கொள்ளும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம்.
 இத்தைகைய கல்வி, சாமன்ய மனிதர்களை புறம் தள்ளுகிறது,முட்டாள் என் கிறது,நான் யார்? நான் உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது? எந்த நதி எங்கு உற்பத்தியாகிறது? என் தேவையென்ன நாட்டின் தேவையென்ன?எந்த கேள்வியும்,அதற்கான தேடுதலும் இல்லாத கல்வி.

பெற்றோர்களே! குழந்தைகள் உங்களிலிருந்து வந்தவர்களேயன்றி உங்களுக்காக வந்தவர்கள் அல்ல என கலீல்  ஜிப்ரான் சொல்கிறார் எத்தனை பெரிய சிந்தனை,எவ்வளவு உண்மை பொதிந்துள்ளது சற்றே சிந்தியுங்கள் பெற்றோர்களே.

குழந்தைகள் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மாபெரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள்,இவர்களது கனவுகள் என்ன? இவர்களுக்கு என்ன பிடிக்கும்? யாரவது கேட்டதுண்டா? கேட்டாலும் அதை அனுமதித்தது உண்டா?

தன் விருப்பத்தை அழித்துக்கொள்வது எத்தனை துயரமான நிகழ்வு,இந்த நிகழ்வுதான் வருங்கால சந்ததியினர் பலருக்கு நடக்கிறது.ஆன்மாவின் கனவுகளை அழித்தலும் ஒரு வகை மரணம்தானே.

கவிதை எழுத,புகைப்படமெடுக்க,ஆட,பாட ,சித்திரம்  தீட்ட என எத்தனை எத்தனையோ அரிய திற்மைகள் எல்லாம் முடங்கிதான் போய்விடுகின்றன பங்களா,கார்,ஆசைகளிலும் பெயருக்கு  பின்னால் போடும் படிப்புகளிலும்.

உங்களின் கனவுகளை உங்கள் குழந்தைகள் மீது திணித்து சுமக்க வைப்பது கயமையல்லவா? அதற்காக அவர்களது குழந்தைதன்மையை அழிப்பது எப்படி நியாயமாகும்.

திறமைகள் கூட ஆன்ம மகிழ்விற்காக அவர்களுக்கு ஊக்குவிக்கப்படுவதில்லை என்பது மேலும் ஒரு வேதனை,டிவிக்களிலும்,இன்னும் பிற மீடியாக்களிலும் நாலு பேர் பார்க்க முதலாவதாக வரவேண்டும்.இந்த குதிரை பந்தையத்தை  யார் சொல்லிக்கொடுத்தார்கள்,என் குழந்தை முதலாவதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை இருக்குமளவுக்கு,என் குழந்தை குழ்ந்தையாக இருக்கவேண்டுமென்ற சிந்தனை பெற்றோருக்கு இருப்பதில்லை.
மாம்பழத்தையும்,ஆப்பிளையும் எப்படி ஒப்பிட முடியும். ஒவ்வொவ்வொரு குழந்தையும் ஒரு வகை.ஒப்பீடு என்பது ஒரு நோய்,தாய்,தந்தை,ஆசிரியர் என அனைவரும் மற்றவரோடு ஓப்பீடு செய்து பழக்கிவிட்டார்கள்.நீ நீயாக மட்டும் இரு என்பதில்தான் தனித்தன்மை இருக்க முடியும். அதை விடுத்து நீ பிறரை போல் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தனித்தன்மை அழிக்கப்பட்டுவிடுகிறது.
ஒன்பது வயதிலிருந்து பதினாறு வயது வரை பதின்ம பருவம்  (adolescent ) இந்த பருவத்தில்தான் அன்பும்,அரவணைப்பும்,மிதமான கண்டிப்பும்,புரிதலும் தேவைப்படும் நேரம் அந்த பருவத்தில் பெற்றோருடன் இருப்பதே சாலச் சிறந்தது.
எல்லாவற்றிக்கும் மேலாக உடனிருந்து அவர்களின் வளர்ச்சியை,குறும்புகளை,சாதனைகளை,தோல்விகளை கண்டு ரசிக்கவும்,தாங்கிகொள்ளவும்,தேற்றவும் நான் இருக்க வேண்டும்.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்.
 மழலைச்சொல் கேளா தவர். 

குழந்தைகளை போற்றுவோம்  கல்வியென்பது யாதென்று அறிவோம் நல்ல சமூகம் வளர்ப்போம்.


அன்புடன் -லீலா.

என்னுடைய நீண்ட நாள் சிந்தனைகளை இங்கு பதிவிடும்போது  எழுத்தாளர்  திரு.எஸ்.ரா அவர்களின் சொற்களை பயன்படுத்தியிருக்கிறேன் அவர்களுக்கு எனது நன்றி.




Friday 10 June 2016

                      தாய் நாடு………………………

தாய் நாடு எண்ணும்போதே மனசெல்லாம் குதூகலமும்,இனிமையும் நிரம்பி வழிகிறது,என் தேசம் என் உரிமையென மனதின் முடுக்கெல்லாம் கொண்டாடும்.நிற்க.இத்தனை உரிமையை,உணர்வுகளை,நினைவுகளை வழங்கும் நாட்டிற்கு என்ன செய்கிறோம் என்ற சிந்தனை ஒரு புறமிருக்க.



தன் குடும்பம் பேண பணம் சம்பாதிக்க அயல்நாடு செல்வோர்
பலர்.இவர்களை தாயன்போடு வழியனுப்பி வைக்கிறது எனது தேசம்.உனது அறிவு,உனது திறமை வேறு எங்கோ பயன்பட போகிறது,அது என் தேசத்தின் புகழ் பாடட்டும் என்றெண்ணி வழியனுப்பி வைக்கிறது,பல நாடுகளில் உள்ள தொழிற் நுட்பத்தையும்,நல்ல பழக்க வழக்கங்களையும் எனது தேசத்தில் இறக்குமதி செய்வாய் என எண்ணி வழியனுப்புகிறது.
அந்நிய நாட்டினர் இன்றளவும் இந்திய தேசத்தின் அமைதியையும், சகிப்புத்தன்மையையும் பாரட்டி மகிழ்கிறார்கள்,திருக்குறளை போற்றி பாதுக்காக்கின்றனர்,அவர்கள் இந்தியா வரும்போது,இந்திய கலைகளையும், கலாச்சாரங்களையும் ரசித்து போற்றுகின்றனர்.

ஆனால்,நம் நாட்டிலிருந்து பிழைப்புக்காக அயல் நாடு சென்று பத்து அல்லது பதினைந்து வருடங்கள் மட்டுமே ஆகி,வருடம் ஒருமுறை வந்து செல்லும் Non Resident of India (NRI)  என்று சொல்லிகொள்கிற இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் நம் நாட்டையும்,நாட்டு மக்களையும் எப்படியெல்லாம் தரம் தாழ்த்தி பேசுகிறார்கள் என்பது வேதனையை தருவோதோடு,
இவர்களின் வேர் இங்கு இருக்க,கிளைகளை மட்டுமே அயல்நாட்டில் பரப்பி உள்ளார்கள்,தேவைப்படும்போது இவர்களது கிளை வெட்டப்படும் என்ற நிலையில் வேர் கொண்ட இடத்தை பழிப்பது சற்று ஆச்சரியமாகவும் உள்ளது.

எனது தேச மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு,வெளிநாடு செல்லும் அன்பர்களே,நண்பர்களே உங்கள் மனதை நோக செய்வது எங்கள் எண்ணமில்லை.வெளிநாடு சென்று வருவதாலாயே இங்குள்ளவர்கள் எல்லாம் அறிவில் குறைந்தவர்கள் என்ற எண்ணம் வேண்டாம்,நீங்கள் கூறுவது எங்களுக்கும் தெரியும்,எங்களது,மூளையும்,திறமையும்,திறனும் அயல்நாடுகளில் அதிகமாக மதிக்கப்படும் அதற்கான விலையும் தரப்படுமென்றும்,எனினும் நாங்கள் எங்கள் தேசத்திற்காக,எங்கள் தேச மக்களுக்காக பணிப்புரிகிறோம் என்பதிலே பெருமிதமும், பேரானந்தமும்,உவகையும் கொள்கிறோம்.ஒரு நாளும் அந்த ஆனந்தம் உங்களுக்கு கிடைக்காது.

இந்த உலகத்திற்கு, கல்வியையும்,கலவியையும்,கணிதத்தையும், கற்பையும், கலாச்சாரத்தையும்,பண்பாட்டையும்,ஆத்திகத்தையும்,
மருத்துவத்தையும்,கலைகளையும்,உணவுகளையும் அறிமுகப்படுத்தியது என் தேசம்.

வயது காலத்தில் குடும்பத்திற்கு அனைத்தையும் ஈந்த தகப்பன் நலிவுற்ற காலத்தில் சோர்ந்து கிடப்பது போல், சற்றே சோர்ந்து இருக்கிறது.ஆனால் நலிவுற்ற தகப்பனை பெருமைப்படுத்தும் பிள்ளைகளென,இருக்க வேண்டியவர்கள் இந்நாட்டின் பிள்ளைகள் நாம்தான்.பல்வேறு மதம்,இனம்,பிரிவு என எத்தனையோ உள்ளடக்கிய என் தேசம்,இந்த உலகத்தாரின் பார்வையில் ஓர் ஆச்சரியம்,அதிசயம்.

என் தேசத்தில் சில பல குறைகள் உள்ளது அதை சரி செய்யவேண்டியதுதான் நம் கடமையே தவிர எள்ளி நகையாடுவது அன்று,நீங்கள் சொல்கிறீர்கள் NRI  பணத்தை இந்தியாவில் நாங்கள் முதலீடு செய்கிறோமென்று,உங்களின் வளம் அது என் தேசத்தின் வளம்.உங்களின் வளம் எது? உங்களின் மூளை,திறமை,திறன். வளத்தை கொடுத்துவிட்டு பொருளை கொண்டு வந்திருக்கிறேன் என பெருமை கொள்வது புத்திசாலித்தனமா?

சரி! எங்கு முதலீடு செய்கிறீர்கள்,எங்கள் தேச விவசாயிகளிடம் முதலீடு செய்கிறீர்களா?இல்லை ஏழை மாணவர்களின் படிப்புக்காக முதலீடு செய்கிறீர்களா? இல்லை  இந்தியா உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமென  தொழில்நுட்பத்திலே முதலீடு செய்கிறீர்களா?

உங்களுக்கென வீடு கட்டி கொள்வதும்,கார் வாங்கி கொள்வதும்,வங்கிகளில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தில் போடுவதும் முதலீடு என்றால்,அதை எங்கள் கிராமத்து ஆத்தா செய்கிறார்.

ஒரு நாள் விவசாயிகளுடன் கழித்திருப்பீர்களா? பெரிய உணவகங்களில் உண்ணும் போதும்,வீணாக்கும் போதும் இங்கு வெறும் வயிற்றுடன் படுக்கைக்குபோகும் இந்தியனைப்பற்றி யோசித்து இருப்பீர்களா? Resort களில் காலம் கழிக்கும்போது வீடுகளற்று கிடக்கும் என் சக மனிதனை நினைத்தது உண்டா? கண்ணீர் சிந்தியது உண்டா? இப்படி எதையும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்பணிக்காத உங்களுக்கு என் தேசத்தை பற்றியும்,என் தேச மக்களை குறித்தும் அவதூறு பேச யார் அதிகாரமும்,உரிமையும் கொடுத்தது?

அயல் நாட்டிலே சின்ன இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் பதறி போகின்ற என் தேசமும்,தேச மக்களும் உயர்ந்தவர்கள்.என் தேச மக்கள் அங்கே இருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் பதறவில்லை, தன் நாட்டில் வேர் பரப்பி அதை பாதுக்காக்கும் அவர்களின் தேசப்பற்றை கண்டு அவர்களை வணங்குகிறோம்.

என்னை எது பேசினாலும்,தவறென்றால் சரி செய்து கொள்வேன்,என் மீது தவறில்லையென்றாலும் நீங்கள் பேசும் அவதூறுகளை மன்னிக்கவும்,மறக்கவும் செய்வேன்.ஆனால் என் தேசத்தையும்,என் தேச மக்களையும் தரம் தாழ்த்தி பேசினால் ஒரு நாளும் மன்னிக்க முடியாது…………

NRI நண்பர்களே உங்களை பெரிதும் மதிக்கிறோம்,அன்பு காட்டுகிறோம், உங்களின் கருத்துகளை மதிக்கிறோம்,அதையே நம் தேசத்திற்கு திருப்பி கொடுங்கள் என கேட்கிறோம்,ஆரோக்கியமான காரசாரமான விவதாத்திற்கு பின்னும் நட்புடன் இருக்கும் பண்பை என் தேசம் போதித்துள்ளது.

         “நாட்டை காப்பதும் தாயை காப்பதும் ஒன்றுதான்”.


அன்புடன்-லீலா.