Tuesday 5 July 2016

மேற்கு தொடர்ச்சி மலையின் அற்புதம்…….. (WONDERS OF WESTERNGHATS)

                  
         இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
         வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.




மேற்கு தொடர்ச்சி மலை அத்தகைய உறுப்பாக நம் நாட்டிற்கு அமைந்திருந்திருப்பது இயற்கையின் பெருங்கொடை. இதில் அப்படி என்ன அற்புதம்,அதிசயம்,ரகசியம் பொதிந்து கிடக்கிறது? தீராத கேள்வி என்னுள்ளே..






இப்பொழுதெல்லாம் WOW என்றால் Wonders Of Westernghats என்றே தோன்றுகிறது,எத்தனை அழகு,ரம்மியம்,காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் இந்த பேரழகியின் Bio-data  என்னவென்று பார்ப்போமா?




மலையரசியின் பிறப்பிடம்:
இவளின் பிற்ப்பிடம் மாராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்க்ளின் எல்லையிலுள்ள தபதி ஆற்றின் தெற்கு பகுதியாகும், எண்ணிலடாங்க ஆறுகளை உருவாக்கும் இவள் பயணிக்கும் மாநிலங்கள் ஆறு, குஜராத்,மகாராஷ்டிரம்,கோவா,கர்நாடகா,கேரளாமற்றும் தமிழ்நாடு ஆகும்.தமிழ் நாட்டில் கன்னியாகுமாரியில் இந்த குமரி தன் நீண்ட பயணத்தை ஓய்வைடைய செய்கிறாள்.

அழகின் அளவு…….

இவள் 1600 கி.மீ நீளமும்,900 மீட்டர் உயரமு,174700 சதுர கிலோமீட்டர் தன் அழகை நீட்டி,வியாபித்து, உயர்ந்து நிற்கின்றாள்.

அழகியின் பெயர்….

அழகு என்றாலே பல பெயர்கள் வந்துவிடுமே, மகாராட்டிரத்திலும்,கர்நடாகாவிலும் சாயத்ரி மலையெனவும்,தமிழ்நாட்டில் ஆனைமலை, நீலகிரி மலை எனவும்,கேரளாவில் மலபார் மலை, அகத்தியர் மலை எனவும் அழைக்கப்படுகிறாள்.என்றாலும் இவள் சிகரம் காட்டுவது கடவுளின் நகரம் எனப்படும் கேரளாவில்தான்.ஆனைமுடி சிகரமாக 2695 கி.மீ உயர்ந்து நிற்கிறாள் இந்த மலையரசி.




ஆதியில் எங்கிருந்தாள்……..
இவள்,கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது. முற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் செசல்சு தீவுகளோடு இணைந்திருந்தது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்தது மற்றும் ஏறக்குறைய 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியப் பகுதிகள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும். இன்றும் மராட்டிய மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எரிமலை இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகிறது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு பிற்காலத்தில் அரிய தாவரங்களும் விலங்குகளும் உருவாக காரணமானது.



















இவளின் அழகு என்ன?

ஆறுகளும்,அருவிகளும்,விலங்குகளும்,பறவைகளும்,செடிகளும்,கொடிகளும்,

மரங்களும், வான் தொடும் இவளின் எழுச்சிகளும்,பேரழகு.. கோதாவரி, கிருஷ்ணா, 

காவிரி, தாமிரவருணி உள்ளிட்ட பெரிய ஆறுகள், மணிமுத்தாறு, 

தென்பெண்ணையாறு, வைகை, பெரியாறு உள்ளிட்ட சிற்றாறுகள் போன்ற 

தென்னிந்தியாவின் 126 முக்கிய ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலையில் 

உற்பத்தியாகி வங்காள விரிகுடா, மற்றும் அரபிக் கடலில் கலக்கின்றன. 

தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய நிலங்கள், 

குடிநீர் தேவை இந்த ஆறுகளையே நம்பியுள்ளன.



வீழ்தல் அழகு என்பதையும்,வீழ்ந்தால் அருவி போல் வீழ்வேன் என்ற வரிகளையும் நினைவுப்படுத்தும் எண்ணற்ற அருவிகள் இருக்கின்றன்,எனினும் மிகவும் பிரசித்தியான சில 

அருவிகள்




மேற்கு தொடர்ச்சி மலையில் குற்றாலம், அகஸ்தியர், சுருளி, வெள்ளிநீர் வீழ்ச்சி, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி போன்றவை ஆகும்.

ஏரிகள்:

ஊட்டி ஏரி, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, பூக்காடு ஏரி, தேவிக்குளம் ஏரி, லிட்சினி யானை ஏரி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் ஏரிகளும் உள்ளன.

நன்னீர்:
ஒரு சதவீதத்துக்கு குறைவான உப்புத் தன்மை கொண்ட நீரே நன்னீர் எனப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும், ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர் முழுமையும், நன்னீராகவே கிடைக்கின்றன.


விலங்குகள்:





கருங்குரங்கு, காட்டுத் தவளைகள், பறக்கும் பாம்பு, மலைமுகட்டில் வாழும் வரையாடு, பல நன்னீர் மீன்கள், வண்டினங்கள், ஆவுளி (kadal pasu), ஆற்று ஓங்கில்(River Dolphin),






இன்னும் கீழ் காண்பவையெல்லாம்


அமெரிக்காவிலுள்ள உலக அறிவியல் ஆய்வகத்தின் ஆசியப் பிரிவு வெளியிட்ட இந்திய வன வளங்கள் குறித்ததோர் புள்ளி விபரம்









1. நுண்ணுயிர்கள் (Bacteria) - 850இனம்
2. நீர்ப்பாசம் (Algae) - 6500 இனம்
3. பூஞ்சை (Fungi) - 14500 இனம்
4. கல்பாசம் (Lichens) - 2000 இனம்
5. பாசிகள் ((Bryophytes) - 2850 இனம்
6. பெரணிகள் (Heridophytes) - 1100 இனம்
7. ஒரு வித்திலைத் தாவரம் (Gymnosperm) - 64 இனம்
8. பூக்கும் தாவரம் (Flowering plants) - 17500 இனம்
9. ஒரு செல்லுயிரி (Protista) - 2577 இனம்
10. கணுக்காலிகள் (Arthopoda) - 60383 இனம்
11. சங்கு சிப்பிகள் (Mollusca) -5050 இனம்
12. ஒரு செல் முதுகுத் தண்டுள்ளவை (Proto chordata) - 116 இனம்
13. மீன்கள் (Fishes) - 2546 இனம்
14. தவளைகள் (Amphibia) - 206 இனம்
15. ஊர்வன (Repritles) - 485 இனம்
16. பறவைகள் (Birds) - 1330 இனம்
17. பாலூட்டிகள் (Mammals) - 372 இனம்
18. மற்ற முதுகெலும்பிகள் (other Invertibrates) - 8329 இனம்.

மலைகள்:

பொதிகை மலை, ஆனைமுடி,ப்னாசுராமலைமுடி,பிலிகிரிரங்கன் மலை,செம்பரா மலைமுடி,தேஷ் (மகாராட்டிரம்) ,தொட்டபெட்டா, கங்கமூலா சிகரம், அரிச்சந்திரகட், கால்சுபை, கெம்மன்குடி, கொங்கன்,குதிரேமுக் மஹாபலேஷ்வர், மலபார், மலைநாடு, முல்லயனகிரி,நந்தி மலை,நீலகிரி மலை,சாயத்திரி தாரமதி, திருமலைத் தொடர்,வெள்ளாரி மலை.

பாதுகாக்கப்பட்ட இடங்கள்

அன்சி தேசிய பூங்கா,ஆரளம் பாதுகாக்கப்பட்ட காடுகள்,அகத்திய மலை உயிர்கோள காப்பகம்,அகத்தியவனம் உயிரியல் பூங்கா,ப்ந்திப்பூர் தேசிய ,பன்னார்கட்டாபூங்கா தேசிய பூங்கா,பத்திரா காட்டுயிர் உய்விடம்,பிம்காட் காட்டு யிர் உய்விடம் ·பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் · சன்டோலி தேசிய பூங்கா · சின்னார் காட்டுயிர் உய்விடம் · தான்டலி தேசிய பூங்கா · இரவிகுளம் தேசிய பூங்கா ·கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா · இந்திராகாந்தி தேசிய பூங்கா · இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் ·

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ·கரியான் சோலை தேசிய பூங்கா · கர்நாலா பறவைகள் உய்விடம் · கோய்னா காட்டுயிர் உய்விடம் · குதிரைமுக் தேசிய பூங்கா ·முதுமலை தேசிய பூங்கா · முதுமலை தேசிய பூங்கா · முதுமலை புலிகள் காப்பகம் · முக்கூர்த்தி தேசிய பூங்கா · நாகரகொளை தேசிய பூங்கா ·புது அமரம்பலம் பாதுக்காக்கப்பட்ட காடுகள் · நெய்யார் காட்டுயிர் உய்விடம் · நீலகிரி உயிர்கோள காப்பகம் ·
பழனிமலைகள் தேசிய பூங்கா ·பரம்பிக்குளம் காட்டுயிர் உய்விடம் · பெப்பாரா காட்டுயிர் உய்விடம் · பெரியார் தேசிய பூங்கா · புசுபகிரி காட்டுயிர் உய்விடம் ·ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் · செந்துரிணி காட்டுயிர் உய்விடம் · அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா · சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் ·சிறிவில்லிப்புத்தூர் காட்டுயிர் உய்விடம் · தலைகாவேரி காட்டுயிர் உய்விடம்· வயநாடு காட்டுயிர் உய்விடம்.

இப்படியாக பட்டியலில் அடக்க முடியாத எண்ணற்ற அற்புதங்களை கொண்டவள்தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலையரசி.

ஒரு நீர்வள ஆதார பொறியளாராக,மாபெரும் கேள்வி என்னை தொலைத்த வண்ணம் இருந்த்து அதற்கான விடை கண்ட போது இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அற்புதம் என்ன சொல்வேன்……..

கேள்வி இதுதான்.

இமயமலை முழுவதும் பனியால் மூடப்பட்டு,அந்த பனி உருகும்போது வற்றாத ஜீவ நதிகள் உருவாகின்றன.உலகின் அனைத்து பகுதிகளிலும் இதுவே நடக்கின்றது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பனி மூடாக்கு இல்லை இப்படியிருக்க, எப்படி பெரிய ஆறுகள்,அருவிகள் தோன்றுகின்றன? என்பதுதான் அந்த கேள்வி.

மழை என்ற ஒற்றை சொல் மட்டும் பதிலாக இருக்க முடியாது என தோன்றிற்று,மழையென்றால் பூமிக்குள் ஊடுவியும்,மேற்பரப்பு நீராகவும் ஓடிவிடும் பட்சத்தில் தஞ்சையின் கழிமுக பகுதி வரை எப்படி இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் பயணிக்கிறது?






பதில் கிடைத்த மகிழ்வுதான் இந்த பகிர்தல்.

மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில் கிலோமீட்டர் கணக்கில் பரந்து விரிந்து கிடக்கும் புல் படுக்கைகள் (Grass bed) தான் இதற்கான காரணம்,எப்படி பனி மலை உருகி சிறிது சிறிதாக ஆறாக,நதியாக வருகிறதோ,அதைப்போல இந்த புல் படுக்கைகள் sponge போல மழை நீரை வாங்கி தேக்கி வைத்துக்கொண்டு சொட்டு சொட்டாக அருவியாக கொட்டுகிறது.

மேலும் ஒரு கேள்வி?

இப்படி அருவி/வீழ்ச்சி ஆகிய பின் பூமிக்குள் ஊடுருவி விடாமல் எது தடுத்து கழிமுகம் வரை கொண்டு வருகிறது.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

இந்த குறள் தான் பதிலை தந்த்து.

மணிநீர் என்றால் கண்ணாடி போன்ற சுத்தமான் நீர் (Crystal clear water)


மண் குறித்து கடைசியாக காண்போம்.


மலை என்பது யாவரும் அறிந்த ஒன்று


அணிநிழற் காடு என்பது குளிர்ந்த நிழல் தரக்கூடிய காடு ஆகும்.

மண் என்பது குறித்து ஒரு பொறியாளராக தேடி பார்த்த போது

குறளுக்கு விளக்கவுரையாக வெட்ட வெளி நிலமென கொடுக்கப்பட்டிருந்தது.மீண்டும் மீண்டும் தேடியபோது மருநிலம் என பொருள் கிடைத்தது.


அதாவது,சூரிய ஓளி நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்த சோலைகாடுகளின் இலைகள் உதிர்ந்து மட்கி,மண் போன்றாகி நிலம் தன் இயல்பு நிலையிலிருந்து மருவி நிற்கும். மருநிலம் தண்ணீரை பூமிக்குள் ஊடுருவ விடாமல் மேலே தாங்கி பிடித்து தக்க வைத்து கடை நிலை வரை கொண்டு சேர்க்கிறது.இந்த சோலைகாடுகள் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இயற்கையின் அற்புதம் என்னவென்று சொல்வது? அற்புதம் புரிந்தபோது இந்த மலையரசி எத்தனை கருணை உள்ளவள்.


இப்படி இயற்கை அள்ளி அள்ளி கொடுக்கும் கொடையைதான் மனிதன் சீரழித்து கொண்டிருக்கிறான்.


இத்தனை அற்புதங்களை கொண்ட மேற்கு தொடர்ச்சிமலை தான் இயற்கையின் உன்னத படைப்பு.


மேற்கு தொடர்ச்சி மலையரசியை போற்றி பாதுகாப்பது மானுடத்தின் கடமை.


அன்புடன் லீலா.




No comments:

Post a Comment