Thursday 27 February 2020

சோறு-6

சோறு முக்கியம் பாஸ்.............

4. அயினி
அயில் என்பதன் பொருள் விருப்பத்துடன் வேண்டுமளவு உண்ணுதல் என்று முன்பு பார்த்தோம். அதனை அடியாகக் கொண்ட
பெயற்சொல்லே அயினி.
குதிரைக்கு மிகவும் பிடித்த உணவு கொள்ளு. ஆனால் அது கடற்கரை ஊரில் எவ்வாறு கிடைக்கும்? அங்கு உப்பை விற்று மாற்றாகக்
கொண்டுவந்த நெல்தான் இருக்கும். அதனைக் குற்றி அவலாக்கி, அயினியாக வயிறார உண்ணத் தன் தலைவனின் குதிரைகளுக்குத் தருவேன்
என்கிறாள் நெய்தல் தலைவி.
உமணர் தந்த உப்புநொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த – நற்றிணை 254/6,7
மா என்பது இங்கு குதிரை. இவை விரும்பி உண்ணும் வகையில் அயினியாக அரிசி அவல் தருவேன் என்கிறாள் தலைவி.
தொண்டை நாட்டு நன்னனிடம் பரிசில் பெற்றுவரப் புறப்பட்டுச் செல்லும் ஒரு கூத்தர் கூட்டம், செல்லும் வழியில் பலவித
நிலங்களைக் கடந்து செல்கிறது. அக் கூட்டம் மருத நிலத்தைக் கடந்து செல்லும் வழியில் அவர்களுக்கு அங்கு கிடைக்கக்கூடிய மீன்குழம்புச்
சோற்றைச் சுவைபட எடுத்தோதுகிறார் புலவர் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்.
மீனின் முள்ளைக் கழித்து ஆக்கின, கொழுப்பால் வெளுத்த
நிறமுடையை துண்டுகளையுடைய வெள்ளிய சோற்றை வேண்டுமளவு அரசரின் துய்த்தலோடு (ராஜபோகம்) உண்ணலாம் என்று சொல்லவந்த
புலவர் கூறுகிறார்:
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு
வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணித்
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் எனக்
கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி – மலைபடுகடாம் 465 – 468
சான்ம் என்பது சாலும் என்றதன் சுருக்கம். போதுமானதாக அமையும் என்று பொருள். அந்த உணவு தூய்மையாலும், சுவையாலும்,
தோற்றத்தாலும் உயர்ந்து அரசனாகிய நன்னனும் விரும்பி நிறைய உண்ணத்தக்கதாயிருக்கும் என்பது இதன் பொருள் என்பர். இவ்வாறாக விரும்பி
உண்ணும் சிறந்த உணவே அயினி.
5. உண்டி, உணவு, ஊண்
இந்த மூன்றுமே உணவு என்ற பொதுவான பொருளை உடையன. இருப்பினும் இலக்கியப் பயன்பாட்டில் இவற்றுக்கிடையே
நுண்மையான வேறுபாடு இருப்பதைக் காணலாம். அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் இங்குக் காண்போம்.
5.1,2 உண்டி, உணவு
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே (புறம் 18:19) என்ற அருமையான புறநானூற்று அடி நமக்குத் தெரியும்.
ஒருவன் மிகவும் பசியோடு தள்ளாடிக்கொண்டு வருகிறான். இன்னும் சிறிது நேரத்தில் சுருண்டு படுத்துவிடுவான் என்ற நிலையில், அவனுக்குப்
பக்கத்துத் தேநீர்க் கடையில் கிடைக்கும் ரொட்டி, பழம், தேநீர் ஆகியவற்றை வாங்கிக்கொடுக்கிறீர்கள். மிகுந்த ஆவலுடன் அந்தப் பண்டங்களை
உண்ட அவன் சற்று நேரங்கழித்து, “அப்பாடா இப்போதுதான் உயிர் வந்தது” என்று சொல்வான் பார்த்தீர்களா, அதுதான் உயிர்கொடுத்தல். அவன்
சாப்பிட்டதுதான் உண்டி.
ஒருவர் விரதம் இருக்கிறார். காலையிலிருந்து ஒன்றுமே உட்கொள்ளாமல் இருந்து மதியவேளையில் எல்லாக் கடமைகளையும்
முடித்து தம் நோன்புக்குரிய பண்டங்களைக் கொண்ட உணவு உண்பார். அதுவே விரதம் கழிப்பது. இவ்வாறு அவர் உண்பதனை
உண்டி என்கிறது குறுந்தொகை.
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே – குறு. 156:1-4
ஒருவன் பசியுடன் இருக்கும்போது ஒரு கிணைமகள் பாகல்காய்க் கூட்டுடன் புளிக்குழம்புடன் சேர்த்த கூழ் தருகிறாள்.
நேரங்கெட்ட நேரமாயிருந்தாலும் பசியினால் அதனையுண்ட புலவன் கூறுகிறான்,
கிணைமகள் அட்ட பாகல் புளிங்கூழ்
பொழுதுமறுத்துண்ணும் உண்டியேன் – புறம் 399:16,17
ஆக, இவற்றினின்றும் நாம் அறிவது, ஒரு திருமண வீட்டில் சமைத்துப் பரிமாறுவதற்காகப் பலவித பாத்திரங்களில்
எடுத்துவைக்கப்பட்டிருப்பது உணவு. அதனை ஒவ்வோர் இலையிலும் பரிமாறியபின் இலையில் இருப்பது உண்டி. உண்டி எனப்படுவது
உண்ணும் நிலையில் உள்ள உணவு. உணவு என்பது பொதுப்படையான சொல் - “நான் புலால் உணவு உண்பதில்லை” என்று சொல்கிறோமே,
அங்கு வருவதைப் போல.
மேலும் உண்டி என்ற சொல் உயர்திணை உயிரினங்கள் உண்ணுவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். உணவு என்ற
பொதுச்சொல் எல்லா உயிரினங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காணலாம். வானில் பறந்து திரியும் வானம்பாடிப் பறவைக்கு
மழைத்துளியே உணவு என்கிறது பட்டினப்பாலை.
தற்பாடிய தளி உணவின் புள் – பட்:3,4
கோடைகாலத்தில் எறும்புகள் தம் மழைக்காலத் தேவைக்காக கிடைக்கின்றவற்றை இழுத்துக்கொண்டுபோய்ச் சேர்ப்பதை
அகநானூறு அழகாகச் சொல்லுகிறது.
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறிபட மறுகி
நுண் பல் எறும்பு கொண்டு அளைச் செறித்த – அகம் 377: 1-3
வேள்வித்தீயில் படைக்கும் பொருள்கள் வேகும்போது ஏற்படும் மணமே தேவர்களுக்கு உணவாகிறதாம். இதனை நாற்ற உணவு
என்கிறார் புறநானூற்றுப்புலவர்.
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவினோரும் – புறம் 62: 16,17
‘நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு’
என்கிறது மதுரைக்காஞ்சி (458)
எனவே, இன்றைய வழக்கில், உண்டி என்பது சாப்பாடு (meal), உணவு என்பது ஆகாரம் (food).
உணவு என்பது உணா என்றும் அழைக்கப்படுகிறது.
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட – மதுரைக்காஞ்சி 660
சில் உணா தந்த சீறூர்ப் பெண்டிர் – அகம் 283: 5
என்ற அடிகளில் உணா என்பது உணவு என்ற பொருளில் வந்துள்ளதைக் காணலாம்.
சோறு ஆக்கிக் கொண்டிருக்கிறேன்...
சூடான சோறாய்சுவைக்க அறுசுவையுடன் உங்கள் கைகளில் விரைவில் நூலாய் தவழும்....
காத்திருங்கள் தோழமைகளே......
அன்புடன்
-கோ.லீலா.


No comments:

Post a Comment