Monday 12 February 2018

சோளக்காட்டு பொம்மை.



சோளக்காட்டு பொம்மையென எனை
சிலாகித்து கதைச்சொல்வார் யாரும்
நடு வயலில் சுட்டெரிக்கும் வெயிலில்
சட்டி மாட்டிய தலையோடு நிற்குமெனை
கேட்டதில்லை என் கதை என்னவென்று

ஆந்தையோடு அளகும் சோடியாய் அமர
வாகாய் குறுக்கும் நெடுக்குமாய் நடப்பட்ட
மரித்த மரமொன்றின் சீரான கிளை நான்
கதிரவன் கரைந்து மேற்கில் மறையும்
வேளையில் கண்திறக்கும் ஆந்தை
விருப்ப உணவு எலியை தேடிபிடிக்கும்
நெல் திருடும் எலியதை ஒழிக்கும்
எலிப் பொந்து போகும் நெல்லெல்லாம்
உழவனின் பங்கென களம் போய் சேரும்.

படித்தவர் பலர் ஆலோசனை செய்தே
நட்டக் கிளையெனக்கு………….
சட்டை மாட்ட வழிச்செய்தார்
விரித்த கரமோடு நிற்க வைத்தார்.
ஆந்தை வந்தமரும் சீரான கழி நான்
சோளக்காட்டு பொம்மையென
புதுச் சட்டையுடன் அவதாரமெடுத்தேன்
ஆந்தையமர வழியற்று போக
திருடும் எலிகள் கொட்டமடித்தன
எனையும் கூட கடித்துப் போயின
நெல்மணிகள் எலிப்பொந்து போயின
உழவனும் வெந்து போனான்
சொச்ச நெல்லும் மிச்சமின்றி
எலிப் பொந்துக்கே போக
அனுபவ பாட்டன் அருமையாய்
நட்ட எனை பொம்மையாக்கி
அறிவாளி நானென்று அறிவிக்கிறீர்
ஒரே ஒரு சந்தேகம் எனக்கு
மனிதர்களை கண்டு பயக்காத
காகங்கள் சோளக்கட்டு பொம்மை
எனை கண்டு எப்படி பயக்கும்….
பாமர பாட்டன் பொக்கை வாயால்
சிரிக்கிறான் நம் அறிவுக் கண்டு…
நானோ செய்வதறியாது நிற்கிறேன்
-கோ.லீலா

No comments:

Post a Comment