Sunday 28 August 2016

பகுதி 1: உணவு அரசியல்.......


என்ன மேம் அரசியல் எல்லாம் பேசுறீங்க….

வாங்க சியாமளா,ஹேமா,கலா மேம்.

அரசியல்ன்னா நீங்க நினைக்கிற மாதிரி ஆயுதம் கொண்டு போர் புரிந்த கால அரசியலும், பின்னர் கட்சி, கொடியென்றும், தேர்தலென்றும் களைக்கட்டும் அரசியல் அல்ல.

சியாமளா: அட என்ன லீலா ஆரம்பம்பமே பெரிய அரசியல் போலிருக்கே………..

ஆமா சியாமளா, இன்னைக்கு உணவும் அது சார்ந்த அரசியல் பத்தியும்தான் பேசபோறோம்.

கலா: என்ன உணவுன்னா அதிரசம் தெரியும் அதென்ன அரசியல்
கலாஅக்கா,சொல்றேன் நீங்களே நிறைய அது தொடர்பா பேசுவீங்க பாருங்க………..

ஒரு உணவு நமக்கு தேவையா? இல்லையா?ஆரோக்கியமானதா? அதற்கான விலை நியாயமா? என்பது குறித்தான முடிவுகளை நுகர்வோர் எடுக்க முடியாத பெரும் சிக்கலில் இன்று இந்த மனிதகுலம் இருக்கிறது.

ஹேமா: உண்மை தான், ஆனால் எதனால் இப்படி நடக்கிறது என்பது நம்மால் உணரமுடிவதில்லையே லீலா.

ஆமா ஹேமா சரியா சொன்னீங்க…………………

இன்று,விளம்பர கலாச்சாரம்பெருகிவிட்டது,அந்த விளம்பரம்தான், நாம் சில உணவு வகைகளை கைவிடவும், சில உணவு வகைகளை அதிகமாக விரும்பும் மனநிலைக்கும் கட்டாயப்படுத்தப்படுகிறோம்.

இன்றைய வணிக உலகத்தில், உணவு வர்த்தகம்தான் மொத்த மதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது.

கலா&சியாமளா: என்னப்பாசொல்ற.

ஆமா தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திட பொங்கி எழுந்த கவிஞன் பிறந்த மண்ணை சேர்ந்தவர்கள் நாம,ஆனா இன்னைக்கு வரைக்கும் பட்டினியால் மரணிப்பவர்களை கொண்ட பூமியை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறோம்.

இந்தியாவிலும் உணவு வர்த்தகத்தின் மதிப்பும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

ஹேமா:லீலா, இந்தியாவில் உணவு வர்த்தகத்தின் மதிப்பு உயர்ந்தால் நமக்கு நல்லதுதானே…..

நல்லதுதான்ஆனா அது ஆரோக்கியமான வளர்ச்சியாகவும்சமமானதாகவும் இருந்தால் நல்லது……….ஆனா அப்படியில்லை

சியாமளா: எத வச்சி சொல்றீங்க லீலா.

இந்தியாவில் 80 கோடி மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள்,பல பேர் படுக்கைக்கு  பசித்த வயிறோடே செல்கிறார்கள்.

அதே நேரத்தில் உலகமயமாக்கல் என்ற ஒன்று பீட்சாகார்னர், டோமினோஸ், கே.எப்.சி, பீட்சாகுடில், மெக்டொனால்ட் என்ற மாயகரம் கொண்டு நடுத்தரதட்டு மக்களை ஒரு போதையில் தள்ளியிருக்கிறது.
வெளிநாட்டு உணவு வகைகளை வீட்டில்   தயாரிப்பது மேட்டுக்குடியினர் மத்தியில் பரவலாகி வருகிறது. அவற்றின் தயாரிப்புக்கென பிரத்யோகமாக தேவைப்படும் பொருட்களை வாங்குவதும் ,பின்னர் பயன்பாடு இல்லாத போது வீசியெறிவதும் மிக சாதாரணமாக நடக்கிறது.

இப்படி வீண் செய்வது ஒரு பக்கமும், பட்டினியாலும், கடனாலும் உயிர்விடும் விவசாயிகள் ஒருபுறமும் இருக்க அதை எப்படி வளர்ச்சி என கொள்ளமுடியும்.

ஹேமா&கலா: ஆமா, நீங்க சொல்றது சரிதான். உடல் எடையும் இப்போ உள்ள குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கூடுதலா போச்சு, சர்க்கரை நோய், இதயநோய் இப்படி அதுக்கும் உணவுதான் காரணம்………..இல்லையா

சரியா சொன்னீங்க, உணவு அரசியல் இங்கிருந்துதான் தொடங்குகிறது……..
அறிவியலை வைத்துக்கொண்டு பணமுதலைகளும்,சுயநலசக்திகளும்
இந்த சமூகத்தை ஆட்டிப்படைக்கிறது.

சியாமளா: சுயநல சக்திகள் எப்படி அறிவியலை பயன்படுத்தறாங்க.

விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதற்கு இது போன்ற நிறுவனங்கள்தான் நிதியுதவி செய்கின்றன, இறுதியில் ஆராய்ச்சியில் அறிவியலுடன்  , அரசியலும் கலந்துவிடுகிறது.

மருத்துவர்கள் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை பரிந்துரை செய்கிறார்கள், குறிப்பாக அமெரிக்காவில் ,ஏனெனில் உயர்கொழுப்பு உணவுகளை பரிந்துரை செய்தால்மாரடைப்பு போன்ற நோய்கள் வந்தால் உடனே வழக்கு போடும் மனோபாவம் கொண்டவர்கள் அயல்நாட்டினர், எனவே மருத்துவர்கள் நீதிதுறைக்கு பயப்படுகிறார்கள், ஏனென்றால் பலகோடி டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டி வரும்.
இதனால், பன்னாட்டு நிறுவனங்கள் மருத்துவரை அணுகுவதை விட, அதிகாரமுள்ள இடத்தை அணுகினால் போதுமானது என்பதை உணர்ந்துள்ளது.

அமெரிக்காவில் 15% மக்கள் மட்டுமே சரியான எடையில் இருப்பதாகவும்,60% அதிக உடல் எடையுடன் இருப்பதாகவும்,25% உடல் பருமனுடன் இருப்பதாகவும் அமெரிக்க அரசின் புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது..


60%+25%  மக்கள் உடல் எடையை குறைக்க உடல் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்லுதல்,அதற்கான உபகரணங்கள் வாங்குவது ,மருந்து மாத்திரைகள் உட்கொள்வது, எடை குறைப்பிற்கான உணவுகளை வாங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

நல்ல உடல்நிலையில் இருக்கும் பலரையும் கூடுதல் எடை, உடல் பருமன் என சொல்லியதால் ஏற்பட்ட விளைவு இது. இதன் அரசியல் மிகவும் மோசமானது.

கலா: ஏம்பா அப்போ B.M.I B.M.I ன்னு சொல்றாங்களே அதை பார்க்க வேண்டியதுதானே………….

அட, சரியா கேட்டீங்க போங்க,அது ஒரு கதை சொல்றேன் கேளுங்க
1830 க்விட்லட் )AdolpheQuetelet)  ன்னுஒருத்தர் ஜோதிடர். கிரகங்களை வைத்து மனித எடையைக் கணிக்க முடியுமா என்று அறியவே பி.எம்.ஐ என்ற கணக்கீட்டை உருவாக்கினார் .B.M.I ன்னா Body Mass Index.

பி.எம்.. 25-க்கும் அதிகமாக இருந்தால் ஒருவர் அதிக எடை, 30 என்றால் உடல் பருமன் என்று கூறப்பட்டது. ஆனால் பி.எம்.. அளவீடே அடிப்படையில் அறிவியல் ஆதாரம் அற்றது. இந்த முறை ஜோசியத்தை அடிப்படையாகக் கொண்டது. 


BMI அளவை எப்படிக் கணக்கிடுவது?

பி.எம்.ஐ. = உடல் எடை / உயரம் (மீ.) * உயரம் (மீ.)


ஹேமா: அட கொடுமையே,அப்புறம் என்ன தான செய்றது………….


இருங்கஇருங்க…..கடைசியா சில தீர்வுகளையும் சொல்ல போறேன்.

பி.எம்.ஐ யால் எந்த வித அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியான நன்மையும் கிடையாது.பி.எம்.ஐ குறைவாக இருப்பவர் நீண்ட நாள் வாழ்வர் என்பதும் உண்மையல்ல.சரி பி.எம்.ஐ பத்தி இன்னும் நாலு பக்கத்துக்கு பேசலாம்


சியாமளா ஏதோ கேட்க வராங்க சொல்லுங்க சியாமளா.


சியாமளா:அது சரி உணவுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?


                                    


ஒருபக்கம் உடல் பருமனை உருவாக்கும் குப்பை உணவுகளை பன்னாட்டு நிறுவனங்கள் கூவிக்கூவி விற்கின்றன. இதனால் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு பன்னாட்டு உணவுகளுக்கு மாறுகிறார்கள்.


                        


மறுபக்கம் இந்த உணவுகளால் ஏற்படும் உடல் பருமனைக் குறைக்க அதே பன்னாட்டு நிறுவனங்கள் ‘டயட் கோக் (Diet Coke), சப்வே சாண்ட்விச் (Subway Sandwich)’ போன்ற அதே குப்பை உணவுகளின் மறுவடிவங்களையும் விற்பனை செய்கின்றன. ஒரு நிறுவனத்தின் உணவுகளைக் கெடுதல் என்று அறிகிற மக்கள், அதேபோன்ற குப்பை உணவுகளை விற்கும் இன்னொரு நிறுவனத்தை நம்பி ஆரோக்கியம் என்கிற பெயரில் பணத்தை வீண் செய்கிறார்கள். இப்படிக் குப்பை உணவுகளால் குறைப்பாடு நோய்கள் வந்தபின் அவற்றைக் குணப்படுத்த மருந்துகளை நாடுகிறார்கள்.
                     


இப்படிக் கற்பனையாக கண்டுபிடிக்கபட்ட குறைப்பாடு நோய்களில் ஒன்று உயர் கொலஸ்டிரால் என்பது. கொலஸ்டிரால் அளவு 200-ஐ தாண்டினால் ஆபத்து, மாரடைப்பு வரும் எனப்பீதியூட்டப்படுவதால் பலரும் அச்சமடைந்து கொலஸ்டிரால் கட்டுப்பாட்டு மருந்துகளை (ஸ்டாடின்) எடுத்துக் கொள்கிறார்கள்.


ஸ்டாடின்கள், பல மருந்து நிறுவனங்களின் கற்பக விருட்சம். இவை கொலஸ்டிரால் அளவைக் குறைக்குமே ஒழிய மரணத்தைத் தடுக்காது. மேலும் இவற்றின் பின் விளைவுகள் ஏராளம். இந்திய ஜனத்தொகையில் சுமார்8% பேர் ஸ்டாடின்களை உட்கொண்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்று ‘8% இந்தியர்கள் மட்டுமே ஸ்டாடினை உட்கொள்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறுகிறது. (இணைப்பு:http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24493771)


ஹேமா: அப்போ எப்படிதான் சாப்பிடறது உடல் எடையை குறைக்கிறது?
நிச்சயமாசொல்றேன்

மனிதனின் வரலாறு உணவால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று, அதாவது சோறு ரொம்ப முக்கியம்,எனக்கு பிடித்த இரண்டு எழுத்து கவிதைசோறுபோன்ற வசனங்கள் சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் தான்.
தானியங்களும்,பயிர்களும் அறிமுகமாவதற்கு முன் மனிதன்,காடுகளில் வேட்டையாடி உணவை பெற்றான்.ஆனால் இப்போது போல் மூன்று வேளை உணவு கிடையாது,ஏனென்றால்,வேட்டையால் எப்போதும் உணவு கிடைக்காது.

ஆடு,மாடு,மான் போன்றவை தேவைப்படும்போதெல்லாம் மேயும்,ஆனால் மனிதன் புலி,சிங்கம் போன்று பசியோடு இருந்து வேட்டையாடிய பின் கிடைத்த உணவை வயிறு புடைக்க சாப்பிட கூடியவனாக இருந்தான். அதாவது விரத்திற்கு பின் விருந்து என்பது போல்.இதிலிருந்து மனிதன் பசிக்கு பழகியவன் என்பது தெளிவாக தெரிகிறது.

ஆதிமனிதன் வேட்டையைத் தேடி அலைந்தவன். அவனுக்குத் தினமும் மும்முறை உணவருந்தும் சொகுசான வாழ்க்கைமுறை அமையவில்லை. பல நாள் பட்டினி கிடந்து ஒரு நாள் மிகப்பெரிய வேட்டையில் ஈடுபட்டு, அதன் பயனால் வயிறு நிரம்ப உண்பதே ஆதிமனிதனின் உணவுமுறையாகவும் வாழ்க்கை முறையாகவும் இருந்தது.
                         


மனிதனின் உடல் பட்டினியுடன் இருக்க கூடிய சக்தியை உடையதாகவே இருக்கிறது.பட்டினி இருந்தாலும் பசியுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, விரதமிருக்கும்போது பசியின் சுவடு இல்லாமல் விரதமிருப்பவர்கள் வீட்டில் சுவையான பலகாரங்கள் தாயரிப்பதை பார்த்திருக்கிறோம்,அதே போல் உண்ணாவிரதமிருக்கும் தலைவர்கள் கூட சிறிதும் களைப்பின்றி கோஷம் போடுவது,அல்லது பேசுவதை கேட்டிருக்கிறோம்,இதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால் பட்டினியுடன் இருப்பவர்கள் பசியுடன் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதைதான்.


சியாமளா: அது எப்படி சாப்பிடாத போது பசிக்காதுன்னு சொல்றீங்க?



                  


மனிதன் எத்தனை நாள் உணவின்றி இருக்க முடியென்பது,அவரவர் உடலில் உள்ள கொழுப்பை பொறுத்தது தான். ஒரு வேளை உணவை உண்டாலும், அது நம் உடலின் இன்சுலினை சுரக்க செய்து இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து உடனே பசியை தூண்டி விடுகிறது.ஆனால் விரதமிருக்கும் போது இது நிகழாதாதல் பசி உண்டாவதில்லை.


கலா: விரதம் விருந்து ன்னு அது என்ன?


விரதமும் விருந்துமென்ற உணவு முறை ஆதிமனிதனிடமிருந்து வந்தது,அதன் நீட்சிதான்,சில மதங்களில் விரதம்முடியும் போது வடை, சுண்டல், பொங்கல், புளியோதரை, பாயசம் என தடபுடலாக விருந்து படைப்பது அறிவியலின் அடிப்படைதான்

                           

ஹேமா:அப்போ எல்லா நோன்புகளும் அப்படிதானா?


கண்டிப்பாக மேம்,ரம்ஜான் போது அதிகாலை நான்கு மணிக்கும்,மாலை ஆறுமணிக்கு நோன்பு துறத்தலும் கூட ஒரு பெரிய அறிவியல்,இதற்கு பெயர் வாரியர் டயட்,இதை நமது முன்னோர்கள் தினசரி வாழ்க்கையிலும் பின்பற்றினார்கள்.


                            


உணவு பழக்கம் என்பது ஒரு நாட்டின் அல்லது ஒரு பகுதியின் சிறப்பான தடப்வெட்ப சூழல்,மண்ணின் தன்மை,நீரின் அளவு,மற்றும்விவசாயத்தின் முறை,தன்மை என்று பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உருவான அனுபவ அறிவின் விளைவாகும்.


நம் தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில்( நாம் கண்கூடாக பார்த்தது) கடும் உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் அதிகாலையில் நீராகாரம் அல்லது கூழ் அருந்தி செல்வர்,இடையில் நீரிழப்பினை ஈடு செய்ய மோர் அல்லது பானகம் அருந்துவர்( மிக குறைவு) மற்றபடி மாலை 3-4 மணியளவில் பணி முடித்து வந்த பின் காய்கறிகளுடன் கூடிய உணவோ அல்லது அசைவ உணவோ உண்பர்.


ஆதிமனிதர் போன்றே,சூரியன் மறையும்போது உறங்க சென்று,உதயத்தில் எழுவதும் முறை.இப்படி 16மணி நேரம் விரதமிருப்பதால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு,சரியான எடையில் இருந்தார்கள்.






பல நாடுகளில் மாலை சூரியன் மறைந்தவுடன் மக்கள் உறங்கிவிடுவார்கள். அதிகாலையில் சூரியன் உதிக்கும்போது விழித்துக்கொள்வார்கள். மக்களின் காலகடிகாரம் சூரியனைச் சுற்றியே அமைக்கப்பட்டிருந்தது. அதனால் இரவு உணவு என்று குறிப்பிடும்போது மாலை 4 அல்லது 5 மணியளவில் சாப்பிட்டார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.


தினமும் காலையில் சாப்பிடுகிறோம். அந்த உணவில் உள்ள மாவுச்சத்தை எரித்து முடிக்க உடலுக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் பிடிக்கும். அதன்பின் நாம் எதையும் உண்ணவில்லை என்றால் உடலில் சர்க்கரை (க்ளுகோஸ்) அளவுகள் அதிகரிக்காது. இதனால் உடலில் இன்சுலின் சுரக்கும் அவசியமும் ஏற்படாது.


இன்சுலின் சுரப்பு நின்றவுடன் உடல், கொழுப்பை எரிக்கும் நிலைக்குச் செல்லும். இதற்குக் காரணம்? உடல் இயங்க கலோரிகள் தேவை. அந்த கலோரிகள் உணவின் மூலம் கிடைக்காமல் இருக்கும்போது உடல் ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள (அதாவது தொப்பையில் உள்ள) கொழுப்பை எரித்து க்ளுகோஸாக மாற்றி பயன்படுத்தும். (இதனால் தொப்பை முதலான இடங்களில் தேங்கியுள்ள ஊளைச்சதை குறைகிறது.) இதை க்ளுகோனொஜெனெசிஸ் (Gluconeogenesis) என அழைப்பார்கள். உணவு இல்லாவிட்டாலும் உடலுக்குத் தேவையான ஆற்றல் இப்படித்தான் கிடைக்கிறது.


ஆக, ஆறு அல்லது எட்டுமணி நேரத்துக்கு அதிகமாக நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உடல் தொடர்ந்து கொழுப்பை எரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், நடுவில் உணவுப்பொருளை உள்ளே தள்ளினால் அந்த இயக்கம் நின்றுவிடுகிறது. ஆறு – எட்டு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறது.


நாள் முழுக்க இடைவிடாமல் தின்றுகொண்டே இருப்பது உங்களை எடையை இழக்கவிடாமல் தடுக்கிறது. அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் உடல் கொழுப்பை எரிக்கும் நிலைக்குச் செல்லாது. உண்ணாவிரதம் நம் உடலின் இன்சுலின் உணர்திறனை (Insulin sensitivity) அதிகரிக்கிறது. அதாவது குறைவான இன்சுலினை சுரந்து அதிக அளவிலான க்ளுகோஸை எரிக்கும் சக்தி.


உண்ணாவிரதம் என்றால் நாள்கணக்கில் பட்டினி கிடப்பதல்ல. அது அவசியமும் அல்ல. காலை உணவைத் தவிர்த்து தினமும் இரு வேளை உண்டாலே தினமும் 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததற்குச் சமம். அதுவே நம் உடலுக்குப் போதுமான நன்மைகளை அளிக்கும். நோயாளிகள், சர்க்கரை குறைப்பாடு நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குழந்தைகள் தவிர்த்து நல்ல உடல்நலனுடன் இருப்பவர்கள் தினமும் ஒன்று அல்லது இரு வேளை மட்டுமே உண்ணும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம். அந்த இரு வேளை நீங்கள் உண்ணும் உணவானது இயற்கையை ஒட்டிய நம் ஜீன்களுக்கு நெருக்கமான பேலியோ உணவாக இருக்கவேண்டும் என்பது முக்கியம். இந்த உணவுமுறையே நோய்கள், மருந்துகளில் இருந்து நம்மை விடுதலை செய்யும்.


                            


பகல், இரவு காலத்தை உணரும் சக்தி, சிர்கேடியன் கடிகாரம் எனப்படுகிறது. சிர்கேடியன் கடிகாரத்தினால்தான் நாம் வழக்கமான நேரத்தில் உணவு உண்பதும், நேரத்தில் தூங்கி விழிப்பதும் சாத்தியமாகிறது. பகல், இரவு, பசி, தூக்கம் முதலான உணர்வுகளை நம்மிடையே தூண்டுகிறது. மனிதனின் சிர்கேடியன் கடிகாரம், மாலையில் பசியை அதிகரிக்கச் செய்கிறது என்கிறது இந்த ஆய்வு. (இணைப்பு:http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23456944)


இந்த ஆய்வின்படி, உறங்கி எழுந்தபிறகு உண்ணாமல் இருந்தால் காலையில் மட்டுமல்ல மதியமும் பசி எடுக்காது. ஆனால், மாலையில் பசி அதிகரிக்கும். இரவு எட்டு மணிக்கு பசி உச்சக்கட்டத்தை எட்டி, பிறகு மெதுவாக அடங்கிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பரிணாமரீதியாக மாலையில் பசி அதிகரிக்கும். இரவில் குறையும். பிறகு அந்த இரவுப் பசியும் அடங்கிவிடும்.


காரணம்?


மாலை உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளே இரவில் நம் உடலுக்குப் போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. பலரும் இரவில் இஷ்டத்துக்கு நொறுக்குத்தீனி உண்பதைக் காணமுடியும். காரணம் சிர்கேடியன் கடிகாரம்தான். இரவு உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் நொறுக்குத் தீனியை மனம் தேடும். அதே மாலை வேளையில் உண்ணாமல் போனால் இரவில் பசி குறையும். காரணம் கொலைப்பட்டினியில் உறக்கம் வராது என்பதால் சிர்கேடியன் கடிகாரம் இரவானதும் பசியை மட்டுப்படுத்திவிடும்.


வாரியர் டயட் போன்ற விரத முறைகள் நம் மூளையைச் சுறுசுறுப்பாக்கும். மூளையில் புதிய செல்களை உருவாக்கும். பசி எடுத்தால்தான் வித்தியாசமாக எதையாவது செய்து அறிவை வளர்ப்போம். கடுமையாக உழைப்போம். பசி தான் பலரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த நல்ல ஆயுதத்தை மூன்று வேளை உணவால் வீணடித்துவிட்டோம். அதனை வாரியர் டயட் மூலம் மீட்டெடுப்போம்.


மூன்று வேளையும் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள், அல்சர் நோயாளிகள், குழந்தைகள் என இவர்களைத் தவிர்த்து நல்ல உடல்நிலையில் உள்ளவர்கள் இந்த வாரியர் டயட்டைப் பின்பற்றலாம்.

சியாமளா:சரி சரி உணவு அரசியலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

கண்டிப்பா இருக்கு சியாமளா,முன்பே நான் கூறியதுபோல் ஒரு நாட்டின் அல்லது ஒரு பகுதியின் சிறப்பான தடப்வெட்ப சூழல்,மண்ணின் தன்மை,நீரின் அளவு,மற்றும்விவசாயத்தின் முறை,தன்மை என்று பல நூற்றாண்டு கால விவசாய அனுபவ சேகரம்தான் இந்த விவசாய அறிவு.ஆனால்,குப்பை உணவுகளை,தின்பண்டங்களை சந்தையில் குவித்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்நோக்கும்சந்தை தேவையின் முன் இந்த விவசாய அறிவு தேவையற்ற குப்பையை போல் வீசியெறியப்படுகிறது.


எடுத்துக்காட்டாக Lays எனப்படும் சிப்ஸ் தயாரிப்பதற்காக பஞ்சாபில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஒரே ருசி தருவதற்கு ஏற்ற வகையில் ஒரே ரக உருளை கிழங்கு பயிரிடப்படுகிறது.


கோதுமை விளைச்சலுக்கு ஏற்ற பஞ்சாபின் விளை நிலங்கள் அந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத உருளை கிழங்கை பயிரிட வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது.இது சுயசார்பு விவசாயத்தை அழிக்கிறது,அதோடு பாரம்பரிய உணவும் அழிகிறது.


இதில பாருங்க,கோதுமை வீளையக்கூடிய பூமியில உருளை விளையுது,,ஆனால் இன்னொரு புறம் சர்க்கரை குறைப்பாடு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக கோதுமையை அடிப்படையாக கொண்ட பொருட்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன.இவ்வளவு கோதுமை எங்கு விளைகிறது?


கலா: ஏம்பா,நீ சொன்னவுடனேதான் தோணுது,இந்த பால் பாக்கெட் வாங்குறோமே அது நல்லதா?


அக்கா,உணவு அரசியல் அப்படின்னு சொன்னவுடனே விளையிற பொருளை மட்டுமல்ல,விலங்குகளிடத்தும் மனிதன் இரக்கமற்று நடந்து கொள்கிறான், அதனால அழியற்து இந்த மனுசங்கதான்.


மனிதனை தவிர,வேறு எந்த உயிரினமும் தன் தாய் பாலை தவிர வேறொர் விலங்கின் பாலை குடிக்கிறதில்லை


ஹேமா: அட ஆமாம்…………….


மனித இனத்தின் மகத்தான செல்வம் தாய்ப்பால்,குழந்தையின் மனநிலை, உடல்நிலை,தேவை,அளவு பொருத்து ஒரு தாயின் மூளை செயல்பட்டு பாலை சுரக்கிறது,அப்படி சுரக்கும் பாலில் உள்ள கொழுப்பை சீரணிக்க லைபேஸ் என்ற என்சைமையும் சேர்த்து அனுப்பும் சிறப்பு தாய்க்கு உண்டு. இன்னும் நவீன உணவு அறிவியல் சார்ந்து நோக்கினால் 4 வயதுக்கு மேல் பால் புரத்தை சீரணிக்கும் சக்தி குறைந்துவிடுவதாக தெரிய வருகிறது.



                                   

நிலவரம் இப்படியிருக்க,பால் சார்ந்த உணவுக்கான விளம்பரங்கள் கொடிக்கட்டி பறக்கிறது.உன் காலத்தில் வீட்டு தொழுவத்தில் வளர்க்கப்பட்ட நாட்டுமாடுகள் சுமார் 4லிடரிலிருந்து 5லிட்டர் வரை பால் கறக்கும்,பல கிராமங்களில் மாடுகளை வளர்த்தாலும்,பால் அருந்ததா சமூகமாக இருந்திருக்கிறார்கள்,பால் என்பது மருந்துக்காவும்,விருந்துக்காகவும்மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள்.இந்த நாட்டு மாடுகளுக்கு வைக்கோல்,புல் போன்றவை போதுமானதாக இருந்திருக்கிறது,இதன் சாணத்தை எருவாக்கி, இயற்கை உரமாக பயன்படுத்தினர்

.
                               


ஆனால்,இந்த உணவு அரசியல்,மேலை நாட்டு வாக்கியங்களை முதலில் அறிமுகம் செய்தது “A cup of milk a day keeps the doctor away என்று,இது அன்றைய பால் வணிகத்திற்காக சொல்லப்பட்டு அறிவியல் வேடம் பூண்ட பொய்.


நாட்டுமாடுகள் கறக்கும்பால் இவர்களின் சந்தைக்கு சரிப்பட்டு வராத காரணத்தினால் அயல்மாடுகளை இறக்குமதி செய்து இரசாயன் ஊசிகள் மூலம்சுமார் 20-25 லிட்டர் பாலை கறக்க செய்கின்றனர் இப்படி கறப்பதற்கு பல இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.பொதுவாக நாட்டு மாடுகளின் பாலையே அளவாகதான் பயன்படுத்த வேண்டும் ஏனென்றால் கேசின் என்ற எளிதில் செரிக்காத புரதம்தான் மாட்டு பாலில் உள்ளது.

                           


ஆப்பிரிக்க மஸாய் எனும்பழங்குடியினர் தாய்ப்பாலுக்குப் பின் அவர்கள் வேறெந்த பாலையும் அருந்துவதில்லையாம்.


குழந்தைப்பருவத்தில் அதிகமாக மாட்டு பால் குடிக்கும்பெண் குழந்தைகள் சீக்கிரம் பூபெய்தி விடுகின்றனர்.இப்படி இந்த பாலில் உள்ள பல்வேறு அரசியல் குறித்து ஏராளமாக பேசிக்கொண்டே போகலாம்.

                                  


சியாமளா: சர்க்கரை நோய்க்கும் இந்த உணவு அரசியலுக்கும் தொடர்பு இருக்கும் போலவே………………….


சரியா சொன்னீங்க இன்னைக்கு,சுகர் அப்படின்னா இன்சுலின் சுரப்பின் குறைப்பாடு எல்லோருக்கும் தெரியும்.ஆனா இந்த இன்சுலின் சுரக்க கூடிய கணையத்தின் செயல்பாட்டைஎது ஊக்குவிக்கிறதுன்னு தெரியுமா?







சர்க்கரை குறைப்பாடு நோய், வைட்டமின் டி குறைபாட்டால் வருவது என இப்போது கண்டறிந்துள்ளார்கள். வைட்டமின் டி நம் உடலில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவது குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் ‘சர்க்கரை குறைப்பாடு நோய் என்பது வைட்டமின் டி குறைபாடே என்று சொல்கிற அளவுக்கு சர்க்கரை மேலாண்மைக்கு (Glucose regulation. அதாவது ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் குறையாமலும், அதிகரிக்காமலும் ஒரே அளவில் இருக்கும்படி ரத்தச் சர்க்கரை அளவுகளைப் பராமரிப்பது) வைட்டமின் டி முக்கியமானது’ என்கிறார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மேலாண்மை செய்ய இன்சுலின் அவசியம். அந்த இன்சுலின் நம் கணையத்தில் உற்பத்தி ஆகிறது. கணையத்தில் உள்ள பீட்டா செல்களே இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. ஆனால் அந்த பீட்டா செல்களை இயக்கும் சக்தி வைட்டமின் டி-யிடம் உள்ளது. வைட்டமின் டி தட்டுப்பாடு ஏற்படும்போது கணையத்தில் இன்சுலின் குறைவாக சுரக்கிறது. இதனால் சர்க்கரை குறைப்பாடு நோய் வருகிறது.


                                   


டைப் 1 சர்க்கரை குறைப்பாடு நோய் ஏன் வருகிறது, எதற்கு வருகிறது என புரியாமல் விஞ்ஞானிகள் திகைக்கிறார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அதை மதியம் வெயிலில் காண்பித்தால் அக்குழந்தைக்கு டைப் 1 சர்க்கரை குறைப்பாடு நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல பிள்ளையின் தாய்க்கு வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு டைப் 1 சர்க்கரை குறைப்பாடு நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.


கலா: என்னப்பா,தோண்ட தோண்ட பூதம் ன்னு சொல்வாங்களே அந்த மாதிரி இருக்கு……


ஆமாக்கா, வைட்டமின் டி என்பது பொதுவாக சூரிய ஓளியிலிருந்தே பெற்றுக்கொள்ளக்கூடியது.வைட்டமின் டி என்பது இரண்டு வகைகளை கொண்டுள்ளது.வைட்டமின் டி2 மற்றும் டி3 ஆகும்.நமக்கு தேவையான வைட்டமின் டி3 சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது,டி2 என்பது காளான் போன்ற உணவு வகைகளில் கிடைக்கிறது டி3 நெத்திலி,மத்தி மீன்,முட்டை ஆகியவற்றில் இருக்கிறது,எனினும் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கப்பெறும் போது உடலுக்கு தேவையான அளவை மட்டும் தோல் மூலமாக பெற்றுக்கொள்ளும்,.


                            


வைட்டமின் டி3 மாத்திரைகளாக கிடைக்கிறது,,ஆனால் இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால் மாத்திரையோடு இந்த கொழுப்பும் சேர்ந்துதான் உட்கொள்ள வேண்டியிருக்கும்,ஆனால் அந்த பிரச்சனை சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி3 யில் கிடையாது.


செய்ய வேண்டியது வெய்யில் படும்படியாக இருப்பதுதான்,ஆனால் reflect ஆகும் சூரிய ஒளி ஆகாது(கண்ணாடி வழியாக).


    


அதனால்,சூரிய ஒளியை பெற்றாலே சர்க்கரைகுறைப்பாட்டு நோய் குணமாகும்,மாறாக இவர்களுக்கு ஓட்ஸ்,இன்னும் பிற உணவு அரசியலுக்கு ஆட்பட்ட உணவுகளை பரிந்துரை செய்வதன் மூலம் அத்தனை பயன் என கூறிட முடியாது.


ஹேமா: நூடுல்ஸ்,குர்குரே லேஸ்,க்ர்ஸ்பி ஃப்ரை போன்ற உணவுகள்………………….பற்றி சொல்லுங்க


ஆமாம் எல்லாமே உணவு அரசியலுக்கு உட்பட்டதுதான்,


ஏற்கனவே நிறைய பேசிட்டதால,ஒரு சில செய்திகளை சொல்லி முடிச்சிப்போம்…………தேவைப்பட்டால் இன்னொரு நாள் இன்னும் கூட விரிவாக பேசலாம் அவ்வளவு செய்திகள் இருக்கு.


சியாமளா: இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன செய்றாங்க……….




                                   





நல்லா கேட்டீங்க காக்கா முட்டை என்கிற படம் வெகு அழகாக இந்த உணவு அரசியலால் அடித்தட்டு மக்களின் உணவு பறிக்கப்படுவதும்,பீட்சா போன்ற உணவுகள் வெறும் பணம் தொடர்பான செய்தி மட்டுமல்ல என்பதையும் அது கலாச்சார தொடர்பான விஷயமெனவும் அதில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.


ஊருக்கே சோறும் போடும் விவ்சாயகள் ஒரு புறம் வறுமையில் சாக,அந்த நிலங்கள் மலடாகவும்,மலட்டு விதைகளை விளைவிக்கவும்,பராம்பரிய பயிர் வகைகளை,அதன் விதைகளை இழக்க நிர்பந்திக்கப்படும் வேதனையும், உடல் ஆரோக்கியமும்,மன ஆரோக்கியம் இரண்டையும் கொடுக்காத உணவை நோக்கிய பயணத்தின் நீண்ட வேதனையின் வேர்தான் உணவு அரசியல்.


நண்பர்களே சற்றே நீளமான ஒரு செய்தி,நீண்ட பாரம்பரியமும் அதன் பெருமையும் அழியும்போது விடும் நீள் பெருமூச்சு போல் சற்றே நீண்டுவிட்டன செய்திகள்.


நன்றி நண்பர்களே.


-அன்புடன் லீலா. .






Refernce Books and Articles.


1.WARRIOR DIET-ORI HOFMEKLER


2.FASTING,FEASTING –ANITA DESAI


3.பன்றித்தீனி-புதிய கலாச்காரம் வெளியீடு


3.தினமணி கட்டுரைகள்-நியாண்டர் செல்வன்


4.படங்கள் மற்றும் காணொளி-இணையம்






























1 comment:

  1. தங்கள் பார்வையும் பங்களிப்பும் எங்கெல்லாம் பரவுகின்றன; வாழ்த்துக்கள்! BMI பற்றிய தகவல் புதிது, நன்றி!

    ReplyDelete