Sunday, 23 November 2025

சூழலியலில் பனை

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.

 - திருக்குறள் 104

தமிழர் மரபில் பனை மரம் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாகும், ஏனெனில் அது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பயன்பட்டுள்ளது. பனை மரத்தின் வேர், ஓலை, நார், நுங்கு, பனம்பழம், பதநீர், கள்ளு, கருப்பட்டி போன்ற பல பாகங்கள் உணவு, உடை, வேளாண்மை, எழுத்து (பனையோலைச் சுவடிகள்) என பல தேவைகளுக்குப் பயன்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டின், மாநில மரம் பனை ஆகும்.

1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டது.

ஏன் பனை மரம் மாநில மரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது?

பனை மரம் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளதோடு, பல்லுயிர் பாதுகாக்கும் தன்மையுடையவை என்பதும், காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ளும் வல்லமை வாய்ந்தவை என்பதோடு, சத்தான உணவுகளையும், தமிழ் நாட்டின் சொத்தான பல தமிழ் இலக்கியங்களையும் தந்த ஓலைகளை ஈந்த மரம் என்பதால் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டது.

எல்லை பனை

☘️☘️☘️☘️☘️☘️

காடுகள் முடிந்து மனித வாழ்விடங்கள் தொடங்கிய இடத்தில் பாரம்பரியமாக பனைமரங்கள் நடப்படுகின்றன. அதிக இடைவெளி இல்லாமல் நடப்பட்ட மரங்களின் வரிசைகள், மாமிச உண்ணிகள் மற்றும் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுத்தன, இதனால் மனித-விலங்கு மோதல் தடுக்கப்பட்டது.

மேலும், அதீத மழை, காற்றுக் காலங்களில் மனித வாழ்விடங்களை காக்கும் அரணாக நின்று, இயற்கை பேரிடர்களை தடுக்கும் தடுப்பான்களாகவும் செயலாற்றின.

இன்றும், திருவாரூர்- நாகப்பட்டிணம் சாலையில் வயல்வெளிகளையும் சாலையையும் பிரிக்கும் எல்லையாக பனை மரங்களை காணலாம்.

விவசாய நிலங்களுக்கு இடையேயும்,நீர்நிலைகளை சுற்றியும் பனைமரங்கள் எல்லையாக நிற்பதை காணலாம்.

பனையின், 120 ஆண்டுகள் நீண்ட ஆயுளைக் கருத்தில் கொண்டு, எல்லைகளைக் குறிக்க மக்கள் அவற்றைப் பயன்படுத்தினர் என்பது தமிழர்தம் தொல்நோக்கு.

இந்திய பனைகள்

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

இந்தியாவில் மட்டும் 106 வகையான பனைகள் உள்ளன. இந்திய பனைகளில் இருந்து கிடைக்கும் நுங்குகளில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதோடு, குறைவான கொழுப்பும்

( பூஜ்ஜியம்), பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், கால்சியம்,துத்தநாகம், இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்களுடன் மிக குறைவான புரதமும்

இந்திய நுங்கின் உள்ளடக்கமாக இருக்கின்றன.

வெப்ப காலங்களில், உடலுக்கு ஏற்ற நீரேற்றத்தையும் புத்துணர்ச்சியையும் தர வல்லவை. 

பனம்பழத்திலும் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது.

இவை உடல் ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு செயல்பாடு கொண்டவை.

வெப்ப மண்டலத்தில் செழித்து வளரும் பனைகளின் நுங்கின் தண்ணீர் வேர்க்குருவிற்கான மருந்தாகவும், நுங்கின் மேல்தோல் உள்ளுறுப்புகளுக்கு நன்மை தரக் கூடியதாகவும் இருக்கின்றது.

இயற்கை பேரிடர் தடுப்பான்கள்

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

பனை மரங்கள் மிகப்பெரிய காற்றையும் தாங்கி நிற்கும் இது உண்மையா?

கண்கூடாக கண்ட காட்சியும் ஆய்வுகளும் அதை உறுதி செய்கின்றன.

வங்காள விரிகுடாவில் இருந்து அய்ம்பது கிலோ மீட்டருக்குள் இருக்கும் மஞ்சக்கொல்லை, சிக்கல் போன்ற ஊர்களில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 18 வீசிய கஜா புயலின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

பெரிய பெரிய கிளைகள் முறிந்து விழுந்தன, பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின் கம்பங்கள் அபாயகரமான சூழலை உருவாக்கி சாய்ந்தன, கேபிள்களோ தரையோடு தரையாக தட்டையாகி போயின, தென்னை மரங்கள் மூன்று நான்காக உடைந்து விழுந்தன. பெரும்பாலான *பனை* மரங்கள் உறுதியாக நின்றன. எப்படி ?

நெகிழ்வே உறுதி

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

காலநிலைக்கு ஏற்ப மீள்தன்மை (Resilience) பெறும் ஆற்றல், பனை மரத்தின் தண்டு ( trunk) பகுதிக்கு உள்ளது... இழைபோன்ற அல்லது நார்ப்போன்ற உள்ளமைப்பைக் கொண்ட தண்டு நெகிழ்ச்சித்தன்மை உடையது என்பதால் பெருங்காற்றுக்கு வளைந்து உடையாதிருக்கிறது. மேலும், மரங்களின் உச்சியில் விசிறி போல் விரிந்து லேசான எடையுடன் இருப்பதால் காற்றை தடுக்கும் ஆற்றலுடன் செயல்படுகின்றன என்பது பனை மரத்தின் தனித்துவம்.

இதற்கு சான்று,  கஜா புயலின் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விழுந்த மாவடி கிராமத்தில் ஒரு குடிசையின் பனை ஓலை கூரை எவ்வாறு சேதமடையவில்லை என்பதைக் கவனித்தார். "இது கடலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்தது. மங்களூர் ஓடுகள் கூட கூரைகளிலிருந்து பறந்துவிட்டன, ஆனால் இந்த பனை ஓலை கூரை பறக்கவில்லை, என்கிறார் கஜா புயலின் போது இவற்றை கவனித்த ஆரோன் டாஸ்.

மின்னலே மின்னலே

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

மின்னல் பாதுகாப்பிலும் பனை மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் அதிக ஈரப்பதம் மின்னல் தாக்கங்களிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி சிதறடிக்க உதவுகிறது. மேலும் மின்சாரத்தை தரையில் பாதுகாப்பாக செலுத்தும் இயற்கை கடத்திகளாக செயல்படுகின்றன. ஒடிசா அரசாங்கம் பனை மரங்களின் நன்மையை உத்தேசித்து மின்னல் தொடர்பான இறப்புகளை குறைக்க 9.1 மில்லியன் பனை மரங்களை நடத்தொடங்கின. இது கடந்த 11 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4000 இறப்புகளை குறைக்க உதவின.


வேரின் வீரியம்

🌳🌳🌳🌳🌳🌳🌳

ஆழமாகவும், அகலமாகவும் செல்லும் நார்ச்சத்துள்ள வேர்கள் மண்ணோடு பிணைந்து மண்ணரிப்பைத் தடுக்கின்றன.‌மேலும், வேரின் அமைப்பான மண்ணை உறுதிப்படுத்துவதோடு, மண்ணின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. அனைத்து வகையான மண்ணிலும், காலநிலை மண்டலங்களிலும் வளரும். வறண்ட பகுதியிலும் வளரும் பனை, ஒரு மண்ணில் விளையவில்லை எனில் அங்கு நிலத்தடி நீரின் நிலை மிக மோசமானதாக இருப்பதை உணரலாம்.

நீர்நிலையை சுற்றி பனை மரங்கள் நடப்பட்டால், மீண்டும் நீர்நிலைகளில் நீரை நிரப்பும், ஏனெனில் வேரின் மய்யப்பகுதி நார் போன்ற அமைப்பு தண்ணீரை சேமித்துக்கொள்ளும், பஞ்சுப்போன்ற அடுக்குகளை கொண்டுள்ளதால், நீர்நிலைகளில், நீர்சுழற்சியில் முக்கியமான பங்காற்றுகின்றன என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பல்லுயிர் ஓம்பும் பனை

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

பேரிடர் தடுப்பான்களாக மட்டுமல்லாது,  பனை மரங்கள் பல்லுயிர்கள் வாழ்வதற்கான வாழ்விடமாகவும் விளங்குகின்றன.

கழுகுகள், கிளிகள், மயில்கள், கருப்பு அரிவாள் மூக்கன், தூக்கணாங்குருவிகள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களுக்கு வாழ்விடமாக செயல்படுகின்றன.

சூரிய பறவைகள், இந்திய பனங்காடைகள் பனை சுவிஃப்ட்கள், வெள்ளி-மூக்கு பறவைகள், வெண்-மார்பு மீன்கொத்திகள் மற்றும் ஷிக்ராக்கள் குறிப்பாக பனை மரங்களை விரும்புகின்றன. இவை பாம்புகள் மற்றும் உடும்புகள் போன்ற ஊர்வனங்களுக்கும் வாழ்விடமாக உள்ளன.

கரியமில வாயு ஒழுங்காற்றும் பனை

🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚

காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் அதீத கரியமில வாயுவின் வெளியீடே.

அத்தகைய கரியமில வாயுவை ( கார்பன் டை ஆக்ஸைட்) உறிஞ்சும் திறனும், கார்பன் தடத்தை குறைக்கும் தன்மையையும் கொண்டிருக்கும் பனை காலநிலை மாற்றத்தை

ஒழுங்காற்றும் பணியில் முக்கிய பங்களிக்கிறது.

இலக்கியத்தில் பனை

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

சேர மன்னர்களின் குடிப்பூவாக பனை இருந்தது. பனை, போந்தை, பெண்ணை ஆகிய பெயர்களையும் கொண்டிருந்தன.

பனையை மரமென்று அழைத்தாலும் தொல்காப்பியம் பனையை புல்லினம் என்கிறது.

புறக்கா ழனவே புல்லென மொழிப”-தொல். பொருள். 9 : 86

பனையின் விதை Monocot என்பதால், தாவரவியலில் புல், மூங்கில் ஆகியவற்றோடே தொடர்புப்படுத்தப் படுகிறது.

பனையின் பஞ்சு போன்ற நுங்கைப் பாடுகின்றார் திரையன்:

“பாளை தந்த பஞ்சிஅம் குறுங்காய்

 ஓங்கிரும் பெண்ணை நுங்கு”-குறுந் . 293 : 2-3

பனையின் இவ்விருவகைப் பூக்களும் மஞ்சள் கவினிய வெண்ணிறங் கொண்டவை. இவையிரண்டுமே சூடிக் கொள்ளும் வாய்ப்பற்றவை. ஆதலின், பனையின் வெளிய இளங்குருத்து ஓலையைப் பிளந்து, அதன் கூரிய வலப்பக்கத்துப் பாதியைக் குடிப்பூச் சின்னமாகக் சூடிக் கொண்டனர்.

“இரும்பனை வெண்டோடு மலைந்தோன்”-புறநா. 45 : 1

⁠(தோடு-தடித்த பனையோலை)

“. . . . ⁠ . . . . ⁠வளர்இளம் போந்தை

 உச்சிக் கொண்ட ஊசிவெண் தோட்டு”-புறநா. 100 : 3-4

⁠(வளர் இளம் போந்தை-குருத்தோலை)

“மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇ”-புறநா. 

என இன்னும் பனையோலையென விரிகின்றன இலக்கிய பாடல்கள்.

தமிழர் எழுத்து மரபில் பனை

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

சங்ககால அறிவை சமகாலத்திற்கு கைமாற்றி தந்ததில் பனையோலைகளுக்கு பெரும் பங்கு உண்டு.

தமிழர்களின் செழுமையான அறிவாற்றலை தாங்கி நின்றவை பனையோலைகளே, இல்லையெனில் தெள்ளுத்தமிழின் சிறப்பிலக்கியங்கள் யாவும் புலவர்களின் நாவில் இருந்து காற்றில் கரைந்து போயிருக்கும்.

தமிழர் தம் எழுத்து மரபு தனித்துவமானவை, அறிவியலும், வெளியும், காலமும் சரியாக அமைந்த ஞான வெளிபாடுகள் தமிழர்தம் எழுத்து.

அத்தகைய தமிழ் எழுத்து மரபுகள் பனை வேரென பனையோலைகளால் தமிழர்களோடு பிணைந்தவை.

தமிழுக்கு செழுமை சேர்த்த திருக்குறள், தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாவற்றையும் பாதுகாத்து தந்தவை பனையோலைகளே.

தமிழர்தம் பானம் முதல் பனைப்பெட்டி, பாய்,கடகம் என  தமிழர்தம் வாழ்வியல் மரபில் இரண்டற கலந்து தோய்ந்த பனை இன்று தமிழர்களின் நினைவுகளில் மட்டுமே வாழும் அளவிற்கு, கலாச்சார மற்றும் சமூக சூழல் மாற்றங்களால், ரியல் எஸ்டேட், தொழில்துறை விவசாயத்திற்கு பயனற்ற ஒன்றாக கருதப்பட்டு  அழித்தொழிக்கப்பட்டுள்ளன. தமிழர்தம் வரைவியலோடும், இலக்கியத்தோடும், நிலவியலோடும் பொருண்மை மரபிலும் கலந்து நிற்கும் பனை, தமிழர்களின் உணர்வோடு நீண்ட நெடிய உறவினை கொண்டுள்ளது.

பனைகளை பாதுகாத்து சூழலியலையும், தமிழர்தம் தன்சார்பு வாழ்வியலையும் மீட்டெடுக்க பனையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டியது நம் கடமை ஆகும்.

அன்புடன் 

- கோ.லீலா



Sunday, 9 November 2025

பல்லுயிர்_போற்றிய_பழந்தமிழர்



மார்கழியில் மண்ணும் குளிரும்

தையில் தரையும் குளிரும்

மாசியில் மச்சை குளிரும் என்பது நம் தமிழரின் வாய்மொழி வானியல் அறிக்கை. 


பனியிருந்தால் மழையிராது என்பதும் அவர்தம் கூற்றே.


ஊட்டி, அவலாஞ்சி, ஆகிய இடங்களில் மேற்பரப்பு நீர் உறைந்துள்ளன, காஷ்மீரில் பனிமழை, திருச்சியில் குளிரோ குளிர் என தரையெல்லாம் குளிர்கிறது தையில்.


தமிழர்களின் வானியல் அறிவை கண்டு வியந்தவர்கள் மேலை நாட்டினர்.

 இத்தகைய வானியல் அறிவை கொண்டு, அறுவடை காலமாக தை மாதத்தை முடிவு செய்து விவசாயத்தை திட்டமிட்டுள்ளனர்.

தை இலையுதிர் காலத்தின் ஆரம்ப காலம் என்பதால் அதற்கு பிறகு அறுவடை காலத்தை நிர்ணயித்தால் நெல்மணிகள் என்னவாகும்? என்பதை அறிந்தவன் தமிழன்.


மூவாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே மலரின் மாண்பை அறிந்தவன் தமிழன்.


நீரில் மலரை இட்டு வணங்குவதும், கோலத்தின் நடுவில் பூசணி பூ வைப்பதும் தமிழர் மரபு.


தமிழர்தம் வாழ்வில் பிறந்தது முதல் இறப்பது வரை பூக்கள் இல்லாத நிகழ்வுகளே இல்லை.

பெண்ணின் பருவநிலையில் ஒன்றை குறிக்க பூப்பெய்தல் என்று சொல்லும் வழக்கமும், அச்சொல்லின்‌ பின் விரியும், உள்ளடக்கமும் வாழ்வியல்.

பூ மலர்ந்த பின்னே காயாகி, கனியாகி விதைகள் பரப்பி இனம் பெருக்கும் தாத்பரியத்தை சுமந்த சொல்தான் பூப்பு என்பது.


தமிழரின் வாழ்வில் பூக்கள் ஏன் முக்கியத்துவம் பெற்றன?

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


பூக்களின் நறுமணம் மனநிலையை சாந்தப்படுத்தக் கூடியது, இதை Aroma therapy என்கிறது, நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் மேலைநாடுகள்.


கோலத்தின் நடுவில் சாணியில் பூசணி பூ, செம்பருத்தி பூவை செருகி வைத்தால் பனிக்காற்றில் நறுமணம் கிருமிநாசினியாக செயல்படும் என்று அறிந்திருந்தான்‌ தமிழன்.


அதனால்தான், அதிகாலையில் கோலமிட்டனர் (இரவில்‌அல்ல)


ஆனால், தமிழர்களோ காதல், போர், வெற்றி, திருமணம் என ஒவ்வொரு நிகழ்வும் பூக்களை கொண்டே கொண்டாடி இருக்கிறார்கள்.


ஒரு ஆண் பெண்ணிற்கு தன் காதலை, அன்பை தெரிவிக்க பூக்களை வழங்குதல் இயல்பு...

பெண் சூடினால் விருப்பமென அறியவும் வகையாயிற்று.


வெட்சி, கரந்தை,வஞ்சி,நொச்சி/உழிஞை என புறபொருள் பாடலுக்கும் பூக்களே முக்கிய பங்கு வகுத்து இருக்கின்றன.


*#பொழுதும்_போதும்*

💐💐💐💐💐💐💐💐💐💐


மரங்களை பெருக்குவது மலர்களே என்பதுணர்ந்து, மரங்களை போற்றி, மலர்களையும் அறிவியல் பூர்வமாக பயன்படுத்தி கொண்டாடி இருக்கிறார்கள்.

சிறுபொழுது, பெரும் பொழுது போன்றவைகளை மலர்களை கொண்டும், பறவைகளை கொண்டும் கணித்திருக்கிறார்கள்.


கன்னல் என்னும் இயந்திரம் மூலம் நேரத்தை கணித்துள்ளனர்.

வட்டிலில் தண்ணீர் விட்டு, சிறு சிறு துளியாக வழியவிடும் அமைப்பைக் கொண்டு நேரத்தை கணித்துள்ளனர். இந்த இயந்திரத்தை #குறுநீர்க்கன்னல் என்றும், நாழிகை கன்னல் என்றும் அழைத்துள்ளனர்.


நீருக்கு பதிலாக மணல் வட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


உயர்குடி பெண்களும், சாமானிய பெண்களும் பொழுதை அறிய மலர்களைதான் பயன்படுத்தி உள்ளனர்.


சில மலர்களின் மலரும் நேரம்.


தாமரை சூரிய உதய நேரம்


செண்பகம் காலை 6-7 மணிக்கு இடையில்.


அந்திமந்தாரை மாலை 4-5 மணிக்கு இடையில்


முல்லைப்பூ/பிச்சிப்பூ, வாழைப்பூ, பிடவ மலர், பீர்க்கம் பூ மாலை 5-6 மணிக்கு இடையில்.


பவளமல்லிகை மாலை 6-7 மணிக்கு இடையில்


மல்லிகை மாலை 7-8 மணிக்கு இடையில்.


நெடுநல்வாடையில் மலர்களின் மூலம் பொழுதை அறிந்தது குறித்த குறிப்புகளும் உள்ளன.


வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்;


மெத்தென் சாயல்; முத்துறழ் முறுவல்; பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்; மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுது அறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொலீஇ நெல்லும் மலரும் தூஉய்க் கைதொமுது மல்லல் ஆவணம் மாலை அயர:


இப்படி மலர்களோடு மனம் மலர்ந்திருந்த பெருவாழ்வு தமிழருடையது.


செல்வந்தராக வாழ்ந்த சங்கத் தமிழச்சிகள் நான்காது அடுக்ககத்தில் இருந்தபோது பகல் எது இரவெது என அறியமுடியாத கார்கால பொழுதுகளில், மலர்வதற்கு முன்பாக பறிக்கப்பட்ட முல்லை மொட்டுகளை, மல்லிகை மொட்டுகளை பச்சை இலையில் பரப்பி வைத்து விடுவார்கள், மலர்ந்து மணம் வீசத் தொடங்கியதும் மாலை வந்தது என அறிந்து விளக்கை பொருத்தும் வழக்கத்தை கொண்டு இருந்திருக்கின்றனர்.



சாதாரண குடிமக்கள் வீட்டு வாழ் பெண்கள், அடர் இருள் பரப்பும் கார்காலத்தில் பீர்க்கம் பூ மலர்வதை கொண்டு மாலை பொழுதறிந்து இருக்கின்றனர். 

பறவைகளையும், பூக்களையும் காலச்சுட்டியாக சங்கத்தமிழன் அறிந்து பயன்படுத்தும் அறிவார்ந்த தொன்மைக்கு சொந்த க் காரர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.


இரவெது பகலெது

அறிய ஒளிவிடாது

முகில்மூடி மாரிபெய்ய

குரீஇ குரலெழுப்ப

பகலென அறிய

ஆனைசாத்தன் 

மூன்றுக்கு கீச

குயில் கூவ நான்காக

நாலரையில் சேவல் கூவ

கா.. கா வென அய்ந்தாக

அய்ந்தரைக்கு கவுதாரி

சிரல் குரலெழுப்ப ஆறு

என்றறிய...

குமுதம் மலர்ந்ததே

கதிரெழுச்சியென கண்டு

சுழலும் நாளில்

பிடவ மலரிதழ் விரிய 

காலை கவிழ்ந்து

மாலை தொடர் இரவென

உரைப்ப...

கடிகாரமின்றி காலம் செப்பும் 

பூவிதழ் விரிவும் குரீஇ மொழியும் 

அறிய செய்தாய்..

பெய்க வானமே !


- கோ.லீலா

*#வரையாட்டின்_குளம்படிகள்* கட்டுரை நூலில் இடம் பெற்றிருக்கும் என் கவிதை.


யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வாழ்ந்த தமிழ் இனம் நமது.

யாவரும் என்பது உலகத்து மக்கள் எல்லாம் என்பது பாதிதான் உண்மை.

முழு உண்மை என்ன? 

இப்பூமியில் வாழும் அனைத்து உயிரினமும் எனது உறவு என்ற மேன்மையான பண்பாட்டோடு வாழ்ந்தவன் தமிழன். எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காது வாழ்ந்த இனம் தமிழ் இனம்...


தமிழர்களின் இறை என்பது சிலைகளோ உருவங்களோ அன்று.


இயற்கையை தொழுதவன் தமிழன். அவித்த உணவை படைத்து வழிபடும் வழக்கம் தமிழனுக்கு கிடையாது என்பதை புறநானூறு இவ்வாறு பதிவு செய்து இருக்கிறது.


ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335)


ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்ட கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது என நடுகல் வழிபாட்டின் சிறப்பினைக் கூறுகின்றது.


சங்கத் தமிழனின் நீட்சியாக வாழ்ந்த ,வாழ்கின்ற பெருங்கவிஞர்களும், சித்தர்களும் இறைத்தன்மையை ( இறைவனையன்று)

பாடியிருக்கின்றனர்.


நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றி வந்து மொண மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்? 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? சித்தர் சிவ வாக்கியார் என்ன சொல்ல வருகிறார்?


மனிதனுள் இறைத்தன்மை ( நாதன்) அதாவது அன்பு, கருணை, இரக்கம், அமைதி, நித்ய பேரின்பம்,மரியாதை, மதித்தல், வீரம், விவேகம் போன்ற குணநலன்களே இறைத்தன்மை ( Godliness) என கருதப்படுகிறது.


இவையெல்லாம் இல்லாது, பிறர் மனம் நோகும்படியான செயல்களை செய்துவிட்டு நட்டக்கல்லிற்கு பூ சூட்டி மந்திரம் ஓதுவதால் நீ இறைவனை காண முடியாது, கறியின் சுவையை கரண்டி அறிய முடியாதோ அப்படியானதுதான் உள்ளத்தை தூய்மையாக்காது கல்லை வணங்குதல் என்கிறார் சிவவாக்கியார்.


சாணிக்கு பொட்டிட்டு

சாமியென்பார் செய்கைக்கு

நாணி கண்ணுறங்கு ! என்கிறார் பெண் குழந்தை தாலாட்டில் பாவேந்தர் பாரதிதாசன்.


இதன் மூலம் அறிய வேண்டியது பல்லுயிர் போற்றிய, பண்பாடு செறிவு மிக்க அறிவார்ந்த இனம் தமிழினம் என்பதே !


அன்புடன்

பொறிஞர். கோ.லீலா

சூழலியல் எழுத்தாளர் 

தமிழ் நாடு