Saturday, 6 September 2025

அறிவுசார் சொத்துரிமை

 

Intellectual Property Rights என ஆங்கிலத்திலும் அறிவுசார் சொத்துரிமை என தமிழ்நாட்டிலும், புலமைச் சொத்து என இலங்கையிலும் வழங்கப்படுகிறது.


அறிவுசார் சொத்துரிமை என்பது, அந்தந்த மண்ணில் உருவாக்கப்பட்ட நிலம்சார் வாழ்வியல் பதிவுகள், கலை இலக்கிய படைப்புகள், அந்தந்த நிலப்பகுதியில் மட்டுமே விளையக்கூடிய பிரத்யேக பயிர்கள், தானியங்கள், பாரம்பரிய அறிவு சார் மருத்துவ குறிப்புகள் போன்ற இன்னும் பலவாகும்.


எடுத்துக்காட்டாக, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சை ஓவியம், தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் மல்லி, வேப்பம், மஞ்சள், ஓலைச்சுவடிகள், மண்சார் இனக்குழு தலைவன், தலைவிகளின் சிற்பங்கள் ( மதுரை வீரன், கருப்பண்ண சாமி, முருகன், பெரியநாயகி அம்மாள், பொம்மி போன்ற சிற்பங்கள்...), சிதம்பர நடராசரின் நடன சிற்பம், மர சங்கிலி, கல் சங்கிலி, யாளி, அக்காமலை க்ராஸ் ஹில் ஒன்றையொன்று விழுங்குவது போன்ற ஓவியங்கள் என பல தனித்தன்மை வாய்ந்த கலைகள், உணவு வகைமைகள், செடிகள், என ஒவ்வொன்றுக்கும் அந்தந்த நிலத்திற்குரிய அறிவுசார் சொத்துரிமை அந்தந்த மண்ணிற்கு உரியவருக்கே உண்டு அதாவது அந்தந்த அரசு நிறுவனங்களுக்கே உரிமை, அந்த உரிமையை மீறியோ அறியாமலோ பிற நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ விற்கவோ, அறிவுசார் சொத்துரிமையை வழங்கவோ அரசு தலைபட்டால், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அவற்றை தட்டிக் கேட்க உரிமை உண்டு.


பொதுவாக உலக அளவில் அங்கீகரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமைகளில், காப்புரிமை, பதிப்புரிமை, வணிகச் சின்னம், படைப்புரிமம், புவிசார் குறியீடு, வணிக இரகசியம் ஆகியவையும் அடங்கும்.


தொட்டு உணரக்கூடிய சொத்து, தொட்டு உணர முடியா சொத்து என இரு வகையாக இச்சொத்துக்கள் இருக்கின்றன.


தனிமனித அறிவுசார் சொத்துரிமை, பொதுவுடமை அறிவுசார் சொத்துரிமை என அதிகாரம், பதிவுபெறல், பாதுகாத்தல், பயன்படுத்துதல், என்பதின் அடிப்படையில் சிறுசிறு மாறுபாடுகளை கொண்டுள்ளன.


இனக்குழு சமூகமும், சொத்து உடைமை சமூகமும் சமகாலத்தில் இருப்புக் கொண்டிருந்த காலத்தில் விளைந்த சில வாழ்வியல் இலக்கியங்கள், ஆணைகள், கலை படைப்புகள் ஆகியவை பொதுவுடமை சொத்துரிமைக்கு உரியனவாக பெரும்பாலும் இருக்கின்றன.


இனக்குழு சமூகம் என்பது ஆதிகால பொதுவுடமை சமூகமாகவும், சொத்துடைமை சமூகம் என்பது அரசு நிறுவனங்கள் தோன்றிய பின் உருவான சமூகமாகவும் கொள்ளலாம்.

இவ்விரண்டும் சமகாலத்தில் இருப்பு கொண்டிருந்த பொழுது விளைந்த #திருக்குறள் #தொல்காப்பியம் போன்றவை அந்தந்த நாட்டின் பொதுவுடைமை அறிவுசார் சொத்துரிமைக்கு உரியதாகும்.


அயோத்தி தாசரின் பாட்டனார் கந்தசாமி அவர்கள் ஆரிங்டன் துரையிடம் சமையல் கலைஞராக பணியாற்றிய போது, அடுப்பெரிக்க வந்த ஓலைச்சுவடிகளை, அவர் ஆரிங்டன் துரையிடம் கொடுக்க, அவர் தனது நண்பரான, தமிழில் செய்யுள் வடிக்கும் அளவிற்கு தமிழை கற்றறிந்த எல்லீஸ் துரையிடம் கொடுக்க திருக்குறள் எனும் உலக பொதுமறை உலகிற்கு கிடைத்தது. 


எல்லீஸ் துரையின் பெயரில் சென்னையில் வீதிகளின் பெயர் உண்டு. எனினும் எல்லீஸ் துரை #திருக்குறளின் அறிவுசார் சொத்துரிமையை கொள்ள இயலாது. அவரும் அதை கோரவில்லை.


இவ்வாறு பல்வேறு இலக்கியங்களும், மருத்துவ குறிப்புகளும், கலைவடிவ சிற்பங்கள், ஓவியங்கள் வழியே அடுத்த தலைமுறைக்கு விட்டு சென்ற அறிவியல் உண்மைகளை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மண் சார் மக்களின் பெருங்கடமை யாகும்.


சூழலியல், அறிவியல், நாத்திகம் என எழுதும்‌ ஒரு எழுத்தாளருக்கு ஏன் சட்டென அறிவுசார் சொத்துரிமை சட்டம் குறித்தும், வரலாறு, சமூகவியல், தொல்லியல், வேளாண்மை, கலை இலக்கிய படைப்புகள் குறித்தான சிந்தனை வந்திருக்கிறது என்றொரு கேள்வி எழும்.


முதல்தர மாணக்கர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று சட்டம், மருத்துவம், பொறியியல்,

மேலாண்மை போன்று படித்து விட்டு, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தொழில்சார் வல்லுநர்களாக இருந்து விடுகின்றனர்... அவர்களின் கண்டுபிடிப்புகளுக்குரிய உரிமத்தை மட்டும் பெற்றுக்கொள்வார்கள்.


ஆனால், வரலாறு, தொல்லியல், இலக்கியம் படித்தவர்கள், ஆளும் அதிகாரம் கொண்டவர்களின் துணையோடு பல்வேறு வரலாற்று மாற்றங்களை செய்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், நாட்டின், இனத்தின்‌ கலாச்சார பண்பாடு, கலை இலக்கியங்கள், மருத்துவம் மற்றும் பல அறிவுசார் சொத்துகளின் காலகிரமங்கள், உரிமை ஆகியவற்றை மாற்றி விடுகின்றனர்.


திருவள்ளுவர் நாயனார் என்று சிறுவயதில் படித்த நினைவுண்டு, ஆனால் இன்று மலேசியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் சில கூட்டங்கள் திருவள்ளுவரை சமயமுனி‌ என பரப்பி வருகின்றன.


திருக்குறளில் இல்லாத கடவுள் என்ற சொல்லை முதல் அதிகாரத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.


தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து என்பது மூலப்பிரதியில் இருந்ததா? இருக்கிறது எனில் அதில் எதை அல்லது எந்த கடவுளரை வழிப்பாடு செய்ய சொல்கிறார், இடைச்செருகல்கள் என்னென்ன?


திருக்குறளிலோ, தொல்காப்பியத்திலோ, கீழடி, சிந்து சமவெளி நாகரீகத்திலோ, இடைச்செருகல் மற்றும் காலகிரமங்களை மாற்றுதல் போன்றவற்றை  practicing Lawyers, Doctors, Engineers, Gombass கள் செய்யவில்லை. மாறாக வரலாறு, தொல்லியல், இலக்கியம், ஆன்மீகம் போன்றவற்றை படித்தவர்களே வரலாற்றுப்பிழைகளை திட்டமிட்டு அரங்கேற்றுகின்றனர்.


அதை, நுட்பமாக ஆழ்ந்து அகழ்ந்து நோக்கினால், அவரவர் நாட்டு பெருமை, கலாச்சாரம், பண்பாடு, சாதி, மொழியை  தூக்கி நிறுத்தும் நோக்கில், அறிவுசார் சொத்துரிமைக்கு சகல உரிமை உடைய மண்ணின் மாண்புகள், வாழைப்பழ ஊசியாக, மிக தேர்ந்த சொற்களால் கீழ்மைப்படுத்தப்படும்.


இந்த குழு அல்லது கூட்டத்தில் பெரும்பாலும், புலம்பெயர்ந்த மக்கள் பெருவாரியாக இருப்பர்.


அருமை தெரியாமல் விற்றால் நாங்கள் வாங்குவோம் அதில் என்ன தவறு போன்ற சிறுபிள்ளைத்தனமான பொறுப்பற்ற பேச்சையும் பேசுவார்கள்.


ஒரு நாட்டின்‌ ராணுவ ரகசியத்தை ஒருவன் அறமின்றி விற்கிறான் என்றால் அவன் தேசத்துரோகி, அவனிடமிருந்து அதை விலைக்கு பெறுபவன், பெரும் கொள்ளைக்காரன் மட்டுமல்ல, அறமற்றவன் இல்லையா? பெருங்குற்றவாளி இல்லையா ?


அப்படிதான், ஓலைச்சுவடிகளை, நடராஜர் சிலைகளை, ஐம்பொன் சிலைகளை அரசுக்கும், நீதிக்கும்‌ தெரியாது விற்பது தேச துரோகமெனில் , அதை வாங்குவதும் குற்றமே.


கஞ்சா விற்பதும் வாங்குவதும் குற்றம், லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் அதே போல்தான் ஒரு நாட்டின் அறிவுசார் சொத்துகளை , விற்பதும், வாங்குவதும் குற்றமே ?


கஜினி முகமது பதினெட்டு முறை ( உண்மையில் 17 முறைதான் படையெடுத்தார்) இந்தியாவை நோக்கி படையெடுக்க காரணம்‌ என்ன?


இந்தியா கலைச்செல்வமும், இலக்கியமும், அருட்செல்வமும், பொருட்செல்வமும், ஞானச்செல்வமும், வேளாண் அறிவும், நீர் மேலாண்மையும், கட்டிட அறிவும், நெசவு என பல தளங்களில் விரிவான ஆழமான அறிவை கொண்டிருந்த நாடு என்பதால்தான், பல மன்னர்களால் பல முறை படையெடுப்புக்கு உள்ளான நாடு.


மிளகு வாங்க வந்தவன்தானே நம்மை அடிமையாக்கி ஆண்டான்.


அப்படிதான், நவீன யுகத்திலும் மின்மயமாக்கி தருகிறேன், சேமிக்கிறேன், பாதுகாக்கிறேன் என்றெல்லாம் புன்னகையோடு ஊடுருவும் அந்நிய சக்திகளை நாம் இனங்கண்டு ஒதுக்க வேண்டும்.


முதலில், நம் நாட்டின் அறிவுசார் சொத்துரிமை உடையவற்றை முதலில் முறையாக பதிவு செய்தல் வேண்டும்.


அறிவுசார் சொத்துரிமையின் விரிவாக்கம், வளர்ச்சி, முக்கியத்துவம், நோக்கம், நன்மைகள், பாதுகாப்பிற்கான தேவை, அவற்றை பாதுகாக்க வரையறுக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தும், அறிவுசார் சொத்துரிமைகளை‌ Memorandum of Undetanding ( MoU) அரசு சாரா உள்நாட்டு நிறுவனங்கள், அரசு சாரா, இந்திய குடியுரிமை உள்ள / இந்திய குடியுரிமை இல்லாத உறுப்பினர்கள் / தலைவர்களை கொண்ட அந்நிய நாட்டு அமைப்புகளுக்கு வழங்கும்படும் போது, பின்பற்றப்பட வேண்டியவை, கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன? என்பதை நாளை பார்ப்போம்...


அது சரி ! ஓலைச்சுவடிகளை, கல்வெட்டுகளை சேகரிக்கவும், வாசிக்கவும், பாதுகாக்கவும், அவற்றை மின்மயமாக்கவும்,

தமிழ்நாட்டில் பிறந்து, வாழும் குடியுரிமையுடன் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழன் ஒருவர் கூட  ஓலைச்சுவடிகளை வாசிக்கும் பெரியோர்களும், மின்மயமாக்க தெரிந்த தொழில்நுட்பம் பயின்று தேர்ந்த இளைஞர்களும் இல்லையா என்ன?


என்ன கூத்து இது? வைத்தீஸ்வரன் கோயிலில் வரிசையாக நாடி ஜோதிட சென்டர்களில் இருப்பவர்கள் ஓலைகளை வாசிக்கிறார்களே ! இதை குறிப்பிடும் போது மிக ஏளனமாக தோன்றலாம். ஒன்று வாசிப்பது உண்மை எனில் அவர்களை பயன்படுத்தி அறிவுசார் சொத்துகளில் என்ன உள்ளது என அறியலாம். திருக்குறள் போல் பல பொக்கிஷங்கள் கிடைக்கலாம்.

மருத்துவ குறிப்புகள் கிடைக்கலாம்



இல்லை அவர்கள் பொய்யாக வாசிக்கிறார்கள் எனில், அவ்வகவு கடையை நடத்த அனுமதிக்கலாமா?


இது பொய் என சொல்வார்கள், என்பதால் காஞ்சீபுரத்தில் அகத்திய நாடி ஜோதிடத்தில், 2002 ல் ஓலைச்சுவடி பார்க்க சென்றோம் ( எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்பது தனிக்கதௌ)


கைரேகையை பெற்றுக்கொண்டு மறுநாள் வரச்சொன்னார்கள் என சென்றோம், ஒரே ஒரு கட்டில் ஒவ்வொரு ஓலையாக வாசித்து, அத்தன் ( அப்பா) பெயரும், அம்மை ( அம்மா) பெயரும், உடன் பிறந்தோர் எண்ணிக்கை, பெயர் எதில் பொருந்தி வருகிறதென பார்க்க நான்கைந்து ஓலைகளை படித்து ஒதுக்கிய பின் அய்ந்தாவதோ, ஆறாவதோ ஓலை பொருந்தி வர அதில் உள்ளபடியே வாசித்து, நமக்கு புரியும் தமிழில் சொல்லி, நோட்டில் எழுதியும், கேசட்டில் பதிவு செய்தும் தந்தனரே. இன்றும் வைத்துள்ளேன்.


தமிழ்நாடெங்கும் பரவி கிடக்கும் ஓலை வாசிப்பாளர்களை ஒருங்கிணைத்து, ஊதியம் அளித்தால், சட்டென வேலை முடியுமே.


மேலும், கல்வெட்டு, ஓலைச்சுவடிகளை பதிவேற்றம்‌ செய்து, தேவநகரி எழுத்துக்களை இன்றைய தமிழ் எழுத்துக்கு மாற்றவும் அவற்றை வருடிகளால் ( Scanner) மின்மயமாக்கம் செய்யும் தமிழ் நாட்டு இளைஞர்கள் இருக்கின்றனரே. 


எதெதெற்கோ செலவு செய்யும் போது, இந்த இளைஞர்களுக்கு அரசே நேரடி தொகுப்பூதியம்‌ அளித்து பணியில் அமர்த்தலாமே.


இப்போதும், தமிழ்நாட்டு இளைஞர்கள்தான் அப்பணிகளை‌ அயல்நாட்டினரின் அமைப்பிற்கு கீழ் குறைந்த ஊதியத்தில் செய்து வருகிறார்கள்.


அரசு நிறுவனம் ஒரு பணியை Out sourcing செய்யும் போது, பணியாளர்களை அமர்த்திக்கொள்வது, ஊதியம் அளிப்பது யாவும் பணியை எடுத்து முடித்து தருவதாக ஒப்பந்தம் செய்துக்கொண்ட நிறுவனத்தின் பொறுப்பே ஆகும்.


பணியின் ஒவ்வொரு கட்ட நிறைவுறுதலுக்கும் ( Completion in stages) அரசு நிறுவனம் தொகையை வழங்கும். பணியின் நேர்த்தி, நம்பகத்தன்மை, பதிவு கோப்புகள், அரசு‌ இறையாண்மையை பாதிக்க கூடிய, முக்கிய அரசு ரகசிய கோப்புகள் போன்றவற்றை திரும்ப பெறுதலும், அரசு நிறுவனத்தில், இப்பணிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைசார் வல்லுநர்களின் பொறுப்பு‌ ஆகும்.


அரசு வேறு அரசாங்கம் வேறு என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.


அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாப்பதில் அரசு மற்றும் அரசாங்கத்தின் அங்கு குறித்த சட்டத் திட்டங்கள் அந்தந்த நாட்டுற்கு தக்க மாறுபடும்.


பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தொடர் எழுதப்படுகிறது.


வேப்பங்குச்சியின் காப்புரிமையை அய்யா நம்மாழ்வார் தமிழகத்திற்கு பெற்று தந்த வெற்றி கதை அடுத்த பாகத்தில்...


Stay tuned...


பொறிஞர் கோ.லீலா

சூழலியல் எழுத்தாளர்

தமிழ்நாடு

மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்

 *மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்* ஜி.நாகராஜன்.


இவ்வரிகளில் சிலருக்கு ஒவ்வாம்மை உண்டு.

இராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே


தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.   (௮௱௨௰௮ - 828)


அய்யன் திருவள்ளுவர் எழுதி இருக்கிறார் எனில்

எந்த தொழுத கையை நம்பி துரோகத்தை சந்தித்து துடிதுடித்து எழுதினாரோ,  மனிதன் மகத்தான சல்லிப்பயலாக இருந்திருக்கிறான்‌ என்பது உண்மையல்லவா?


தந்திரமாக மேலோட்டமாக ஒரு பழகும் முறையை வகுத்து கொள்வதொரு திறமையாக கருதப்படுகிறது இந்நாளில், அவர்கள் எல்லோருக்கும் நல்லவர்கள், எல்லோரும் அவர்களுக்கும் நல்லவர்கள். அவர்களுக்கு மனிதனின் மகத்தான சல்லித்தனம் புரிப்படாது அல்லது அதை விளங்கி கொள்ள விரும்புவதில்லை.


சிற்பம் செதுக்கும் சிற்பியை விட சிற்பத்தை நேசிப்பவன் எவருண்டு, பார்த்து பார்த்து செதுக்கும்போது கல்லுக்கு உணர்விருந்தால் வலிக்கிறது என்றே சொல்லும், சிற்பியை வெறுத்தே கொல்லும்...


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். 


என்கிறார் அய்யன் திருவள்ளுவர். இது அரசனுக்கு மட்டுமல்ல நட்பு முதல் காதல் வரை பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.


இடித்துரைக்காதவனின் அன்பு எத்தகையது. இனிக்க பேசுவான், கொண்டாடுவான், மதிப்பான், கைதட்டுவான். பொறு யோசி நின்று நிதானித்து உற்று நோக்கு, காலத்தினால் நிற்கும் நன்மை என்ன செய்துள்ளான்...

அவங்வங்களுக்கு தெரியும் என்ற விட்டேத்தியான மேலோட்ட அன்பில் என்ன விளையும்? முதலில் அது அன்பா? வியாபார முறை அணுகல் அல்லவா அது.


இடித்தும், உடைத்தும், செப்பனிட்டும் வழிநடத்தும் அன்பே உன்னை சபையில் பெருமைக்கொள்ள செய்யும். பெருமைப்படுத்தும். அறைக்குள் அதட்டி அம்பலத்தில் அணி சேர்க்கும் உறவின் மேன்மையை உணராதவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


எப்போதும் கண்டிக்கும் தந்தை, மகனின் வெற்றியை கொண்டாடும் பேரன்பை ஒரு போதும் மகன்கள் அறிவதில்லை, தான் தந்தையாகும் வரை...


ஆனாலும், மனிதன்‌ ஒரு மகத்தான சல்லிப்பயல்...‌ என்பது உண்மையிலும் உண்மை.


ஒளியை தேடி போகாதே நீயே ஒளியாகு எனும் சொல் செவியேறாத போது, அதில் மறைந்து கிடக்கும் அன்பின் பேரொளி எப்படி புரியும்.


(ஒரு எ.கா மட்டுமே உடனே இசைஞானியை வைத்து ஒரு விவாதம் என்பது தலைப்பை நீர்த்துப் போகச் செய்யும்) இசைஞானி இளையராஜா ஏன் இறுகி ய முகமாய் பலருக்கும் காட்சியளிக்கிறார்.


துறை சார் ஆழறிவும், யாருக்கும் எட்டாத நுட்பமும், மனிதர்களின் மீதான அன்பையும், தன் திறமை மீது கொண்டிருக்கும்‌ அபார நம்பிக்கையையும் புரிந்துக்கொள்ளாத மனிதர்களிடமிருந்து விலகி நிற்கிறார். தான் சுவைத்த இசையை நம் மக்களும் சுவைக்க வேண்டும் என்ற பேராவல் மனிதர்களின் மீதான அன்பில்லையா?


மனம் இறுகி விலகிய அறிஞனின் வெளிப்பாடு உலகம் வியக்கும் சிம்ஃபொனி.‌ 


ஒரு அறிஞனின் சிந்தனையின் உயரத்தை, எண்ணங்களின் உயர்வை, சிற்பியென செதுக்குவது ஏனென்று உணராத மனிதர்கள், அதே வட்டத்தில் அதே உயரத்தில் நின்றுக்கொண்டு சிறு சிறு வெற்றியை கொண்டாடி கூடிக் களிப்பதே வாடிக்கை.


உண்மையாய் நேசிக்கும் மனமோ சதா உன்னை கண்காணிக்கும். காதலென்பது வெற்று உடல்சார் உறவன்று. இணைந்தே வளர ஊக்கமளிக்கும் உறவாக, எந்த உறவும் இருக்க வேண்டும் நட்போ, காதலோ, கல்யாணமோ, உடன் பிறந்தோரோ, மகவோ எங்கும் பரிபூரண பேரன்பு செப்பனிடும்...


ஆனால், மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்

ஆம் ! நான் தலைவி/ தலைவன் எனக்கென்று ஒரு கூட்டப்பட்ட கூட்டமொன்று உண்டு, அதில் நீயும் ஒரு அங்கமாய் இரு, கைதட்டு, தந்திரமாய் தன்னை புகழ வைத்து சிரிக்கும், அவையில் தானே முன்னென நிற்கும் அந்த தந்திர உறவை கொண்டாடி, உற்ற உன்னத உறவுகளை காயப்படுத்தும் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் இல்லையா?


பேரிடர் காலத்தில், தன்னையுமறியாமல், பயத்தில் உள்ளொளியாய் மறைந்துக் கிடக்கும் மனிதம் மேலெழுந்து விடும்போது மட்டும் உதவி கரம் நீட்டி விடுகிறான்.


அந்த ஆபத்தான சூழலிலும் கூட தன் முத்திரையை பதிக்க துடிக்கும் மனிதர்களும், அமைப்புகளும் உண்டு.


தான் தர்மவானாக இருப்பதற்காக பிச்சைக்காரர்களை முன்னேற விடாத மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் இல்லையா?


அண்டை நாட்டின்‌ Intellectual Property Rights ஐ தன்னகப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் அறமற்றவர்கள் எனில், சிந்திக்கும் திறனிழந்து உடன் நிற்கும் பேடைகள் மகத்தான சல்லிப்பயல்கள் இல்லையா?


நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி

வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி என்றானே நம் கவிஞன் எங்கு புறம் இழிவு பேசி, முன் புகழுரைத்த யாரை கண்டு உள்ளம் கொதித்துப்போய் எழுதினானோ இவ்வரிகளை.


அவன் சொல்வதும் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்பதையே...


கடலை சேர வேண்டிய நதிகள், குட்டைகளில் தேங்குவதில்லை. தேங்கிவிடும் அளவோ, எளிதாய் நெருங்கிவிடும் அளவிலோ அதன் வேகம் இருப்பதில்லை. 


காட்டாற்று வேகமும், கடல் சேரும் தன்முனைப்புமாய் பாய்ந்தோடும் நீரே கடல் சேரும், அலையென நடனமிடும், வானேகும், மேகமாகும், மழையாகும், மலை தழுவி மரம் தழுவி மண்ணில் தன்னை விதைத்து குதூகலம் கொள்ளும். கடல் சேரும் யுக்தி அறிந்த நீர்த்திவலைகள், யாரின் கைக்கும் சல்லிசாக எட்டிவிடாது.


நீர்த்துளியின் ஆளுமை, கம்பீரம், வழிமாறா கண்ணியம், இடர் எது வரினும் பாதை மாறா பயணம் போன்ற குணங்கள்‌ மனிதரிடம் இருந்தால் அவன் மகத்தான தனக்கே தனக்கான வெற்றியை சூடிக்கொள்கிறான்.


நேசிப்பவர்களை, உயர்ந்த இடத்தில் இருத்தி பார்க்கவே ஆசைக்கொள்வர். ஆனால், காலங்காலமாய் மனிதன் மகத்தான சல்லிப்பயலாகவே இருக்கிறான்.‌ ஆழ்ந்த அறிவும், உற்று நோக்கலும்,நுட்ப ஆய்வும் இருப்பதில்லை. 


சிற்பியை வெறுக்கும் சிற்பங்கள் வெறுங் கல்லாய் கிடக்கும்...


சிற்பியை தவிர கல்லுக்குள் இருக்கும் சிற்பத்தை வேறு யாராலும் செதுக்கி எடுத்து உலகிற்கு காட்டிவிட முடியாது. சிற்பங்கள் கடவுளாகி விட்டாலோ, பலர் பார்வை பெறும் உயர்ந்த இடம் அடைந்து விட்டாலோ, சிற்பத்திற்கே சிற்பியை யாரென தெரியாது.


சிற்பிக்கும் அதுவன்று கவலை, தான் செதுக்கி எடுத்த சிற்பம் உச்ச வெற்றியை எய்தி விட்ட ஆனந்தத்தை வேறு யாரால் கொண்டாடி விட முடியும். சிற்பி கொண்டாடது நிறைவுறுமா சிற்பத்தின் வெற்றி.


ஆனாலும், சிற்பியை மறந்த சிற்பமாக, அல்லது செதுக்காதே வலிக்கிறதென தூற்றும் மனிதர்கள் மகத்தான சல்லிப்பயல்கள் இல்லையா?


மனிதர்களை விட மரங்கள் மகத்தானவை.


முன் கசந்து பின் இனிக்கும் சொல்லே வாழ்வின் மந்திரம்...


தலைக்கனம் கொண்டவருக்கோ காதுகளும் வாய்களே !


இவ்வளவு‌ கடிந்துரைத்தால், இடித்துரைத்தால் உறவில் உரசல் வரும் என்றறிந்தும் கறாராக செப்பனிடும் உறவுகள் வரம்.


கணக்கு வாத்தியை எவனுக்கு பிடிக்கும்

காக்கா கடி மிட்டாய்தான் இனிக்கும்...


காலந்தோறும் கனவிலும்

கணக்குதானே வாழ்வினை நடத்தும்...


நன்றி மறந்து விடும் மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. இது வாழ்வு கசந்தவனின் சொற்களில்லை.


வாழ்வை, குழந்தைமையுடன் கள்ளம் கபடமற்று ஏற்றுக்கொண்டு, இயல்பாய் வாழ்ந்தவனுக்கு சமூகம் கொடையளித்த சொற்கள் இவை.


பெண்ணை நாயென நடத்துபவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


பெண் குழந்தைகளை வன்புணர்வு செய்பவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


சாதிய அடுக்குமுறையில் நேரடியாக முகத்தில் சிறுநீர் கழிப்பவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


யாருமறியாத வண்ணம் கபட வேடமிட்டு சாதிய அடிப்படையில் கூடுபவன் மகத்தான சல்லிப்பயல் இல்லையா


சிந்துவெளியிலும், கீழடியிலும் கிடைத்த நீர் மேலாண்மை, சாதிய அடுக்குமுறையற்ற பேதமற்ற, போர்கருவியற்ற பண்பட்ட சமூகமாக இருந்தது என்பதை சொல்லாது, நெசவாளர், குயவர், வணிகம் செய்தவரென சாதியை தூக்கி நிறுத்த முயற்சிப்போர் மகத்தான சல்லிப்பயல்கள் இல்லையா?


குழந்தைகளை கொலை செய்பவன் சல்லிப்பயல் இல்லையா ?


மனிதன் மகத்தான சல்லிப்பயலேதான்.


மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றாலே அவ்வை எங்கே அவமானப்பட்டாளோ...


தந்திரம் மிகுந்தவன் நல்லவன் என கொண்டாடப்படுவான்...


நல்லவனாக வாழ்வதே மந்திரம் என நினைப்பவன் எளிதாய் சூறையாடப்படுவான், ஒதுக்கி வைக்கப்படுவான்.


வென்றவன் மகத்தான சல்லிப்பயல்.


இழந்தவன் கேடுகெட்ட நல்லவன்.


மனிதர்களை விட மரங்கள் மகத்தானவை.

நேரிய நல்லாற்றலை போதிக்கும் இயற்கையே மகத்தானவை.


- கோ.லீலா.