தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
- திருக்குறள் 104
தமிழர் மரபில் பனை மரம் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாகும், ஏனெனில் அது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பயன்பட்டுள்ளது. பனை மரத்தின் வேர், ஓலை, நார், நுங்கு, பனம்பழம், பதநீர், கள்ளு, கருப்பட்டி போன்ற பல பாகங்கள் உணவு, உடை, வேளாண்மை, எழுத்து (பனையோலைச் சுவடிகள்) என பல தேவைகளுக்குப் பயன்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டின், மாநில மரம் பனை ஆகும்.
1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டது.
ஏன் பனை மரம் மாநில மரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது?
பனை மரம் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளதோடு, பல்லுயிர் பாதுகாக்கும் தன்மையுடையவை என்பதும், காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ளும் வல்லமை வாய்ந்தவை என்பதோடு, சத்தான உணவுகளையும், தமிழ் நாட்டின் சொத்தான பல தமிழ் இலக்கியங்களையும் தந்த ஓலைகளை ஈந்த மரம் என்பதால் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டது.
எல்லை பனை
☘️☘️☘️☘️☘️☘️
காடுகள் முடிந்து மனித வாழ்விடங்கள் தொடங்கிய இடத்தில் பாரம்பரியமாக பனைமரங்கள் நடப்படுகின்றன. அதிக இடைவெளி இல்லாமல் நடப்பட்ட மரங்களின் வரிசைகள், மாமிச உண்ணிகள் மற்றும் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுத்தன, இதனால் மனித-விலங்கு மோதல் தடுக்கப்பட்டது.
மேலும், அதீத மழை, காற்றுக் காலங்களில் மனித வாழ்விடங்களை காக்கும் அரணாக நின்று, இயற்கை பேரிடர்களை தடுக்கும் தடுப்பான்களாகவும் செயலாற்றின.
இன்றும், திருவாரூர்- நாகப்பட்டிணம் சாலையில் வயல்வெளிகளையும் சாலையையும் பிரிக்கும் எல்லையாக பனை மரங்களை காணலாம்.
விவசாய நிலங்களுக்கு இடையேயும்,நீர்நிலைகளை சுற்றியும் பனைமரங்கள் எல்லையாக நிற்பதை காணலாம்.
பனையின், 120 ஆண்டுகள் நீண்ட ஆயுளைக் கருத்தில் கொண்டு, எல்லைகளைக் குறிக்க மக்கள் அவற்றைப் பயன்படுத்தினர் என்பது தமிழர்தம் தொல்நோக்கு.
இந்திய பனைகள்
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
இந்தியாவில் மட்டும் 106 வகையான பனைகள் உள்ளன. இந்திய பனைகளில் இருந்து கிடைக்கும் நுங்குகளில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதோடு, குறைவான கொழுப்பும்
( பூஜ்ஜியம்), பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், கால்சியம்,துத்தநாகம், இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்களுடன் மிக குறைவான புரதமும்
இந்திய நுங்கின் உள்ளடக்கமாக இருக்கின்றன.
வெப்ப காலங்களில், உடலுக்கு ஏற்ற நீரேற்றத்தையும் புத்துணர்ச்சியையும் தர வல்லவை.
பனம்பழத்திலும் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது.
இவை உடல் ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு செயல்பாடு கொண்டவை.
வெப்ப மண்டலத்தில் செழித்து வளரும் பனைகளின் நுங்கின் தண்ணீர் வேர்க்குருவிற்கான மருந்தாகவும், நுங்கின் மேல்தோல் உள்ளுறுப்புகளுக்கு நன்மை தரக் கூடியதாகவும் இருக்கின்றது.
இயற்கை பேரிடர் தடுப்பான்கள்
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
பனை மரங்கள் மிகப்பெரிய காற்றையும் தாங்கி நிற்கும் இது உண்மையா?
கண்கூடாக கண்ட காட்சியும் ஆய்வுகளும் அதை உறுதி செய்கின்றன.
வங்காள விரிகுடாவில் இருந்து அய்ம்பது கிலோ மீட்டருக்குள் இருக்கும் மஞ்சக்கொல்லை, சிக்கல் போன்ற ஊர்களில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 18 வீசிய கஜா புயலின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பெரிய பெரிய கிளைகள் முறிந்து விழுந்தன, பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின் கம்பங்கள் அபாயகரமான சூழலை உருவாக்கி சாய்ந்தன, கேபிள்களோ தரையோடு தரையாக தட்டையாகி போயின, தென்னை மரங்கள் மூன்று நான்காக உடைந்து விழுந்தன. பெரும்பாலான *பனை* மரங்கள் உறுதியாக நின்றன. எப்படி ?
நெகிழ்வே உறுதி
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
காலநிலைக்கு ஏற்ப மீள்தன்மை (Resilience) பெறும் ஆற்றல், பனை மரத்தின் தண்டு ( trunk) பகுதிக்கு உள்ளது... இழைபோன்ற அல்லது நார்ப்போன்ற உள்ளமைப்பைக் கொண்ட தண்டு நெகிழ்ச்சித்தன்மை உடையது என்பதால் பெருங்காற்றுக்கு வளைந்து உடையாதிருக்கிறது. மேலும், மரங்களின் உச்சியில் விசிறி போல் விரிந்து லேசான எடையுடன் இருப்பதால் காற்றை தடுக்கும் ஆற்றலுடன் செயல்படுகின்றன என்பது பனை மரத்தின் தனித்துவம்.
இதற்கு சான்று, கஜா புயலின் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விழுந்த மாவடி கிராமத்தில் ஒரு குடிசையின் பனை ஓலை கூரை எவ்வாறு சேதமடையவில்லை என்பதைக் கவனித்தார். "இது கடலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்தது. மங்களூர் ஓடுகள் கூட கூரைகளிலிருந்து பறந்துவிட்டன, ஆனால் இந்த பனை ஓலை கூரை பறக்கவில்லை, என்கிறார் கஜா புயலின் போது இவற்றை கவனித்த ஆரோன் டாஸ்.
மின்னலே மின்னலே
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
மின்னல் பாதுகாப்பிலும் பனை மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் அதிக ஈரப்பதம் மின்னல் தாக்கங்களிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி சிதறடிக்க உதவுகிறது. மேலும் மின்சாரத்தை தரையில் பாதுகாப்பாக செலுத்தும் இயற்கை கடத்திகளாக செயல்படுகின்றன. ஒடிசா அரசாங்கம் பனை மரங்களின் நன்மையை உத்தேசித்து மின்னல் தொடர்பான இறப்புகளை குறைக்க 9.1 மில்லியன் பனை மரங்களை நடத்தொடங்கின. இது கடந்த 11 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4000 இறப்புகளை குறைக்க உதவின.
வேரின் வீரியம்
🌳🌳🌳🌳🌳🌳🌳
ஆழமாகவும், அகலமாகவும் செல்லும் நார்ச்சத்துள்ள வேர்கள் மண்ணோடு பிணைந்து மண்ணரிப்பைத் தடுக்கின்றன.மேலும், வேரின் அமைப்பான மண்ணை உறுதிப்படுத்துவதோடு, மண்ணின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. அனைத்து வகையான மண்ணிலும், காலநிலை மண்டலங்களிலும் வளரும். வறண்ட பகுதியிலும் வளரும் பனை, ஒரு மண்ணில் விளையவில்லை எனில் அங்கு நிலத்தடி நீரின் நிலை மிக மோசமானதாக இருப்பதை உணரலாம்.
நீர்நிலையை சுற்றி பனை மரங்கள் நடப்பட்டால், மீண்டும் நீர்நிலைகளில் நீரை நிரப்பும், ஏனெனில் வேரின் மய்யப்பகுதி நார் போன்ற அமைப்பு தண்ணீரை சேமித்துக்கொள்ளும், பஞ்சுப்போன்ற அடுக்குகளை கொண்டுள்ளதால், நீர்நிலைகளில், நீர்சுழற்சியில் முக்கியமான பங்காற்றுகின்றன என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பல்லுயிர் ஓம்பும் பனை
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
பேரிடர் தடுப்பான்களாக மட்டுமல்லாது, பனை மரங்கள் பல்லுயிர்கள் வாழ்வதற்கான வாழ்விடமாகவும் விளங்குகின்றன.
கழுகுகள், கிளிகள், மயில்கள், கருப்பு அரிவாள் மூக்கன், தூக்கணாங்குருவிகள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களுக்கு வாழ்விடமாக செயல்படுகின்றன.
சூரிய பறவைகள், இந்திய பனங்காடைகள் பனை சுவிஃப்ட்கள், வெள்ளி-மூக்கு பறவைகள், வெண்-மார்பு மீன்கொத்திகள் மற்றும் ஷிக்ராக்கள் குறிப்பாக பனை மரங்களை விரும்புகின்றன. இவை பாம்புகள் மற்றும் உடும்புகள் போன்ற ஊர்வனங்களுக்கும் வாழ்விடமாக உள்ளன.
கரியமில வாயு ஒழுங்காற்றும் பனை
🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚
காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் அதீத கரியமில வாயுவின் வெளியீடே.
அத்தகைய கரியமில வாயுவை ( கார்பன் டை ஆக்ஸைட்) உறிஞ்சும் திறனும், கார்பன் தடத்தை குறைக்கும் தன்மையையும் கொண்டிருக்கும் பனை காலநிலை மாற்றத்தை
ஒழுங்காற்றும் பணியில் முக்கிய பங்களிக்கிறது.
இலக்கியத்தில் பனை
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
சேர மன்னர்களின் குடிப்பூவாக பனை இருந்தது. பனை, போந்தை, பெண்ணை ஆகிய பெயர்களையும் கொண்டிருந்தன.
பனையை மரமென்று அழைத்தாலும் தொல்காப்பியம் பனையை புல்லினம் என்கிறது.
புறக்கா ழனவே புல்லென மொழிப”-தொல். பொருள். 9 : 86
பனையின் விதை Monocot என்பதால், தாவரவியலில் புல், மூங்கில் ஆகியவற்றோடே தொடர்புப்படுத்தப் படுகிறது.
பனையின் பஞ்சு போன்ற நுங்கைப் பாடுகின்றார் திரையன்:
“பாளை தந்த பஞ்சிஅம் குறுங்காய்
ஓங்கிரும் பெண்ணை நுங்கு”-குறுந் . 293 : 2-3
பனையின் இவ்விருவகைப் பூக்களும் மஞ்சள் கவினிய வெண்ணிறங் கொண்டவை. இவையிரண்டுமே சூடிக் கொள்ளும் வாய்ப்பற்றவை. ஆதலின், பனையின் வெளிய இளங்குருத்து ஓலையைப் பிளந்து, அதன் கூரிய வலப்பக்கத்துப் பாதியைக் குடிப்பூச் சின்னமாகக் சூடிக் கொண்டனர்.
“இரும்பனை வெண்டோடு மலைந்தோன்”-புறநா. 45 : 1
(தோடு-தடித்த பனையோலை)
“. . . . . . . . வளர்இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசிவெண் தோட்டு”-புறநா. 100 : 3-4
(வளர் இளம் போந்தை-குருத்தோலை)
“மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇ”-புறநா.
என இன்னும் பனையோலையென விரிகின்றன இலக்கிய பாடல்கள்.
தமிழர் எழுத்து மரபில் பனை
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
சங்ககால அறிவை சமகாலத்திற்கு கைமாற்றி தந்ததில் பனையோலைகளுக்கு பெரும் பங்கு உண்டு.
தமிழர்களின் செழுமையான அறிவாற்றலை தாங்கி நின்றவை பனையோலைகளே, இல்லையெனில் தெள்ளுத்தமிழின் சிறப்பிலக்கியங்கள் யாவும் புலவர்களின் நாவில் இருந்து காற்றில் கரைந்து போயிருக்கும்.
தமிழர் தம் எழுத்து மரபு தனித்துவமானவை, அறிவியலும், வெளியும், காலமும் சரியாக அமைந்த ஞான வெளிபாடுகள் தமிழர்தம் எழுத்து.
அத்தகைய தமிழ் எழுத்து மரபுகள் பனை வேரென பனையோலைகளால் தமிழர்களோடு பிணைந்தவை.
தமிழுக்கு செழுமை சேர்த்த திருக்குறள், தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாவற்றையும் பாதுகாத்து தந்தவை பனையோலைகளே.
தமிழர்தம் பானம் முதல் பனைப்பெட்டி, பாய்,கடகம் என தமிழர்தம் வாழ்வியல் மரபில் இரண்டற கலந்து தோய்ந்த பனை இன்று தமிழர்களின் நினைவுகளில் மட்டுமே வாழும் அளவிற்கு, கலாச்சார மற்றும் சமூக சூழல் மாற்றங்களால், ரியல் எஸ்டேட், தொழில்துறை விவசாயத்திற்கு பயனற்ற ஒன்றாக கருதப்பட்டு அழித்தொழிக்கப்பட்டுள்ளன. தமிழர்தம் வரைவியலோடும், இலக்கியத்தோடும், நிலவியலோடும் பொருண்மை மரபிலும் கலந்து நிற்கும் பனை, தமிழர்களின் உணர்வோடு நீண்ட நெடிய உறவினை கொண்டுள்ளது.
பனைகளை பாதுகாத்து சூழலியலையும், தமிழர்தம் தன்சார்பு வாழ்வியலையும் மீட்டெடுக்க பனையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டியது நம் கடமை ஆகும்.
அன்புடன்
- கோ.லீலா